ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 302

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – எண்பத்து ஆறாவது அத்தியாயம்

(ஸுபத்ராஹரண வ்ருத்தாந்தமும், ஸ்ரீக்ருஷ்ணன் ச்ருததேவனென்னும் ப்ராஹ்மணனையும் ஜனக மஹாராஜனையும் அனுக்ரஹித்தலும்)

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- ப்ரஹ்மரிஷீ! எனக்குப் பிதாமஹியும் (அப்பாவின் அம்மா), ராம-க்ருஷ்ணர்களுக்கு உடன் பிறந்தவளுமாகிய ஸுபத்ரையை அர்ஜுனன் மணம் புரிந்த வ்ருத்தாந்தத்தை அறிய விரும்புகிறேன். (அதை மொழிவீராக).

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஸமர்த்தனாகிய அர்ஜுனன், தீர்த்த யாத்ரைக்காகப் பூமியைச் சுற்றிக் கொண்டு வரும் க்ரமத்தில், ப்ரபாஸ தீர்த்தத்திற்கு வந்து, தனது அம்மான் (மாமா) புதல்வியை ராமன் துர்யோதனனுக்குக் கொடுத்து விவாஹம் செய்விக்கப் போகிறானென்றும், மற்ற வஸுதேவாதிகள் அதற்கு இசையவில்லையென்றும் கேள்விப்பட்டு, அவளைத் தான் பெற விரும்பி, த்ரிதண்டி ஸந்யாஸி வேஷம் (உருவம்) பூண்டு, த்வாரகைக்குச் சென்றான். பிக்ஷு (ஸந்யாஸி) வேஷம் (உருவம்) பூண்ட அவ்வர்ஜுனன், பட்டணத்து ஜனங்களாலும், உண்மையை அறியாத மஹானுபாவனான பலராமனாலும், அடிக்கடி பூஜிக்கப்பட்டுத் தன் கார்யத்தை நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு, வர்ஷாகாலம் நான்கு மாதங்களும் அங்கு வஸித்திருந்தான். 

ஒருகால், பலராமன் நான் செய்யும் அதிதி ஸத்காரத்தை (விருந்தோம்பலை) அங்கீகரிக்க வேண்டுமென்று வேண்டி, தன் க்ருஹத்திற்கு அழைத்துக் கொண்டு போய், ச்ரத்தையுடன் பிக்ஷை (பிச்சை, ஸன்யாஸிகளுக்கு அளிக்கப்படும் உணவு பிக்ஷை எனப்படும்) கொண்டு வந்து கொடுக்க, அவ்வர்ஜுனன் புசித்தான். அவன், கொடி போல் நுண்ணிய அங்கமுடையவளும், வீரர்களின் மனத்திற்கு இனியவளுமாகிய, அக்கன்னிகையை அவ்விடத்தில் கண்டு, ப்ரீதியினால் கண்கள் மலரப்பெற்று, புணர வேண்டுமென்னும் விருப்பத்தினால், கலங்கின மனத்தை அவளிடம் வைத்தான். அக்கன்னிகையும், பெண்களின் மனத்திற்கு இனியனாகிய அவ்வர்ஜுனனைக் கண்டு சிரித்து, வெட்கமுற்ற கடைக் கண்ணோக்கமுடையவளும், அவனிடத்தில் வைக்கப்பட்ட ஹ்ருதயமும் கண்களும் உடையவளுமாகி, அவனை விரும்பினாள். 

அர்ஜுனன், அப்பெண்மணியை எப்பொழுதும் த்யானித்துக்கொண்டு, அவளைப் பறித்துக் கொண்டு போக அவகாசம் பெற விரும்பி, மிகவும் வலிய காம பாதையினால் (காதல் கிளர்ச்சியால்) வருந்தி, ராமாதிகளின் ஸம்மானத்தினால் (மரியாதை, மதிப்பினால்) விளையும் ஸுகத்தைச் சிறிதும் அனுபவிக்க முடியாதிருந்தான். இப்படி இருக்கையில், அவ்வர்ஜுனன் தாய், தந்தைகளான தேவகீ வஸுதேவர்களாலும், மஹானுபாவனான ஸ்ரீக்ருஷ்ணனாலும் அனுமதி கொடுக்கப் பெற்று, ஒரு கால் தேவ யாத்ரைக்காக ப்ராகாரத்திற்கு வெளியில் வந்து, ரதத்தின்மேல் இருக்கின்ற அக்கன்னிகையைப் பறித்துக் கொண்டு போனான். அப்பால், அவன் ரதத்தில் நின்று, காண்டீவமென்னும் தனுஸ்ஸை எடுத்து, தன்னைத் தடுக்க வந்த சூரர்களான படர்களை ஓடச் செய்து, தன் பந்துக்களான யாதவர்கள் முறையிட்டுக் கொண்டிருக்கையில், ஸிம்ஹம் தன் பாகத்தைப் பறிப்பது போல், அப்பெண்மணியைப் பறித்துக்கொண்டு போனான். 

பிறகு பலராமன், அர்ஜுனன் ஸந்யாஸி வேஷம் பூண்டு வந்திருந்து ஸுபத்ரையைப் பறித்துக் கொண்டு போனானென்று கேள்விப்பட்டு, பர்வத்தின் பொழுது (அமாவாசை, பவுர்ணமி நாட்களில்) மஹாஸமுத்ரம் கலங்குவது போல் கோபாவேசத்தினால் கலங்கி, ஸ்ரீக்ருஷ்ணனும், நண்பர்களும், பாதங்களைப் பிடித்துக்கொண்டு வேண்ட, கோபம் தணிந்தான். 

சனி, 24 ஏப்ரல், 2021

குரு பரம்பரை வைபவம் - 6 - கோமடம் மாதவாச்சார்யார்

திருந்தி வந்தார் திருமழிசை ஆழ்வார்


துவாபர யுகத்தில், 8,62,900ம் ஆண்டான சித்தார்த்தியில் அவதரித்தார் ஒரு மகான். அதற்கு முந்தைய சித்தார்த்தி வருடத்தில், அத்ரி, பிருகு, வசிஷ்டர், பார்க்கவர், ஆங்கிரஸ், புலஸ்தியர், குத்ஸர் முதலிய பிரம்ம ரிஷிகள் சத்ய லோகத்திற்குச் சென்றனர். சத்ய லோகம் என்பது படைக்கும் கடவுளான பிரம்மாவின் உலகமாகும். 


கலைமகள் வீணையை மீட்டி வேத கானம் இசைத்துக்கொண்டிருந்தாள். நாரதர், பிரம்மாவின் கடைசி குமாரர் ஆவார். அவரும் பகவான் மீது கானம் பாடி பக்தியில் திளைத்திருந்தார். இவருடைய சீடர்களான தேவலர், அஸிதர் என்போரும் பரந்தாமனைப் பாடி உலகையே மறந்திருந்தனர். அதுமட்டுமா, வால்மீகி முனிவர் ராமாயணத்தை பாடிப்பாடி தான் உருகியது மட்டுமல்லாமல், பிரம்மாவையும் உருகச் செய்து கொண்டிருந்தார்.


சத்யலோகம் இப்படி பகவான் ஸ்மர்ணையில் ஆழ்ந்திருந்த போது, ஒரு கட்டத்தில், பிரம்மா வந்திருந்த ரிஷிகளை வரவேற்றார். தான் பெற்ற பிள்ளைகளைப்போல் பாவித்து அவர்களை அன்புடன் உபசரித்தார். அவர்கள் ஒன்றுகூடி வந்ததன் காரணத்தை வினவினார்.


உலகின் தலைவனான நான்முகனின் அடிதொழுது தாளும் தடக்கையும் கூப்பி, “உலகில் தவம் இயற்றுவதற்கு தலை சிறந்த இடம் எது?’’ என ரிஷிபுங்கவர்கள் கேட்டார்கள். உடனே பிரம்மா, தேவதச்சன் என்ற புகழுக்குரிய விஸ்வகர்மாவை வரவழைத்து ஒரு துலாக்கோலின் தட்டில் பூமியின் எல்லா பாகங்களையும் வைக்கச் சொன்னார். மற்றொரு தட்டில் திருமழிசை என்னும் தலத்தையும் வைக்கச் சொன்னார். 


அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. திருமழிசை வைத்த தட்டு கனம் மிகுதியாலே தாழ்ந்து நிற்க, பூமியின் பிற பாகங்கள் வைக்கப்பட்டிருந்த தட்டு லேசாகி மேலே நின்றது. பூவுலகில் திருமழிசையே தலைசிறந்த தலம் என்று உணர்ந்த முனிசிரேஷ்டர்கள், நான்முகனிடம் விடை பெற்று, திருமழிசைக்குச் சென்றனர். அந்தத் தலத்தில் அப்படி என்னதான் விசேஷம்?


இந்த புண்ணிய தலத்தில்தான் துவாபர யுகம், சித்தார்த்தி என்ற 8,62,900ம் வருடத்தில் தை மாதம், கிருஷ்ண பக்ஷ பிரதமையில், மக நட்சத்திரத்தில், ஞாயிற்று கிழமையன்று பார்க்கவ மகரிஷிக்கு திருக்குமாரராக திருமழிசையாழ்வார் அவதரித்தார். இவர் பக்தியில் திளைத்ததால் பக்திசாரர் என்றும் பெயர் பெற்றார். இவரது அவதாரம் எப்படி நிகழ்ந்தது?

வெள்ளி, 23 ஏப்ரல், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 301

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – எண்பத்தைந்தாவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ணன் கம்ஸனால் கொல்லப்பட்ட தேவகியின் பிள்ளைகளைக் கொண்டு வருதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பிறகு, வஸுதேவன் ஒருகால் தன் புதல்வர்களான ராம, க்ருஷ்ணர்கள் வந்து தன் பாதங்களில் விழுந்து, வந்தனம் செய்து நிற்க, அவர்களை ப்ரீதியுடன் புகழ்ந்து மொழிந்தான். அவ்வஸுதேவன் தன் பிள்ளைகளான ராம, க்ருஷ்ணர்களின் ப்ரபாவத்தை வெளியிடுகின்ற முனிவர்களின் வசனத்தைக் கேட்டு, அவர்களின் வீரச் செயல்களையும் கண்டு, இவர்கள் ஜகதீச்வரர்களேயென்று நம்பிக்கை உண்டாகப் பெற்று, அவர்களை அழைத்து இவ்வாறு மொழிந்தான்.

