செவ்வாய், 31 டிசம்பர், 2019

ஶ்ரீமத் பாகவதம் - 81

நான்காவது ஸ்கந்தம் – மூன்றாவது அத்தியாயம்


(ஸதீதேவி தந்தையின் யாகத்திற்குப் போகவேண்டுமென்றும், ருத்ரன் வேண்டாமென்று காரணம் சொல்லித் தடுத்தல்.)


ஸ்ரீமைத்ரேயர் சொல்லுகிறார்:- இங்கனம் தக்ஷர் மாப்பிள்ளையான ருத்ரனிடத்தில் பகைமை கொண்டதற்குக் காரணம் சொன்னேன். இனி, அவர் புதல்வியாகிய ஸதீ ப்ராணன்களை விட்டதற்குக் காரணம் சொல்லுகிறேன் கேட்பாயாக. இப்படி மாப்பிள்ளையான ருத்ரனும் மாமனாரான தக்ஷப்ரஜாபதி இவர்கள் ஸர்வகாலமும் ஒருவர்மேல் ஒருவர் பகைமை கொண்டு அது மாறாமல் பிடிவாதத்துடன் இருக்கையில், அப்படியே நெடுங்காலம் கடந்தது. பிறகு ஒரு காலத்தில் பிரும்மதேவன் தக்ஷரை ப்ரஜாபதிகள் அனைவரிலும் தலைவராக ஏற்படுத்தி அபிஷேகம் செய்தான். அப்பொழுது அவர்க்கு நாமெல்லோரிலும் மேன்மையுற்றோமென்னும் கர்வம் உண்டாயிற்று. அவர், ப்ரஹ்ம நிஷ்டையில் மிக்க ஊக்கமுடையவனான ருத்ரனையும் அவனைப் பின்தொடர்ந்தவர்களையும் அவமதித்து “யஜ்ஞத்தில் இவர்களுக்கு பாகம் கொடுக்கலாகாது” என்று ஸங்கல்பித்துக்கொண்டு “வாஜபேயம்” என்னும் யாகம் செய்து “ப்ருஹஸ்பதிஸவம்” என்னும் மற்றொரு சிறந்த யாகம் செய்யத் தொடங்கினார். அவர் அந்த ப்ருஹஸ்பதிஸவம் செய்யத் தொடங்கி நடத்துகையில், அந்த வேள்விக்கு ப்ரஹ்மரிஷிகளும், தேவரிஷிகளும், பித்ருதேவதைகளும், தேவதைகளும் அவ்விடம் வந்தார்கள். அவரவர்களுடைய மனைவிகளும், ப்ரயாணகாலங்களில் செய்ய வேண்டிய மங்கள கார்யங்களையெல்லாம் பண்ணிக்கொண்டு ஸர்வ அலங்காரங்களையும் அணிந்து அவரவரது கணவர்களுடன் அவ்விடம் வந்து பேரானந்தத்துடன் உட்கார்ந்தார்கள். அப்பொழுது தக்ஷரது பெண்ணாகிய ஸதீதேவி அங்கனம் பேசிக்கொண்டு ஆகாச மார்க்கமாய்ப் போகின்ற தேவதைகளின் வார்த்தையால் தன் தந்தை யஜ்ஞ மஹோத்ஸவம் (யாகம்) நடத்துவதைக் கேட்டு ஸமஸ்த திக்குக்களினின்றும் (அனைத்து இடங்களிலிருந்தும்) புறப்பட்டு விமானங்களில் ஏறிக்கொண்டு கழுத்தில் ஸ்வர்ணமயமான அலங்காரங்களை அணிந்து பளபளவென்று ஜொலிக்கின்ற காதணியுடையவரும், சிறந்த ஆடைகளை உடுத்தவரும் சஞ்சலமான கண்கள் அமைந்தவருமாகிக் காதலருடன் தனது மாளிகையின் அருகாமையில் போகின்ற கந்தர்வ மடந்தையர்களைக் கண்டு தானும் போகவேண்டுமென்கிற மனவிருப்பம் உண்டாகப்பெற்றவளாகித் தன் கணவனான பூதநாதனை (ருத்ரனை)ப் பார்த்து இங்ஙனம் மொழிந்தாள்.

