திங்கள், 30 நவம்பர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 227

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – பதினொன்றாம் அத்தியாயம்

(நந்தாதிகள் ப்ரஹத்வனத்தை விட்டு ப்ருந்தாவனத்திற்குப் போதலும், பகாஸுர, வத்ஸாஸுரர்களின் வதமும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- குரு ச்ரேஷ்டனே! நந்தன் முதலிய கோபர்கள், முரிந்து விழுந்த அர்ஜுன வ்ருக்ஷங்களின் (மரங்களின்) சப்தத்தைக் கேட்டு, இடி விழுகிறதோ என்று ஸந்தேஹப்பட்டுப் பயந்து, அவ்விடம் வந்தார்கள். அங்கு பூமியில் விழுந்திருக்கின்ற யமளார்ஜுன வ்ருக்ஷங்களைக் (மரங்களைக்) கண்டு, உரலில் கயிற்றால் கட்டுண்டு அதை இழுத்துக்கொண்டு போகின்ற அப்பாலகனே அந்த வ்ருக்ஷங்கள் (மரங்கள்) விழுந்ததற்குக் காரணமென்று அறியாமல், “இந்த வ்ருக்ஷங்களை (மரங்களை) முரித்து விழத் தள்ளினது யாருடைய கார்யம்? இது எந்தக்காரணத்தினால் நேர்ந்தது? ஆ! இதென்ன ஆச்சர்யம்? நமக்கு மேன் மேலென உத்பாதங்கள் (தீய அறிகுறிகள்) உண்டாகின்றனவே” என்று பயந்து ப்ரமித்தார்கள். 

இவ்வாறு ப்ரமிக்கின்ற அந்த இடையர்களைக் குறித்து, அங்கிருந்த இடைப் பிள்ளைகள் “இந்த ஸ்ரீக்ருஷ்ணன் இந்த வ்ருக்ஷங்களின் (மரங்களின்) இடையில் உரலை இழுத்துக்கொண்டு போகையில், உரல் குறுக்கே விழுந்து தடுக்க, அதை வலிவுடன் இழுத்தான். அதனால் வ்ருக்ஷங்கள் (மரங்கள்) முரிந்து விழுந்தன. இது மாத்ரமேயல்லாமல், இந்த வ்ருக்ஷங்களினின்று (மரங்களிலிருந்து) இரண்டு திவ்ய புருஷர்களும் கிளம்பக்கண்டோம்” என்று மொழிந்தார்கள். அவர்கள் “இது எவ்வாறு நேரும்? நேராது” என்று அப்பிள்ளைகளின் வார்த்தையை நம்பவில்லை. சிலர் “இக்குழந்தையே ஒருகால் வ்ருக்ஷங்களை முரித்திருக்கக்கூடும்” என்று ஸந்தேஹமுற்றார்கள். நந்தன் கயிற்றால் கட்டுண்டு உரலை இழுத்துக்கொண்டு போகின்ற தன்  புதல்வனைக் கண்டு, சிரித்த முகத்துடன் அவனைக் கட்டினின்று விடுவித்து, “அட! க்ருஷ்ணா! பழம் வாங்கிக்கொள்வாய்” என்று மொழிந்தான். அந்த அச்சுதனும், தான் ஸ்வர்க்கம், மோக்ஷம் முதலிய ஸமஸ்த பலன்களையும் கொடுக்கவல்லவனாயினும், கேவலம் ப்ராக்ருத (ஸாதாரண) பாலகன் போலப் பழத்தை விரும்பி, தாயிடம் சென்று கேட்டு, கையில் நெல்லை எடுத்துக்கொண்டு சென்றான். பழம் விற்கிறவளும், கொண்டு வந்த நெல்லெல்லாம் வழியில் கீழே சிந்திப் போய்க் கடைசியில் வெறுங்கையனாய் வந்து நிற்கிற அந்த அச்சுதனுடைய இரண்டு கைகளையும் பழங்களால்  நிறைத்தாள். உடனே, அந்தப் பழம் விற்கிறவளுடைய பழக்கூடை முழுவதும் ரத்னங்களால் நிறைந்தது. 

(“பழம் வாங்கவேண்டுமென்று கொண்டு வந்த நெல்லெல்லாம், அறியாதவனாகையால் செவ்வையாய்க் கொண்டு வரத் தெரியாமல், நடுவழியில் சிந்திவிட்டு வந்தான்” என்பதை அறிந்து, பழம் விற்கிறவள் மன இரக்கத்துடன் குழந்தையின் முகத்தைக் கண்டு, மனம் உருகி, அவனுடைய இரப்பையும் (வேண்டுவதையும்) கண்டு செயலற்றுப் பழங்களைக் கை நிரம்பக் கொடுத்தாள். பகவத் விஷயத்தில் செய்த கிஞ்சித்காரமாகையால் (சிறிய செயலாகையாகையால்) அவளுடைய பழக்கூடை ரத்னங்களால் நிரம்பிற்றென்று கருத்து. அவன் நெல்லைக் கொண்டு வந்து கூடையிற் போட அவள் பழங்கொடுத்தாள். போட்ட நெற்களெல்லாம் ரத்னங்களாகிக் கூடை நிரம்பிற்றென்றும் சிலர் கூறுவார்கள்.) 

கோபிகைகளால் ஒருகால், கைத்தாளமிடுவது முதலியன செய்து, உத்ஸாஹப்படுத்தப்பட்டு, மரப்பொம்மை போல அவர்களுக்குட்பட்டு, அவர்கள் உரக்கப் பாடுகையில் ஒன்றுமறியாத பாலன் போல் ஆடுவதும் பாடுவதுமாயிருந்தான். ஒருகால், அவர்களால் மணை, படி, பாதுகை முதலியன கொண்டு வரும்படி நியமிக்கப்பட்டு, அவற்றைக் கொண்டு வர வல்லமையற்றவன் போல, மிக்க வருத்தத்துடன் எடுத்துக் கொண்டு வருவான். அவர்களுக்கு ப்ரீதியை (மகிழ்ச்சியை) விளைத்துக்கொண்டு, கையை அசைக்குவான். அவன் தன் வைபவத்தை (பெருமையை) அறிந்தவர்களுக்கு, தான் பக்த பராதீனனென்பதை வெளியிட்டுக்கொண்டு, இத்தகைய பால்ய சேஷ்டைகளால் இடைச்சேரியிலுள்ள ஜனங்களுக்கெல்லாம் ஸந்தோஷத்தை விளைத்துக்கொண்டிருந்தான். 

ஞாயிறு, 29 நவம்பர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 226

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – பத்தாவது அத்தியாயம்

(யக்ஷர்களின் சாபத்தை நிரூபித்தலும், ஸ்ரீக்ருஷ்ணன் யமளார்ஜுனங்களை முறித்தலும், யக்ஷர்கள் ஸ்ரீக்ருஷ்ணனைத் துதித்து விடைபெற்றுப் போதலும்)

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- மஹானுபாவரே! குபேரன் பிள்ளைகளான யக்ஷர்களுடைய சாபத்தின் காரணத்தைச் சொல்லுவீராக. தேவர்ஷியாகிய நாரதருக்குக் கோபம் வரும்படி அவர்கள் செய்த நிந்தைக்கிடமான கார்யம் யாது?

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- குபேரனுடைய பிள்ளைகளான இரண்டு யக்ஷர்கள், ருத்ரனுக்குப் பரிசாரகர்களாயிருந்தும், செல்வப்பெருக்கினால் மிகவும் கொழுத்து, யௌவன மதத்தினால் (இளமை கர்வத்தினால்) மதி (புத்தி) மயங்கி, கங்கையில் அழகியதான கைலாஸ பர்வதத்தின் உபவனத்தில், வாருணியென்ற மத்யத்தைப் (கள்ளைப்) பானஞ் செய்து (பருகி), அதனாலுண்டான மதத்தினால் (மயக்கத்தினால்) கண்கள் சுழலப் பெற்று, தங்களைத் தொடர்ந்து பாடிக்கொண்டு வருகிற மடந்தையர்களுடன், புஷ்பித்திருக்கின்ற அவ்வனத்தில் உலாவிக் கொண்டிருந்தார்கள். அவர்கள், பிறகு தாமரைக் காடுகள் வரிசை வரிசையாய் அடர்ந்திருக்கின்ற கங்காநதியின் இடையில் இழிந்து, ஆண் யானைகள் பெண்யானைகளுடன் விளையாடுவது போல, யௌவனப் பருவமுடைய மடந்தையர்களுடன் கலந்து விளையாடினார்கள். தேவ ருஷியாகிய நாரதர், தெய்வாதீனமாய் அவ்விடம் வந்து, ஜலக்ரீடை செய்கின்ற அந்த யக்ஷர்களைக் கண்டு, அவர்கள் ஆடையற்று மதித்திருப்பதை (மயங்கி இருப்பதை) அறிந்தார். 

யக்ஷ மடந்தையர்கள், அம்முனிவர் வந்திருப்பதைக் கண்டு, வெட்கமுற்று, சபிக்கப் போகிறாரேயென்று பயந்து, விரைவுடன் ஆடைகளை எடுத்து உடுத்துக் கொண்டார்கள். யக்ஷர்களோவென்றால், ஆடையை உடுத்திக்கொள்ளாமல், திகம்பரர்களாகவே இருந்தார்கள். குபேரனுடைய பிள்ளைகளான அந்த யக்ஷர்கள், செல்வப் பெருக்கினால் மதித்து (மயங்கி), கண் தெரியாதவர்களாகி, மத்ய பானஞ் செய்து (கள் அருந்தி), மதி (புத்தி) மயங்கியிருப்பதைக் கண்டு, அவர்களை அனுக்ரஹிக்க விரும்பிச் சாபம் கொடுக்க முயன்று, இவ்வாறு மொழிந்தார்.