வஸுதேவன் சொல்லுகிறான்:- க்ருஷ்ண! க்ருஷ்ண! மிகுந்த ஆச்சர்ய சக்தியுடையவனே! பலராம! புராண புருஷனே! நீங்கள் இந்த ஜகத்திற்கெல்லாம் காரணர்களும், ப்ரக்ருதி (அசேதனம்) புருஷர்களைக் (ஜீவாத்மா) காட்டிலும் விலக்ஷணர்களுமான (வேறான) ஒன்றான பரமபுருஷர்களென்று நான் அறிவேன். நீங்கள் ப்ரக்ருதி புருஷர்களைச் சரீரமாக உடையவர்கள். இந்த உலகம் எங்கு, யாரால், எதிலிருந்து, எதனைக் கொண்டு, எதற்காக, எது எதுவாக, எப்பொழுது, எவ்வாறு உண்டாகிறதோ அவ்வனைத்துமான ப்ரக்ருதியையும் (அறிவற்ற ஜடப்பொருட்களின் முலமான மூலப்ரக்ருதிக்கும்), புருஷர்களையும் (ஜீவாத்மாக்களுக்கும்) நேரே நியமிக்கிற மஹானுபாவனாகிய நீயே. 

இந்திரியங்களின் அறிவுக்கு எட்டாதவனே! உன்னிடத்தில் உன்னால் படைக்கப்பட்டதும், தேவர், மனுஷ்யர், பசுக்கள், வ்ருக்ஷங்களென்று (மரங்கள்) பலவாறாயிருப்பதுமாகிய இந்த ஜகத்தில், உன் சரீரமாகிய ஜீவன் மூலமாய் ப்ரவேசித்து, ப்ராணனையும், ஜீவனையும் சரீரமாக உடையவனாகி, அவற்றின் ஜன்ம (பிறப்பு), ஜரா (கிழத்தனம்), மரணாதியான தோஷங்கள் எவையும் தீண்டப்பெறாமல் அதைப் பறிக்கின்றன. இந்த ப்ரபஞ்சத்திலுள்ள தேவ, மனுஷ்யாதி சரீரங்களின் ஸ்ருஷ்டிக்குக் (பிறப்பிற்குக்) காரணங்களான ப்ராணாதிகளின் சக்திகள் எவ்வெவை உண்டு; அவற்றிற்கெல்லாம் நீயே நிர்வாஹகனாகையால் (நியமிப்பவனாகையால்) அவை பரமாத்மாவான உன்னுடையவைகளே. சக்திகளையுடைய அந்த ப்ராணாதிகள் உனக்குப் பரதந்த்ரங்களேயன்றி (உட்பட்டவை) ஸ்வதந்த்ரங்களன்று (தன்னிச்சையாக செயல்படவல்லவை அன்று). இனி அவற்றின் சக்திகள் உன்னதீனங்களென்பதைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ? 

அந்த ப்ராணாதிகளின் சக்திகளுக்கு அவற்றுள் ஒன்றுக்கொன்று நிர்வாஹகங்களாய் (நியமிப்பவைகளாய்) இருக்கலாகாதோ என்றால், நிர்வாஹகங்களாக மாட்டாது. ஏனென்றால், அவற்றில் ஒவ்வொன்றுக்கு ஒவ்வொரு சக்தியே உள்ளது. ஒன்றின் சக்தி மற்றொன்றுக்குக் கிடையாது. ஒன்றை விட மற்றொன்று விலக்ஷணமாகையால் (வேறாகையால்), ஒன்றின் சக்திக்கு மற்றொன்று நிர்வாஹகமென்று (நியமிப்பவையென்று) சொல்ல முடியாது. இங்குமங்கும் உலாவுகின்ற தேஹங்களின் சேஷ்டை (செயல்), ஜீவன், பரமாத்மா இவ்விருவருடைய சேஷ்டையேயன்றி, கேவல ஜீவனுடைய சேஷ்டையன்று. அந்த சேஷ்டையை ஜீவனே ஸ்வதந்த்ரனாயிருந்து (தன்னிச்சையாக செயல்பட்டு) நடத்துகிறதில்லை. பரமாத்மாவினால் அனுமதி கொடுக்கப் பெற்றே நடத்துகிறானன்றி ஸ்வதந்த்ரனல்லன். சேதனர்களே இவ்வாறு பரதந்த்ரர்களாயிருக்க (பரமாத்மாவிற்கு உட்பட்டவை), அசேதனங்களான ப்ராணாதிகள், பரதந்த்ரங்கள் (பரமாத்மாவிற்கு உட்பட்டவை) என்பதைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ? 

செவ்வாய், 20 ஏப்ரல், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 300

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – எண்பத்து நான்காவது அத்தியாயம்

(ரிஷிகள் ஸ்ரீக்ருஷ்ண, ராமர்களைப் பார்க்க வருதலும், வஸுதேவனுக்கும், ரிஷிகளுக்கும் ஸம்பாஷணமும் (உரையாடலும்), ரிஷிகள், வஸுதேவனுக்கு யாகம் செய்வித்தலும், அவரவர் திரும்பிப் போதலும்.)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- குந்தி, காந்தாரி, த்ரௌபதி, ஸுபத்ரை இவர்களும், மற்றுமுள்ள ராஜபத்னிகளும், ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் மிகுந்த பக்தியுடைய கோபிகைகளும், ஸர்வாந்தராத்மாவும், ஷாட்குண்ய பூர்ணனும் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனும்), தன்னைப் பற்றினாருடைய வருத்தங்களைப் போக்குபவனுமாகிய ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் கபடமற்ற (சூது இல்லாத) ஸ்னேஹம் நிறைந்த ருக்மிணி முதலியவர்களின் வசனத்தைக் கேட்டு, அனைவரும் ஆனந்த நீர் நிரம்பின கண்களுடையவராகி, வியப்புற்றார்கள். 

இவ்வாறு பெண்கள் பெண்களோடும், புருஷர் புருஷர்களோடும், பேசிக் கொண்டிருக்கையில், வ்யாஸர் நாரதர், ச்யவனர், தேவலர், அஸிதர், விச்வாமித்ரர், சதாநந்தர், பரத்வாஜர், கௌதமர், பரசுராமர், அவருடைய சிஷ்யர்கள், மஹானுபாவரான வஸிஷ்டர், காலவர், ப்ருகு, புலஸ்த்யர், கச்யபர், அத்ரி, மார்க்கண்டேயர், ப்ருஹஸ்பதி, த்விதர், தரிதர், ஏகதர், ப்ரஹ்மபுத்ரரான அங்கிரஸ்ஸு, அகஸ்த்யர், யாஜ்ஞவல்க்யர் இம்முனிவர்களும், வாமதேவர் முதலிய மற்றும் பல முனிவர்களும், ராம, க்ருஷ்ணர்களைப் பார்க்க விரும்பி, அவ்விடம் வந்தார்கள். 

முன்னதாகவே அங்கு உட்கார்ந்திருக்கிற மன்னவர் முதலியவர்களும், பாண்டவர்களும், ஸ்ரீக்ருஷ்ண - ராமர்களும் உலகங்களால் பூஜிக்கப்பட்ட மஹானுபாவர்களான அம்முனிவர்களைக் கண்டு, விரைந்தெழுந்து நமஸ்கரித்தார்கள். அனைவரும் அம்முனிவர்களைப் பூஜித்தார்கள். ஸ்ரீக்ருஷ்ணனும், பலராமனும் தானுமாக, “நல்வரவாகுக?” என்று விசாரித்து, ஆஸனம் அளித்து, பாத்யம், அர்க்யம், பூமாலை, தூபம், சந்தனம், குங்குமம் முதலிய பூச்சு இவைகளால் அவர்களைப் பூஜித்தான். தர்மத்தைக் காக்கும் பொருட்டு ஏற்றுக் கொண்ட திருவுருவமுடைய ஸ்ரீக்ருஷ்ண பகவான், அப்பெருஞ்சபை முழுவதும் பேசாமல் கேட்டுக் கொண்டிருக்கையில், ஸுகமாக உட்கார்ந்திருக்கின்ற அம்முனிவர்களைக் குறித்து இவ்வாறு மொழிந்தான்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- ஓ முனிவர்களே! இவ்வுலகத்தில் நாங்களே ஜன்மம் படைத்தவர்கள். ஜன்மத்தின் பலன் முழுவதும் எங்களுக்குக் கை கூடிற்று. ஏனென்றால், தேவதைகளுக்கும் கிடைக்க அரிதான யோகீச்வரர்களாகிய உங்கள் தர்சனம் எங்களுக்குக் கிடைத்ததல்லவா? அல்ப (குறைந்த) புண்யர்களும் (புண்யம் செய்தவர்களும்), ப்ரதிமைகளையே (பொம்மைகளையே) தேவதையென்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுமான ஸாதாரண மனுஷ்யர்களாகிய எங்களுக்கு உங்களை தரிசித்தல், ஸ்பர்சித்தல், வினவுதல், வணங்குதல், பாதங்களைப் பூஜித்தல் முதலிய இந்நன்மைகள் எப்படி நேர்ந்தன? இது ஆச்சர்யமாயிருக்கின்றது. 

வெள்ளி, 16 ஏப்ரல், 2021

குரு பரம்பரை வைபவம் - 5 - கோமடம் மாதவாச்சார்யார்

இடைகழியில் சந்தித்த இனியவர்கள்


பக்தியே மனமாகவும் உடலாகவும் உடையவர்கள்தான் ஆழ்வார்கள். இவர்கள் பெருமையை சொல்லில் அடக்க முடியாது. ஆழ்வார்களின் பக்தியை ஆண்டாள்தான் எப்படியெல்லாம் அனுபவிக்கிறாள்! பேயாழ்வாரின் அருமை பெருமைகளை ஆண்டாள் இவ்வாறு விவரிக்கிறாள்:


நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் 

மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்

நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்

போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டுஒருநாள்

கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கருணனும் 

தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ

ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே

தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்


ஒருவரோடு ஒருவர் சேராமல், தனித்தனியே சஞ்சரித்துக் கொண்டிருந்த பொய்கையார், பூதத்தார், பேயார் மூவரையும் ஒன்று சேர்த்து வைத்து அவர்கள் வாயிலாக தான் பாடப்படும் அனுபவத்துக்காக ஒரு பெரும் மழையை திருக்கோவிலூரில் உருவாக்கிக் காத்திருந்தான் பகவான். பேயாழ்வாருக்கு தமிழ்த் தலைவன் என்கிற பெயரும் உண்டு. இப்போது ஆண்டாள் பாசுரத்திற்கு வருவோம். 

‘நோற்று’ என்பதில், மற்ற இரண்டு ஆழ்வார்கள் விளக்கு ஏற்றுகிற உபாயத்தைச் செய்யவே அவர் நோற்றார் என்று பொருள்படுகிறது. அதாவது அவ்விருவரும் விளக்கேற்றுவதற்காக இவர் நோற்றார் எனலாம். இன்னமும் விளக்கமாக கூறினால், இவர் நோற்ற நோன்பு எதற்கெனில், அவ்விரு ஆழ்வார்களும் விளக்கேற்ற, அந்த வெளிச்சத்தில் ‘திருக்கண்டேன்’ என பகவானின் ரூபத்தைக் கண்டு களித்துப் பாடலாமே என்பதால்தான். இப்படி இவர் இருந்த நிலையைத்தான் நோன்பு நோற்றாயோ என்று விளிக்கிறாள் ஆண்டாள். ‘சுவர்க்கம்’ என்கிற அனுபவத்தை இவர் ‘திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்’ என்று கூறி ஆனந்த கூத்தாடுகிறார். மேலும், சுவர்க்கம் புகுகின்ற அம்மானாய் என்கிறாள், ஆண்டாள். ‘வாசல் திறவாதார்’ என்றது பேயாழ்வாருக்கு நன்கு பொருந்தும். கனமான மழை பெய்த ஓர் இரவில், திருக்கோவிலூரில் ஒரு வீட்டு இடைகழிக்குள் புகுந்த பொய்கையார், மழையிலிருந்து தப்ப தாழிட்டுக் கொண்டார். பிறகு பூதத்தார் வந்து கதவைத் தட்ட, பொய்கையார் உள்ளிருந்து ‘ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம்’ என்று சொல்லி கதவைத் திறந்து அவருக்கு வழிவிட்டார்.