உயர் பாவை - 16 - சதாரா மாலதி

எல்லே! இளங்கிளியே


திருப்பாவையாகிறது இப்பாட்டிறே என்று சொல்லப்பட்ட ஏற்றம் பெற்றது இந்தப் பாசுரம்.
'அடியார்தம் ஈட்டம் கண்டிடக் கூடுமேல்' என்றபடிக்கும் 'பேராளன் பேரோதும் பெரியாரை ஒரு போதும் பிரிகிலேனே' என்ற படிக்கும் 'அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு' என்றபடிக்கும் அடியாரில்லாமல் ஆண்டவனில்லை என்பதால் எவ்வளவு கருத்து வேற்றுமை இருந்தாலும் அதெல்லாம் பேசித் தீர்த்துக் கொண்டு பெரியவர்களை எல்லாம் கூட்டிக்கொண்டு ஆண்டாள் கடைசி ஆழ்வாரை அழைக்க வந்துள்ளாள். கீழ்ப்பாட்டின் நம்மாழ்வாரும் கெளஸ்துப மணியின் அம்சம் என்று சொல்லப் படுகிறார். இங்கு அழைக்கப்படும் திருமங்கைஆழ்வார் பகவானின் அம்சம் என்று சொல்லப் படுகிறார்.


எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதியோ 
சில்லென்றழையேன் மின் நங்கை மீர் போதருகின்றேன் 
வல்லை உன் கட்டுரைகள், பண்டே உன் வாயறிதும் 
வல்லீர்கள் நீங்களே  நானே தான் ஆயிடுக 
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையாய் 
எல்லோரும் போந்தாரோ போந்தார் போந்தெண்ணிக்கொள் 
வல்லானைக் கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க 
வல்லானை மாயனைப் பாடேலோரெம்பாவாய்

இத்தனை பாடல்களிலும் சம்பாஷணை வரிகளுக்கு இடையில் இருந்தது. இந்தப்பாடல் நேரிடையாக சம்பாஷணையாகவே இருக்கிறது.

திருப்பாவை திவ்ய பிரவாகம் - 17 - கண்ணன் ரங்காச்சாரி

15


எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதியோ 
சில்லென்றழையேன் மின் நங்கை மீர் போதருகின்றேன் 
வல்லை உன் கட்டுரைகள், பண்டே உன் வாயறிதும் 
வல்லீர்கள் நீங்களே  நானே தான் ஆயிடுக 
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையாய் 
எல்லோரும் போந்தாரோ போந்தார் போந்தெண்ணிக்கொள் 
வல்லானைக் கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க 
வல்லானை மாயனைப் பாடேலோரெம்பாவாய்  


15 ம் பாடலில், எல்லாப் பெண்களையும் ஓன்று சேரத், திரளாய் காண வேண்டியிருப்பவள் ஒருத்தியை எழுப்புகிறார்கள். இதன் கீழ் சொன்ன பத்துப் பாடல்களில் சொன்ன துயிலெழுப்பும் உக்திக்கு இறுதியான பாசுரம்.    


'எல்லே இளங்கிளியே இன்னமும் உறங்குதியோ' - உள்ளிருந்தவளின்  பசுமையும், இனிய குரலும், இளமையும் மிகுந்த இளங்கிளியைப் போன்றவள். கிளியை பசுமைக்கும், இனிய குரலுக்கும் உவமையாக்கலாம். ஆனால், இவளுடைய இளமையையும் சேர்த்துச் சொல்லும் வகையில் 'இளங்கிளியே' என்றழைக்கப் பெறுகிறாள். 'எல்லே' என்பது ஆச்சரியத்தைக் குறிக்கும் சொல். நோன்பிருப்பதால் உடலில் பசுமை இன்னும் மிகுந்து வாய் சிவந்திருப்பதால் கிளியின் நினைவு வருகிறது.     

திங்கள், 30 டிசம்பர், 2019

உயர் பாவை - 15 - சதாரா மாலதி

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்


தான் முன்னதாக எழுந்திருந்து எல்லாரையும் எழுப்பி வழிநடத்திப் போவதாக முதல்நாளே வாக்கு கொடுத்திருந்த ஒரு பெண் இன்னமும் வீட்டுக்குள் படுத்திருக்கிறாள். அவளை எழுப்பி அழைத்துக் கொள்ளப் பாடுகிறார்கள் இந்தப் பாசுரத்தில். 6 முதல் 15 திருப்பாவைகளில் சொல்லப்பட்ட பத்து ஆசாரியர்களில் ஓரிருவர் மட்டுமே திட்டு வாங்காமல் சமாளிக்கிறார்கள். மற்றபடி எல்லாரும் கல்லூரி ஆசிரியர்களைப் போல ஏகமாய் வாங்கிக் கட்டிக்கொள்கிறார்கள்.