நாரதர் சொல்லுகிறார்:- மனத்திற்கினியவைகளான சப்தாதி விஷயங்களை அனுபவிக்கும் புருஷனுக்கு, செல்வப் பெருக்கினால் விளையும் மதத்தைப் (கர்வத்தைப்) போல, நற்குலத்தில் பிறவி முதலியவற்றால் விளைகிற மற்ற மதங்கள் (கர்வங்கள்), புத்தி ப்ரம்சத்தை (தடுமாற்றத்தை) விளைக்க வல்லவையாக மாட்டா; ரஜோ குணத்தின் கார்யமான காம (ஆசை) க்ரோதாதிகளையும் (கோபம்) வளர்க்கமாட்டா. செல்வப்பெருக்கினால் விளையும் மதமே (கர்வமே), புத்தி ப்ரம்சத்தையும் (தடுமாற்றத்தையும்) விளைத்து, காம க்ரோதங்களையும் (ஆசை, கோபங்களையும்) வளர்க்கும். செல்வக்கொழுப்பு நேருமாயின், பெண்களுடன் சேர்க்கை, சூதாட்டம், மது அருந்துதல் ஆகிய இவை உண்டாகின்றன. மற்றும், செல்வக் கொழுப்பினால் மதி (புத்தி) மயங்கினவர்கள் நல்வரமான இந்தத் தேஹத்தைக் கிழத்தனம், மரணம் முதலிய விகாரங்கள் (மாற்றக்கள்) அற்றதாகவும், சாச்வதமாகவும் நினைத்து, இந்திரியங்களை அடக்காமல், மன இரக்கமின்றி, பசுக்களை வதிக்கிறார்கள். இச்சரீரம் “நர தேவன், பூ தேவன், ஸ்வர்க்க தேவன்” என்னும் இவை முதலிய பல பெயர்களைப் பெறினும், கடைசியில் “புழு, மலம், சாம்பல்” என்னும் இவை முதலிய பெயர்களைப் பெறுகின்றது. (சரீரத்தைக் கொளுத்துவார்களாயின் சாம்பல் என்றும், நாய் முதலிய ஜந்துக்களுக்கு உணவானால் மலம் என்றும், புதைக்கப்பட்டால் புழுவென்றும் பெயர்களைப் பெறுகின்றது). 

சனி, 28 நவம்பர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 225

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – ஒன்பதாவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ணன் உரலில் கட்டுண்ட வ்ருத்தாந்தம்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஒருகால், வீட்டு வேலைக்காரிகள் அனைவரும் வேறு கார்யங்களால் தூண்டப்பட்டிருக்கையில், நந்தனின் மனைவியான யசோதை, தானே தயிர் கடையத் தொடங்கினாள். அவள், கவிகளால் நிபந்தனஞ் செய்யப்பட்ட (இயற்றப்பட்ட) அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய பால்ய சரித்ரங்களை எல்லாம் நினைத்து, தயிர் கடையும் பொழுது பாடிக் கொண்டிருந்தாள். அழகிய புருவங்களையுடைய அந்த யசோதை, பெரிய கடித்தடத்தில் (இடுப்பில்) வெண்பட்டு வஸ்த்ரம் தரித்து, அதன்மேல் அரை நாண் மாலை அணிந்து, பிள்ளையிடத்தில் ஸ்னேஹத்தினால் ஸ்தனங்களில் பால் பெருகவும், உடம்பு அசையவும், கயிற்றை ச்ரமப்பட்டு இழுக்கின்ற கைகளில் வளைகள் ஒலிக்கவும், காதுகளில் குண்டலங்கள் குலுங்கவும், முகம் வேர்க்கவும், தலைச் சொருக்கினின்று மாலதிப் புஷ்பங்கள் சொரியவும் பெற்று, ஸ்ரீக்ருஷ்ண லீலைகளைப் பாடிக்கொண்டே தயிர் கடைந்தாள். அப்பொழுது, ஸ்ரீக்ருஷ்ணன் ஸ்தன்ய பானஞ் செய்ய (தாய்ப்பால் பருக) விரும்பித் தயிர் கடைகின்ற அந்த யசோதையிடம் வந்து, அவர்களுக்கு ப்ரீதியை விளைத்துக் கொண்டு மத்தைப் பிடித்துத் தயிர் கடைய வொட்டாமல் தடுத்தான். அவளும், அவனை மடியில் ஏறவிட்டு, புன்னகையோடு கூடின அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டே, ஸ்னேஹத்தினால் பெருகுகின்ற ஸ்தன்யத்தைக் (முலைப் பாலைக்) கொடுத்தாள். அப்பொழுது, காய வைத்த பால் பொங்கி வழியக் கண்டு, த்ருப்தி உண்டாகப் பெறாமல் இன்னம் பருக வேண்டுமென்று விரும்புகிற அந்த ஸ்ரீக்ருஷ்ணனை விட்டு, விரைவுடன் எழுந்து சென்றாள். அவன், அதனால் கோபித்துச் சிவந்த உதட்டைப் பற்களால் கடித்துப் பொய்யாகவே கண்ணீர் பெருக்கி, கற்குழவியால் தயிர் கடையும் பாண்டத்தை உடைத்து, உள்ளே சென்று, வெண்ணையை எடுத்து ஏகாந்தமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். 

அப்பொழுது யசோதை, பால் நன்றாகக் காய்ந்திருக்கக் கண்டு, அதை இறக்கி மீண்டு வந்து, ததிபாண்டம் (தயிர்ப்பானை) உடைந்திருக்கக் கண்டு, அது தன் பிள்ளை செய்த கார்யமென்று உணர்ந்து, சிரித்தாள். அப்புதல்வனையும், அங்குக் காணவில்லை. அப்பால், யசோதை, உரலடியின் மேல் உட்கார்ந்து வெண்ணெயை குரங்குக்கு வேண்டியவளவு கொடுத்துக் கொண்டிருப்பவனும், திருட்டுத்தனம் தோன்றுமாறு பயந்து விழிக்கிற கண்களையுடையவனுமாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணனைக் கண்டு, தெரியாமல் மெல்ல மெல்லப் பின்னே சென்றாள். கையில் தடியை எடுத்துக் கொண்டு வந்திருக்கின்ற அந்த யசோதையைக் கண்டு, ஸ்ரீக்ருஷ்ணன் விரைவுடன் உரலினின்றும் எழுந்து, பயந்தவன் போல அப்புறம் ஓடினான். 

அப்பொழுது, அந்த யசோதை, தவத்தினால் தூண்டப்பட்ட யோகிகளின் மனமுங்கூட எவனை அணுக முடியாமல் மயங்குகின்றதோ, அப்படிப்பட்ட பரமபுருஷனாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணனைப் பின் தொடர்ந்தோடினாள், அழகிய இடையுடையவளும், நிதம்பங்களின் (பருத்த புட்டங்களின்) பாரத்தினால் நடை தடைபடப் பெற்றவளுமாகிய தாயான யசோதை, பின் தொடர்ந்து வேகத்தினால் அவிழ்ந்த தலைச் சொருக்கினின்று வழியெல்லாம் புஷ்பங்கள் இறையப் பெற்றுச் சென்று, அவனைப் பிடித்துக் கொண்டாள். அபராதஞ் செய்தவனும், மை கலைந்து நிரம்பின கண்களைக் கையினால் பிசைந்து கொண்டிருப்பவனும், பயத்தினால் தழதழத்த கண்களுடையவனும், “இவள் என்ன செய்வாளோ?” என்று தாயை உற்றுப் பார்க்கின்றவனுமாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணனைக் கையில் பிடித்துக் கொண்டு, பயமுறுத்தி, அடிக்கத் தொடங்கினாள். பிள்ளையிடத்தில் ப்ரீதியுடைய அந்த யசோதை, பிள்ளை பயந்திருப்பதை அறிந்து, தடியை அப்புறம் போட்டு, அவன் ப்ரபாவத்தை அறியாமல், அவனைக் கயிற்றால் கட்ட விரும்பினாள். 

ஶ்ரீமத் பாகவதம் - 224

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – எட்டாவது அத்தியாயம்

(நாமகரணமும், பாலக்ரீடையில் தாய்க்கு விச்வரூபம் காட்டுதலும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ராஜனே! யாதவர்களுக்குப் புரோஹிதரும், மஹா தபஸ்வியுமாகிய கர்க்க முனிவர், வஸுதேவனால் தூண்டப்பட்டு, நந்தகோகுலத்திற்குச் சென்றார். நந்தன் அவரைக் கண்டு மிகவும் ஸந்தோஷமுற்று, எழுந்து எதிர்கொண்டு, நமஸ்காரம் செய்து, கைகூப்பி ஸாக்ஷாத் பகவானென்னும் புத்தியுடன் பூஜித்தான். அந்த நந்தன், அதிதி ஸத்காரம் (விருந்து உபசாரம்) செய்யப் பெற்று ஸுகமாக உட்கார்ந்திருக்கின்ற அம்முனிவரை, உண்மையும், ப்ரியமுமான வார்த்தையினால் மனக்களிப்புறச் செய்து, மீளவும் மொழிந்தான்.

நந்தன் சொல்லுகிறான்:- ப்ராஹ்மண ச்ரேஷ்டரே! விருப்பங்களெல்லாம் நிறைவேறப்பெற்று நிறைவாளராயிருக்கின்ற (வேண்டியது அனைத்தும் அடையப்பெற்றவராய் இருக்கின்ற) உமக்கு, எங்களால் என்ன ஆக வேண்டியிருக்கிறது? ஒன்றுமில்லை. நான் நிறைவாளனாயின், “தனிகர்களின் (பணக்காரர்களின்) வாசலைத் தேடி ஏன் வருகிறேன்?” என்றால், உம்மைப்போன்ற பெரியோர்கள், தங்கள் ஆச்ரமத்தினின்று வெளியில் திரிவது, சப்தாதி விஷயங்களில் மனவிருப்பமுற்று, மன இரக்கத்திற்கிடமான எங்களைப்போன்ற க்ருஹஸ்தர்களின் க்ஷேமத்திற்காகவேயன்றி, வேறு ப்ரயோஜனத்திற்காகவன்று. 

இந்த்ரியங்களுக்கு விஷயமாகாத வஸ்துக்களின் ஸ்வரூபத்தை அறிவதற்கு ஸாதனமாயிருப்பதும், க்ருஹ, நக்ஷத்ரங்களின் சாரங்களைத் தெரியப்படுத்துவதுமாகிய ஜ்யோதிஷ் சாஸ்த்ரத்தை நீரே நேராக இயற்றினீர். இந்த ஜ்யோதிஷ் சாஸ்த்ரத்தினால் மற்ற புருஷர்களும் கீழ் நடந்தது மேல் வரப்போகிறது இவற்றை அறிகின்றார்கள். ப்ராஹ்மண ச்ரேஷ்டரே! ஆகையால், நீர் இந்தப் பிள்ளைகளுக்கு நாமகரணம் (பெயர் சூட்டுதல்) முதலிய ஸம்ஸ்காரங்களைச் செய்ய உரியவராயிருக்கின்றீர். மனுஷ்யர்கள் அனைவர்களுக்கும், ப்ராஹ்மணன் ஜன்மத்தினால் குருவல்லவா? ஆகையால், நீர் இதை நடத்தியருள வேண்டும்.