அந்த மழையின் காரணமாகவே ஒதுங்குவதற்கு வந்த பேயாழ்வாரும் இடைகழிக் கதவைத் தட்ட, உள்ளிருந்து பூதத்தார் ‘ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம், மூவர் நிற்கலாம்’ எனக்கூறி தாள் திறந்து வழிவிட்டார். இதன் பிறகு யாரும் வந்து கதவைத் தட்டாததை, ‘வாசல் திறவாதார்’ என ஆண்டாள் தெரிவிக்கிறாள். அடுத்ததாக ‘நாற்றத்துழாய்முடி நாராயணன்’ என்கிறாள். துழாய் என்றால் துளசி. அதாவது இந்த ஆழ்வார் துழாய் விஷயமாகவே பாடியதைத் தெரிவிக்கிறாள். ‘பொன் நோய்வரை மார்பில் பூந்துழாய்’ என்றும், ‘தன்துழாய் மார்வன்’ என்றும் பாடி மகிழ்ந்ததை இங்கு நினைவுபடுத்துகிறாள். இவ்வாறு பெருமைகள் கொண்ட இந்த மூவரின் பிறவி நிலை என்ன? மூவரும் மனிதப் பிறவி போல் அல்லாமல் புஷ்பத்திலே தோன்றி, கடவுளின் கருணையாலே, சாத்வீகர்களாய் இருந்தனர். வேறு சிந்தை இல்லாமல் பகவானிடம் பக்தி செலுத்தினார்கள். ராஜஸ, தாமஸ குணங்களை அகற்றி சாத்வீகர்களாய் வாழ்ந்தனர். சுத்த ஸத்வ குணத்தில் ஒன்றி நின்றனர்.

புதன், 14 ஏப்ரல், 2021

குரு பரம்பரை வைபவம் - 4 - கோமடம் மாதவாச்சார்யார்

பகவானின் நாமமே அருமருந்து


பூதத்தாழ்வார் தம் பாசுரங்கள் மூலம் எந்த விஷயத்தை வெளிப்படுத்தியிருக்கிறாரோ, அதே விஷயத்தைத்தான் ஆண்டாளும் தம் பாசுரங்கள் மூலம் கூறுகிறாள். ஒவ்வொரு ஆழ்வாரின் ஆழ்ந்த பக்தியையும் அவர்களின் தன்நிலையையும் இவள் ஒருவளே அறிவாள். அதனால்தானோ என்னவோ, இவளை ‘பதின்மருக்கு ஒரு பெண் பிள்ளையிரே’ என்று ஜனன்யாசார்யார் என்பவர் விளக்குகிறார். அதாவது பத்து ஆழ்வாருக்கு இவள் ஒருவளே பெண்ணின் தகுதியைப் பெறுகிறாள். சரி! பூதத்தாழ்வாரைப் பற்றி ஆண்டாளின் நோக்குதான் என்ன?


‘கற்றுக் கறவை கணங்கள்..’ என்கிற திருப்பாவையின் 11ம் பாசுரத்தில் பூதத்தாழ்வாரின் மகிமையை ஆண்டாள் விளக்குகிறாள். இந்தப் பாசுரத்தில் ‘‘குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே’’ என்ற அடி பூதத்தாழ்வாருக்கு நன்கு பொருந்தும். தாயின் கருவிலிருந்து பிறவாததால் குற்றமொன்றில்லாதவர். ‘கோ’ என்றால் பக்தி ததும்பும் நற்சொற்கள். இதைத்தான் ஸ்ரீஸூக்திகள் என்று ஆன்றோர்கள் கூறுவர். கோவலர் என்றால், பக்திப் பரவசத்துடன் ஸ்ரீஸூக்திகளான நற்சொற்களை அருளவல்லவர் என்று அர்த்தம். பொற்கொடியே என்பதன் உள் அர்த்தம் என்னவென்றால், ‘கோல்தேடி யோடுங் கொழுந்ததே போன்றதே மால் தேடியோடும் மனம்’ என்று தம்மை ஒரு கொடியாக தம் பாசுரத்தில் சொல்லிக் கொள்கிறார். ‘பகவானாகிய கோலைத் தேடிச் செல்கிற கொடி போன்றவன் நான்’ என்கிறார். மேலும் ‘‘கற்றுக் கறவை கணங்கள் பல கறந்து’’ என்பது முதலாழ்வார்களான பொய்கையார், பூதத்தார், பேயாழ்வார் ஆகிய மூவருக்கும் பொருந்தும். கற்றுக் கறவை என்பதில் கறவை என்பதற்கு நற்சொற்கள் என்று பொருள். மற்ற ஆழ்வார்கள் எல்லோரும் பெரிய பெரிய பாசுரங்களை அருளினார்கள். ஆனால், அது போலல்லாமல் இந்த மூவரும் வெண்பாவாகிய சிறிய பாசுரங்களை அளித்தார்கள். 


இந்த ஆண்டாள் பாசுரத்தில் ‘‘புனமயிலே’’ என்ற விளியும் இவருக்கு நன்கு பொருந்தும். அதையே பூதத்தாழ்வார் ‘‘பொழிலிடத்தே வாழும் மயில்’’ என்று தன்னையே கூறிக் கொண்டார். இந்த ஆழ்வார் தோன்றிய தலம் திருக்கடல்மல்லை எனும் மாமல்லபுரமாகும். பொதுவாகவே மயில் மேகத்தைக் கண்டு மிக்க குதூகலமடையும். மேகம், நீர் பருக வருமிடம் கடல். இதன் கரையிலே நின்று மேகத்தைக் கண்டு மயில்கள் அகவும். மகிழ்ந்து நிற்கும். இந்த ஆழ்வார் நின்ற இடமும் கடற்கரையே. அங்கு கோயில் கொண்டுள்ள தலசயனப்பெருமாள் ஒரு மேகத்தையொத்தவர் ஆதலால் இம்மேகத்தைக் கண்டு ஆழ்வாராகிய மயில், பக்தியால் அகவுகிறது என்றாயிற்று.


மேலும், ஆண்டாள் இதே பாசுரத்தில் ‘‘சுற்றத்துத் தோழிமார்’’ என்கிறாள். அதாவது பூதத்தாழ்வாருக்கு பொய்கையாழ்வாரும் பேயாழ்வாரும் சுற்றத்தவர் ஆவர். ஏனைய ஆழ்வார்கள் இவருக்கு தோழிமார் ஆவர். இவ்வாழ்வார் ஒருவரே முகில் வண்ணன் பேர் பாடினவர். ஆதலால், ஆண்டாள் முகில்வண்ணன் பேர் பாட நீர் வாரும் என விளிக்கிறாள். புனமயில் முகில் வண்ணனைத்தானே பாடும் என்ற அர்த்தத்தில் ஆண்டாள், பூதத்தாழ்வாரை புனமயிலே என விளித்து உனது இடையழகாகிய பக்தியின் பெருமை எனக்கு நன்றாகத் தெரியும். நீர் அதை மேலும் மெருகூட்டும் என விளிக்கிறாள். அடுத்தவர், பேயாழ்வார்.

ஶ்ரீமத் பாகவதம் - 299

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – எண்பத்து மூன்றாவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ணன் தர்மபுத்ராதிகளை க்ஷேமம் விசாரிக்க, அவர்கள் மறுமொழி கூறுதலும், த்ரௌபதியால் வினவப் பெற்ற ருக்மிணி முதலிய ஸ்ரீக்ருஷ்ண பத்னிகள், தங்களை ஸ்ரீக்ருஷ்ணன் மணம்புரிந்த வ்ருத்தாந்தத்தை விசதமாகக் (விரிவாகக்) கூறுதலும்.)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பிறகு, தத்வோபதேசம் செய்பவனாகிய ஸ்ரீக்ருஷ்ண பகவான், கோபிகைகளுக்கு அவர்கள் விரும்பின வண்ணமே தன் பாதார விந்தங்களில் விருப்பம் மாறாமல் மேன்மேலும் வளர்ந்து வருகையாகிற அனுக்ரஹத்தைச் செய்து, யுதிஷ்டிரனையும் மற்றுமுள்ள நண்பர்களனைவரையும் குறித்து ஆரோக்யம் விசாரித்தான். இவ்வாறு லோகநாதனாகிய ஸ்ரீக்ருஷ்ணனால் நன்கு ஸத்கரித்து (வெகுமதித்து) வினவப் பெற்ற அந்த யுதிஷ்டிராதிகள், அப்பகவானுடைய பாதார விந்தங்களின் தர்சனத்தினால் பாபங்களெல்லாம் தொலையப் பெற்று, மனக்களிப்புற்று, மொழிந்தார்கள்.