இங்கு கூப்பிடப்படும் பெண் நாவீறுடையவள். [சரியான வாயாடி. வெளியே வந்தால் பிய்த்து உதறுவாள் இவர்களை] இவர் நம்மாழ்வார் என்று அடையாளப் படுகிறார். நாலாயிரத்தில் கால்பங்கைத் தாமே ஆக்கிரமித்து எழுதித் தள்ளியவர் நம்மாழ்வார். திருவாய்மொழி [1102பாசுரங்கள்] வெகு பிரசித்தம். இவருடைய மொழியும் வெகு சிக்கலானது. அழகானதும் கூட.

திருப்பாவை திவ்ய பிரவாகம் - 16 - கண்ணன் ரங்காச்சாரி

14


உங்கள் புழைக்கடை தோட்டத்து வாவியுள் 
செங்கழு நீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண் 
செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர் 
தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார் 
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் 
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய் 
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் 
பங்கயக் கண்ணனை பாடேலோரெம்பாவாய்


14 - ம் பாட்டிலே, நோன்பிருக்கும் கோபியர்களை நிர்வகிக்கும் பெண்ணொருத்தி, மற்றவர்களை எல்லாம் அடுத்த நாள் விடியலில் எழுப்பிடுவேன் என்று சொல்லி இன்று பொழுது விடிந்தும் தூங்குகின்றாள், தோழியர்கள் அவளைத் துயில் எழுப்பிகிறார்கள்.

ஞாயிறு, 29 டிசம்பர், 2019

ஶ்ரீமத் பாகவதம் - 80

நான்காவது ஸ்கந்தம் – இரண்டாவது அத்தியாயம்


(ருத்ரனுக்கும் தக்ஷப்ரஜாபதிக்கும் த்வேஷம் உண்டானதின் காரணத்தைக் கூறுதல்)


ஸ்ரீவிதுரர் சொல்லுகிறார்:- தக்ஷர் பெண்களிடத்தில் மிகுந்த ப்ரேமம் உடையவர். ருத்ரனும் சீலமுடையவர்களில் சிறந்தவர். அப்படியிருக்க, அவர் தன் மகளாகிய ஸதிதேவியை அவமரியாதை செய்து, நல்லொழுக்கம் கொண்டு ருத்ரனிடத்தில் எந்தக் காரணத்தினால் பகைமை கொண்டார்? ருத்ரன் சகலவிதமான அசையும்-அசையா ஜீவராசிகளுக்கும் பிதாவைப் போன்றவர். ருத்ரன் எந்த ப்ராணிகளிடத்திலும் பகைமை இல்லாதவர்; அமைதியே வடிவானவர்; தன்னிலையிலேயே மனம் ஈடுபட்டு மகிழ்பவர். அப்படிப்பட்ட ருத்ரனிடம் தக்ஷப்ரஜாபதி ஏன் பகைமை கொண்டார்? வாரீர் அந்தணர் தலைவரே! மாப்பிள்ளையான ருத்ரனுக்கும், மாமனாரான தக்ஷருக்கும் எந்தக் காரணத்தினால் பகைமை உண்டாயிற்றோ, அதை எனக்கு மொழிவீராக. ஸதியென்பவள் அந்த பகைமையைப் பற்றியல்லவோ திரும்ப பெறமுடியாத தன் உயிரையே துறந்தாள்? ஆகையால் அந்த பகைமை அற்பமாயிராது. அதன் காரணத்தை எனக்குச் சொல்லுவீராக. 

உயர் பாவை - 14 - சதாரா மாலதி

புள்ளின் வாய்க்கீண்டானை


காலம் மிகவும் அருமையானது. அருகிக்கொண்டே வருவது. கட்வாங்கர் என்று ஒரு ரிஷி இருந்தார். அவர் போர்வீரரும் கூட தேவர்களுக்காக போரில் ஈடுபட்டு அசுரர்களை அழித்துவந்தார். ஒரு பெரிய போரை முடித்தபின் அயர்ந்து உட்கார்ந்து [நாம் மிச்சமிருக்கிற internet hours balanceஐப் பார்ப்பது போல log on செய்து] ஆயுள் மிச்சம் இன்னும் எவ்வளவு? அந்த நேரம் என் வழிக்கு ஏதாவது செய்யப் போகிறேன் என்று பார்த்தார். மிச்சம் ஒரே ஒரு முகூர்த்தமிருந்தது. ஒரு முகூர்த்தமென்பது ஒரு நாழிகை. 65ஐ 24ல் வகுத்தால் வரக் கூடிய அளவு மணித்தியாலங்கள். 


