தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – எண்பத்து ஆறாவது அத்தியாயம்
(ஸுபத்ராஹரண வ்ருத்தாந்தமும், ஸ்ரீக்ருஷ்ணன் ச்ருததேவனென்னும் ப்ராஹ்மணனையும் ஜனக மஹாராஜனையும் அனுக்ரஹித்தலும்)
பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- ப்ரஹ்மரிஷீ! எனக்குப் பிதாமஹியும் (அப்பாவின் அம்மா), ராம-க்ருஷ்ணர்களுக்கு உடன் பிறந்தவளுமாகிய ஸுபத்ரையை அர்ஜுனன் மணம் புரிந்த வ்ருத்தாந்தத்தை அறிய விரும்புகிறேன். (அதை மொழிவீராக).
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஸமர்த்தனாகிய அர்ஜுனன், தீர்த்த யாத்ரைக்காகப் பூமியைச் சுற்றிக் கொண்டு வரும் க்ரமத்தில், ப்ரபாஸ தீர்த்தத்திற்கு வந்து, தனது அம்மான் (மாமா) புதல்வியை ராமன் துர்யோதனனுக்குக் கொடுத்து விவாஹம் செய்விக்கப் போகிறானென்றும், மற்ற வஸுதேவாதிகள் அதற்கு இசையவில்லையென்றும் கேள்விப்பட்டு, அவளைத் தான் பெற விரும்பி, த்ரிதண்டி ஸந்யாஸி வேஷம் (உருவம்) பூண்டு, த்வாரகைக்குச் சென்றான். பிக்ஷு (ஸந்யாஸி) வேஷம் (உருவம்) பூண்ட அவ்வர்ஜுனன், பட்டணத்து ஜனங்களாலும், உண்மையை அறியாத மஹானுபாவனான பலராமனாலும், அடிக்கடி பூஜிக்கப்பட்டுத் தன் கார்யத்தை நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு, வர்ஷாகாலம் நான்கு மாதங்களும் அங்கு வஸித்திருந்தான்.
ஒருகால், பலராமன் நான் செய்யும் அதிதி ஸத்காரத்தை (விருந்தோம்பலை) அங்கீகரிக்க வேண்டுமென்று வேண்டி, தன் க்ருஹத்திற்கு அழைத்துக் கொண்டு போய், ச்ரத்தையுடன் பிக்ஷை (பிச்சை, ஸன்யாஸிகளுக்கு அளிக்கப்படும் உணவு பிக்ஷை எனப்படும்) கொண்டு வந்து கொடுக்க, அவ்வர்ஜுனன் புசித்தான். அவன், கொடி போல் நுண்ணிய அங்கமுடையவளும், வீரர்களின் மனத்திற்கு இனியவளுமாகிய, அக்கன்னிகையை அவ்விடத்தில் கண்டு, ப்ரீதியினால் கண்கள் மலரப்பெற்று, புணர வேண்டுமென்னும் விருப்பத்தினால், கலங்கின மனத்தை அவளிடம் வைத்தான். அக்கன்னிகையும், பெண்களின் மனத்திற்கு இனியனாகிய அவ்வர்ஜுனனைக் கண்டு சிரித்து, வெட்கமுற்ற கடைக் கண்ணோக்கமுடையவளும், அவனிடத்தில் வைக்கப்பட்ட ஹ்ருதயமும் கண்களும் உடையவளுமாகி, அவனை விரும்பினாள்.
அர்ஜுனன், அப்பெண்மணியை எப்பொழுதும் த்யானித்துக்கொண்டு, அவளைப் பறித்துக் கொண்டு போக அவகாசம் பெற விரும்பி, மிகவும் வலிய காம பாதையினால் (காதல் கிளர்ச்சியால்) வருந்தி, ராமாதிகளின் ஸம்மானத்தினால் (மரியாதை, மதிப்பினால்) விளையும் ஸுகத்தைச் சிறிதும் அனுபவிக்க முடியாதிருந்தான். இப்படி இருக்கையில், அவ்வர்ஜுனன் தாய், தந்தைகளான தேவகீ வஸுதேவர்களாலும், மஹானுபாவனான ஸ்ரீக்ருஷ்ணனாலும் அனுமதி கொடுக்கப் பெற்று, ஒரு கால் தேவ யாத்ரைக்காக ப்ராகாரத்திற்கு வெளியில் வந்து, ரதத்தின்மேல் இருக்கின்ற அக்கன்னிகையைப் பறித்துக் கொண்டு போனான். அப்பால், அவன் ரதத்தில் நின்று, காண்டீவமென்னும் தனுஸ்ஸை எடுத்து, தன்னைத் தடுக்க வந்த சூரர்களான படர்களை ஓடச் செய்து, தன் பந்துக்களான யாதவர்கள் முறையிட்டுக் கொண்டிருக்கையில், ஸிம்ஹம் தன் பாகத்தைப் பறிப்பது போல், அப்பெண்மணியைப் பறித்துக்கொண்டு போனான்.
பிறகு பலராமன், அர்ஜுனன் ஸந்யாஸி வேஷம் பூண்டு வந்திருந்து ஸுபத்ரையைப் பறித்துக் கொண்டு போனானென்று கேள்விப்பட்டு, பர்வத்தின் பொழுது (அமாவாசை, பவுர்ணமி நாட்களில்) மஹாஸமுத்ரம் கலங்குவது போல் கோபாவேசத்தினால் கலங்கி, ஸ்ரீக்ருஷ்ணனும், நண்பர்களும், பாதங்களைப் பிடித்துக்கொண்டு வேண்ட, கோபம் தணிந்தான்.