நான்காவது ஸ்கந்தம் – இருபத்து ஒன்பதாவது அத்தியாயம்
(ப்ரசேதஸர்கள் திரும்பிவந்து ராஜ்யமாளுதல்)
ஸ்ரீவிதுரர் சொல்லுகிறார்:- ப்ரஹ்மர்ஷியான மைத்ரேயரே! ப்ராசீனபர்ஹியின் புதல்வர்களான ப்ரசேதஸர்கள் தவம்செய்யப் போனார்களென்றும், அவர்களுக்கு ருத்ரன் ஒரு ஸ்தோத்ரத்தை உபதேசித்தானென்றும் உரைத்தீர். அவர்கள் அந்த ஸ்தோத்ரத்தினால் பரமபுருஷனைக் களிப்பித்து (மகிழ்வித்து) எந்த ஸித்தியைப் பெற்றார்கள்? மோக்ஷங் கொடுக்கவல்ல பரமபுருஷனுக்கு அன்பனாகிய ருத்ரன் திடீரென்று தோன்றி அனுக்ரஹம் செய்யப் பெற்ற அவர்கள் மோக்ஷகதியைப் பெற்றிருப்பார்களென்பதில் ஸந்தேஹமில்லை. அதற்கு முன்பு இந்த லோகத்திலாவது பரலோகத்திலாவது அவர்கள் பெற்ற நன்மையை எனக்குச் சொல்வீராக. ப்ருஹஸ்பதியின் சிஷ்யராகிய உமக்குத் தெரியாதது ஒன்றுமே இல்லை.
மைத்ரேயர் சொல்லுகிறார்:- "தந்தையின் கட்டளைப்படி நடப்பவரான ப்ரசேதஸர்கள் ஸமுத்ர ஜலத்தினிடையில் ஜப யஜ்ஞத்தினாலும் தியானத்தினாலும் அனைத்து ஜீவராசிகளையும் படைத்த பரமபுருஷனை ஆராதித்தார்கள். ஆதிமூலமாகிய அப்பரமபுருஷன் பதினாயிரமாண்டுகள் கழிந்த பின்பு தன் தேஹகாந்தியால் அவர்களுடைய வருத்தத்தைப் போக்கிக்கொண்டு சுத்த ஸத்வமயமான திருமேனியுடன் அவர்களுக்கு ப்ரதயக்ஷமானான். அவன் கருத்மானுடைய தோளின்மேல் ஏறிக்கொண்டு மேரு பர்வதத்தின் சிகரத்தில் படிந்த நீலமேகம் போன்று பொன் விஜமுடைய பட்டு வஸ்த்ரம் தரித்துக் கழுத்தில் கௌஸ்துபமணி அணிந்து தன் தேஜஸ்ஸினால் திசைகளையெல்லாம் இருளறச் செய்துகொண்டு விளங்கினான். அவனுடைய முகம் பேரொளியுடைய தங்கநகைகள் பூண்டிருந்ததால், அவரது அழகிய கன்னங்களும் திருமுக மண்டலமும் மிகமிக அழகாய் விளங்கின. அவனுடைய கிரீடம் ஜ்வலித்துக் கொண்டிருந்தது. சங்கு சக்கரம் முதலிய எட்டு ஆயுதங்களைத் தரித்த கணநாயகர்களும் ஸனக ஸனந்தனாதி முனிவர்களும் ப்ரஹ்மதேவன் முதலிய தேவதைகளும் அவனைத் தொடர்ந்து வந்தார்கள். கருடர்களும் கின்னரர்களும் அவனுடைய புகழைப் பாடிக்கொண்டிருந்தார்கள். திரண்டு (பருத்து) உருண்டு நீண்ட எட்டு திருக்கரங்களுக்கிடையே வீற்றிருக்கின்ற ஸ்ரீமஹாலக்ஷ்மியுடன் சோபையில் (அழகில்) பொருகின்ற (பொருந்துகின்ற) வனமாலையால் அவன் திகழ்வுற்றிருந்தான். இத்தகைய அந்த ஆதிபுருஷன் கருணை நிறைந்த கண்ணோக்கத்துடன் தன் பக்தர்களான ப்ரசேதஸர்களை நோக்கி மேக கர்ஜனைபோல் கம்பீரமான ஒலியுடன் மொழிந்தான்.