பரீக்ஷித்துக்கு ஏழு நாள் அவகாசம் கிடைத்தது. 


கிடைத்த காலத்தை வீணாக்காமல் செலவு செய்யவேண்டும்.பூவுலகின் தார்மிக சந்தோஷங்களை அனுபவிக்க வேண்டும். எங்கும் கிடைக்காத [பூலோக] சொர்க்கங்கள் இங்குண்டு. அவற்றுள் சில, மகான்களின் அனுபவச்சிதறல்களும் அவர்களின் படைப்புகளும். அவற்றை நம் அனுபவமாக நாம் காண்பதற்குப் பல காலம் நாம் ஜீவிக்க வேண்டியிருக்கும். அதற்கு அவசியமில்லாதபடி பெரியவர்கள் அனுபவத்தை நாம் அவர்களின் கருத்தை உள்வாங்கிக்கொள்வதன் மூலம் பெறமுடியும் என்று பூர்வாசிரியர்கள் சொல்லியிருக்கிறார்கள். அப்படி காலத்தின் அருமையை உணர்ந்த ஆண்டாள் இன்னொரு பெண்ணை எழுப்புவது இந்தப் பாசுரம்.

திருப்பாவை திவ்ய பிரவாகம் - 15 - கண்ணன் ரங்காச்சாரி

13


புள்ளின் வாய்க் கீண்டானைப் பொல்லா அரக்கனை 
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய் 
பிள்ளைகளெல்லாரும் பாவைக் களம் புக்கார் 
வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று 
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய் 
குள்ளக் குளிரக் குளிர்ந்து நீராடாதே 
பள்ளிக் கிடத்தியோ பாவை நீ நன்னாளால் 
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்  


13 -ம் பாடலில், மிக போதை தருகின்ற அழகான கண்களைக் கொண்ட பெண்ணொருத்தி, 'என்னைக்  கண்ணனே வந்து பார்க்கும் போது பார்க்கட்டும்' என்று கிடக்கிறாள். அவளைத் துயில் எழுப்புவதாய் குறிப்பு.

சனி, 28 டிசம்பர், 2019

ஶ்ரீமத் பாகவதம் - 79

நான்காவது ஸ்கந்தம் - முதல் அத்தியாயம்

(ஸ்வாயம்புவ மனுவின் புதல்விகளுடைய ஸந்ததியைக் கூறுதல்)

ஸ்ரீமைத்ரேயர் சொல்லுகிறார்:– வாராய் விதுரனே! நீ ஸ்வாயம்புவ மனுவின் சரித்திரத்தையும், அவனுடைய வம்சத்தையும் வினவினாய். அதில் ஸ்வாயம்புவ மனுவின் சரித்திரத்தைக் கூறி அவனுடைய வம்சத்தைச் சொல்லுவதாகத் தொடங்கி முதலில் தேவஹூதியின் சரித்திரத்தை ஆரம்பித்துக் கபில சரித்ரம் வரையில் சொன்னேன். இனி மனுவின் வம்சத்தைப் பற்றியே சொல்லுகிறேன். கேட்பாயாக.

மனுவுக்குச் சதரூபை என்ற மனைவி இருந்தாள். அந்தச் சதரூபைக்கு ஆஹூதியென்றும் தேவஹூதியென்றும் ப்ரஸூதியென்றும் பேர்பெற்ற மூன்று பெண்கள் பிறந்தார்களென்று முன்னமே கூறினேன். அம்மூவரில் தேவஹூதியின் சரித்திரத்தை உனக்கு விரிவாகச் சொன்னேன். அம்மனுவிற்கு ப்ரியவ்ரதனென்றும் உத்தானபாதனென்றும் இரண்டு மகன்கள் இருந்தார்கள். இருப்பினும், மேலும் மகன்கள் வேண்டுமென்ற விருப்பத்தினால், தன் மகளாகிய ஆஹூதியை “இவளுக்குப் பிறக்கும் குழந்தையை எனக்குப் புதல்வனாகக் கொடுக்க வேண்டும்” என்னும் ஏற்பாட்டுடன் தன் மனைவியாகிய சதரூபையின் சம்மதம் பெற்று ருசி என்பவனுக்கு திருமணம் செய்து கொடுத்தான். அவர் ஆஹூதியை மனைவியாகப் பெற்றுக் கடுமையான தவம் செய்து பகவானை ஆராதித்து வந்தான். அதன் பயனாக ஆஹூதியிடத்தில் இரண்டு குழந்தைகள் பிறந்தார்கள். அவர்களில் ஆண் குழந்தையான யக்ஞன் என்பவன் ஸாக்ஷாத் விஷ்ணுவின் அம்சமாகவும், பெண் குழந்தையான தக்ஷினை என்பவள் ஸ்ரீமஹாலக்ஷ்மியின் அம்சமாகவும் பிறந்தார்கள்.

