திங்கள், 31 ஆகஸ்ட், 2020

அருளிச் செயல்களில் வாமன அவதாரம் - திருமதி பட்டம்மாள் ஜெகன்நாதன்

திருமாலின் தசாவதாரத்தில் ஐந்தாவது அவதாரமாக பகவான் எடுத்த அவதாரம் வாமன அவதாரம். மஹாபலி சக்ரவர்த்தியின் கர்வத்தை அழிப்பதற்காக எடுத்த முதல் மனித அவதாரம். அவனிடம் மூவடி மண் கேட்டு மூவுலகங்களையும் அளந்தவன். மகாபலியின் அட்டகாசங்களால் தேவர்கள் அவதிபட்ட போது தேவர்களின் தாய் அதிதி, பகவானிடம் வேண்டி உயர்ந்த விரதமான “பயோ விரதத்தின்” பலனாக ஆவணி திருவோண நட்சத்திரத்தில் பகவானையே மகனாகப் பெற்றாள். சிறு பிராமணச் சிறுவனாய்த் தோன்றி, மகாபலியிடம் தன் காலால் மூன்றடி மண் கேட்டு பிறகு, அவனே ஓங்கி உலகளந்த உத்தமனாய் வளர்ந்து, மூன்றாவது அடியால் மஹாபலியை பாதாள லோகத்தில் அழுத்திய அவதாரம். மஹாபலியின் வள்ளல் தன்மையை எடுத்துக்காட்டவும், அவன் ஆணவத்தை அழிக்கவும் எடுத்த அவதாரம். தன் குலகுரு சுக்ராச்சாரியர் அறிவுரையை சட்டை செய்யாது, தான் கொடுத்த வாக்கை மீறாமல் நடந்ததால் அவன் புகழ் எவ்வாறு உயர்ந்தது என்பதை திருமால், தான் பெரிய உருவத்தை எடுத்து நமக்குக் காட்டினான். திருமால் இந்த அவதாரத்தில் கர்வபங்கம் தான் செய்தான் அழிவு ஏதும் இல்லை. இனி, பாசுரத்தில் வாமன அவதாரத்தை ஆழ்வார்கள் போற்றிப் புகழ்வதை காண்போம்.

"குறட்பிரமசாரியாய் மாவலியைக் குறும்பதக்கி அரசுவாங்கி" (பெரியாழ்வார் திருமொழி 4-9-7) வாமன அவதாரமெடுத்து மகாபலியிடம் சென்று அவன் கர்வத்தைப் போக்கி, மூவுலகங்களையும் இந்திரனுக்குக் கொடுத்த பெருமாள் திருவரங்கத்தில் பள்ளிக் கொண்டிருக்கிறார் என்கிறார் பெரியாழ்வார்.

"மன்னன் தன் தேவி மார் கண்டு மகிழ்வெய்த 

முன் இவ்வுலகினை முற்றும் அளந்தவன்"

- பெரியாழ்வார் திருமொழி 2-5-9 

வாமன அவதாரம் எடுத்தபோது இவன் அழகு பார்ப்போரை எல்லாம் மயங்க வைத்தது. மகாபலியின் மனைவியரும் அவன் அழகில் மகிழ்ந்தனர் என போற்றுகிறார் பெரியாழ்வார்.

ஆண்டாள் தன் திருப்பாவையில் மூன்றாவது பாட்டில் "ஓங்கி உலகளந்த உத்தமன்" என்றும், 17ஆம் பாட்டில் "அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகு அளந்த உம்பர் கோமான்" என்றும், 24 ஆம் பாட்டில் "அன்றிவ்வுலகமளந்தாய் அடி போற்றி" என்றும் வாமன அவதாரத்தைப் போற்றுகிறாள்.

திருமழிசையாழ்வார் தன் திருச்சந்தவிருத்தம் 74ல் வாமனனாக அவதரித்த பெருமானுடைய இரு திருவடிகளையும் உபாயமென்றும், உபமேயமென்றும் தெரிந்து கொண்டு அவற்றை வணங்கினால் ஆத்மாவை பற்றிய உண்மை அறிவோடு கூட பக்தியாகிற செல்வமும் முழுமையாக உண்டாகும் என்கிறார்.

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 177

 எட்டாவது ஸ்கந்தம் – ஒன்பதாவது அத்தியாயம்

(மோஹினி ரூபியான பகவான் அஸுரர்களை மதிமயக்கி, அம்ருத கலசத்தை வாங்கித் தேவதைகளுக்கு அம்ருதம் கொடுத்தல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஒருவர்மேல் ஒருவர்க்குள்ள ஸ்நேஹத்தைத் (நட்பைத்) துறந்து, ஒருவரையொருவர் தடுத்து, பழித்து, அம்ருத கலசத்தைத் திருட்டுத்தனத்தினால் பறித்துக்கொண்ட அஸுரர்கள், அவ்வாறு அழகமைந்த பெண்மணி வருவதைக் கண்டார்கள். அவ்வஸுரர்கள் அவளைக் கண்டதும் “ஆ! இதென்ன அழகு? ஆ! இதென்ன ஒளி? ஆ! இவளுடைய யௌவன (இளம்) வயது புதிதாயிருக்கின்றது” என்று மொழிந்து அப்பெண்மணியை எதிர்கொண்டு சென்று, காமவிகாரம் (காதல், ஆசை) விளையப்பெற்று அவளை இவ்வாறு வினவினார்கள்.