கர்க்கர் சொல்லுகிறார்:- நான், யாதவர்களுக்கு ஆசார்யனென்று பூமியெங்கும் ப்ரஸித்தனாயிருப்பவன். நான், உன் பிள்ளைக்கு நாம கரணாதி (பெயர் சூட்டுதல் முதலிய) ஸம்ஸ்காரம் செய்வேனாயின், பாபிஷ்டமான மதியுடைய (பாப புத்தி உடைய) கம்ஸன், உன் பிள்ளையையும் தேவகியின் பிள்ளையென்றே நினைப்பான். “யது குலாசார்யனாகிய உம்மால் ஸம்ஸ்காரம் செய்ததைக் கொண்டு, ஒருகால் யாதவ குமாரனென்று அறிவானாயினும், வஸுதேவனுடைய பிள்ளையென்றும், தேவகியிடத்தில் பிறந்தவனென்றும், அக்கம்ஸன் எப்படி அறியமுடியும்?” என்றால், சொல்லுகிறேன். 

புதன், 25 நவம்பர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 223

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – ஏழாவது அத்தியாயம்

(சகடாஸுரனை முறித்தலும், த்ருணாவர்த்தனை மாய்த்தலும், வாயில் விச்வரூபம் காட்டுதலும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- எங்கும் நிறைந்த பரமபுருஷனாகிய ஸ்ரீக்ருஷ்ணன், இவ்வாறு துஷ்டர்களைத் தொலைப்பது, அவர்களுக்கு மோக்ஷம் கொடுப்பது முதலியவற்றையும் மற்றும் பல செயல்களையும் செய்து கொண்டும், இடையர்களுக்கும், இடைச்சிகளுக்கும் ஸுகத்தை விளைத்துக் கொண்டும், கோகுலத்தில் வளர்ந்து வந்தான்.

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- தன்னைப் பற்றினாருடைய பாபங்களைப் போக்கும் தன்மையனும், ஸர்வலோக (எல்லா உலகங்களையும்) நியாமகனுமாகிய (நியமிப்பவனுமான)  பகவான், மத்ஸ்யம் முதலிய எந்தெந்த அவதாரங்களால் எந்தெந்தச் செயல்களைச் செய்தானோ, அவையெல்லாம் செவிக்கினியவைகளும், மனத்திற்கு மஹா ஆனந்தத்தை விளைப்பவைகளுமாய் இருக்கின்றன. ஆயினும், எவனேனும் இந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய சேஷ்டையைக் கேட்பானாயின், அவனுடைய மனச்சோர்வும், சப்தாதி விஷயங்களைப் பற்றின பலவகை விருப்பமும், பறந்தோடுகின்றன. சீக்ரத்தில் மனம் பரிசுத்தமாகின்றது. பகவானிடத்தில் ப்ரீதியும், அவன் பக்தர்களிடத்தில் ஸ்னேஹமும் உண்டாகின்றன. ஆகையால், உமக்குத் திருவுள்ளமாயின், அழகியதான அந்த ஸ்ரீக்ருஷ்ண சரித்ரத்தையே எமக்குச் சொல்வீராக. மனுஷ்யனாய் வந்து அவதரித்து, மனுஷ்ய ஜாதியை அனுஸரித்து நடக்கிற ஸ்ரீக்ருஷ்ணன், இன்னம் என்னென்ன அற்புதமான பாலசேஷ்டைகளைச் செய்தானோ, அவற்றையும் எங்களுக்கு மொழிவீராக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஒருகால் உத்தானத்தைப் (உத்தானம் – எழுந்து நிற்கை) பற்றின உத்ஸவத்திற்காக ஸ்னானம் நடத்துகிற அன்று, ஜன்ம நக்ஷத்ரமாகிய ரோஹிணி நக்ஷத்ரமும் சேருகையில், அம்மஹோத்ஸவத்திற்காக ஒன்று சேர்ந்திருக்கிற கோபஸ்த்ரீகளோடு கூடிய நல்லொழுக்கமுடைய யசோதை, பல வாத்ய கோஷங்களுடனும், ப்ராஹ்மணர்கள் வந்தோதுகிற மந்த்ர கோஷங்களுடனும், தன் புதல்வனுக்கு அபிஷேகம் செய்தாள். நந்தன் மனைவியான யசோதை, அன்னாதிகளையும், வஸ்த்ரங்களையும், பூமாலைகளையும், அவரவர் விரும்புகிற மற்றும் இஷ்ட வஸ்துக்களையும், பசுக்களையும் கொடுத்துப் பூஜிக்கப்பட்ட அந்தணர்களால் ஸ்வஸ்தி வாசனம் செய்வித்து (மங்கள வார்த்தைகள் கூறச்செய்து), மஞ்சனமாட்டி, அங்க ரக்ஷாதிகள் (உடல் உறுப்புக்களுக்கு காப்பு) செய்யப் பெற்றவனும், கண்ணுறக்கமுற்றவனுமாகிய தன் புதல்வனைப் படுக்கவிட்டு, உறங்கப் பண்ணினாள். உதார மனமுடைய அந்த யசோதை, உத்தான மஹோத்ஸவத்தில், பெரிய மனக்களிப்புடன் உலாவலுற்று வந்த கோபர்களைப் பூஜித்துக் கொண்டிருக்கையில், தூங்கியெழுந்து அழுகின்ற தன் புதல்வனுடைய அழுகுரலைக் கேளாதிருந்தாள். 

சனி, 21 நவம்பர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 222

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – ஆறாவது அத்தியாயம்

(பூதனா ஸம்ஹாரம்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- நந்தன், வழியில் போகும் பொழுதே வஸுதேவனுடைய வார்த்தை பொய்யாகாதென்று நிச்சயித்து, என்ன உத்பாதம் (தீய அறிகுறிகள்) நேரிடுமோவென்று சங்கித்து (ஸந்தேஹப்பட்டு), பரமபுருஷனை சரணம் அடைந்தான். அப்பொழுது, இளம்பிள்ளைகளைக் கொல்லும் தன்மையுடைய பூதனை என்னும் ராக்ஷஸி கம்ஸனால் அனுப்பப்பட்டு, பட்டணங்களிலும், க்ராமங்களிலும், சேரிகளிலும் உள்ள சிசுக்களை (குழந்தைகளை) எல்லாம் வதிப்பதே பணியாகப்பெற்று, ஆங்காங்கு உலாவிக்கொண்டிருந்தாள். தன்னிடத்தில் மாறாத மனநிலைமையுடைய பக்தர்களுக்கு ப்ரபுவான பகவானுடைய குணங்களைக் கேட்பது, கீர்த்தனம் செய்வது முதலியன ராக்ஷஸர்களை அழிக்கும் திறமையுடையவை. ஜனங்கள், தங்கள் தங்கள் வ்யாபாரங்களோடு கூட, அந்தப் பகவானுடைய குணங்களைக் கேட்பது முதலியவற்றையும் நடத்தாது போவார்களாயின், அந்தந்த இடங்களில் தான் ராக்ஷஸிகள் நடையாடுவார்களன்றி, பகவானுடைய குணங்களைக் கேட்பது முதலியவற்றை விடாது நடத்தும் பெரியோர்களிருக்கும் இடங்களில், அவர்கள் தலைகாட்ட மாட்டார்கள். இனி ஒன்றான பகவான் வஸிக்குமிடத்தில் அவர்கள் நுழைய இடமில்லையென்பதைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ? 

அந்தப் பூதனையென்னும் ராக்ஷஸி, ஒருகால் நந்தகோகுலத்திற்கு அருகாமையில் வந்து, நினைத்தபடி வடிவம் கொள்ள வல்லவளாகையால், ஆச்சர்யமான வேஷத்தினால் தன்னுருவத்தை மறைத்துக்கொண்டு, அதற்குள் நுழைந்தாள். அவள், பெருத்தழகிய நிதம்பங்களாலும் (முதுகுக்கும் இடுப்புக்கும் கீழே உள்ள உடலின் பகுதி), பெருத்த கொங்கைகளின் பாரத்தினாலும் வருந்தி முறிவதுபோன்ற நுண்ணிய இடையும், அழகிய ஆடையும், அசைகின்ற காதணிகளில் ஒளி படியப்பெற்று திகழ்கின்ற முன்னெற்றி மயிர்களால் அலங்கரிக்கப்பட்டு விளங்குகின்ற முகமும் அமைந்து, தலைச்சொருக்கில் மல்லிப் புஷ்பங்களை அணிந்து, அழகிய புன்னகையோடு கூடின கடைக் கண்களினின்று பரவுகின்ற நோக்கங்களால் இடைச் சேரியிலுள்ளவர்களின் மனத்தைப் பறித்தாள். கோபிமார்கள் அவளைக் கண்டு, “மிகுந்த அழகுடையவளும், கையில் தாமரைமலர் தரித்தவளுமாகிய ஒன்றான ஸ்ரீமஹாலக்ஷ்மியே தன் கணவனான பரமபுருஷனைக் காண இவ்விடம் வந்திருக்கிறாள்” என்று நினைத்தார்கள். பாலர்களை வதிக்கும் அந்தப் பூதனை, இடைச்சேரியில் ஆங்காங்குள்ள சிசுக்களைத் (குழந்தைகளைத்) தேடிக் கொண்டு, தெய்வாதீனமாய்த் தன்னுடைய அழகைக் கண்டு மெய் மறந்திருக்கிற கோபிகைகளால் தடுக்கப் படாமலே, நந்தனுடைய மாளிகையில் நுழைந்து, அஸத்துக்களுக்கு (தீயோருக்கு) ம்ருத்யுவும் (காலனும், மரணமும்), தன்னுடைய தேஜஸ்ஸை மறைத்துக்கொண்டு பஸ்மத்தில் (சாம்பலில்) மறைந்திருக்கிற அக்னி போன்றிருப்பவனுமாகிய பாலகனைப் படுக்கையில் கண்டாள். 

ஜங்கம ஸ்தாவர (ஜங்கமம் - அசையும் பொருள்; ஸ்தாவரம் - அசையா பொருள்) ரூபமான ஸமஸ்த பூதங்களுக்கும் அந்தராத்மாவாக அவற்றின் மனோ பாவங்களையெல்லாம் அறிந்த அப்பரமபுருஷன், அப்பூதனை பாலர்களை வதிக்கும் பாவ க்ரஹமென்பதை அறிந்தவனாயினும், ஸங்கல்ப மாத்ரத்தினால் வதிக்க வல்லவனாயினும், இளமையை நடனஞ் செய்து ஒன்றும் பேசாதிருந்தான். பிறகு, அந்த ராக்ஷஸி, அப்பாலகன் துஷ்டர்களின் ப்ராணன்களைப் பறிப்பவனும், இயற்கையில் ஜகத்தின் சேஷ்டைகளையெல்லாம் அறிந்தவனும், தனக்கு ம்ருத்யுவாக (யமனாக) ஏற்பட்டிருப்பவனுமாகிய பரமபுருஷனென்பதை அறியாமல், தேச, கால, வஸ்து பரிச்சேதங்கள் (வரையறை) அற்றவனாயினும் மானிடத்தன்மையை அனுஸரித்து அளவுற்றவன் போன்றிருக்கிற அக்குழவியை, ஒன்றும் தெரியாத மூடன் உறங்குகின்ற ஸர்ப்பத்தைக் கயிறென்று மடியில் எடுத்து வைத்துக்கொள்வது போல, மடியில் எடுத்து வைத்துக்கொண்டாள். 