யுதிஷ்டிராதிகள் சொல்லுகிறார்கள்:- ப்ரபூ! கம்பீர மனமுடைய பெரியோர்களின் அழகிய முகார விந்தத்தினின்று (திருமுகத் தாமரையிலிருந்து) பெருகி வருவதும், தேவ மனுஷ்யாதியான பற்பல தேஹ ஸம்பந்தமுடைய ஜீவாத்மாக்களுக்கு அத்தகைய தேஹ ஸம்பந்தத்திற்குக் காரணமும், அனாதியுமான அஜ்ஞானத்தை வேரோடறுப்பதுமாகிய உன் பாதார விந்தங்களின் வைபவமாகிற அம்ருதத்தைக் காதுகளாகிற பானபாத்ரங்களால் நன்கு பருகுபவர்க்கு, அமங்களம் (தீமை) எப்படி உண்டாகும்? (அம்ருதம் போல் மதுரமாகிச் சப்தாதி விஷயங்களில் விருப்பத்தை மறக்கடிப்பதுமான உன் பாதார விந்தங்களின் ப்ரபாவத்தைப் (பெருமையை) பெரியோர்கள் மூலமாய் உள்ளபடி அறிந்து, அவற்றை த்யானம் செய்பவர்க்கு, ஒருகாலும் அமங்களம் (தீமை) உண்டாகாது.) நீ பரமஹம்ஸர்களுக்கு ப்ராப்ய (அடையப்படும் பொருள்), ப்ராபகம் (அடையும் வழி) இரண்டும் தானேயாயிருப்பவன். மற்றும் நீ, காலத்தின் கொடுமையால் அழிந்த வைதிக தர்மங்களின் மர்யாதையை நிலை நிறுத்தும் பொருட்டு, தன் யோகமாயையினால் திவ்யமங்கள விக்ரஹத்தை ஏற்றுக்கொண்டிருப்பவன். (நீ, தன் ஸங்கல்பத்தினாலேயே வேத விரோதிகளை அழித்து விடுவாய்.) ஆயினும், உன் பக்தர்களிடத்தில் வாத்ஸல்யத்தினாலும், அவர்களோடு கலந்து பரிமாற வேண்டுமென்கிற ஸௌசீல்யத்தினாலும் (உயர்ந்தவன் தாழ்ந்தவர்களோடு இரண்டறக் கலந்து பழகும் தன்மையாலும்), இத்தகைய திருவுருவங்களை ஏற்றுக்கொள்கின்றாய். மற்றும், நீ தன்னைப்பற்றினவர்களின் அனிஷ்டங்களைப் (தீமைகளைப்) போக்கி, இஷ்டங்களை நிறைவேற்றிக் கொடுப்பது முதலியன செய்வதற்குரிய அளவற்ற நீண்ட அறிவுடையவன்; ஆநந்த வெள்ளம் போன்றவன்; தான் நடத்துகிற ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (காத்தல்), ஸம்ஹாரங்களுக்கு (அழித்தல்) என்கிற மூன்று அவஸ்தைகளையும் தன் தேஜஸ்ஸினால் உதறியிருப்பவன். (நீ, மற்றவர்க்கு ஸ்ருஷ்டி முதலியவற்றை நடத்துபவனேயன்றி, உனக்கு அந்த ஸ்ருஷ்ட்யாதிகள் கிடையாது.) இத்தகையனான உன்னை நாங்கள் வணங்குகிறோம்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஜனங்கள் இவ்வாறு உத்தம ச்லோகர்களில் தலைவனாகிய ஸ்ரீக்ருஷ்ணனை நாற்புறத்திலும் துதித்துக்கொண்டிருக்கையில், அந்தகர்களின் (யாதவர்களின்) மடந்தையர்களும், கௌரவர்களின் மடந்தையர்களும் ஒன்று சேர்ந்து, ஸ்ரீக்ருஷ்ணனுடைய கதைகளைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். மூன்று லோகங்களிலும் பாடப்பட்ட அந்தக் கதைகளை உனக்குச் சொல்லுகிறேன், கேள். (அவர்களில் த்ரௌபதி, ஸ்ரீக்ருஷ்ண பத்னிகளை இவ்வாறு வினவினாள்.)

த்ரௌபதி சொல்லுகிறாள்:- ஸ்ரீக்ருஷ்ணனை என்றும் பிரியாத ருக்மிணி! பத்ரே! ஜாம்பவதி! கௌஸல்யே! ஸத்யபாமே! காளிந்தி! மித்ரவிந்தே! ரோஹிணி! லக்ஷ்மணே! மற்றுமுள்ள ஸ்ரீக்ருஷ்ண பத்னிகளே! மஹானுபாவனாகிய ஸ்ரீக்ருஷ்ணன், தன் ஸங்கல்பத்தினால் உலக ரீதியை (உலக வழக்கை) அனுஸரித்து, உங்களை எவ்வாறு மணம் புரிந்தானோ, இதை எங்களுக்குச் சொல்வீர்களாக.

திங்கள், 12 ஏப்ரல், 2021

குரு பரம்பரை வைபவம் - 3 - கோமடம் மாதவாச்சார்யார்

ஞானச்சுடர் என்ற விளக்கேற்றியவர்

ஞானியரை ஞானியரே அறிய முடியும். அதிலும் ஒரு ஆச்சார்யாரை மற்றொரு ஆச்சார்யாரால்தான் புரிந்து கொள்ள முடியும். அப்படித்தான் ஆண்டாள் பொய்கையாழ்வாரைப் பற்றி பாசுரங்களில் கூறுகிறாள். 


‘இளங் கன்றுக்கிரங்கி’ என்கிறாள், ஆண்டாள். பொய்கையார்க்கு நாமெல்லாம் குழந்தைகளைப் போலவும் நம் எல்லோருக்கும் பொய்கையார் தாயைப் போலவும் உள்ள ஒரு நித்யமான உறவை குறிப்பிடுகிறாள். ‘கன்றுக்கிரங்கி’ என்பதால் நம்மைப்போல் இருப்பவரின் மீதுள்ள பரம கருணையின் மிகுதியையே குறிக்கிறது. பொய்கையார் பகவானின் குணங்களை நினைத்தவாரே இருப்பதால் இடையறாத பகவானைப் பற்றிய நினைவே, ஊற்றாக, பால் போன்ற பாசுரங்கள் பெருக்கியது. இதையே ஆண்டாள் ‘நினைத்து முலைவழியே நின்று பால் சோர’ என்கிறாள். 


இந்த ஆழ்வார்க்கு மேலும் மூன்று ஆழ்வார்களோடு சம்பந்தம் உண்டு. அவர்கள் முறையே பூதத்தாழ்வார், பேயாழ்வார் மற்றும் திருமழிசையாழ்வார் ஆவார்கள். இவர்கள் பொய்கையார், பூதத்தார், பேயாழ்வார், திருமழிசையார் என்றே அறிந்து கொள்ளப்பட்டார்கள். இவர்களை அயோநிஜர்கள் என்பார்கள். அதாவது, சாதாரண மனிதர்களைப்போல் கருவிலிருந்து உருவானவர்கள் அல்ல. தாமாகத் தோன்றியவர்கள். இந்த ஆழ்வார் பொய்கையில் தோன்றியதால், அவர் பொய்கையாழ்வார் என்றானார். 


இந்த ஆழ்வாருடைய வாழித் திருநாமத்தை நாம் தினமும் மனமுருகிப் பாட ஞானம், பக்தி, வைராக்கியம் நமக்கும் வாய்க்கும். இதோ அந்த வாழித்  திருநாமம்:



செய்யதுலா வோணத்திர் செகத்துதித்தான் வாழியே

திருக்கச்சி மாநகரஞ் செழிக்க வந்தோன் வாழியே

வையந்தகளிலூறும் வகுத்துரைத்தான் வாழியே

வனச மலர்க்கருவதனில் வந்தமைந்தான் வாழியே

வெய்யகதிரோன் தன்னை விளக்கிட்டான் வாழியே

வேங்கடவர் திருமலையே விரும்புபவன் வாழியே

பொய்கைமுனி வடிவழகும் பொற்பதமும் வாழியே

பொன்முடியுந் திருமுகமும் பூதலத்தில் வாழியே

அடுத்து, பூதத்தாழ்வாரின் வைபவத்தை காண்போம்.

ஶ்ரீமத் பாகவதம் - 298

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – எண்பத்து இரண்டாவது அத்தியாயம்

(ஸூர்ய க்ரஹணத்தின் பொழுது, ஸ்ரீக்ருஷ்ணாதிகள் குருக்ஷேத்ரத்திற்குப் போன வ்ருத்தாந்தம்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அனந்தரம் பலராமனும், ஸ்ரீக்ருஷ்ணனும், த்வாரகையில் வஸித்துக் கொண்டிருக்கையில் ஒருகால், ப்ரளய காலத்தில் போலப் பெரிய ஸூர்ய க்ரஹணம் உண்டாயிற்று. ஸத்புருஷர்கள் அனைவரும், ஜ்யோதிடர் (க்ரஹங்களின் நிலையை கணித்துப் பலன் சொல்லும் நிபுணர்) மூலமாய் முன்னதாகவே அந்த ஸூர்ய க்ரஹணத்தைத் தெரிந்து கொண்டு, தங்கள் தங்களுக்கு நன்மையைச் செய்து கொள்ள விரும்பி, ஆயுதம் ஏந்தினவர்களில் சிறந்த பரசுராமன், பூமியில் க்ஷத்ரியப் பூண்டுகளே இல்லாதபடி செய்ய முயன்று, ராஜர்களைக் கொன்று, அவர்களின் ரக்த ப்ரவாஹத்தினால் (வெள்ளத்தினால்) எவ்விடத்தில் ஐந்து மடுக்களை (குளங்களை) நிர்மித்தானோ, மற்றும் மஹானுபாவனான அந்தப் பரசுராமன், புண்ய, பாப ரூபமான கர்மத்தினால் தீண்டப்படாதவனாயினும், உலகத்தவர் இவ்வாறு செய்ய வேண்டும் என்பதைத் தெரிவிக்க முயன்றும், பிறருடைய பாபங்கள் நீங்க விரும்பியும், புண்ய பாபங்களுக்கு உட்பட்ட ஸாதாரண புருஷன் செய்வது போல, எவ்விடத்தில் யாகங்களைச் செய்தானோ, அத்தகைய ஸமந்த பஞ்சகமென்னும் க்ஷேத்ரத்திற்குச் சென்றார்கள். 

பரத வம்சாலங்காரனே! மிகவும் புண்யமான அந்தத் தீர்த்த யாத்ரையைப் பற்றி, பாரத வர்ஷத்திலுள்ள ப்ரஜைகள் அனைவரும் அவ்விடம் வந்தார்கள். வ்ருஷ்ணிகளும், அக்ரூரன், வஸுதேவன், ஆஹுகன் முதலியவர்களும், தங்கள் பாபத்தைப் போக்கிக்கொள்ள விரும்பி, அந்த ஸமந்த பஞ்சக க்ஷேத்ரத்திற்குச் சென்றார்கள். 

கதன், ப்ரத்யும்னன், ஸாம்பன் இவர்களோடும், ஸுசந்திரன், சுகன், ஸாரணன் இவர்களோடும் கூட அநிருத்தனும், ஸேனாதிபதியான க்ருதவர்மனும், த்வாரகையைக் காக்கும் பொருட்டு, அங்கேயே இருந்தார்கள். மிகுந்த பாக்யமுடைய அந்த அக்ரூராதிகள், தேவ விமானங்கள் போன்ற ரதங்களின் மேலும், அலைகளோடொத்த நடையுடைய குதிரைகளின் மேலும், மேகங்கள் போன்று கர்ஜிக்கின்ற யானைகளின் மேலும் ஏறிக் கொண்டு, வித்யாதரர்களை நிகர்த்த ஒளியுடைய மனுஷ்யர்களால் சூழப்பட்டு, பொன் மாலைகளையும் திவ்யமான பூமாலைகளையும், சிறந்த ஆடைகளையும், அத்தகைய கவசங்களையும் அணிந்து, தத்தம் பார்யைகளோடு (மனைவிகளோடு) கூடி, வழியில் போகும் பொழுது, தேவதைகள் போல் விளங்கினார்கள். 

