தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – பதினொன்றாம் அத்தியாயம்
(நந்தாதிகள் ப்ரஹத்வனத்தை விட்டு ப்ருந்தாவனத்திற்குப் போதலும், பகாஸுர, வத்ஸாஸுரர்களின் வதமும்)
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- குரு ச்ரேஷ்டனே! நந்தன் முதலிய கோபர்கள், முரிந்து விழுந்த அர்ஜுன வ்ருக்ஷங்களின் (மரங்களின்) சப்தத்தைக் கேட்டு, இடி விழுகிறதோ என்று ஸந்தேஹப்பட்டுப் பயந்து, அவ்விடம் வந்தார்கள். அங்கு பூமியில் விழுந்திருக்கின்ற யமளார்ஜுன வ்ருக்ஷங்களைக் (மரங்களைக்) கண்டு, உரலில் கயிற்றால் கட்டுண்டு அதை இழுத்துக்கொண்டு போகின்ற அப்பாலகனே அந்த வ்ருக்ஷங்கள் (மரங்கள்) விழுந்ததற்குக் காரணமென்று அறியாமல், “இந்த வ்ருக்ஷங்களை (மரங்களை) முரித்து விழத் தள்ளினது யாருடைய கார்யம்? இது எந்தக்காரணத்தினால் நேர்ந்தது? ஆ! இதென்ன ஆச்சர்யம்? நமக்கு மேன் மேலென உத்பாதங்கள் (தீய அறிகுறிகள்) உண்டாகின்றனவே” என்று பயந்து ப்ரமித்தார்கள்.
இவ்வாறு ப்ரமிக்கின்ற அந்த இடையர்களைக் குறித்து, அங்கிருந்த இடைப் பிள்ளைகள் “இந்த ஸ்ரீக்ருஷ்ணன் இந்த வ்ருக்ஷங்களின் (மரங்களின்) இடையில் உரலை இழுத்துக்கொண்டு போகையில், உரல் குறுக்கே விழுந்து தடுக்க, அதை வலிவுடன் இழுத்தான். அதனால் வ்ருக்ஷங்கள் (மரங்கள்) முரிந்து விழுந்தன. இது மாத்ரமேயல்லாமல், இந்த வ்ருக்ஷங்களினின்று (மரங்களிலிருந்து) இரண்டு திவ்ய புருஷர்களும் கிளம்பக்கண்டோம்” என்று மொழிந்தார்கள். அவர்கள் “இது எவ்வாறு நேரும்? நேராது” என்று அப்பிள்ளைகளின் வார்த்தையை நம்பவில்லை. சிலர் “இக்குழந்தையே ஒருகால் வ்ருக்ஷங்களை முரித்திருக்கக்கூடும்” என்று ஸந்தேஹமுற்றார்கள். நந்தன் கயிற்றால் கட்டுண்டு உரலை இழுத்துக்கொண்டு போகின்ற தன் புதல்வனைக் கண்டு, சிரித்த முகத்துடன் அவனைக் கட்டினின்று விடுவித்து, “அட! க்ருஷ்ணா! பழம் வாங்கிக்கொள்வாய்” என்று மொழிந்தான். அந்த அச்சுதனும், தான் ஸ்வர்க்கம், மோக்ஷம் முதலிய ஸமஸ்த பலன்களையும் கொடுக்கவல்லவனாயினும், கேவலம் ப்ராக்ருத (ஸாதாரண) பாலகன் போலப் பழத்தை விரும்பி, தாயிடம் சென்று கேட்டு, கையில் நெல்லை எடுத்துக்கொண்டு சென்றான். பழம் விற்கிறவளும், கொண்டு வந்த நெல்லெல்லாம் வழியில் கீழே சிந்திப் போய்க் கடைசியில் வெறுங்கையனாய் வந்து நிற்கிற அந்த அச்சுதனுடைய இரண்டு கைகளையும் பழங்களால் நிறைத்தாள். உடனே, அந்தப் பழம் விற்கிறவளுடைய பழக்கூடை முழுவதும் ரத்னங்களால் நிறைந்தது.
(“பழம் வாங்கவேண்டுமென்று கொண்டு வந்த நெல்லெல்லாம், அறியாதவனாகையால் செவ்வையாய்க் கொண்டு வரத் தெரியாமல், நடுவழியில் சிந்திவிட்டு வந்தான்” என்பதை அறிந்து, பழம் விற்கிறவள் மன இரக்கத்துடன் குழந்தையின் முகத்தைக் கண்டு, மனம் உருகி, அவனுடைய இரப்பையும் (வேண்டுவதையும்) கண்டு செயலற்றுப் பழங்களைக் கை நிரம்பக் கொடுத்தாள். பகவத் விஷயத்தில் செய்த கிஞ்சித்காரமாகையால் (சிறிய செயலாகையாகையால்) அவளுடைய பழக்கூடை ரத்னங்களால் நிரம்பிற்றென்று கருத்து. அவன் நெல்லைக் கொண்டு வந்து கூடையிற் போட அவள் பழங்கொடுத்தாள். போட்ட நெற்களெல்லாம் ரத்னங்களாகிக் கூடை நிரம்பிற்றென்றும் சிலர் கூறுவார்கள்.)
கோபிகைகளால் ஒருகால், கைத்தாளமிடுவது முதலியன செய்து, உத்ஸாஹப்படுத்தப்பட்டு, மரப்பொம்மை போல அவர்களுக்குட்பட்டு, அவர்கள் உரக்கப் பாடுகையில் ஒன்றுமறியாத பாலன் போல் ஆடுவதும் பாடுவதுமாயிருந்தான். ஒருகால், அவர்களால் மணை, படி, பாதுகை முதலியன கொண்டு வரும்படி நியமிக்கப்பட்டு, அவற்றைக் கொண்டு வர வல்லமையற்றவன் போல, மிக்க வருத்தத்துடன் எடுத்துக் கொண்டு வருவான். அவர்களுக்கு ப்ரீதியை (மகிழ்ச்சியை) விளைத்துக்கொண்டு, கையை அசைக்குவான். அவன் தன் வைபவத்தை (பெருமையை) அறிந்தவர்களுக்கு, தான் பக்த பராதீனனென்பதை வெளியிட்டுக்கொண்டு, இத்தகைய பால்ய சேஷ்டைகளால் இடைச்சேரியிலுள்ள ஜனங்களுக்கெல்லாம் ஸந்தோஷத்தை விளைத்துக்கொண்டிருந்தான்.