வியாழன், 19 நவம்பர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 221

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – ஐந்தாவது அத்தியாயம்

(நந்தன் ஸ்ரீக்ருஷ்ணனுக்கு ஜாதகரணம் நடத்தி, மதுரையில் வஸுதேவனுடன் கலந்து பேசுதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- உதாரமான (பரந்த) மனமுடைய நந்தன் பிள்ளை பிறக்கையில் ஸந்தோஷம் அடைந்து, வேதங்களை உணர்ந்த அந்தணர்களை வரவழைத்து, தான் ஸ்னானம் செய்து அலங்கரித்துக் கொண்டு, ஸ்வஸ்தி வாசனம் (நன் மங்கள சொற்கள் கூறுவித்து)செய்வித்து, விதிப்படி ஜாதகர்மத்தை நடத்தி, பித்ருக்களையும் தேவதைகளையும் பூஜித்தான். அப்பால், நன்கு அலங்காரம் செய்யப் பெற்ற இருபதினாயிரம் பசுக்களையும், ரத்ன ஸமூஹங்களாலும், ஸ்வர்ணங்களாலும், வஸ்த்ரங்களாலும் அலங்கரித்து பர்வதம் போல் குவித்த ஏழு எள்ளுக் குவியல்களையும் ப்ராஹ்மணர்களுக்குக் கொடுத்தான். ஜீவாத்மா, பரமாத்ம உபாஸனத்தினால் (த்யானத்தினால்) ஹேய (கெட்ட) ஸம்பந்தமற்று பரிசுத்தனாவதுபோல, பயிரிட வேண்டிய உரிய காலத்தினால் பூமியும், நீராடலால் உடலும், தூய்மையால் அழுக்கும், வேதம் கூறும் ஸம்ஸ்காரங்களால் கர்ப்பமும், தவத்தால் ஐம்பொறிகளும், வேள்வியால் அந்தணர்களும், தானத்தால் செல்வமும், த்ருப்தியால் மனமும் தூய்மை அடைகின்றன. ஆத்மா ஆத்ம வித்யையால் சுத்தி அடைகிறது. 

அந்த நந்தன் தான் ஸ்னானம் செய்து, ஸ்வஸ்திவாசனம் நடத்தி (நன் மங்கள சொற்கள் கூறுவித்து), பசு, ஸ்வர்ணம் முதலிய தானங்களையும் கொடுத்தான். அப்பொழுது ப்ராஹ்மணர்கள், ஸ்வஸ்தி மந்த்ரங்களைப் படித்தார்கள். புராணம் சொல்லுகிற ஸுதர்களும், வம்சாவளி படிக்கிற மாகதர்களும், ஸ்துதி பாடகர்களான வந்திகளும் மற்றும் ஸங்கீத பாடகர்களும் புராணாதிகளைப் பாடினார்கள். பேரி வாத்யங்களும், துந்துபி வாத்யங்களும் அடிக்கடி முழங்கின. கோகுலத்தில் வாசல்களும், முற்றங்களும், வீடுகளின் உட்புறங்களும், நன்றாக விளக்கி, தெளித்து, விசித்ரமான த்வஜங்களாலும், பதாகைகளாலும், பூமாலைகளாலும், புதிய வஸ்த்ரங்களாலும், தளிர்த்தோரணங்களாலும், அலங்காரம் செய்யப் பெற்றிருந்தன. பசுக்களும், எருதுகளும், கன்றுகளும், மஞ்சள், எண்ணெய் இவை பூசப்பெற்று, அற்புதமான தாதுக்கள், மயில் தோகைகள், பூமாலைகள், புதிய வஸ்த்ரங்கள், பொற்சங்கிலிகள் இவை இடம்ப்பெற்று விளங்கின. 

இடையர்களெல்லாரும், விலையுயர்ந்த வஸ்த்ரங்களையும், ஆபரணங்களையும், கவசங்களையும், தலைப்பாகைகளையும், அணிந்து, கைகளில் பலவகை உபஹாரங்களை (அன்பளிப்புப் பொருட்களை) ஏந்திக் கொண்டு நந்தனுடைய மாளிகைக்கு வந்தார்கள். பருத்தழகிய இடையின் பின்புறமுடைய இடைப்பெண்களும், யசோதைக்குப் பிள்ளை பிறந்த வ்ருத்தாந்தத்தைக் கேட்டு, மனக்களிப்புற்று, ஆடையாபரணங்களாலும், மெய்சந்தனம் முதலியவைகளாலும் தங்களை அலங்கரித்துக்கொண்டு, தாமரை மலர் போன்ற முகங்களில் புதிய குங்குமங்களாகிற தாதுகள் திகழப்பெற்று, பற்பல உபஹாரங்களை (காணிக்கைகளை) ஏந்திக் கொண்டு, கொங்கைகள் குலுங்க விரைந்து வந்தார்கள். காதுகளில் நன்றாகத் துடைத்து நிர்மலமாய் விளங்குகின்ற ரத்னகுண்டங்களையும், கழுத்தில் பதகங்களையும், அரையில் அற்புதமான ஆடைகளையும், கைகளில் வளைகளையும் அணிந்து, நந்தனுடைய மாளிகைக்கு விரைந்து செல்கிற இடைப்பெண்கள், நடைவேகத்தினால் அவிழ்ந்து அலைகின்ற தலைச் சொருக்கினின்று வழியில் பூமழை பொழியவும், தலை மயிர்களும், கொங்கைகளும், முத்துமாலைகளும், அசைவதனால் ஒரு வகையழகு திகழவும் பெற்று விளங்கினார்கள். அந்தக் கோபிகைகள் அப்பாலகனைப் பார்த்து, “எங்களை நெடுங்காலம் பாதுகாப்பாயாக” என்று ஆசீர்வாதங்களைச் செய்து, மஞ்சள் பொடிகளையும், எண்ணையையும், கந்தப்பொடி முதலிய மற்றும் பலவகைப் பொடிகளையும், ஜலத்தையும் ஒருவர் மேல் ஒருவர் இறைத்துக் கொண்டு, பாடினார்கள். ஸர்வலோகேச்வரனான ஸ்ரீக்ருஷ்ணன், பலராமனோடு நந்த கோகுலத்தை அடைகையில், அம்மஹோத்ஸவத்திற்காக அற்புதமான பல வாத்யங்கள் முழங்கின. இடையர்களும் ஸந்தோஷம் அடைந்து, தயிர், பால், நெய், ஜலம், வெண்ணெய் இவற்றை ஒருவர் மேல் ஒருவர் இறைப்பதும், பூசுவதும், தூவுவதுமாய் விளையாடினார்கள். 

புதன், 18 நவம்பர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 220

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – நான்காவது அத்தியாயம்

(கம்ஸன் யோகமாயையின் வாக்யத்தைக் கேட்டுப் பயந்து, மந்திரிகளுடன் ஆலோசித்து, உலகத்திலுள்ள குழந்தைகளையெல்லாம் கொல்லும்படி கட்டளையிடுதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- வஸுதேவன் சிறைச்சாலையில் புகுந்து முன்போலவே இருக்கையில், உள்ளும் புறமுமுள்ள வாசல்களெல்லாம் முன்போலவே மூடிக் கொண்டன. அந்த சிறைச்சாலையைப் பாதுகாக்கும் புருஷர்கள், குழந்தையின் அழுகுரலைக் கேட்டு விழித்துக்கொண்டு எழுந்து, விரைந்தோடி கம்ஸனிடம் சென்று, தேவகியின் கர்ப்பத்தினின்று சிசு (குழந்தை) பிறப்பதையே பயத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற அந்தக் கம்ஸனுக்குச் சிசு (குழந்தை) பிறந்த வ்ருத்தாந்தத்தை (விஷயத்தை) அறிவித்தார்கள். போஜவம்சத்து அரசனாகிய அக்கம்ஸன், இது ஸமயமென்று நினைத்து, அவசரமாகப் படுக்கையினின்று தழதழத்து, அடிகள் தடை படவும், தலைமயிர்கள் அவிழ்ந்து அலையவும் பெற்று விரைவுடன் ஸுதிக்ருஹத்திற்கு (ப்ரஸவ இடத்திற்கு) வந்தான். நல்லியற்கையுடைய தேவகி, தன் ப்ராதாவான கம்ஸன் வருவதைக் கண்டு வருந்தி, மன இரக்கத்திற்கிடமாகி, கேட்போர் மனம் கரையும்படி மொழிந்தாள்.

தேவகி சொல்லுகிறாள்:- மங்கள ஸ்வபாவமுடையவனே! இக்குழந்தை உனக்கு மருமகளாக வேண்டும். பெண்ணாகப் பிறந்த இக்குழந்தையை வதிக்கலாகாது. நீ தெய்வத்தினால் என் புதல்வர்களுக்கு ம்ருத்யுவாக (மரணமாக) ஏற்படுத்தப்பட்டு, அக்னி போல் ஜ்வலிக்கின்ற என் பிள்ளைகள் பலரையும் கொன்றாய். ப்ராதாவே! இந்த ஒரு பெண்ணை மாத்ரம் எனக்குக் கொடுப்பாயாக. ப்ரபூ! நான் உனக்குப் பின் பிறந்தவள்; உன்னால் தயை (இரக்கம்) செய்யத் தகுந்தவள்; பிள்ளைகள் பலரும் மாண்டு வருத்தமுற்றவள். ஆகையால், அப்பனே! மந்தபாக்யையாகிய (பாக்கியம் குறைந்த) எனக்குக் கடைசியில் பிறந்த இப்புதல்வியை மாத்ரம் கொடுப்பாயாக. 