மிகவும் பாக்யசாலிகளான அவ்வக்ரூராதிகள், மிகுந்த மனவூக்கத்துடன் அவ்விடத்தில் ஸ்னானம் செய்து, உபவாஸமிருந்து, புதிய வஸ்த்ரங்களாலும், பூமாலைகளாலும், பொன்மாலைகளாலும் அலங்காரம் செய்யப் பெற்ற பசுக்களை ப்ராஹ்மணர்களுக்குக் கொடுத்தார்கள். 

அந்த வ்ருஷ்ணிகள், பரசுராமனால் நிர்மிக்கப்பட்ட மடுக்களில் விதிப்படி மீளவும் ஸ்னானம் செய்து, “எங்களுக்கு ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் பக்தி விளைய வேண்டும்” என்னும் வேண்டுகோளுடன், ப்ராஹ்மண ச்ரேஷ்டர்களுக்கு ஸ்வர்ணங்களைக் கொடுத்தார்கள். 

ஸ்ரீக்ருஷ்ண பகவான், தானும் ஸ்னானம் செய்து, தானமும் செய்தான். ஸ்ரீக்ருஷ்ணனையே தெய்வமாகவுடைய வ்ருஷ்ணிகள், அந்த ஸ்ரீக்ருஷ்ணனால் அனுமதி கொடுக்கப் பெற்று, யதேஷ்டமாகப் (விரும்பியபடி) புசித்து, இடைவெளியின்றி நிறைந்த நிழலுடைய வ்ருக்ஷங்களின் (மரங்களின்) அடிகளில் உட்கார்ந்தார்கள். அவர்கள், அவ்விடத்தில் நண்பர்களும், ஸம்பந்திகளுமான மத்ஸ்யம், உசீனரம், கோஸலம், விதர்ப்பம், குரு, ஸ்ருஞ்சயம், கம்போஜம், கேகயம், மத்ரம், குந்தி, ஆரட்டம், கேரளம் முதலிய தேசங்களின் அரசர்களையும், தங்கள் பக்ஷத்தில் சேர்ந்த மற்றும் பல மன்னவர்களையும், பிறர் பக்ஷத்தில் சேர்ந்த பற்பல மன்னவர்களையும், நண்பர்களான நந்தன் முதலிய கோபர்களையும், நெடுநாளாகக் காண வேணுமென்னும் பேராவலுடைய கோபிகைகளையும் கண்டார்கள். 

ஞாயிறு, 11 ஏப்ரல், 2021

குரு பரம்பரை வைபவம் - 2 - கோமடம் மாதவாச்சார்யார்

வசை மலர்க் கருவதனில் வந்த மைந்தன்


எம்பெருமான் உகந்து, உவகை கொண்டு தான் கழுத்தில் அணியக் கூடிய ஆபரணங்களையும் தான் ஏந்தியிருந்த ஆயுதங்களையுமே பூவுலகிற்கு ஆழ்வார்களாகவும் ஆச்சார்யார்களாகவும் அனுப்பினான். பெரியாழ்வார் கருடனின் அம்சமாகத் தோன்றினார். ஆண்டாள் பூமி தேவியின் அம்சமாக மலர்ந்தாள். ஸ்ரீகௌஸ்துபம் என்ற, பரந்தாமனின் மார்பை அணி செய்த ஆபரணமே குலசேகராழ்வாராக அவதரித்தது. சக்கரமே திருமழிசையாழ்வாராக திகழ்ந்தது. வைஜெயந்தி எனும் மாலையே தொண்டரடிப் பொடியாழ்வாராக ஜொலித்தது.


ஸ்ரீவத்ஸம் என்கிற மணிமாலையே திருப்பாணாழ்வாராக மிளிர்ந்தது. குமுதன் எனும் நித்யஸூரி கணங்களுக்கு தலைவனின் அம்சாவதாரமாக மதுரகவியாழ்வார் அவதரித்தார். சார்ங்கம் எனும் வில்லின் அம்சமாக திருமங்கையாழ்வார் கம்பீரமாகத் தோன்றினார். சங்கத்தின் அம்சமாக பொய்கையாழ்வார் உதித்தார். கதையின் அம்சமாக பூதத்தாழ்வார் பொலிந் தார். நந்தகம் எனும் கத்தி, பேயாழ்வாராக அவதரித்தது. சேனை முதலியார் எனும் விஷ்வக்ஷேனரே நம்மாழ்வாரானார். 


இப்படியாக தன் ஆயுதங்களையும் சேனை முதலிகளையும் பார்த்து, ‘‘நீங்கள் போய் லீலா விபூதி எனப்படும் பூமியில் வேறு வேறு வர்ணத்தில் அவதரியுங்கள். அகில உலகத்தையும் காப்பாற்றி மோட்சம் கிடைக்கும்படி செய்யுங்கள்’’ என நியமித்து அருளினான். அவர்களும் அப்படியே கலியில் நாராயண தாசர்களாக, தமிழ்நாட்டில் தாமிரபரணி, வைகை, காவிரி, பாலாறு ஆகிய நதி தீரங்களில் அமைந்திருந்த கிராமங்களில் தோன்றினர். சம்சாரக் கடலில் மூழ்கியுள்ள மனிதர்களை கரையேற்ற வந்ததால் பகவான் அவர்களுக்கு அதிகமான ஞானநிதியை அருளினான். ‘‘மயர்வற மதிநலம் அருளி’’ என்பதும் இதுதான். அப்படி அவர்கள் மூலமாக, திவ்ய பிரபந்தங்களை பிரகாசிக்கச் செய்தான். 


திருமகளின் கணவனான பகவான் நமக்கு முதல் குருவாகத்  திகழ்கிறார் என்பதை ஏற்கெனவே பார்த்தோம். அவரே மனிதனாகவும் நாராயணனாகவும் இப்பூவுலகில் பத்ரிநாத் என்கிற தலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். தானே சீடனாகவும் உயர்ந்த குருவாகவும் ஆகி, உலகோர்க்கு நல் உபதேசங்களை வழங்கி வாழ வைக்கும் பிரானனாகத் திகழ்பவர். பகவானே குருவாகத் திகழ்கிறார் என்றால் அது உலகோர்க்கு புரியும். ஆனால், தானே சீடனாகவும் ஆகிறான் என்றால் அது என்ன? 


இதைத்தான், ‘‘சீடனாயிருக்கும் இருப்பு நாட்டார் அறியாமையாலே அத்தை அறிவிக்கைக்காக’’ எனப் பகர்வர் பெரியோர். அதாவது ஒரு சீடன் குருவின் சந்நதியில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என சாதாரண மனிதன் பெரும்பாலும் தெரிந்து கொள்வதில்லை. அதைப் புரிய வைப்பதற்காக தானே சீடனாக ஆகி வழிகாட்டுகிறார். அது மட்டுமல்லாது வாழும் தெய்வமாக விளங்கக்கூடிய நல் குருவை நமக்கு காட்டிக் கொடுத்து பகவானின் திருவடியை அடையக் காரணமாகவும் திகழ்கிறார். 


பரந்தாமனின் அத்தகைய அம்சங்களில் முதலாவதாக பொய்கையாழ்வார் வைபவத்தை காண்போம்.

ஶ்ரீமத் பாகவதம் - 297

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – எண்பதொன்றாவது அத்தியாயம்

(குசேல வ்ருத்தாந்தம்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அந்த ஸ்ரீக்ருஷ்ணன், இவ்வாறு ப்ராஹ்மண ச்ரேஷ்டராகிய அந்தக் குசேலருடன் பேசிக் கொண்டிருந்து, ஸமஸ்த ப்ராணிகளுடைய மனோ பாவத்தையும் (உள்ளக்கருத்தையும்) அறிந்தவனாகையால், எனக்காக அவல் கொண்டு வந்தும் அதைக் கொடுக்க வெட்கப்படுகிறாரென்று தெரிந்து கொண்டு, அவ்வந்தணரைக் குறித்து மொழிந்தான்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- ப்ராஹ்மணரே! உம்முடைய க்ருஹத்தினின்று எனக்கு என்ன உபஹாரம் (அன்பளிப்பாகக்) கொண்டு வந்தீர்? என் பக்தர்கள் ப்ரீதியுடன் எனக்கு எதைக் கொடுப்பார்களோ, அது அற்பமாயினும், அதுவே எனக்குப் பெரிதாயிருக்கும். என்னிடத்தில் பக்தியில்லாதவர் எனக்கு அபாரமாகக் (பெரியதாகக்) கொடுப்பினும், அது எனக்கு ஸந்தோஷத்தின் பொருட்டு ஆகாது. எவனேனும் இலையையாவது, பூவையாவது, பழத்தையாவது எனக்குப் பக்தியுடன் கொடுப்பானாயின், தூய மனமுடைய அவன் பக்தியுடன் கொடுத்த அதையெல்லாம் நான் சாப்பிடுவேன்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ராஜனே! அந்த ப்ராஹ்மணர், ஸ்ரீக்ருஷ்ணனால் இவ்வாறு மொழியப் பெற்றும், வெட்கமுற்றுத் தலையை வணக்கிக் கொண்டு, ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு வல்லபனான அந்த ஸ்ரீக்ருஷ்ணனுக்குத் தான் கொண்டு வந்த அவல் பிடியைக் கொடாமலேயிருந்தார். ஸமஸ்த ப்ராணிகளின் மனத்தை அறிபவனும், எல்லாவற்றையும் ஸாக்ஷாத்கரிப்பவனுமாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணன், அந்த ப்ராஹ்மணருடைய வரவின் காரணத்தை அறிந்து, தான் செய்ய வேண்டியதைப் பற்றித் தனக்குள் சிந்தித்தான். 

“இவர், முன்பு செல்வம் வேண்டும் என்னும் விருப்பத்துடன் என்னைப் பணியவில்லை. என்னுடைய நண்பராகிய இவர், இப்பொழுது பதிவ்ரதையான தன் பார்யைக்கு ப்ரியம் செய்ய விரும்பி, என்னிடம் வந்தார். தேவர்களுக்கும் கிடைக்க அரிய ஸம்பத்துக்களை நான் இவருக்குக் கொடுக்க வேண்டும்” என்று ஸ்ரீக்ருஷ்ணன் தனக்குள் சிந்தித்து, அவ்வந்தணர் துணிக்கந்தலில் கட்டிக் கொண்டு வந்திருக்கிற அவலை இது என்னென்று தானே பிடுங்கிக்கொண்டு, “நண்பரே! இதோ கொண்டு வந்திருக்கிறீரே. இது எனக்கு மிகவும் ஸந்தோஷத்தை விளைப்பதல்லவா? இந்த அவல்கள் ப்ரபஞ்சத்தையெல்லாம் சரீரமாகவுடைய என்னை மிகவும் திருப்தி அடையச் செய்கின்றன” என்று மொழிந்து, ஒருபிடி அவல் எடுத்துப் புசித்து, இரண்டாம் பிடி எடுத்தான். 

சனி, 10 ஏப்ரல், 2021

குரு பரம்பரை வைபவம் - 1 - கோமடம் மாதவாச்சார்யார்

குருவாய், உருவாய், அருள்வாய் இறைவா!


