திருமாலின் தசாவதாரத்தில் ஐந்தாவது அவதாரமாக பகவான் எடுத்த அவதாரம் வாமன அவதாரம். மஹாபலி சக்ரவர்த்தியின் கர்வத்தை அழிப்பதற்காக எடுத்த முதல் மனித அவதாரம். அவனிடம் மூவடி மண் கேட்டு மூவுலகங்களையும் அளந்தவன். மகாபலியின் அட்டகாசங்களால் தேவர்கள் அவதிபட்ட போது தேவர்களின் தாய் அதிதி, பகவானிடம் வேண்டி உயர்ந்த விரதமான “பயோ விரதத்தின்” பலனாக ஆவணி திருவோண நட்சத்திரத்தில் பகவானையே மகனாகப் பெற்றாள். சிறு பிராமணச் சிறுவனாய்த் தோன்றி, மகாபலியிடம் தன் காலால் மூன்றடி மண் கேட்டு பிறகு, அவனே ஓங்கி உலகளந்த உத்தமனாய் வளர்ந்து, மூன்றாவது அடியால் மஹாபலியை பாதாள லோகத்தில் அழுத்திய அவதாரம். மஹாபலியின் வள்ளல் தன்மையை எடுத்துக்காட்டவும், அவன் ஆணவத்தை அழிக்கவும் எடுத்த அவதாரம். தன் குலகுரு சுக்ராச்சாரியர் அறிவுரையை சட்டை செய்யாது, தான் கொடுத்த வாக்கை மீறாமல் நடந்ததால் அவன் புகழ் எவ்வாறு உயர்ந்தது என்பதை திருமால், தான் பெரிய உருவத்தை எடுத்து நமக்குக் காட்டினான். திருமால் இந்த அவதாரத்தில் கர்வபங்கம் தான் செய்தான் அழிவு ஏதும் இல்லை. இனி, பாசுரத்தில் வாமன அவதாரத்தை ஆழ்வார்கள் போற்றிப் புகழ்வதை காண்போம்.
"குறட்பிரமசாரியாய் மாவலியைக் குறும்பதக்கி அரசுவாங்கி" (பெரியாழ்வார் திருமொழி 4-9-7) வாமன அவதாரமெடுத்து மகாபலியிடம் சென்று அவன் கர்வத்தைப் போக்கி, மூவுலகங்களையும் இந்திரனுக்குக் கொடுத்த பெருமாள் திருவரங்கத்தில் பள்ளிக் கொண்டிருக்கிறார் என்கிறார் பெரியாழ்வார்.
"மன்னன் தன் தேவி மார் கண்டு மகிழ்வெய்த
முன் இவ்வுலகினை முற்றும் அளந்தவன்"
- பெரியாழ்வார் திருமொழி 2-5-9
வாமன அவதாரம் எடுத்தபோது இவன் அழகு பார்ப்போரை எல்லாம் மயங்க வைத்தது. மகாபலியின் மனைவியரும் அவன் அழகில் மகிழ்ந்தனர் என போற்றுகிறார் பெரியாழ்வார்.
ஆண்டாள் தன் திருப்பாவையில் மூன்றாவது பாட்டில் "ஓங்கி உலகளந்த உத்தமன்" என்றும், 17ஆம் பாட்டில் "அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகு அளந்த உம்பர் கோமான்" என்றும், 24 ஆம் பாட்டில் "அன்றிவ்வுலகமளந்தாய் அடி போற்றி" என்றும் வாமன அவதாரத்தைப் போற்றுகிறாள்.
திருமழிசையாழ்வார் தன் திருச்சந்தவிருத்தம் 74ல் வாமனனாக அவதரித்த பெருமானுடைய இரு திருவடிகளையும் உபாயமென்றும், உபமேயமென்றும் தெரிந்து கொண்டு அவற்றை வணங்கினால் ஆத்மாவை பற்றிய உண்மை அறிவோடு கூட பக்தியாகிற செல்வமும் முழுமையாக உண்டாகும் என்கிறார்.