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு புதல்வியை புஜங்களால் (கைகளால்) மார்பில் அணைத்துக்கொண்டு, மிகவும் மன இரக்கத்திற்கிடமாய் இருக்குமாறு கண்ணும் கண்ணீருமாய்ப் புலம்புகின்ற தேவகி வேண்டிக் கொண்டிருப்பினும், துர்ப்புத்தியாகிய (கொடிய புத்தி உடைய) கம்ஸன் அவளை விரட்டி, அவள் கையினின்று அக்குழந்தையைப் பிடுங்கிக் கொண்டான். அவன், அப்பொழுதுதான் பிறந்திருக்கின்ற உடன்தோன்றலின் புதல்வியாகிய அக்குழந்தையைப் பாதங்களில் பிடித்துக்கொண்டு, தன் ப்ரயோஜனத்தையே (பயனையே) நினைத்து, ஸ்னேஹத்தைத் (அன்பைத்) துறந்து, கல்லின் மேல் தூக்கி அடித்தான். ஸ்ரீமஹாவிஷ்ணுவின் தங்கையாகிய அப்பெண், அந்தக் கம்ஸனுடைய ஹஸ்தத்தினின்று (கையிலிருந்து) உயரக்கிளம்பி, அப்பொழுதே தன் ஸ்வரூபத்தை (இயற்கைத் தன்மையை) ஏற்றுக்கொண்டு, ஆகாயத்தில் சென்று, ஆயுதங்களோடு கூடின நீண்ட எட்டுப் புஜங்கள் (கைகள்) அமைந்து, திவ்யமான பூமாலை, வஸ்த்ரம், சந்தனம், குங்குமம் முதலிய பூச்சு ரத்னங்கள் இழைத்த ஆபரணங்கள் ஆகிய இவற்றை அணிந்து, தனுஸ்ஸு, சூலம், பாணம், கேடயம், கத்தி, சங்கம், சக்ரம், கதை இந்த ஆயுதங்களைத் தரித்து, சிறப்புடைய பல உபஹாரங்களை ஏந்திக்கொண்டிருக்கிற ஸித்தர், சாரணர், கந்தர்வர், அப்ஸர மடந்தையர், கின்னரர், உரகர் ஆகிய இவர்களால் துதிக்கப்பெற்று, கம்ஸனை நோக்கி “மதி கேடனே (புத்தி கெட்டவனே)! என்னைக் கொன்றாலும் உனக்கு என்ன ப்ரயோஜனம்? மூடா! அசரீரி வாக்கினால் முன்பு சொல்லப்பட்டவனும், உன்னை அழிப்பவனுமாகிய, உன் சத்ரு (எதிரி) ஏதோ ஓரிடத்தில் உண்டாகி, வளர்ந்து வருகின்றான். அதில் ஸந்தேஹம் வேண்டாம். மன இரக்கத்திற்கிடமான சிசுக்களை (குழந்தைகளை) வீணாக நீ ஹிம்ஸிக்கவேண்டாம்” என்று மொழிந்து, பூஜிக்கத்தகுந்த பெருமையுடைய அந்த யோகமாயை, பல திருநாமங்களையுடைய பல இடங்களில் தானும் துர்க்கை, காளி முதலிய பல நாமங்களைப் பூண்டு, வாஸம் செய்து வந்தது. கம்ஸன் அந்த யோகமாயை மொழிந்ததைக் கேட்டு, மிகவும் வியப்புற்று, தேவகீ வஸுதேவர்களைச் சிறைச்சாலையினின்று விடுவித்து, வணக்கத்துடன் மொழிந்தான்.

ஞாயிறு, 15 நவம்பர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 219

 தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – மூன்றாவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ணாவதாரமும், தேவகி வஸுதேவர்களின் ஸ்தோத்ரமும், வஸுதேவன் ஸ்ரீக்ருஷ்ணனைக் கோகுலம் கொண்டு போய்ச் சேர்த்து வருதலும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பிறகு, கர்மத்தினால் விளையும் பிறவியற்ற ஸர்வேச்வரனான பகவான், பிறக்கவேண்டுமென்று நினைக்கையில், அக்காலம் எல்லாக் குணங்களும் அமைந்து மிகவும் அழகாயிருந்தது. பகவானுடைய ஜன்ம நக்ஷத்ரமாகிய ரோஹிணி நக்ஷத்ரத்திற்கு, மற்ற நக்ஷத்ரங்களில் இருக்கிற ஸூர்யாதி க்ரஹங்களும், அச்வினி முதலிய மற்ற நக்ஷத்ரங்களும் அனுகூலங்களாயிருந்தன. திசைகளெல்லாம் தெளிவுற்றிருந்தன. ஆகாயத்தில் உதித்த நக்ஷத்ரங்களெல்லாம் சாந்தமாயிருந்தன. பட்டணங்களும், க்ராமங்களும், இடைச்சேரிகளும் அமைந்த பூமி முழுவதும் மங்களங்கள் நிறைந்திருந்தது. நதிகள், தெளிந்த ஜலமுடையவைகளாகப் பெருகின. ஜலாதாரங்களில் தாமரைகள் அழகாய் மலர்ந்தன. வனங்களெல்லாம் பக்ஷிகளும், வண்டுகளும், கூட்டம் கூட்டமாய் ஒலிக்கப்பெற்ற பூங்கொத்துக்கள் நிறைந்து விளங்கின. காற்று ஸுகமான ஊறலும், நல்ல வாஸனையும் அமைந்து, சிறிதும் தூசியின்றி வீசிற்று. முன்பு சாந்தமாயிருந்த ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைச்யர்களின் அக்னிகள், அப்பொழுது கலக்கமின்றிக் கொழுந்து விட்டெரிந்தன. தேவதைகளின் மனங்களும், ஸாதுக்களின் மனங்களும், ப்ரஸன்னமாயின. அந்தப் பகவான் அவதரிக்கும் பொழுது, ஆகாயத்தில் துந்துபி வாத்யங்கள் முழங்கின. கின்னரர்களும், கந்தர்வர்களும் பாடினார்கள். ஸித்தர்களும், சாரணர்களும், துதித்தார்கள். வித்யாதர, அப்ஸர ஸ்த்ரீகளும், நர்த்தனம் செய்தார்கள். முனிவர்களும், தேவதைகளும், மனக்களிப்புடன் பூ மழை பொழிந்தார்கள். பேரிருள் மூடின அர்த்தராத்ரி ஸமயத்தில் ஜனார்த்தனன் தோன்றும் பொழுது, மேகங்கள் மெல்ல மெல்ல ஸமுத்ரங்கள் போல் கர்ஜித்தன. இத்தகைய மங்களமான ஸமயத்தில், கிழக்கு திக்கில் பூர்ண சந்த்ரன் உதிப்பதுபோல, தேவதை போன்ற தேவகியிடத்தில், ஜ்ஞானம், சக்தி முதலிய ஸமஸ்த கல்யாண குணங்களும் அமைந்த ஸ்ரீமஹாவிஷ்ணு ஆவிர்பவித்தான். 

செந்தாமரைக் கண்களும், நான்கு புஜங்களும், சங்கம், கதை முதலிய ஆயுதங்களும், திருமார்பில் ஸ்ரீவத்ஸமென்கிற அடையாளமும், கழுத்தில் திகழ்கின்ற கௌஸ்துப மணியும், பீதாம்பரமும், மிகவும் விலையுயர்ந்த வைடூர்ய ரத்னங்கள் இழைத்த க்ரீடம், குண்டலம், இவற்றின் காந்தியால் சூழப்பட்டு விளங்குகின்ற திருக்குழற்கற்றையும் (தலைமயிர் கற்றையும்) அமைந்து, நீல மேகம் போலக் கறுத்துப் பார்க்கப் பதினாயிரம் கண்களும் போராதபடி மிகவும் அழகாகி, சிறந்த அரை, தோள்வளை, கைவளை, முதலிய ஆபரணங்களால் திகழ்வுற்று, அற்புதமான உருவமுடைய பாலகனாய்த் தோற்றுகின்ற பகவானை, வஸுதேவன் கண்டான். அவ்வஸுதேவன், ஸாக்ஷாத் பரமபுருஷன் தனக்குப் பிள்ளையாகப் பிறந்திருக்கக் கண்டு, ஆச்சர்யத்தினால் கண்கள் மலர்ந்து, பகவானுடைய அவதாரமாகிய மஹோத்ஸவத்தினால் (பெரும் திருவிழாவினால்) பரபரப்புற்று, அப்பொழுதே ஸ்நானஞ் செய்து (நீராடி), ப்ராஹ்மணர்களுக்குப் பதினாயிரம் பசுக்களைப் கொடுப்பதாக மனத்தில் ஸங்கல்பித்துக் கொண்டான் (தீர்மானித்தான்). 

பாரதனே! பிறகு வஸுதேவன், தன் தேஹ காந்தியால் ப்ரஸவ க்ருஹத்தை (பிறந்த இடத்தை) விளங்கச் செய்கின்ற குமாரனை பரமபுருஷனென்று நிச்சயித்து, உடம்பு வணங்கப்பெற்று, கைகளைக் குவித்து, மனவூக்கமுற்றுக் கம்ஸனிடத்தினின்று பயமற்று, அந்தப் பகவானுடைய ப்ரபாவத்தை (பெருமையை) அறிந்து ஸ்தோத்ரம் செய்தான்.

சனி, 14 நவம்பர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 218

 தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – இரண்டாவது அத்தியாயம்

(பகவான் தேவகியின் கர்ப்பத்தில் புகுந்திருத்தலும், ப்ரஹ்மாதி தேவதைகள் - அவளை ஸ்தோத்ரம் செய்தலும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அப்பொழுது, ப்ரலம்பன், பகன், சாணூரன், த்ருணவர்த்தன், மஹாசனன், முஷ்டிகன், அரிஷ்டன், த்விவிதன், பூதனை, கேசி, தேனுகன் இவர்களோடும், பாணன், நரகன் முதலிய மற்றும் பல அஸுர ராஜர்களோடும் கூடி, மஹா பலிஷ்டனாகிய ஜராஸந்தனையும் உதவியாகப் பற்றி, கம்ஸன் யாதவர்களுக்கு உபத்ரவத்தைச் (தீங்கு) செய்து கொண்டு வந்தான். யாதவர்களும் அந்தக் கம்ஸனால் பீடிக்கப்பட்டு, அவ்விடத்தை விட்டுக் குருக்ஷேத்ரம், பாஞ்சாலம், கேகயம், ஸால்வம், விதர்ப்பம், நிஷதம், மகதம், கோஸலம் முதலிய தேசங்களுக்குச் சென்றார்கள். சில பந்துக்கள், அவனையே அனுஸரித்துப் பணிந்து வந்தார்கள். அவ்வாறு கம்ஸன் தேவகியினுடைய ஆறு கர்ப்பங்களைக் கொல்லுகையில், விஷ்ணுவின் அம்சமாகிய அனந்தன், அந்தத் தேவகிக்கு ஸந்தோஷத்தையும், துக்கத்தையும் விளைத்துக் கொண்டு, அவளுக்கு ஏழாவது கர்ப்பமாய்த் தோன்றினான். 