உயர் பாவை - 13 - சதாரா மாலதி

அநியமத்துக்கும் அதே பாராட்டு


கீழ்ப் பாசுரத்தில் நியமத்துடன் நடந்த கோபாலனை குற்றமொன்றில்லாத கோவலர் என்று கொண்டாடிய ஆண்டாளைப் பார்த்து ஆகா! அண்டாள் மெச்சிய மாதிரி இருக்கவேண்டும் என்று நினைத்திருப்பீர்கள். கதையைக் கந்தலாக்கி விட்டாள் ஆண்டாள். இந்தப் பாசுரத்தில் தலைகீழ்ப் பாடம்.

எல்லாவற்றையும் விட்டவனை கடமை மறந்தவனை 'நற்செல்வன்' என்று விகுதி போட்டு அழைக்கிறாள். நீங்களே இந்தப் பாசுரத்துக்குள் வந்து பாருங்கள். இப்படியும் கட்சி மாற முடியுமா என்று பிரமிப்பீர்கள்.


கனைத்து இளம் கற்று எருமை கன்றுக்கு, இரங்கி 
நினைத்து முலை வழியே நின்று பால் சோர 
நனைத்து இல்லம் சேறாக்கும், நற் செல்வன் தங்காய் 
பனித் தலை வீழ உன் வாசல் கடை பற்றிச் 
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற 
மனத்துக்கு இனியானைப் பாடேலோர் எம்பாவாய் 
இனித் தான் எழுந்திராய், ஈதென்னப் பேருறக்கம் 
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்


இளங்கற்றெருமை - நாட்கள் அதிகம் ஆகாத பச்சிளம் கன்றுகளையுடைய எருமைகள், கனைத்து - [தம் கன்றுகளுக்கு ஊட்டிவிட்டுப் பின் வழக்கம் போல் பால் கறப்பரில்லாமையாலே மடிகனத்து காம்பு கடுத்து அந்த வலி தாங்காமல்] கதறிக்கொண்டு, கன்றுக்கிரங்கி - தன் பச்சிளம் கன்றுகள் என்ன செய்கிறதுகளோ என்று இரங்கி, நினைத்து முலைவழியே - கன்று வாய் வைத்ததாகவே நினைத்து அந்த பாவனை வசத்தில் மடிக்காம்பு வழியே, நின்று பால் சோர - இடைவெளியில்லாமல் பாலைத் தொடர்ந்து வழியவிட்டுப் பெருக்கி, இல்லம் நனைத்து - வீட்டை ஈரமாக்கி, சேறாக்கும் - அந்தப் பால் வெள்ளத்திலேயே மாறிமாறிக் காலால் துகைத்து உள் தூசும் வெளித்துகளும் பால்பட்டு சேற்றுகுழம்பாகும். நற்செல்வன் - அப்படி எருமைகளைக் கறக்காமல் விட்டுப் போன வீட்டுத் தலைவன், இளைஞன், கண்ணனிடம் தொண்டூழியம் புரிபவன் [லட்சுமணனைச் சொன்னது போல கைங்கர்யமான செல்வத்தைப் படைத்த பாக்கியசாலி] தங்காய் - [அவனுக்கு]தங்கையாகப் பிறந்தவளே!

திருப்பாவை திவ்ய பிரவாகம் - 14 - கண்ணன் ரங்காச்சாரி

12


கனைத்து இளம் கற்று எருமை கன்றுக்கு, இரங்கி 
நினைத்து முலை வழியே நின்று பால் சோர 
நனைத்து இல்லம் சேறாக்கும், நற் செல்வன் தங்காய் 
பனித் தலை வீழ உன் வாசல் கடை பற்றிச் 
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற 
மனத்துக்கு இனியானைப் பாடேலோர் எம்பாவாய் 
இனித் தான் எழுந்திராய், ஈதென்னப் பேருறக்கம் 
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்


12 - ம் பாட்டில், இளையாழ்வானைப் போலவே, விடாது கண்ணனோடே இருக்கும் ஒருவனுடைய தங்கை, பெரிய பக்தி குறிக்கோள் இல்லாதவளை, தோழிமார்கள் துயில் எழுப்புவதாய் குறிப்பு. அண்ணன் எந்த ஒரு காரணத்தையோ, பலனுக்காகவும் பரமனைப் பற்றியவன் அல்லன்.