மாயை எனும் இருளிலிருந்து ஞானமெனும் சத்தியத்திற்கு அழைத்துச் செல்பவரே குரு. ஒரு குருவோடு இவ்வுலகில் ஞான வேள்வி முடிந்து விடுவதில்லை. ஒரு குரு இன்னொரு குருவை உருவாக்குகிறார். அவரும் தம் குருவருளால் இன்னொரு குருவை நிலைபெறச் செய்கிறார். இப்படியாக மிக நீண்ட ஒரு குரு பரம்பரை எம்பெருமானின் அருளால் வளர்கிறது. மாயையை சிதைத்து ஞானத்தை தழைக்கச் செய்கிறது. சூரியனை கண்ட ஆனந்தத்தில் தாமரை விரிவது போல குரு பரம்பரையினரைப் பற்றி கேள்வியுற்றாலே போதும், அந்த திவ்ய சரிதங்களே நமக்குள் ஞான ஊற்றை திறந்து விடும். இருதயம் ஞானத் தாமரையாக மலரும். பிரம்மானந்தத்தை பொங்கித் தளும்பச் செய்யும். 


அப்பேற்பட்ட குரு பரம்பரையில் ஜொலிப்பவர்களைத்தான் ஆச்சார்யர்கள், ஆழ்வார்கள் என்று சிரசின் மீது கரங்கள் கூப்பி கொண்டாடி வருகிறோம். இந்த குரு பரம்பரையில் வழி வழியாக வந்தவர்களின் மகிமையை இந்த தொடரின் மூலம் அனுபவிக்கப் போகிறோம். ‘‘இருள் தருமா இஞ்ஞாலத்தில்?’’ அதாவது மாயை சூழ் இருளாகிய உலகில் மகான் ராமானுஜன் அவதரித்தார். ஸ்ரீபெரும்புதூர் வாழ வந்த வள்ளல் எனும்படியாக அவதாரம் செய்தார். இவருக்கு முன்னர் அவதரித்தவர்களை திருமுடி வர்க்கம் என்றும் இவருக்குப் பின்னர் அவதரித்தவர்களை திருவடி வர்க்கம் என்றும் பெரியோர் கூறுவர். முதலில் குருபரம்பரையின் அடியொற்றி நடை பயில்வோம்.


அலைகளின் ஆர்ப்பரிப்பு இன்னமும் ஓயவில்லை. சக்ரவர்த்தி திருமகனாரான ராமபிரான் அமாவாசைக்கு பிறகு வந்த துவிதியை எனும் இரண்டாம் நாளன்று சேதுக் கரையில் அமர்ந்தபடி ராவணனை வதம் செய்வது குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தார். கடலலைகள் ராமனை ஆரத்தழுவ நினைத்தன போலும். அவை ஒன்றோடொன்று போட்டி போட்டுக்கொண்டு, திருப்பாற்கடலில் சயனக் கோலத்தில் உள்ள வாசுதேவன் இவனோ என நினைத்தது. உற்சாக மிகுதியில் துள்ளி, ராமனின் மேல் சாரலை வீசியது. 


விரஜைத் துறைவனான ஸ்ரீமன் நாராயணனே தற்சமயம் ராமனாக அவதாரம் எடுத்துள்ளான். விரஜை என்பது வைகுண்டத்தில் ஓடும் ஒரு நதி. துறைவன் என்றால் கரையில் வாழ்பவன் என்று பொருள். யமுனை நதிக்கரையின் சமீபத்தில் வாழ்ந்ததால் கண்ணபிரானை யமுனைத் துறைவன் என்பதுபோல, வைகுண்டத்தில் உள்ள பகவானை விரஜைத் துறைவன் என்று அழைப்பார்கள். மோட்சத்திற்கு செல்லும் ஒருவனை, முதலில் இந்த நதியில்தான் முக்காட்டுவர். 


அப்படி முக்காட்டுவதால், பகவத் ரூபத்தை அந்த ஜீவன் அடையும். இதைத்தான் ஸாரூப்யம் என்று ஞானிகள் கூறுவார்கள். அப்படி நாராயணனே ராமனாக வடிவெடுத்து அவதாரம் செய்து வேதங்களில் சொன்ன தர்மங்களை நடத்திக் காட்டினான். ‘ராமா நான் உன்னைச் சேர்ந்தவன், உன் தாசன், நினது அடிமை’ என்று வந்தவர்களை கைவிடாது தூக்கி ஞானமளித்தான். இதைத்தான் சரணாகாத ஸம்ரக்ஷணம் என்று பெரியோர்கள் கூறினார்கள். 

ஶ்ரீமத் பாகவதம் - 296

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – எண்பதாவது அத்தியாயம்

(குசேலோபாக்யானம்)

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- மஹானுபாவரே! அளவிடமுடியாத ஸ்வரூப, ஸ்வபாவங்களுடையவனும், பக்தர்களுக்கு அனுக்ரஹம் (அருள்) செய்கையாகிற பெருந்தன்மையுடையவனும், போக மோக்ஷங்களைக் கொடுப்பவனுமாகிய, ஸ்ரீக்ருஷ்ணனுடைய மஹிமைகளை வெளியிடவல்ல, அவன் செயல்களைக் கேட்க விரும்புகிறோம். நீர் அவற்றையெல்லாம் நன்றாகச் சொல்லவல்லவரல்லவா? ப்ரஹ்மரிஷி! சப்தாதி விஷயங்களைத் தேடித் திரிந்து, அவை கிடையாமையால் கலங்கி, பகவத் விஷயத்தில் ரஸமறிந்திருக்கும் அறிவாளி எவன் தான், உத்தம ச்லோகனான பகவானுடைய கதைகளை அடிக்கடி கேட்டும், அதினின்று மீளுவான். (பகவத் கதையின் ரஸத்தை அறிந்தவனாயின், எவ்வளவு கேட்கினும் அதினின்று மீளமாட்டான்). 

அளவற்ற ஸ்வரூப, ஸ்வபாவங்களையுடைய ஸ்ரீக்ருஷ்ணனுடைய குணங்களைச் சொல்லுமாயின், அந்த வாக்கே வாக்கு (பயன் பெற்றதாம்). அந்தப் பகவானுடைய ஆராதன ரூபமான கார்யங்களைச் செய்யும் கைகளே கைகள் (பயன்பெற்றவையாம்). ஸ்தாவரங்களிலும் (அசையாதவை), ஜங்கமங்களிலும் (அசைபவை) அந்தராத்மாவாய் வஸித்திருக்கின்ற பகவானை நினைக்கும் மனமே மனம். அவனுடைய புண்ய கதைகளைக் கேட்கும் கர்ணமே கர்ணம் (காது). சேதனா சேதனங்களைச் (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களை) சரீரமாகவுடைய பகவானுடைய விபவ அவதார (ராம, க்ருஷ்ண, வாமன, ந்ருஸிம்ஹ முதலிய அவதாரங்கள்) உருவங்களையும், அர்ச்சாவதார உருவங்களையும் வணங்கும் தலையே தலை. அவ்வுருவங்களைக் காணும் கண்ணே கண். ஸ்ரீமஹாவிஷ்ணுவின் ஸ்ரீபாத தீர்த்தத்தையாவது, அவனுடைய பக்தர்களின் ஸ்ரீபாத தீர்த்தத்தையாவது, பணியும் அங்கங்களே அங்கங்கள். மற்றவை, வீணே.

ஸூதர் சொல்லுகிறார்:- இவ்வாறு பரீக்ஷித்து மன்னவனால் வினவப் பெற்ற மஹானுபாவரான சுகமுனிவர், ஷாட்குண்ய பூர்ணனான (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) வாஸுதேவனிடத்தில் ஆழ்ந்த மனமுடையவராகி, மேல்வருமாறு மொழிந்தார்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:– ப்ரஹ்ம வித்துக்களில் (பரப்ரஹ்மத்தை அறிந்தவர்களில்) சிறந்தவரும், சப்தாதி விஷயங்களில் (உலகியல் இன்பங்களில்) விருப்பமற்றவரும், மன அடக்கமுடையவரும், ஜிதேந்தரியரும் (புலன் அடக்கம் உடையவரும்), தெய்வாதீனமாய்க் கிடைத்த அன்னாதிகளைக் கொண்டு ஜீவிப்பவரும், க்ருஹஸ்தாச்ரமத்திலிருப்பவரும், ஸ்ரீக்ருஷ்ணனுக்கு நண்பருமாகிய ஒரு அந்தணர் இருந்தார். 

வெள்ளி, 9 ஏப்ரல், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 295

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – எழுபத்தொன்பதாவது அத்தியாயம்

(பலராமன், பல்வலனை வதித்து, தீர்த்த யாத்ரையை முடித்து, கதா யுத்தம் செய்கிற பீமஸேன-துர்யோதனர்களிடம் வந்து, அவர்களுக்கு புத்தி சொல்லியும் கேளாமையால் புறப்பட்டு நைமிசாரண்யம் சென்று யாகம் செய்தல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ராஜனே! அப்பால், பர்வகாலம் ப்ராப்தமாகையில், தூட்களைப் பெய்வதும், துர்க்கந்தமுடையதும் (கெட்ட நாற்றம் உடையதும்), கொடியதும், பயங்கரமுமாகிய பெருங்காற்று முழுவதும் நிரம்பி வீசிற்று. அப்பால், பல்வலனால் நிர்மிக்கப்பட்ட அமேத்யமயமான (மலம்) மழையாக சாலையில் பெய்தது. உடனே, அப்பல்வலாஸுரனும், சூலாயுதத்தை ஏந்திக் கொண்டு வந்து புலப்பட்டான். 

கருமையான மலை போல் கருத்த பெரும் சரீரமுடையவனும், உருக்கப்பட்ட தாம்ரம் போன்ற தலை மயிர், மீசை, தாடி இவைகளாலும், கோரைப்பல், புருவ நெரிப்பு இவைகளாலும் பயங்கரமான முகமுடையவனுமாகிய அவ்வஸுரனைக் கண்டு, சத்ரு (எதிரி) ஸைன்யங்களைப் (படைகளைப்) பிளக்கவல்ல முஸல (உலக்கை) ஆயுதத்தையும், அஸுரர்களை அழிக்கவல்ல ஹல (கலப்பை) ஆயுதத்தையும் நினைத்தான். அவையும், சீக்ரத்தில் கிட்டி நின்றன. அனந்தரம் (பிறகு), பலராமன் கோபமுற்று, ஆகாச சாரியான (வானில் திரியும்) அவ்வஸுரனைக் கலப்பையின் நுனியால் பிடித்திழுத்து, ப்ராஹ்மண த்ரோஹம் செய்யுந் தன்மையனான அன்னவனைச் சிரஸ்ஸில் முஸலாயுதத்தினால் (உலக்கையால்) அடித்தான். 