ஸமஸ்த ஜகத்திற்கும் அந்தராத்மாவான பகவானும், தன்னையே நாதனாகப் பற்றியிருக்கின்ற யாதவர்களுக்குக் கம்ஸனிடத்தினின்று பயம் நேர்ந்திருப்பதை அறிந்து, தன் யோகமாயையை நோக்கித் “தேவீ! பத்ரே! நீ இடையர்களாலும், பசுக்களாலும், அலங்கரிக்கப்பட்ட பரதகோகுலத்திற்குப் போவாயாக. அங்கு, வஸுதேவனுடைய மனைவியாகிய ரோஹிணி இருக்கின்றாள். மற்றுமுள்ள அவனுடைய மனைவிகளும், கம்ஸனிடத்தினின்று பயந்து, ஆங்காங்குப் பர்வத (மலை) குஹை முதலிய இடங்களில் மறைந்து வஸித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது, என்னுடைய அம்சமாகிய ஆதிசேஷன், தேவகியின் ஏழாவது கர்ப்பமாய்த் தோன்றியிருக்கிறான். அந்தக் கர்ப்பத்தை இழுத்துக்கொண்டு, ரோஹிணியின் வயிற்றில் சேர்ப்பாயாக. 

மங்கள ஸ்வபாவமுடையவளே! பிறகு நான், என்னுடைய திவ்யமங்கள விக்ரஹத்துடன், தேவகிக்குப் பிள்ளையாய் வந்து பிறக்கப்போகிறேன். நீயும் நந்தனுடைய பத்னியாகிய யசோதையிடத்தில் பிறக்க வேண்டும். அவரவர் விரும்புகிற வரங்களையெல்லாம் கொடுப்பவர்களில் தலைமையுள்ள உன்னை, மனுஷ்யர்கள் பலவகை உபஹாரங்களாலும், மற்றும் பலவித பூஜைகளாலும், ஆராதிப்பார்கள். மற்றும், உனக்குப் பூமியில் ஆலயங்களையும், துர்க்கை, பத்ரகாளி, விஜயை, வைஷ்ணவி, குமுதை, சண்டிகை, க்ருஷ்ணை, மாதவி, கன்னிகை, மாயை, நாராயணி, ஈசானை, சாரதை, அம்பிகை என்னுமிவை முதலிய நாமங்களையும் ஏற்படுத்துவார்கள், தேவகியின் கர்ப்பத்தினின்று உன்னால் இழுக்கப்பட்டமையைப் பற்றி அந்தச் சேஷனை, ஸங்கர்ஷணனென்றும், உலகங்களுக்கெல்லாம் ஸந்தோஷத்தை விளைப்பவனாகையால் ராமனென்றும், மிகுந்த பலமுடையவனாகையால் பலபத்ரனென்றும், சொல்லுவார்கள்” என்று கட்டளையிட்டான். 

வெள்ளி, 13 நவம்பர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 217

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – முதலாவது அத்தியாயம்

(தேவகியை வதிக்க முயன்ற கம்ஸனை வஸுதேவன் உபாயத்தினால் விடுவித்தலும், நாரதருடைய உபதேசத்தினால் அவன் அவ்விருவரையும் சிறையில் அடைத்தலும்)

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- “சந்த்ர - ஸூர்யர்களின் வம்சங்களுடைய விஸ்தாரத்தையும் (விரிவையும்), அவ்விரண்டு வம்சங்களில் பிறந்த ராஜாக்களின் அற்புத சரித்ரத்தையும் மொழித்தீர். முனிச்ரேஷ்டரே! மிகுதியும் தர்மசீலனான யதுவின் வம்சத்தையும் பரக்கச்சொன்னீர். அந்த யதுவின் வம்சத்தில், தன்னுடைய அம்சமாகிய பலராமனுடன் அவதரித்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய வீர்யங்கள் அமைந்த சரித்ரங்களை எங்களுக்குச் சொல்வீராக”. ஸமஸ்த பூதங்களையும் பாதுகாப்பவனும், ஸர்வாந்தராத்மாவுமாகிய, பகவான் யதுவின் வம்சத்தில் அவதரித்து, எந்தெந்த வீரச்செயல்களை நடத்தினானோ, அவற்றையெல்லாம் எங்களுக்கு விஸ்தாரமாகச் (விரிவாகச்) சொல்லவேண்டும். “சொன்னதெல்லாம் விஷ்ணுவின் வீர்யங்களேயல்லவா (வலிமை, பராக்ரமம்)! மீளவும் அவற்றை ஏன் கேட்கிறாய்?” என்னில் சொல்லுகிறேன். 

உத்தம ச்லோகனான பகவானுடைய  குணானுவாதமாகிற (குணானுவாதம் - குணங்களை தொடர்ந்து சொல்லுகை) அம்ருதத்தைக் கேட்பதற்கும், பசு ஹிம்ஸை செய்யும் பாவியைத் தவிர மற்ற எவன்தான் வெறுப்புறுவான்? சப்தாதி விஷயங்களில் (உலக விஷயங்களில்) விருப்பமாகிற தாஹம் அற்றவர்கள், இந்த அம்ருதத்தைப் புகழ்வார்கள். இது, ஸம்ஸாரமாகிற நோய்க்கு, அருமருந்தாயிருக்கும். மற்றும், இது செவிக்கும், மனத்திற்கும், இனிதாயிருக்கும். என் பாட்டன்மார்களான பாண்டவர்கள், இந்த ஸ்ரீக்ருஷ்ணனையே ஓடமாகக்கொண்டு, தேவதைகளையும் ஜயிக்க வல்லவர்களான பீஷ்மர் முதலிய மஹா வீரர்களாகிற திமிங்கிலங்கள் சூழ்ந்திருக்கையால் வருந்தியும் தாண்ட முடியாத கௌரவர்களின் ஸைன்யமாகிற (படையாகிற) ஸமுத்ரத்தைக் குளம்படி (மாட்டின் கால் குளம்பு அளவு) போலாக்கித் தாண்டினார்கள். மற்றும், இந்த ஸ்ரீக்ருஷ்ணன், தன்னைச் சரணமடைந்த என் தாயான உத்தரையின் வயிற்றில் புகுந்து, சக்ராயுதத்தை ஏந்திக்கொண்டு, அஸ்வத்தாமாவின் அஸ்த்ரத்தினால் தஹிக்கப்பட்டதும், கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் ஸந்தான பீஜமுமாகிய (வம்ச விதையான), இந்த என் சரீரத்தைக் காத்தான். இவ்வாறு மஹோபகாரகனான (பெரிய உதவி செய்பவனான) அந்த ஸ்ரீ க்ருஷ்ணனுடைய குணானுவாதத்தினின்று க்ருதஜ்ஞனாகிய (க்ருதஜ்ஞ்ன் - செய்த உதவியை அறிந்தவன்; நன்றி மறவாதவன்) நான் எப்படி மீளுவேன்? 

அறிஞரே, ஆகையால் ஸமஸ்த ப்ராணிகளுக்கும் உள்ளே புகுந்து, அந்தர்யாமியாயிருந்து (உள்ளே இருந்து நியமிப்பவனாய்), ரக்ஷணத்தையும் (காத்தலையும்), வெளியில் கால ஸ்வருபத்தினால் ஸம்ஹாரத்தையும் (அழித்தலையும்) நடத்துகின்றவனும், தன் ஸங்கல்பத்தினால் மனுஷ்யனாய் வந்து அவதரித்தவனுமாகிய, அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய வீரச்செயல்களைச் சொல்வீராக. ஸங்கர்ஷணனுடைய அவதாரமான பலராமன் ரோஹிணியின் புதல்வனென்றும், அவனையே தேவகியின் புதல்வனேன்றும் மொழிந்தீர். தேஹாந்தரமில்லாமல் (வேறு உடல் இல்லாமல்) ஒரே தேஹத்தில் (உடலில்), ரோஹிணி, தேவகி ஆகிய இருவர்களின் கர்ப்பத்திலும் ஸம்பந்தம் அந்தப் பலராமனுக்கு எப்படி உண்டாயிற்று? ஷாட்குண்ய பூர்ணனும் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனும்), போக மோக்ஷங்களைக் கொடுப்பவனுமாகிய ஸ்ரீக்ருஷ்ணன், தன் தந்தையாகிய வஸுதேவனுடைய க்ருஹத்தினின்று, எதற்காகக் கோகுலம் போனான்? பக்தர்களைப் பாதுகாக்கும் தன்மையுள்ள அந்தப் பகவான், பந்துக்களான யாதவர்களுடன், எங்கு வாஸம் செய்தான்? கோகுலத்திலும், மதுரையிலும், அவன் வஸிக்கும் பொழுது, என்னென்ன செய்தான்? தன் தாய்க்கு நேரே உடன்பிறந்தவனும், வதிக்கத்தகாதவனுமாகிய, கம்ஸனை ஏன் கொன்றான்? மானிட உருவம் பூண்டு, வ்ருஷ்ணிகளுடனும், யாதவர்களுடனும், த்வாரகையில் எத்தனை வர்ஷங்கள் வஸித்திருந்தான்? அந்த ஸ்ரீக்ருஷ்ணனுக்கு எத்தனை பத்னிகள் இருந்தார்கள்? ஸ்ரீக்ருஷ்ண வ்ருத்தாந்தங்களில் உமக்குத் தெரியாதது எதுவுமே இல்லை. நீர் எல்லாமறிந்தவர். ஆகையால், கேட்க வேண்டும் என்னும் பேராவலுடைய எனக்கு, நான் கேட்ட விஷயங்களையும், நான் கேளாத விஷயங்கள் எவை எவை உண்டோ அவற்றையும், சொல்லவேண்டும். நான் ப்ராயோபவேசத்தில் (மரணம் வரை உண்ணா நோன்பில்) இழிந்து, தண்ணீரையும் கூடப்பருகாதிருப்பினும், உம்முடைய முகமாகிற தாமரை மலரினின்று பெருகி வருகின்ற பகவானுடைய கதையாகிற அம்ருதத்தைப் பருகிக்கொண்டிருக்கிறேன். ஆகையால் மிகவும் பொறுக்க முடியாத இந்தப் பசியும்கூட என்னை வருத்தவில்லை.