கண்ணனை அடையும் வழி முறைகள் 'உபாயங்கள்' எனப்படும். அவனுடைய திருவடி சரணம் அடைதல் 'உபேயம்' ஆகும். எந்த ஒரு உபாயத்தையும் கொள்ளாமல் அவனோடே மனத்தினால் கலந்திருப்பதே உபேயம்.

வெள்ளி, 27 டிசம்பர், 2019

உயர் பாவை - 12 - சதாரா மாலதி

நியமத்தைக் கைவிடாத கோவலனின் அறச்சிறப்பு 


[கோவலர் தம் பொற்கொடி]


ஊருக்கெல்லாம் கண்ணபிரான் ஒரு செல்லப் பிள்ளையானால் இப்போது கூப்பிடப்படுகிற பெண் ஊருக்கே ஒரு செல்லப் பெண் என்று கொண்டாடப் படுபவள்.


விவாதத்துக்கும் விவாகத்துக்கும் சாம்யம் முக்கியம். அப்பை சப்பையோடு விவாதித்து எந்தக் கருத்தையும் புரியவைக்கமுடியாது. சமமான திறமையுடன் உள்ளவன் வாதிடும்போது பேச்சாளனுடைய படிப்பும் கேள்வியும் பீறிக்கொண்டு வெளியில் விழும். அப்படியே புத்தியிலும் தோற்றத்திலும் குணத்திலும் சமமாக இருக்கக்கூடிய பெண்ணை அடைவது ஒரு ஆடவனுடைய கனவாக இருக்கும். அப்படி கண்ணனோடு எல்லாவகையிலும் சாம்யம் பெற்ற ஒரு பெண்ணை இந்தப் பாட்டில் எழுப்புகிறார்கள்.

திருப்பாவை திவ்ய பிரவாகம் - 13 - கண்ணன் ரங்காச்சாரி

11

கற்றுக் கறவை கணங்கள் பல கறந்து 
செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும் 
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே 
புற்றரவு அல்குல் புன மயிலே போதராய் 
சுற்றத்துத் தோழி மாரெல்லாரும் வந்து நின் 
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாடச் 
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ 
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்

11 ம் பாட்டாலே, எல்லாருக்கும் பிரியமானவளான ஒருத்தியை, அவளுடைய குலத்தினால் (பொற்கொடி) அழகினால் (புன மயில்), குணங்களால் (செல்வப் பெண்டாட்டி) , கண்ணனோடும் நெருங்கியவள் என்பதனால் துயில் எழுப்புகிறார்கள். அவள் சொல்வாளாம், கண்ணனைப் பெற்றிட நான் ஏன் நோன்பிருக்க வேண்டும். என்னை அடைந்திட அவன் தான் நோன்பிருக்க வேண்டும் என்ற பொய்யான இறுமாப்புடன் பேசுவாளாம்.

இந்தப் பாடலின் உட்கரு. கிருஷ்ணனுக்கு மிகவும் நெருக்கமானவள், தன்னுடைய பக்தியை தனக்குள்ளேயே அனுபவித்துக் கொண்டிருக்கிறாள், எல்லோருக்கும் பகிராமல். ஆனால், கறவைக் கணங்கள் தம் கன்றுகளுக்குச் சிறிதளவே பாலினைத் தேக்கிக் கொண்டு, மற்றவர்களுக்குத் பெரிதளவில் தானம் செய்யும் கைங்கர்யத்தில் ஈடு பட்டிருக்கின்றன.

வியாழன், 26 டிசம்பர், 2019

உயர் பாவை - 11 - சதாரா மாலதி

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் 
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் 
நாற்றத் துழாய் முடி நாரயணன் நம்மால் 
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டொருநாள் 
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகர்ணனும் 
தோற்றும் உனக்கே பெரும்துயில் தான் தந்தானோ 
ஆற்றவனந்தல் உடையாய் அருங்கலமே 
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்

ஏராளமான தவப் பயனால் இடையீடன்றி கண்ணனுடன் சுவர்க்கானுபவம் பெற்று வருகின்ற பெரீய்ய அம்மணி! என்று ஒரு அர்த்தம். [ஏதம்மா? இருப்பது ஏழாவது ஸ்வர்க்கமோ? என்கிறபடி]

நோன்பு நோற்று கிருஷ்ணானுபவம் பண்ணலாம் என்று நேற்றிரவு விடியவிடியப் பேசிவிட்டு படுக்கப் போனவங்களா அம்மா தாயே நீங்க? என்பது இன்னொரு அர்த்தம்.