அவன், அம்முஸலத்தின் அடியினால் நெற்றி பிளவுண்டு, குருதி பெருகப் பெற்று, துக்கத்தினால் உரக்கக் கூச்சலிட்டுக் கொண்டு, வஜ்ராயுதத்தினால் அடியுண்ட சிவந்த பர்வதம் போல் புவியில் (பூமியில்) விழுந்தான். மிகுந்த மதியும் பாக்யமும் உடையவனே! அப்பால், முனிவர்கள் பலராமனைத் துதித்து, அவனுக்குப் பொய்யாகாத ஆசீர்வாதங்களைச் செய்து, வ்ருத்ராஸுரனை வதித்த தேவேந்த்ரனுக்குத் தேவதைகள் அபிஷேகம் செய்தாற் போல அபிஷேகம் செய்தார்கள். மற்றும், அவர்கள் சோபைக்கு இடமாகி வாடாத தாமரை மலர்கள் கோர்க்கப் பெற்ற வைஜயந்தியென்னும் மாலையையும், திவ்யமான வஸ்த்ரங்களையும், திவ்யமான ஆபரணங்களையும் பலராமனுக்குக் கொடுத்தார்கள். பிறகு, அந்தப் பலராமன், அம்முனிவர்களால் அனுமதி கொடுக்கப் பெற்று, ப்ராஹ்மணர்களுடன் கௌஸிகி நதிக்கு வந்து, அங்கு ஸ்னானம் செய்து, ஸரயூ நதிக்கு உத்பத்தி ஸ்தானமாகிய ஸரோவரமென்னும் புண்ய தீர்த்தத்திற்குச் சென்று, அதினின்று ஸரயூவின் ப்ரவாஹம் (வெள்ளப் பெருக்கு) போகும் வழியைத் தொடர்ந்து, ப்ரயாகத்திற்கு வந்து, அங்கு ஸ்னானம் செய்து, தேவர் முதலியவர்களுக்குத் தர்ப்பணம் செய்து, புலஹாச்ரமத்திற்குச் சென்றான். 

கோமதி, கண்டகி, விபாசை இந்நதிகளிலும், சோணந்தத்திலும் ஸ்னானம் செய்து, கயைக்குச் சென்று, அங்குப் பித்ருக்களை மானஸீகமாக ஆராதித்து, கங்கை ஸமுத்ரத்தில் போய் விழுமிடத்திற்குச் சென்று, ஸ்னானம் செய்து, மஹேந்தர பர்வதத்திற்குச் சென்று, அங்கு பரசுராமனைக் கண்டு, நமஸ்கரித்து, ஸப்த கோதாவரி, வேணி, பம்பை, பீமரதி என்னும் இப்புண்ய நதிகளுக்குச் சென்று, ஸுப்ரஹ்மண்யனைக் கண்டு, ருத்ரனுக்கு வாஸஸ்தானமாகிய ஸ்ரீபர்வதத்திற்குச் சென்றான். 

அப்பால், அந்த ராமன், த்ரவிட தேசங்களில் மிகவும் புண்யமான திருவேங்கடமலை, காமகோடி, காஞ்சீபட்டணம், நதிகளில் சிறந்த காவேரி, மிகவும் புண்யமாயிருப்பதும், ஸ்ரீமந்நாராயணன் நித்ய ஸந்நிதானம் செய்யுமிடமுமாகிய ஸ்ரீரங்க க்ஷேத்ரம், ஸ்ரீவிஷ்ணு க்ஷேத்ரமாகிய திருமாலிருஞ்சோலை மலை, தென்மதுரை இவற்றைக் கண்டு, மஹத்தான பாபங்களையெல்லாம் போக்கவல்ல ஸமுத்ர ஸேதுவுக்குச் சென்றான். பலராமன், அங்கு ப்ராஹ்மணர்களுக்குப் பதினாயிரம் பசுக்களைக் கொடுத்தான். 

வியாழன், 8 ஏப்ரல், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 294

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – எழுபத்தெட்டாவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ணன் தந்தவக்த்ர விதூரதர்களை வதித்தலும், தீர்த்த யாத்ரையாகச் சென்ற பலராமன், ஸூதரை வதித்தலும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மஹாராஜனே! தந்தவக்த்ரன், தன் நண்பர்களும் பரலோகம் அடைந்தவர்களுமான சிசுபாலன், ஸால்வன், துர்ப்புத்தியான பௌண்ட்ரகன் இவர்களுக்கு  ஸ்னேஹத்தினால் செய்ய வேண்டிய கார்யத்தைச் செய்ய முயன்று, மிகவும் கோபமுற்று, கையில் கதையை ஏந்தி,  தனியனாகவே பதாதியாக (கால்நடையாக) விரைந்து, மிகுந்த பலமுடையவனாகையால், பூமியைப் பாதங்களால் நடுங்கச் செய்து கொண்டு, ஸ்ரீக்ருஷ்ணனை எதிர்த்து வந்தான். ஸ்ரீக்ருஷ்ணன், அவன் அவ்வாறு வருவதைக் கண்டு, தானும் விரைவுடன் கதையை எடுத்துக் கொண்டு, ரதத்தினின்றும் இறங்கி, ஸமுத்ரத்தை அதன்கரை தடுப்பது போல, அவனை எதிர்த்துத் தடுத்தான். கொடிய மதமுடைய தந்தவக்த்ரன், கதையை மேல் தூக்கிக் கொண்டு, முகுந்தனைப் பார்த்து மொழிந்தான்.

தந்தவக்த்ரன் சொல்லுகிறான்:- எனக்கு மிகவும் ஸந்தோஷம் ஆயிற்று. ஏனென்றால், நீ தெய்வாதீனமாய் இப்பொழுது என் கண்ணில் பட்டாயல்லவா? ஏ, க்ருஷ்ணா! நீ எங்களுக்கு அம்மான் பிள்ளை. ஆயினும், மித்ரர்களுக்கே (நண்பர்களுக்கே) த்ரோஹம் (கெடுதி) செய்பவனாகி, என்னையும் கொல்ல விரும்புகின்றாய். வஜ்ரம் போன்ற இக்கதையினால் உன்னை வதிக்கப் போகிறேன். நண்பர்களிடத்தில் மிகுந்த அன்புடைய, இப்பொழுது தேஹத்தில் தொடர்ந்து வருகின்ற வியாதியைப் போல், ம்ருத்யுவை (மரணத்தை) விளைப்பவனும், பந்து ரூபனான சத்ருவுமாகிய உன்னைக் கொன்று, எனது நண்பர்களின் கடனைத் தீர்த்துக் கொள்கிறேன்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மாவெட்டிகளால் (அங்குசத்தால்) யானையை வருத்துவது போல், தந்தவக்த்ரன் பருஷ (கொடிய) வசனங்களால் (சொற்களால்) ஸ்ரீக்ருஷ்ணனை வருத்திக் கொண்டு, கதையினால் அவனைத் தலையில் அடித்து, உடனே ஸிம்ஹம் போல் கர்ஜனை செய்தான். ஸ்ரீக்ருஷ்ணன், யுத்தத்தில் கதையினால் அடிக்கப்பட்டும், சிறிதும் சலிக்கவில்லை. பின்னையோவென்றால், பெரும் பளுவுடைய கௌமோதகி என்னும் தன் கதையால் காடமாக (பலமாக) அவனை மார்பில் அடித்தான். அவ்வாறு அடியுண்ட அந்த தந்தவக்த்ரன், அவ்வடியினால் நன்றாக ஹ்ருதயம் பிளவுண்டு, முகத்தினின்று குருதியைக் (ரத்தத்தைக்) கக்கிக் கொண்டு, தலை மயிர்களையும், புஜங்களையும், பாதங்களையும் பரப்பி, ப்ராணன்களை இழந்து, பூமியில் விழுந்தான். 

மன்னவனே! சிசுபால வதத்தில்போல ஸமஸ்த பூதங்களும் பார்த்துக் கொண்டிருக்கையில், மிகவும் ஸூக்ஷ்மமாயிருப்பதும், அற்புதமுமாகிய ஒரு தேஜஸ்ஸு ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் ப்ரவேசித்தது. அந்த தந்தவக்த்ரனுடைய ப்ராதாவான (ஸஹோதரனான) விதூரதன், தன் ப்ராதாவான தந்தவக்த்ரன் மரணமடைந்த சோகத்தினால் மிகவும் வருந்தி, பெருமூச்செறிந்து கொண்டு, கத்தி, கேடயங்களை ஏந்தி, அந்த ஸ்ரீக்ருஷ்ணனை வதிக்க விரும்பி, அவனை எதிர்த்து வந்தான். 

ராஜச்ரேஷ்டனே! ஸ்ரீக்ருஷ்ணன், கத்தியின் நுனி போன்ற நுனியுடைய சக்ராயுதத்தினால், அவ்விதூரதனுடைய சிரஸ்ஸையும், கிரீட குண்டலங்களுடன் அறுத்துத் தள்ளினான். ஸ்ரீக்ருஷ்ணன், இவ்வாறு ஸௌப விமானத்தையும், ஸால்வனையும், தந்தவக்த்ரனையும், அவன் தம்பியாகிய விதூரதனையும், பொறுக்க முடியாத மற்றுமுள்ள சத்ருக்களையும் வதித்து, தேவதைகள் மனுஷ்யர், முனிவர், ஸித்தர், கந்தர்வர், வித்யாதரர், பெருமை பொருந்திய உரகர், அப்ஸர மடந்தையர், பித்ருக்கள், யக்ஷர், கின்னரர், சாரணர் இவர்கள் தன் விஜயத்தைப் பாடிப் பூமழைகள் பொழியவும், வ்ருஷ்ணி ச்ரேஷ்டர்கள் சூழ்ந்து வரவும் பெற்று, அலங்காரம் செய்யப்பெற்ற பட்டணத்திற்குள் ப்ரவேசித்தான். 

யோகேச்வரர்களுக்கும் ஈச்வரனும், ஷாட்குண்ய பூர்ணனும் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனும்), ஜகத்தையெல்லாம் அடக்கியாள்பவனுமாகிய ஸ்ரீக்ருஷ்ணன், இவ்வாறு பிறரால் ஒரு கால் ஜயிக்கப்பட்டு, ஒருகால் தானும் அவர்களை ஜயிக்கிறானென்று பசுக்களோடொத்த அறிவுடைய மூடர்கள் நினைக்கிறார்கள். (அவன் ஒருவராலும் ஜயிக்கப்படாதவனாகவே இருந்து, பிறரை ஜயிக்கிறானென்பதை அறிகிறதில்லை). 