ஸூத புத்ரர் சொல்லுகிறார்:- சௌனகரே! சாதுவாகிய பரீக்ஷித்து மன்னவன் இவ்வாறு வினவினதைக் கேட்டு, மஹானுபாவரும் (பெரிந்தகையும், மரியாதைக்குரியவரும்) பாகவத ச்ரேஷ்டருமாகிய, ஸ்ரீசுக முனிவர் அம்மன்னவனைப் புகழ்ந்து, கலிகாலத்தினால் விளையும் பாபங்களையெல்லாம் போக்கவல்ல ஸ்ரீக்ருஷ்ண சரித்ரத்தை, விஸ்தாரமாகச் (விரிவாகச்) சொல்லத்தொடங்கினார்.

செவ்வாய், 10 நவம்பர், 2020

சிற்றூரல் - மணப்பாக்கம் கோமான் வெங்கடாச்சாரி

அவர் ஒரு புலவர். எங்கிருந்தோ காற்றில் கலந்து வந்த நறுமணம் அவரது உள்ளத்தை மலரச் செய்தது. சுற்றும் முற்றும் பார்த்த அவர் தனக்கு மிக அருகாமலையிலேயே ஒரு தாழம்புதர் இருப்பதையும், அதில் அப்பொழுது தான் மலர்ந்திருந்த தாழம்பூவின் நறுமணந்தான் அது என்பதையும் உணர்ந்து கொண்டார். அந்த நறுமணத்தை அனுபவித்தவாறே மேலும் நடந்து கொண்டிருந்த அவருடைய நாசி சற்றுத் தொலைவிலிருந்து வேறோர் நறுமணத்தையும் நுகர்ந்தது. அந்த நறுமணம் முன்னதைக் காட்டிலும் சிறப்பாக இருந்ததை அவர் நன்கு கண்டார். ஆனால், அவர் அந்த சிறப்பான நறுமணத்திற்குக் காரணத்தை எளிதல் அறிந்து கொள்ள முடியவில்லை. அந்த நறுமணம் வரும் திசையை நோக்கி மெல்ல நடந்து, அந்த நறுமணத்திற்குக் காரணமான அந்தப் பொருளையும் கண்டார். பெரிய மரம் ஒன்று அங்கேயிருந்தது. அதில் கண்ணிற்குத் தெரியாத அளவில் பூத்துக் குலுங்கும் சின்னஞ்சிறியப் பூக்களைக் கண்டார். முன்னம் கண்ட பெரிய மடல்களைக் கொண்டத் தாழம்பூவின் நறுமணத்தை இந்த சிறிய பூக்களின் நறுமணத்தோடு ஒப்பிட்டு பார்க்க அவர் தவறினாரில்லை. இந்தச் சிறிய பூக்களின் நறுமணம் பெரிய மடல்களைக் கொண்டத் தாழம்பூவின் நறுமணத்தைக் காட்டிலும் எத்தனை சிறந்ததாக இருக்கிறது என்று எண்ணிய அவரது கவியுள்ளம், உடனே ஒரு பாடலை வெளிப்படுத்தியது. அவ்விரு பூக்களின் உருவ வேறுபாடுகளும் அவைகள் தந்த நறுமணமும் அவரை உலக இயல்புக்கு இழுத்துச் சென்றது. இதுகாறும், அவர் தம் வாழ்க்கையில் எத்தனையோ மனிதர்களைப் பார்த்திருக்கிறார். உருவத்தில் பெரியவராய் காணப்படும் பலர் உலகத்தாருக்கு உபயோகமற்றவராய் உலவி வருவதையும், அதே சமயம் உருவத்தில் சிறியவராய் இருப்பவர்கள் உள்ளத்தினால் பெரியவராய் உலகத்தார் யாவருக்கும் மிக உபகாரமாய் இருப்பதையும் அவர் அப்பொழுது கண்ட அவ்விரு பூக்களும் அவருக்கு நினைப்பூட்டின. உடன் எழுந்தது ஒரு பாடல்,

“மடல் பெரிது தாழை மகிழினிது கந்தம்

உடல் சிறியரென்றிருக்க வேண்டா” 

என்ன அருமையான பாடல். தாழம்பூவின் நறுமணத்தைக் காட்டிலும் சிறந்த மணம் வீசிக் கொண்டிருந்த அந்தச் சிறிய பூக்கள் மகிழம் பூக்கள்தான் என்பது வாசகர்களுக்குத் தெரிந்திருக்கும்.


இவ்வாறு அந்த அவ்விருமலர்கள் தந்த அனுபவம், வேறோரு உவமைக்கும் அவரை இழுத்துச் சென்றது. கடல்! கருங்கடல்!! ஆனால் அதன் உவர்நீரை எவரும் விரும்புவதில்லை. அது கொடுக்கும் உப்புத் தண்ணீரை எவர்தான் குடிக்க முன்வருவார்கள். உலோபியின் செல்வம்போல் அந்தக் கடல் நீர் எவருக்கும், எக்காலத்துக்கும் உபயோகப்படுவதில்லை. ஒருவன் கடலின் எழலைப் பார்த்து களித்துக் கொண்டு நிற்கிறான். அதன் நிறமும், கரையிலாக் காட்சியும் அவனைப் பரவசமூட்டச் செய்கின்றன. அவனுக்குத் தாகம் ஏற்பட்டு விடுகிறது. கடல் நீரை ஒரு கை அள்ளிக் குடிக்கிறான். இது என்ன? ஏன் அவன் முகம் அவ்வாறு மாறுகிறது. அந்த உப்புநீரைக் குடித்த அவனுக்கு நீர் வேட்கை மேலும் அதிகரிக்கிறது. நல்ல நீரை அடைய வேண்டுமென்று அவன் மனம் நாடுகிறது. அந்தக் கடற்கரையின் மணற்பரப்பிலே ஓரிடத்தில் ஓரு நீரூற்று இருப்பதைத் தெய்வச் செயலாகக் காண்கிறான். அந்த நீரும் உப்பாகத்தான் இருக்கும் என்று அவனுக்குத் தோன்றினாலும் அவனது நீர் வேட்கை அவனை அந்த ஊற்று நீரை பருகும்படித் தூண்டுகிறது. அவன் ஆவலுடன் அந்த நீரைப் பருகுகிறான். என்ன ஆச்சரியம்! அந்த ஊற்று நீர் கற்கண்டு போல் இனிப்பதைக் காண்கிறான். இத்தனை பெரிய உவர்நீர்கடலின் பக்கத்திலும் இன்ப ஊற்று ஒன்று இருப்பது அவனுக்கு மிகவும் அதிசயத்தைக் கொடுக்கிறது. உருவத்தில் பெரிய கடல் உருவத்தில் சிறிய இந்த ஊற்றுக்கு எவ்விதத்திலும் நிகராக முடியாது என்ற உண்மை அனுபவத்தையும் கண்டு கொள்கிறான். இந்தப் பெரியக் கடல் நீர் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் மற்ற பல உயிர்வாழ் இனங்களுக்குமே உதவக்கூடிய வகையில் இல்லாததையும் அவன் கண்டுகொள்ளத் தவறவில்லை. இந்த அனுபவத்தை நன்கு அறிந்திருந்த மேற்சொன்ன அந்தப் புலவரும் தம்முடைய பாடலின் பிற்பகுதியில் இந்த உண்மையை சேர்க்கத் தவறினாரில்லை. பாடலின் பிற்பகுதி எழுந்தது.

வெள்ளி, 6 நவம்பர், 2020

இராம காதையில் ஓர் திருப்பம் - மணப்பாக்கம் கோமான் வெங்கடாச்சாரி

“இராமகாதையில் ஒரு திருப்பமா?” என்று இந்த கட்டுரையின் தலைப்பைக் காணும் வாசகர்கள் அதிசயத்துடன் என்னைப் பார்த்து கேட்பது என் செவிகளில் விழத்தான் செய்கிறது. கவியாற்றல் படைத்த கம்பனது இராமகாதையில் அப்படிப்பட்ட திருப்பம் என்ன இருக்கிறது? என்றும் பலர் எண்ணலாம். அவர்களுக்கு இந்நூலை எழுத முற்பட்ட நான் விடையளிக்க கடமைப்பட்டவனாயிருக்கிறேன் என்பதை நன்கு உணராமலில்லை.


ஆம். இராமகாதையில் பல திருப்பங்கள் இருப்பதை, நாம் அதை ஊன்றிக் கவனிக்குமளவில் அறிந்துகொள்ள இயலும். அவைகளுக்கு பல சான்றுகள் உள. அவைகளில் முக்கியமான சிலவற்றைப் பற்றி மட்டும் இங்கு கூர்ந்து நோக்குவோம்.


முதலாவதாக தசரத சக்கரவர்த்தியால் தீர்மானிக்கப்பட்டு மறுநாள் காலை நடக்கவிருந்த இராம பட்டாபிஷேகம் அதற்கு முதல் நாள் இரவே கூனியின் சூழ்ச்சியால் நிறைவேறாமல் நின்றுவிடுவதை ஒரு திருப்பம் என்றே கொள்ளலாம். தசரதனின் திட்டப்படி இராம பட்டாபிஷேகம் அன்று நடந்திருக்குமானால் இராமன்  காட்டிற்குச் செல்வதோ, அங்கு சானகியை பிரிய நேரிடுவதோ, அதன் நிமித்தம் இராவணனை அவனுடைய குலத்தோடு வேரறுப்பதோ நடந்திருக்கக்கூடிய வாய்ப்புகளுக்கு இடமில்லாமல் போயிருக்கும்.


இராவணனால் தாங்கள் படும் துன்பங்களைத் துடைத்தருள வேண்டுமென்று பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த அந்தப் பரமனிடம் தேவர்கள் சென்று முறையிட்ட சமயம், அந்தப் பரமன் அவர்களுக்கு காட்சியளித்து, அவர்களை அஞ்சாமலிருக்கச் சொல்லி தான் கூடிய விரைவில் அந்தக் கொடியவனான இராவணனைக் கொல்வதற்காக அயோத்தி அரசனாகிய தசரதனின் மகனாக அவனியில் வந்து அவதாரம் செய்யப் போவதாகவும் சொல்லி அவர்களைத் தேற்றி அனுப்பினான். மேற்கூறியவாறு கூனியின் குறுக்கீடு இல்லாமல் இராம பட்டாபிஷேகம் நடந்திருந்தால் அந்தப் பரந்தாமனின் வாக்கு பொய்த்திருக்குமல்லவா? அதனால் அங்கே கூனியின் உருவத்தில் ஒரு திருப்பம் வேண்டியிருந்தது.