எல்லாருமாகக் கூடி நோன்பு நோற்று கிருஷ்ணானுபவம் பெறலாம் என்று சொல்லி எங்களைக்கூப்பிட்டுத் தான் மட்டும் தனி நோன்பு செய்து சுவர்க்கம் போகப் புறப்பட்டாயா? என்று மூன்றாவது அர்த்தம்.

திருப்பாவை திவ்ய பிரவாகம் - 12 - கண்ணன் ரங்காச்சாரி

10

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் 
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் 
நாற்றத் துழாய் முடி நாரயணன் நம்மால் 
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டொருநாள் 
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகர்ணனும் 
தோற்றும் உனக்கே பெரும்துயில் தான் தந்தானோ 
ஆற்றவனந்தல் உடையாய் அருங்கலமே 
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்

பத்தாம் பாட்டில், கண்ணனுடைய திருமாளிகைக்கு, இடைச் சுவர் கூட இல்லாத பக்கத்துத் திருமாளிகையில் வசிக்கும், துடுக்கு மிகுந்த பெண்ணொருத்தியைத் தோழியர் துயில் எழுப்புவதாகக் குறிப்பு.

கண்ணனால் பாடாய்ப் படுத்தப் படும் பெண்கள் இடையில், கண்ணனைக் குறும்புகள் செய்து படுத்திடும் பெண் இவள். கண்ணனோடு திரு நீராடும் சமயத்தில், கண்ணனின் முகத்தில் சந்தனமும் வாசப் பொடிகளையும் பூசி, அவன் கண் மூடிக் கிடைக்கியிலே, 'தண்ணீர் தண்ணீர்' என்று அவனை புலம்பிடச் செய்யும் பெண்.

'நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்' வைகலுக்குப் பின்னாலும் எழுந்திராத இப்பெண், முதல் நாளில், அடுத்த நாள் மற்றவருடன் சேர்ந்து நன்றாக நோன்பிருந்து சுகம் பெற விரும்புவதாகக், கூறிக் கிடந்தாள். நோற்காமலேயே நோன்பின் பலனைப் பெற்றவள் இவள் என்ற குறிப்புண்டு.

மற்ற பெண்கள் அவளை, 'மனதாலேயே கிருஷ்ணனனோடு சேர்ந்து நோன்பு செய்வேன், சேர்ந்து குளித்திருப்பேன், சேர்ந்தே அனுபவித்திருப்பேன், என்று நோன்பிருந்து சுவர்க்கம் புரிந்த அம்மையே' என்று விளிக்கிறார்கள்.

புதன், 25 டிசம்பர், 2019

உயர் பாவை - 10 - சதாரா மாலதி

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய 

'Is it better for a woman to marry a man who loves her than a man she loves?' என்பது நிறைய யோசிக்க வைக்கிற கேள்வி. 

தூமணி மாடத்துப் பெண்ணுக்குக் காதலன் விரும்பி வருவது தான் பிடித்திருந்தது. இருவர் சம்பந்தப் பட்ட இந்த பந்த விவகாரத்தில் நான்கு விஷயங்கள் இருக்கின்றன. பெரிய பெரிய பெயரெல்லாம் கொடுத்திருக்கிறார்கள் ஏதோ சேஷத்வமாம், பாரதந்த்ரியமாம், போக்ருத்வமாம், போக்ருதையாம். சுருக்கமாகச் சொல்வதென்றால் ரெண்டு விஷயம் பெண்ணிடம் ரெண்டு விஷயம் ஆணிடம். 

இந்துமதத்தில் இருப்பதைக் காட்டி இல்லாததைப் புரியவைப்பார்கள். கோடி சூர்யப் பிரகாசன் என்று தாம் அறிந்த நல்லவற்றின் மொத்த உருவை உன்னதங்களின் ஒற்றை வடிவை [personification of all good and noble things] சூரியனைக்காட்டி இவனைப் போல் கோடி மடங்கு பிரகாசமானவன் என்றார்கள். அப்படியே எல்லாருக்கும் தெரிந்த ஆண்பெண் உறவைக் காட்டி இது போலப் பேரின்பம் அது என்றார்கள். அதை விளக்க நாயகன் நாயகி பாவ தாபங்களைச் செய்வார்கள். அதையே உயிர்நாடியாகப் பிடித்துக் கொண்டு வைணவம் பிரேம தத்துவம் படைத்தது. பிரியவே இயலாத ஒற்றைத் தத்துவமாக ஜீவ பரம சம்பந்தம் இருப்பதை விளக்க விசிஷ்ட அத்வைதம் பிறந்தது.

