த்வாதச (பன்னிரண்டாவது) ஸ்கந்தம் - ஆறாவது அத்தியாயம்
(பரீக்ஷித்து மோக்ஷம் அடைதலும், ஜனமேஜயன் ஸர்ப்பயாகம் செய்தலும், வேதங்களின் சாகைகளை நிரூபித்துக் கூறுதலும்)
ஸூதர் சொல்லுகிறார்:- ஸமஸ்த ஆத்மாக்களையும் ஸமமாகப் பார்க்கும் தன்மையரும், வ்யாஸ மஹர்ஷியின் குமாரரும், பரப்ரஹ்மத்தையே மனனம் செய்பவருமாகிய ஸ்ரீசுகமுனிவரால் இவ்வாறு மொழியப் பெற்ற பரீக்ஷித்து மன்னவன், வணங்கின தலையினால் அவருடைய பாத கமலத்தை ஸ்பர்சித்து (தொட்டு), கைகளைக் குவித்துக் கொண்டு, அம்முனிவரைக் குறித்து மேல்வாறு கூறினான்.
பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- தேவரீர் என்னிடத்தில் கருணை கூர்ந்து, ஆதி அந்தங்கள் (முதல், முடிவு) அற்றவனும், தன்னைப் பற்றினாருடைய ஸம்ஸார பந்தத்தை (உலகியல் கட்டைப்) போக்கும் தன்மையனுமான பரமபுருஷனுடைய ஸ்வரூபத்தையும், உபாஸனத்தையும் (த்யானத்தையும்), நான் ஸாக்ஷாத்கரித்தாற் போல் (நேரில் பார்த்து அறிந்தது) அறியும்படி எனக்கு உபதேசித்தீராகையால், நான் ஸித்தார்த்தனானேன். (விரும்பின பொருள் கிடைக்கப்பெற்றேன்); அனுக்ரஹிக்கப்பட்டேன் (அன்புடன் அனைத்து ஆதரவு செய்யப்பட்டவன், ஆசீர்வதிக்கப் பட்டவன் ஆனேன்). இவ்வளவு அனுக்ரஹம் செய்யப் பெற்றேனாகையால், எனக்கு இனி கேட்க வேண்டியது என்ன இருக்கின்றது? பற்றினவரைக் கைவிடாமல் காக்கும் தன்மையனான பரமபுருஷனிடத்தில் நிலை நின்ற மனமுடையவர்களும், வாத்ஸல்ய (அப்பொழுது ஈன்ற கன்றிடம் பசு காட்டும் பரிவு), ஸௌசீல்யாதி (உயர்ந்தவராய் இருந்தும், தாழ்ந்தோருடன் இரண்டறக் கலந்து பரிமாறும் பண்பு) குணங்களால் மேன்மையுற்றவர்களுமாகிய உம்மைப் போன்ற பெரியோர்கள், ஆத்ம ஸ்வரூபாதிகளை (ஜீவாத்மா, பரமாத்மாவின் இயற்கைத் தன்மைகளை) அறியாதவர்களும், ஆத்யாத்மிகம் முதலிய தாபங்களால்
ஆத்யாத்மிகம் (சரீரத்திற்கு ஏற்படும் தலைவலி, சளி முதலிய நோய்கள் மற்றும் மன நோய்களான காமம், கோபம், பயம் முதலியன
ஆதிதெய்விகம் (குளிர், சூடு, மழை முதலியவற்றால் ஏற்படும் துன்பங்கள்),
ஆதிபௌதிகம் (ம்ருகம், பறவை, மனிதர் முதலியவற்றால் வரும் துன்பங்கள்)
என்ற மூன்று வகையான துன்பங்களால் வருந்துகிறவர்களுமாகிய ப்ராணிகளிடத்தில் அனுக்ரஹம் செய்வது பெரிய ஆச்சர்யமாக எனக்குத் தோற்றவில்லை. (அவர்களுக்கு அதுவே தன்மையல்லவா?) உத்தம ச்லோகனான பகவானுடைய குணாதிகளையே முக்யமாக நிரூபிக்கிற இப்புராண ஸம்ஹிதையை உம்மிடத்தினின்று நான் கேட்டேன். உம்மால் நிரூபிக்கப்பட்டதும், பயங்களுக்கிடமாகாததும், மஹாநந்த ஸ்வரூபமுமாகிய பரப்ரஹ்மத்தின் அனுபவத்தில் அழுந்தினேன். ஆகையால், தக்ஷகன் முதலிய ம்ருத்யுக்களிடத்தினின்று நான் சிறிதும் பயப்படவில்லை.
ப்ரஹ்ம ரிஷி! நான் மௌன வ்ரதத்தை ஏற்றுக் கொண்டு, விஷய அபிலாஷங்களும் (உலக விஷயங்களில் ஆசையும்), அவற்றின் வாஸனைகளும் (ஆழ்ந்த மனப்பதிவுகளும்) தீரப் பெற்ற மனத்தை அதோக்ஷஜனிடத்தில் (இந்திரியங்களால் விளையும் அறிவுகளுக்கெட்டாத பரமபுருஷனிடத்தில்) நிலைநிறுத்தி, ப்ராணன்களை (உயிரை) விட விரும்புகிறேன். எனக்கு அனுமதி கொடுப்பீராக. நீர் கேவல ஆநந்த ரூபமான (இன்பமே வடிவான) பகவத் ஸ்வரூபத்தை (பகவானின் இயற்கைத் தன்மையை) எனக்குத் தெரிவித்து, ஜ்ஞான, விஜ்ஞான நிஷ்டையை உண்டாக்கி (சிறந்த அறிவில் நிலைபெறச் செய்து), தேஹாத்மப்ரமம் (இந்த உடலே ஆத்மா என்கிற தவறான எண்ணம் – மனக்கலக்கம்), ஸ்வதந்த்ராத்ம ப்ரமம் (நாம் பகவானது கட்டளைக்கு உட்படாது தன்னிச்சைப்படி செயல்படும் வல்லமை உடையவர்கள் என்ற மனக்கலக்கம்) இவற்றிற்கிடமான அஜ்ஞானத்தைப் போக்கினீர். ஆகையால் நான் க்ருதார்த்தன் (வேண்டியதைப் பெற்றவன்) ஆனேன்.