ஸ்லோகம் – 12 – பகுதி - 2
பெரிய திருமலை நம்பிகளுக்கு இரண்டு மருமகன்கள். அதில் ஒருவர் ராமானுஜர். மற்றொருவர் கோவிந்தப் பெருமாள் என்ற எம்பார். ராமானுஜர் எம்பாரைக் கூப்பிட்டு விசாரித்தார். வாஸ்தவம்தான் நீர் சொல்வது. சொல்றபடி கேட்டுப்பார்க்கிறேன், நடக்குமா என்று தெரியாது. என்று சொல்லிவிட்டுப் போனார். அன்று இரவு கழிந்தது. கணவனும் மனைவியும் பகவத் விஷயத்தை ராத்திரி முழுக்கப் பேசினார்கள். திரும்ப வந்த கோவிந்த பெருமாளிடம் என்ன என்று ராமானுஜர் கேட்டார். காம ஶுகத்தை அநுபவிக்க நான் ஒன்றே ஒன்றை எதிர்பார்த்தேன். அது தான் இருட்டு. ராத்திரி முழுக்க இருளைத் தேடினேன், தேடினேன். இருளே கிடைக்கவில்லை. உள்ளும் புறமும் பகவான் பிரகாசமாய் வியாபித்து இருக்கையால் இருளே எனக்குக் கிடைக்கவில்லை. லோகம் முழுக்க எனக்கு வெளிச்சம்தான் கண்ணில் படுகிறது. எங்கே காமஸுகம் அனுபவிக்க? என்றார். ஸ்ரீ ராமானுஜர் “இனி உமக்கு இல்லறம் ஆகாது. நீர் சந்யாசம் ஏற்றுக்கொள்ளும் என்று சொல்லி த்ரிதண்டத்தையும், காஷாயத்தையும் கொடுத்து சந்யாசம் வழங்கிவிட்டார். எம்பார் என்ற தாஸ்ய நாமம் வழங்கிவிட்டார். உள்ளும் புறமும் பகவான் வியாபிக்கிறார் என்றால் இருட்டு எங்கிருந்து வரும்?
“பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில் மிகக்கண்டேன்” முதலாழ்வார் பாசுரம். நாரணனைக் கண்டால்தான் பகலையே நாங்கள் கண்போம். பகவான் ரொம்ப பிரகாசமாய் இருக்கிறார்.
குருகைக் காவலப்பன் என்று ஒரு ஆசார்யர். அவர் நாதமுனிகளின் சத் சிஷ்யர். கங்கைகொண்ட சோழபுரம் என்ற ஊர். ரொம்ப ஆச்சர்யமான ஸன்னதி. குருகைக் காவலப்பன் பெரிய யோகி. அவரிடம் போய் ஒரு சிஷ்யர் “எங்களுக்கு பகவானை எப்படி ஞாபகம் வைத்துக்கொள்வது என்றே தெரியவில்லை. உமக்கு ஏதானும் ரஹஸ்யம் தெரிந்தால் சொல்லிக்கொடுமே? நீர் யோகத்தில் நித்யம் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர். எங்களால் முடியவில்லை” என்று கேட்டார். அந்த ஸ்வாமி பதில் கேள்வி கேட்டார், “அவரை மறப்பதற்கு ஏதாவது வழி இருந்தால் நீங்கள் சொல்லிக்கொடுங்கள், ஞாபகம் வைப்பதற்கு வழி நான் அப்புறம் சொல்லிக் கொடுக்கிறேன்” என்றார். எல்லா இடத்திலும் ஜனங்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களை பார்ப்பதற்கு எனக்கு வழி சொல்லிக் கொடுங்கள் என்றால் எப்படிச் சொல்வது. பகவான் உள்ளேயும் புறமும் இருக்கும்போது தெரியாவிட்டால் நம் குற்றம். தெரிந்துதான் தீரவேண்டும்.
ஆனால் நான் என்ன பண்ணினேன். கண்தெரியாதவனுக்கு எதிரே உள்ளவன் தெரியாததுபோலே பகவான் உள்ளும் புறமும் வியாபித்து இருந்தாலும் பார்க்க சக்தியில்லாதவனாயிருக்கிறேன்.
அந்த: புர:ஸ்திதம் இவ அவீக்ஷமாண: ஸந் – அந்த பகவான் என் கண்ணிலே படாமலே அடியேன் துன்பப்பட்டேன். கண் மயங்கிப் போயிருந்ததாலே, கண்ணில் புரை நோய் வந்திருந்ததென்றால், கண்ணாடி அழுக்குப் படிந்து இருந்ததென்றால் எதிரே இருப்பவர் தெரியவில்லை. ஆனால் எனக்கும் கண் இருக்கிறது. காமத்துக்கு வசப்பட்டு மயங்கிக் கிடக்கிறது. குடிக்கக்கூடாததை ஒருவர் குடித்துவிட்டார். கண் தெளிவாகவா தெரியும்? வசப்பட்டுவிட்டோம் என்றால், ஒரு நசையில் இருந்தால் கண் தெரியாதே. காமதசையில் தவித்தேன். அதனால்தான் மோஹித்துப் போனேன். கண்ணை மறைத்து விட்டது. அதனால் தான் பகவானைத் தெரியவில்லை