திருப்பாவை திவ்ய பிரவாகம் - 11 - கண்ணன் ரங்காச்சாரி

9

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய 
தூபம் கமழ, துயிலணை மேல் கண் வளரும் 
மாமான் மகளே மணிக் கதவம் தாள் திறவாய் 
மாமீ அவளை எழிப்பீரோ?. உன் மகள் தான் 
ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ 
ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ 
மாமாயன், மாதவன், வைகுந்தன் அவனென்று 
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்

9 ம் பாடலில், வரும்போது கிருஷ்ணன் வந்திடட்டும் என்ற செல்வ மிடுக்கோடு பேசிடும் ஓரு பெண்ணை துயில் எழுப்பிறார்கள். வெளியில் மிடுக்கோடு கிடந்தாலும் உள்ளுக்குள் கிருஷ்ணனை அனுபவித்துக் கிடப்பவள் அவள். வெளியில் நிற்பவர்கள் இளையாழ்வானான பரதனைப் போலவும், ஆச்சார்யாதிகளாகவும் காத்துக் கிடக்க, உள்ளே கிடப்பவள், சாக்ஷத் எம்பெருமான் போல நடந்து கொள்கிறாள்.

'தூமணி மாடத்து' - தூய்மையான மணிகளால் எழுப்பப்பட்ட மாடம் (மாளிகை). உள்ளே இருப்பவள் உயர்ந்ததான ஒரு மாளிகைக்குள் கிடக்கிறாள். வெளியில் இருந்து வந்தவர்கள், கிருஷ்ணனுடைய நினைவைக் கூட ஒரு நிமிடம் மறந்து, மாளிகையின் அழகிலே மெய்ம்மறந்து நிற்கிறார்கள்.

நம் மனம் தான் தூமணி மாடம். அதில் தெளிவும் நிறைவும் இருந்தால் சுற்றிலும் ஒளிர்ந்து கிடக்கும்.

செவ்வாய், 24 டிசம்பர், 2019

உயர் பாவை - 9 - சதாரா மாலதி

கிழக்கு வெளுத்ததடி [கீழ் வானம் வெள்ளென்று]

ஆண்டாள் வெளிப்பாட்டில் என்னை மிகக் கவர்ந்தது அவளுடைய passion. த்வரை என்று ஒரு வார்த்தை சொல்வார்கள் வியாக்கியானக் காரர்கள். முடிவில்லாத ஒரு வேட்கையும் ஆவலும் முடிவைப் பற்றின ஒரு உறுதியும் அதை நோக்கின பயணத்தில் தனி ஆனந்தமும் சொட்டும் அவளுடைய வரிகளில்.

குறி பெருமாளாகத்தானிருக்க வேண்டுமென்றில்லை. எந்த லட்சியத்துக்கும் ஆண்டாள் காட்டுகிற வழிமுறைகள் பொருந்தும்.

பாவாய் என்றால் பரிபூரணமான பெண் என்று அர்த்தம். ஸ்த்ரீத்வ பூர்த்தி என்று அதைச் சொல்வார்கள். பதுமை போன்ற செதுக்கு கொண்ட உருவமுடையவள் என்று இன்னொரு பொருள். பாவாய் எழுந்திராய் என்று மிகச் சிறப்பித்து இந்தப் பெண்ணைக் கொண்டாடுகிறார்கள். அதுவும் கோதுகலமுடைய பாவாய் என்பது இன்னும் சிறப்பு. மிகவும் enthusiastic என்பதாகக் கொள்ளலாம். துடுக்குடையவள் என்றாலும் தப்பில்லை.

ஆனால் பூர்வாசிரியர்கள் ஆசையுடையவள் என்று பொருள் சொல்கிறார்கள். கணவனிடம் பித்தாக இருக்கிறாள் ஒரு பெண் என்றால் அவனும் அவளிடம் அப்படியே ஆசையாக இருந்திருக்கவேண்டும். கண்ணனும் இவளும் மிகவும் நெருங்கியவர்கள் என்று பெறப்படுகிறது.

இது பூதத்தாழ்வாரைக் குறிக்கிறது என்பதற்கு முத்திரை வைத்திருக்கிறாள் ஆண்டாள்.