இப்படியிருக்க பலராமன், கௌரவர்கள், பாண்டவர்களோடு யுத்தம் செய்ய முயன்றார்களென்று கேள்விப்பட்டு இருதரத்தவர்களும் பந்துக்களாகையால், தான் ஒருவரிடத்திலும் பக்ஷபாதமின்றி (சார்ந்திராமல்) மத்யஸ்தனாகிப் (நடுநிலையாளனாக) புண்ய தீர்த்த ஸ்னானமென்னும் வ்யாஜத்தினால் (சாக்கையிட்டு) ஊரை விட்டுப் புறப்பட்டுப் போனான். அவன், ப்ரபாஸ தீர்த்தத்தில் ஸ்னானம் செய்து, பித்ருக்கள், தேவதைகள், ரிஷிகள், மனுஷ்யர் இவர்களுக்குத் தர்ப்பணம் செய்து, ப்ராஹ்மணர்களால் சூழப்பட்டு, மேற்கு முகமாகப் பெருகுந்தன்மையுடைய ஸரஸ்வதி நதிக்குப் போனான். 

புதன், 7 ஏப்ரல், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 293

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – எழுபத்தேழாவது அத்தியாயம்

(த்யுமானை ப்ரத்யும்னன் அடிக்கையில், யதுக்கள் யுத்தம் செய்து கொண்டிருக்கையில், ஸ்ரீக்ருஷ்ண பகவான் வந்து, ஸால்வனை வதித்தல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அந்த ப்ரத்யும்னன், ஜலத்தை ஆசமனம் செய்து, கவசம் பூண்டு, தனுஸ்ஸைத் தரித்து, “ஸாரதி! என்னை வீரனாகிய த்யுமானிடம் கொண்டு போய்ச் சேர்ப்பாயாக” என்றான். அந்த ருக்மிணி புத்ரன், தன் ஸைன்யங்களை (படைகளை) அழிக்கின்ற த்யுமானைக் கிட்டி, எதிர்த்துத் தகைந்து, புன்னகை செய்து கொண்டே, எட்டு பாணங்களால் (அம்புகளால்) அடித்தான்; மற்றும், நான்கு குதிரைகளை நான்கு பாணங்களாலும், ஸாரதியை ஒரு பாணத்தினாலும் அடித்து, இரண்டு பாணங்களால் தனுஸ்ஸையும் (வில்லையும்) த்வஜத்தையும் (கொடியையும்), மற்றொரு பாணத்தினால் த்யுமானுடைய சிரஸ்ஸையும் (தலையையும்) அறுத்தான். 

கதன், ஸாத்யகி, ஸாம்பன் முதலிய யாதவர்கள் ஸௌபப்பதியான ஸால்வனுடைய ஸைன்யத்தை (படையை) அடித்தார்கள். ஸௌப விமானத்தில் இருந்தவர்கள் அனைவரும் கழுத்தறுப்புண்டு ஸமுத்ரத்தில் விழுந்தார்கள். 

இவ்வாறு யாதவர்களும், ஸால்வர்களும் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டிருக்கையில், அந்த யுத்தம் பயங்கரமாகவும், துமுலமாகவும் (ஆரவாரத்துடனும்) ஒன்பது ராத்ரிகள் நடந்தது. தர்ம புத்ரனால் அழைக்கப் பெற்று, இந்த்ர ப்ரஸ்தத்திற்குச் சென்ற ஸ்ரீக்ருஷ்ணன், ராஜஸூய யாகம் நடந்து சிசுபாலனும் முடிகையில், குருவ்ருத்தர்களிடத்திலும் (குரு வம்சத்துப் பெரியோர்களிடமும்), முனிவர்களிடத்திலும், குந்தியிடத்திலும், அவன் பிள்ளைகளான தர்மபுத்ராதிகளிடத்திலும், சென்று “நான் தமையனாகிய பலராமனுடன் இவ்விடம் வந்தேன். சிசுபாலனுடைய பக்ஷத்தில் சேர்ந்த மன்னவர்கள் என் பட்டணத்தை நிச்சயமாய் நாசம் செய்வார்கள். ஆகையால், நான் புறப்பட்டுப் போக வேண்டும்” என்று மொழிந்து விடை பெற்றுக்கொண்டு, மிகவும் பயங்கரமான அவ சகுனங்களைப் (தீய அறிகுறிகளைப்) பார்த்துக்கொண்டே, த்வாரகைக்குத் திரும்பி வந்தான். 

அந்த ஸ்ரீக்ருஷ்ணன், தன்னுடையவர்கள் யுத்தம் செய்வதையும், ஸௌப விமானத்தையும், ஸால்வனையும் கண்டு, பட்டணத்தைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும்படி பலராமனை ஏற்படுத்தி, தாருகனைப் பார்த்து “ஸாரதீ! என் ரதத்தைச் சீக்ரத்தில் ஸால்வனிடம் கொண்டு போவாயாக. அவனோடு நான் யுத்தம் செய்ய வேண்டும். இந்த ஸால்வன், பெரிய மாயாவி; ஒருவராலும் போதிக்க முடியாத ஸௌபமென்னும் விமானமுடையவன்” என்று மொழிந்தான்.

 இவ்வாறு சொல்லப்பட்ட தாருகன், ரதத்தின் மேல் படிய உட்கார்ந்து, குதிரைகளை ஓட்டினான். கருடக் கொடியுடைய அந்த ஸ்ரீக்ருஷ்ண ரதத்தை, யுத்த பூமியில், அவன் பக்ஷத்தைச் சேர்ந்த யாதவர்களும், சத்ரு பக்ஷத்திலுள்ளவர்களும் கண்டார்கள். 

செவ்வாய், 6 ஏப்ரல், 2021

அளித்தனம் அபயம் - வளவ. துரையன்

இராமபிரானின் தூதனாக இலங்கை சென்ற சிறிய திருவடியாகிய ஆஞ்சநேயர் அசோகவனத்தில் தவம் செய்த தவமாம் சீதாபிராட்டியைக் கண்டார். பின் அசோகவனத்தை அழித்தார். இலங்கையைத் தீக்கிரையாக்கி அயோத்தி வள்ளலை அடைந்தார்.


எம்பெருமானிடம் “கண்டனன் கற்பினுக்கணியைக் கண்களால்” என்று மாருதி கூறினார். அண்ணனுக்கு மொழிந்த நீதிகள் பயனளிக்காததால் வீடணன் இலங்கையை விட்டு நீங்கி இராமபிரானிடம் அடைக்கலமானார்.


பின்னர் சுக்ரீவனும், அனுமனும், வீடணனும் உடன் வர இராம இலக்குவர் இருவரும் இலங்கையை அடைய வேண்டி கடற்கரையை அடைந்தனர்.


அப்பொழுது வீடணன் “பெருமானே, இந்தக் கடலானது மறைந்துள்ள உன் தன்மையை முழுதும் அறியும். மேலும் உமது மரபில் முன்தோன்றிய சகரால்தான் இது தோண்டப்பட்டது. எனவே இக்கடல் அன்புடன் நீ வேண்டும் வரத்தைத் தரும். இக்கடலை நாம் கடந்து செல்ல வழி விடுமாறு இதனிடம் நீர் வேண்டுவாயாக” என்று கடலைக் கடக்க வழி கூறினான்.


இராமபிரான் உடனே வருணனை வேண்டத் தொடங்கினார். இராமபிரான் வருணனிடம் வேண்டியதைக் கமபர் “கருணையம் கடல் கிடந்தனன் கருங்கடல் நோக்கி வருண மந்திரம் எண்ணினான் விதிமுறை வணங்கி” என்று பாடுவார்.


அதாவது கருணைக் கடலான இராமன் கரிய கடலை நோக்கி விதிமுறைப்படி வருண மந்திரத்தை எண்ணியபடியே தருப்பைப் புல்லில் அமர்ந்திருந்தான்.


இத்தகைய முறையில் ஏழு நாள்கள் கழிந்தன. வருணன் வரவில்லை. “சங்கு தங்கு தடங்கடல் துயில் கொண்ட தாமரைக் கண்ணினான்” என்று திருமங்கையாழ்வார் அருளிச் செய்த தாமரைக் கண்கள் சினம் கொண்டு சிவந்தன. நீண்ட புருவங்களும் வில்லைப்போல் வளைந்தன.


“வில்லைத் தருவாயாக” என்று வில்லை இலக்குவனிடமிருந்து வாங்கிய இராமபிரான் கடலின் மீது கணைகள் விடுத்தார். பல அம்புகள் பாய்ந்தும் வருணதேவன் வரவில்லை. எனவே இராமபிரான் பிரம்மாத்திரத்தை மந்திரித்து விடத் தொடங்கினார். உலகம் முழுவதற்கும் வெப்பம் பரவியது. எல்லா உயிர்களும் அஞ்சின.

திங்கள், 5 ஏப்ரல், 2021

இறைவன் விரும்பும் மொழி தமிழ் - இந்திரா பார்த்தசாரதி

தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களில், ஆழ்வார்களின் நாலாயிர திவ்யப் பிரபந்தச் செய்யுட்களுக்கு எழுதப்பட்ட உரைகளைப் பற்றிய குறிப்புகள் அதிகமாக இல்லை. காரணம், இவ்வுரைகள் 'வியாக்கியானங்கள்' என்று அழைக்கப் பட்டதாலோ என்னவோ, சமயத்தோடு மட்டும் வைத்து எண்ணப்பட்டன.


இவ்வுரையாசியர்களுடைய ஆழ்ந்த தமிழ்ப் பற்றைப் பற்றியோ, இவ்வுரைகளின் அற்புதமான உரை நயங்களைப் பற்றியோ பரவலாக யாருக்கும் தெரியாமலே  போய்விட்டது. நஷ்டம், தமிழ் ஆர்வலர்களுக்குத் தான்.


சம்ஸ்கிருதத்துக்கு இணையான இலக்கிய, சமய ஏற்றம் தமிழுக்குத் தந்தவர்கள் வைணவர்கள்தாம். தமிழ்ப் பிரபந்தத்திலும், சம்ஸ்கிருத வேத நூல்களிலும் ஒத்த தேர்ச்சி உடையவர்கள் 'உபய வேதாந்திகள்' என்று அழைக்கப்பட்டனர்.


ஆழ்வார் பாசுரங்கள், சம்ஸ்கிருத வேதங்களுக்குச் சமமாகவோ அல்லது உயர்ந்தவையாகவோ கருதப்பட்டன. பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தில் வரும் ஒரு செய்தியை இதற்குச் சான்றாகக் கூறலாம்.


வங்கிபுரத்து நம்பி என்கிற ஆந்திரப் பூரணர், ஒரு சமயம், ஏழை, எளிய இடைக் குலப் பெண்களுடன் உரையாடிக் கொண்டிருந்தாராம். அதைப் பார்த்த, ராமானுஜருடைய உறவினரும், சிஷ்யருமாகிய முதலியாண்டான், ‘அவர்களுடன் என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டாராம். ‘அவர்களை வேத ஸ்லோகங்களைச் சொல்லி ஆசிர்வதித்தேன்’ என்றாராம் வங்கிபுரத்து நம்பி.


‘அவர்கள் ஈரத்தமிழ் பேச, நீங்கள் அவர்களை முரட்டு சம்ஸ்கிருதத்தில் ஆசிர்வதித்தீரோ?’ என்று சிரித்துக் கொண்டே கேட்டாராம் முதலியாண்டான்!