நான்காவது ஸ்கந்தம் – பன்னிரண்டாவது அத்தியாயம்
(த்ருவன் குபேரனால் அபிநந்தனம் செய்யப்பெற்றுத் (பாராட்டப்பட்டு) தன் பட்டணம் சேர்ந்து பல யாகங்கள் செய்து ஸ்ரீவிஷ்ணுவின் ஸ்தானத்தை அடைதல்)
த்ருவன் ஸ்வாயம்புவ மனுவின் உபதேசத்தினால் கோபம் தீர்ந்து யக்ஷர்களை வதிப்பதினின்று திரும்பியிருப்பதை அறிந்து மஹானுபாவனாகிய குபேரன் அவ்விடம் வந்து சாரணர் யக்ஷர் கின்னரர் இவர்களால் துதி செய்யப்பெற்ற அந்த குபேரன், கை கூப்பிக்கொண்டு நிற்கிற அந்த த்ருவனைப் பார்த்து இங்கனம் மொழிந்தான்.
குபேரன் சொல்லுகிறான்:- வாராய் க்ஷத்ரிய குமாரனே! நீ யக்ஷர்களை வதித்தமையால் உண்டான பாபம் தீரப் பெற்றாய். நான் உன் விஷயத்தில் மிகுதியும் ஸந்தோஷம் அடைந்தேன். அதற்குக் காரணம் என்னெனில், நீ உன் பாட்டனாராகிய (தாத்தாவாகிய) ஸ்வாயம்புவ மனுவின் உபதேசத்தினால் துறக்கமுடியாத வைரத்தையும் (விரோதத்தையும்) துறந்தாயல்லவா? அதுவே காரணம். “நான் யக்ஷர்களை வதித்தமையால் உண்டான பாபத்தின் ஸம்பந்தம் உடையவனாயிருக்க எப்படி நான் பாபமற்றவனாவேன்?” என்னில், சொல்லுகிறேன், கேட்பாயாக. நீ யக்ஷர்களை வதித்தவனல்லை. யக்ஷர்களும் உன் ப்ராதாவை (ஸஹோதரனை) வதிக்கவில்லை. ஏனென்னில், ப்ராணிகளின் மரணத்திற்கும் உத்பத்திக்கும் காலஸ்வரூபனான ஈச்வரனே ஸமர்த்தனன்றி, மற்றவர்க்கு அந்த ஸாமர்த்யம் இல்லை. “ஒருவரையொருவர் வதித்தமையும் அதனாலுண்டான வேர்வை இளைப்பு முதலியதும் எனக்கும் யக்ஷர்களுக்கும் ப்ரத்யக்ஷமாயிருக்க, அதை நீ செய்யவில்லை. ஈச்வரனே அதைச் செய்தானென்பது எங்கனம் பொருத்தும்” என்னில், சொல்லுகிறேன். ப்ராணிகள் தேஹத்தைக் (உடலைக்) காட்டிலும் விலக்ஷணமான (வேறான) ஆத்மாவின் உண்மையை அறியாமல் அந்த தேஹத்தையே ஆத்மாவாக ப்ரமித்து (தவறாக, பொய்யாக நினைத்து) “நான் கொன்றேன். நீ கொன்றாய்” என்று நினைக்கின்றார்கள். “நான், நீ” என்கிற அறிவில் தோற்றுகிற ஆத்ம ஸ்வரூபத்தை அவர்கள் அறிந்தவரல்லர். நானென்று தோற்றுகிற ஆத்மாவைக் காட்டிலும் வேறுபட்ட தேஹத்தையே ஆத்மாவாக நினைக்கின்றார்களாகையால் அவர்கள் விபரீத ஜ்ஞானமுடையவர். விபரீத ஜ்ஞானமாவது ஒரு வஸ்துவை மற்றொரு வஸ்துவாக நினைக்கை. முத்துச்சிப்பியைப் பார்த்து இது வெள்ளியென்று நினைக்கை விபரீதஜ்ஞானம். ஒரு வஸ்துவுக்கு ஒரு குணம் இயற்கையில் ஏற்பட்டிருக்க, அதைவிட்டு அதிலில்லாத மற்றொரு குணத்தை அதிலிருப்பதாக நினைக்கை அன்யதா ஜ்ஞானமென்று கூறப்படும். சங்கம் வெளுத்திருக்க, அதைப் பொன்னிறமுடையதாக நினைக்கை அன்யதாஜ்ஞானமாம். இவர்கள், பிறரைக் கொல்லும் தன்மையனல்லாத ஆத்மாவிடத்தில் கொல்லும் தன்மையை ஏறிடுகிறார்களாகையால், அன்யதாஜ்ஞானமும் உடையவர்களே. ஜீவாத்மா கொல்லும் தன்மையனுமல்லன். ஆத்மாவுக்கு உத்பத்தியாவது தேஹஸம்பந்தம் (உடலின் சேர்க்கை) உண்டாகப் பெறுகையே. மரணமாவது தேஹவியோகம் பெறுகையே (உடலின் தொடர்பின்மையே). உடலுக்கே உத்பத்தியும் மரணமும் உள்ளவை. உடலுக்கு உத்பத்தியாவது ஒரு அவஸ்தையைப் (நிலையைப்) பெறுகையே. மரணமாவது முன்னிருந்த அவஸ்தையை விடுகையே. இந்த உத்பத்தி மரணங்கள் தேஹத்திற்கு என்றும் உள்ளவைகளே. ஆகையால் பரிஹரிக்க (தவிர்க்க) முடியாமல் நித்யமாயிருக்கின்ற உத்பத்தி மரணங்களைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டிய அவசியமில்லை.