ஆனால், இந்தத் திருப்பத்தை காட்டிலும் வேறொரு அதிசயத்தக்க திருப்பத்தையும் வான்மீகி செய்திருக்கலாம். இராமனிடத்தில் தனக்கு ஏற்பட்டிருக்கும் மிகுந்த அன்பினால் கைகேயியின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படாமல் அந்தத் தசரதன் இராமனின் முடிசூட்டு விழாவை நடத்தி வைப்பதில் முனைந்து நின்றிருப்பானேயாகில் அதை ஒரு சிறந்த திருப்பமாக கொண்டிருக்கலாம். ஆனால், அவ்வாறெல்லாம் நடக்கவில்லை. இராமகாதை தங்கு தடையின்றி தன் வழியே திட்டமிட்டபடி சென்று கொண்டு இருக்கிறது. 


இதேபோல், இராமன் தன் தாயின் கொடுமையால் கானகம் செல்ல நேர்ந்ததை அறிந்த பரதன் பதறிப்போய் தன் அண்ணன் சென்ற வழியே சென்று அவனைச் சித்திரகூடத்தில் கண்டு அயோத்திக்கு திரும்பி வருமாறு கேட்டுக்கொண்ட சமயம் அவனுடைய வேண்டுகோளுக்கு இணங்கி இராமன் அயோத்திக்கு திரும்பி வந்துவிட்டான் என்று ஒரு திருப்பத்தை இராமகாதையில் செருகி இருக்கலாம். ஆனால் அதுவும் கதைக்குப் பொருத்தமான ஒரு திருப்பமாக அமையாது என்பதை நாம் நன்கு அறிவோம்.

வியாழன், 5 நவம்பர், 2020

நால்வர் நடத்திய நல்ல நாடகம் - மணப்பாக்கம் கோமான் வெங்கடாச்சாரி

தொண்ணுற்றாறு வண்ணங்கள் பாடிய கவிச்சக்கரவர்த்தி கம்பன் தான் பாட எடுத்துக் கொண்ட இராமகாதையில் தொள்ளாயிரத்திற்கும் அதிகமான வினோத யுக்திகளை கையாண்டு நம்மை அவைகளின் அழகிலே மெய்மறந்து விடும்படியாகக் செய்கிறான். தான் எழுத எடுத்துக் கொண்ட சக்கரவர்த்திக் திருமகனின் சரிதைக்கேற்ப சம்பவங்களைப் புகுத்தி நம் சிந்தனைக்கு விருந்தூட்டும் அவனுடைய ஆற்றலைக் கண்டு நம்மால் வியக்காமல் இருக்க முடியவில்லை. சம்பவம் நல்லதோ கெட்டதோ அதையும் விமரிசையாக எடுத்துக் கூறி நம்மை வியப்பூட்டும் வினோதத்திறமை அந்தக் கவிச்சக்கரவர்த்திக்கே உரிய பாணியாகும்.


ஒரு எஜமானன். அவன் தன் வாழ்க்கையில் யாருக்குமே அடங்கி நடந்ததில்லை. மற்றவர் யாவரும் தன்னிடம் மிகுந்த பணிவுடன் நடந்து கொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கும் தன்மையுடையவன். மிகுந்த கோபக்காரன். யார் எதைச் சொல்ல வந்தாலும் குறுக்குக் கேள்விகள் கேட்டு அவர்களைத் திக்கு முக்காடச் செய்து அவர்கள் பயத்தினால் கூறும் பதிலைக் கொண்டே அவர்களிடம் குறை கண்டு, அவர்களைச் சினந்து கொள்ளும் சுபாவமுள்ளவன். அத்தன்மையுள்ள எசமானிடத்தில் நன்கு பழகிய வேலைக்காரர்கள் அவன் சுபாவமறிந்து அவன் கேட்பதற்கு முன்னமே எவ்வாறு பேசி அவனைத் திருப்தி செய்ய வேண்டும் என்று நன்கு அறிந்திருப்பார்களல்லவா? அதனால் அந்த எசமானர்களுடைய முன்கோபத்திற்கும் ஓர் அணைபோட்டு தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளும் திறமைசாலிகளாகவும் ஆகி விடுகிறார்கள் அந்த வேலைக்காரர்கள்.


இது போன்ற ஒரு சம்பவத்தை நமக்குப்படம் பிடித்துக் காட்டுகிறான் கவியரசன் கம்பன், தன் இராமகாதையின் ஒரு பகுதியிலே. அதை இங்கு காண்போம்.

திங்கள், 2 நவம்பர், 2020

மனத்துன்பம்! - முக்கூர் லட்சுமி நரசிம்மாச்சார்யார்

இராமாயணத்தில் எங்கு தொட்டாலும், சாஸ்திரப் பேச்சு தவிர, வேதத்துக்குப் புறம்பான விஷயம் எங்கும் இல்லை. மனத்துன்பம் (வ்யஸனம்) என்று கூட ஒரு தர்மம் சொல்லப்பட்டுள்ளது. 


“எல்லோருக்கும் மனத்துன்பம் உண்டு. அதைக் கொடுத்து, பின்னர் நம்மைத் திருத்தி ஆட்கொள்கிறார் பரமாத்மா” என்றார் தமது சொற்பொழிவில் முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் ஸ்வாமிகள்.


“துக்கத்தையும் சுகத்தையும் பொறுத்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் சமமாக பாவிக்க வேண்டும். சுகம் வரும்போது ஆர்ப்பாட்டமாக ஆரவாரம் செய்வது கூடாது. துக்கம் வந்தால் துன்பப்பட்டு அழுது, கடவுளை நிந்தனை செய்வது கூடாது. துன்பம் நேர்ந்தால், ‘பகவான் அந்தத் துன்பத்தை அனுபவிக்க நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறான்’ என்று பொறுத்துக் கொள்ள வேண்டும்.


ஸ்ரீராமபிரான் சுகம், துக்கம் இரண்டையும் சமமாகப் பாவித்தான். ‘காட்டுக்குப் போ’ என்றபோதும், ‘அரசாட்சியை ஏற்றுக்கொள்’ என்ற போதும் ஒரே மாதிரியாகத்தான் இருந்தான். ‘சீதையைப் பிரிந்த போது வருந்தி அரற்றினானே’ என்றால், கடவுள்களுக்கும் மனத்துன்பம் உண்டு என்பதை இது காட்டுகிறது. பகவானும் மனத்துன்பம் (வ்யஸனம்) அடைந்தான் என்பதற்கு ஒரு கதை உண்டு.


பெருமாளுக்கு பூமா தேவியோடு கல்யாணம் ஆயிற்று. பரமசிவனும் பார்வதியும் வந்து அவர்களை விருந்துக்கு அழைத்தார்களாம். பூமா தேவியிடம், “விருந்துக்குப் போகலாமா?” என்கிறார் பகவான். அவள் சொல்கிறாள், “நீங்கள் போகும் இடத்துக்கெல்லாம் நான் கூடவே வர இயலாது. என் பெயர் என்னவென்று தெரியுமா? அசலா. அதாவது, அசைவற்றவள். அசையாப் பொருட்களெல்லாம் (சராசரங்கள்) நான் உங்களோடு வந்தால் என்ன ஆகும்? எனவே, என்னால் வர முடியாது” என்கிறாள்.


அதன் பிறகு, பகவான் எல்லா இடங்களுக்கும் தனியாகவே போய் வருகிறான். அவனுக்கு மிகவும் வெட்கமாகி விடுகிறது. போகும் இடங்களில் எல்லாம் தவறாமல் ஒரு கேள்வி எழுகிறது. ‘மனைவி எங்கே? மனைவி ஏன் வரவில்லை?’ அவனால் பதில் கூறவே முடியவில்லை.

ஞாயிறு, 1 நவம்பர், 2020

அநுமனும் ஆழ்கடலும் - மணப்பாக்கம் கோமான் வெங்கடாச்சாரி

மனிதன் தான் செய்த செயல்களைக் கண்டு தானே வியந்து கொள்கிறான். ஆனால் இயற்கை அளிக்கும் அரும்பெரும் அற்புதங்களைக் கண்டு வியக்கத் தவறி விடுகிறான். சாதாரண மனிதனால் காண முடியாத இயற்கையின் அரிய செயல்கள் பரிணாமங்கள் அறிஞர்கள் கண்களில் அருமையாகப் படுகின்றன. அப்படிக்கொத்த இயற்கையின் அரிய சாதனைகளில் ஆழ்கடலும் ஒன்றாகும்.


தத்துவம் பேசும் தாயுமானவரும் தம் அரும்பெரும் பாக்களுள் ஒன்றில் “ஆழாழி கரையின்றி நிற்கவிலையோ” என்று கடல் கரையின்றி நிற்குந்தன்மையை வியந்து பாராட்டுகின்றார். கடலின் ஆற்றலிலே ஆயிரத்தில் ஒரு பங்கு என்று கூட மதிப்பிடத்தகாத ஆறுகள் அவ்வப்போது பருவ காலங்களில் தங்கள் இருக்கரைகளையும் உடைத்து கொண்டு எத்தனையோ ஊர்களையும் உயிர்களையும் அழித்து வரும் செயல்களை நாம் கேட்டறிகிறோம். அவ்வாறிருக்க, இத்துனை பெரிய அலைகடல் கரையின்றி நிற்கும் தன்மையைக் காணும்போது, நன்கு கற்றறிந்த சான்றோர்களின் அடக்கத்திற்கும் சிறிதளவே கற்ற புல்லறிவாளர்க்கும் இடையேயுள்ள வேறுபாட்டை நம் கண் முன்னால் தெரிய வைக்கிறது எனக்கூறலாம்.


கல்வியிற் சிறந்த கவிச்சக்கரவர்த்தி கம்பனும் இக்கடலின் ஆற்றலையும் அது கரையின்றி நிற்குந் தன்மையையும் அதன் அடக்கத்தையும் கண்டிருக்கிறார். நன்கு கற்றுணர்ந்த புலவர்கள் தாங்கள் அறிந்த அதிசயங்களையோ உண்மைகளையோ உலகத்திற்கு எடுத்துக்காட்டத் தவறுவதில்லை. தக்க சமயங்களில் தக்க முறைகளில் தகுந்த உதாரணங்களோடு உலகத்திற்கு எடுத்துக்காட்டுவது தான் அவர்கள் முறை. இராமகாதை பாடிய கவிச்சக்கரவர்த்தியும் தக்க சமயத்தில் பொருத்தமான வகையில் நமக்கு அலைகடலின் ஆற்றலையும், அடக்கத்தையும் எடுத்துக் காட்டிடத் தவறவில்லை. அதை நாம் இங்கு காண்போம்.