நான்காவது ஸ்கந்தம் – மூன்றாவது அத்தியாயம்
(ஸதீதேவி தந்தையின் யாகத்திற்குப் போகவேண்டுமென்றும், ருத்ரன் வேண்டாமென்று காரணம் சொல்லித் தடுத்தல்.)
ஸ்ரீமைத்ரேயர் சொல்லுகிறார்:- இங்கனம் தக்ஷர் மாப்பிள்ளையான ருத்ரனிடத்தில் பகைமை கொண்டதற்குக் காரணம் சொன்னேன். இனி, அவர் புதல்வியாகிய ஸதீ ப்ராணன்களை விட்டதற்குக் காரணம் சொல்லுகிறேன் கேட்பாயாக. இப்படி மாப்பிள்ளையான ருத்ரனும் மாமனாரான தக்ஷப்ரஜாபதி இவர்கள் ஸர்வகாலமும் ஒருவர்மேல் ஒருவர் பகைமை கொண்டு அது மாறாமல் பிடிவாதத்துடன் இருக்கையில், அப்படியே நெடுங்காலம் கடந்தது. பிறகு ஒரு காலத்தில் பிரும்மதேவன் தக்ஷரை ப்ரஜாபதிகள் அனைவரிலும் தலைவராக ஏற்படுத்தி அபிஷேகம் செய்தான். அப்பொழுது அவர்க்கு நாமெல்லோரிலும் மேன்மையுற்றோமென்னும் கர்வம் உண்டாயிற்று. அவர், ப்ரஹ்ம நிஷ்டையில் மிக்க ஊக்கமுடையவனான ருத்ரனையும் அவனைப் பின்தொடர்ந்தவர்களையும் அவமதித்து “யஜ்ஞத்தில் இவர்களுக்கு பாகம் கொடுக்கலாகாது” என்று ஸங்கல்பித்துக்கொண்டு “வாஜபேயம்” என்னும் யாகம் செய்து “ப்ருஹஸ்பதிஸவம்” என்னும் மற்றொரு சிறந்த யாகம் செய்யத் தொடங்கினார். அவர் அந்த ப்ருஹஸ்பதிஸவம் செய்யத் தொடங்கி நடத்துகையில், அந்த வேள்விக்கு ப்ரஹ்மரிஷிகளும், தேவரிஷிகளும், பித்ருதேவதைகளும், தேவதைகளும் அவ்விடம் வந்தார்கள். அவரவர்களுடைய மனைவிகளும், ப்ரயாணகாலங்களில் செய்ய வேண்டிய மங்கள கார்யங்களையெல்லாம் பண்ணிக்கொண்டு ஸர்வ அலங்காரங்களையும் அணிந்து அவரவரது கணவர்களுடன் அவ்விடம் வந்து பேரானந்தத்துடன் உட்கார்ந்தார்கள். அப்பொழுது தக்ஷரது பெண்ணாகிய ஸதீதேவி அங்கனம் பேசிக்கொண்டு ஆகாச மார்க்கமாய்ப் போகின்ற தேவதைகளின் வார்த்தையால் தன் தந்தை யஜ்ஞ மஹோத்ஸவம் (யாகம்) நடத்துவதைக் கேட்டு ஸமஸ்த திக்குக்களினின்றும் (அனைத்து இடங்களிலிருந்தும்) புறப்பட்டு விமானங்களில் ஏறிக்கொண்டு கழுத்தில் ஸ்வர்ணமயமான அலங்காரங்களை அணிந்து பளபளவென்று ஜொலிக்கின்ற காதணியுடையவரும், சிறந்த ஆடைகளை உடுத்தவரும் சஞ்சலமான கண்கள் அமைந்தவருமாகிக் காதலருடன் தனது மாளிகையின் அருகாமையில் போகின்ற கந்தர்வ மடந்தையர்களைக் கண்டு தானும் போகவேண்டுமென்கிற மனவிருப்பம் உண்டாகப்பெற்றவளாகித் தன் கணவனான பூதநாதனை (ருத்ரனை)ப் பார்த்து இங்ஙனம் மொழிந்தாள்.