அஸுரர்கள் சொல்லுகிறார்கள்:- தாமரையிதழ் போன்ற கண்களுடையவளே! நீ யார்? எங்கிருந்து வந்தாய்? நீ என்ன செய்ய விரும்புகின்றாய்? நீ யாருடையவள்? அழகிய துடைகளுடையவளே! இதைச் சொல்லுவாயாக. நீ எங்கள் மனத்தைக் கலக்குகின்றாய். தேவதைகள், அஸுரர், ஸித்தர், கந்தர்வர், சாரணர் இவர்களில் எவராலும் நீ தீண்டப்படாதவள் (தொடப்படாதவள்) என்று எங்களுக்குத் தோன்றுகின்றது. யோகீச்வரர்களும் கூட உன்னைத் தீண்டியிருக்க (தொட்டிருக்க) மாட்டார்கள். இனி, மனுஷ்யர்கள் உன்னைத் தீண்டுவதற்கு (தொடுவதற்கு) இடமேயில்லை. ஆகையால், நீ ஒருவர்க்கும் வாழ்க்கைப்பட்டவளல்லள். அழகிய புருவமுடையவளே! ஈச்வரன் எங்களிடம் மன  இரக்கமுற்று எங்களுடைய ஸமஸ்த இந்திரியங்களையும் மனத்தையும் களிக்கச்செய்ய விரும்பி, உன்னை அனுப்பினானோ? ஆம். இதுவே நிச்சயம். புகழத்தகுந்த மேன்மையுடையவளே! அம்ருதமாகிற ஒரு வஸ்துவைக் குறித்துப் பொறாமையினால் ஒருவர்மேல் ஒருவர் த்வேஷத்தை (வெறுப்பை) ஏற்றுக் கொண்டிருக்கிற ஜ்ஞாதிகளான (பங்காளிகளான) எங்களுக்கு, நீ ஸந்தியை (ஒற்றுமையை) விளைப்பாயாக. அழகிய இடையுடையவளே! எங்களுக்கு இந்த அம்ருதத்தைப் பங்கிட்டுக் கொடுப்பாயாக. நாங்கள் கச்யபருடைய பிள்ளைகள்; உடன் தோன்றினவர்கள். இப்பொழுது நாங்கள் சண்டைசெய்யும் பொருட்டுப் பௌருஷத்தை (ஆண்மையை, வீரத்தை) ஏற்றுக் கொண்டிருக்கிறோம். எங்களுக்குச் சண்டை நேராதிருக்குமாறு, ந்யாயத்தின்படி, இந்த அம்ருதத்தைப் பங்கிட்டுக் கொடுப்பாயாக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மாயையினால் மடந்தையின் (பெண்) உருவம் தரித்த பகவான், அஸுரர்களால் இவ்வாறு தூண்டப்பட்டு, சிரித்து அழகிய கடைக்கண்களால் அவர்களை நோக்கிக்கொண்டே, இவ்வாறு மொழிந்தான்.

பத்தரின் சிறப்பு! - ஸ்ரீ அனந்த பத்மநாபாச்சாரியார்

ஶ்ரீரங்கத்தில் தென் திருக்காவிரி தாண்டி (முன் காலத்தில்) குடிசையில் ஒரு பக்தர் வாழ்ந்து வந்தார். வடக்கேயிருந்து ஒரு பக்தர் பல நாட்கள் பயணித்து ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தார். “உங்களுடைய குடிசையில் நான்கு நாட்கள் தங்கியிருந்து பெருமாளைச் சேவிக்கலாமா?” என்று இவரிடம் கேட்டார். பக்தரும் அனுமதித்தார்.

அதாவது ஸ்ரீரங்கத்தின் சிறப்பு, வீதிகளின் அமைப்பு, விசேஷம் இவற்றைத் தெரிந்து கொண்டு சேவிப்பது உத்தமம் என்று நினைத்தார். எப்படி தரிசனம் செய்ய வேண்டும், தாயார், பெருமாள் பிரபாவம், கருட மண்டபம், புஷ்கரிணி, ராயர் கோபுரம் சிறப்புகள் பற்றி விவரித்துச் சொல்லுமாறு ஸ்ரீரங்க பக்தரைக் கேட்டார் வடநாட்டு பக்தர்.

காவிரிக்கரை பக்தர் கையை விரித்தார். “சுவாமி! நான் காவிரி தாண்டி, ஒருநாள் கூட சென்றதில்லை. கோயிலுக்குப் போனதே இல்லை.”

வந்த பக்தருக்கு அதிர்ச்சி, வருத்தம்! “அடடா! இவ்வளவு அருகில் அரங்கனைச் சேவிக்கும் பாக்கியம் பெற்றும், கோயிலுக்குப் போகாத உம் கிருஹத்தில் தங்கினேனே! பாவி, நான்” என்று சொல்லிவிட்டு, பெருமாளை சேவிக்கப் புறப்பட்டார்.

ஸ்ரீரங்கத்து பக்தர், “சுவாமி! ஸ்ரீரங்கத்து மண் ஒரு பிடி கொண்டு வாருங்கள். நான் தினமும் நெற்றியில் இட்டுக்கொள்கிறேன்” என்றார்.

வடநாட்டு பக்தர் மனங்குளிர தரிசனம் செய்து கொண்டு திரும்பும்போது, மேல் துண்டில் ஒரு கைப்பிடி மண் எடுத்து முடிந்து கொண்டார்.

ஸ்ரீரங்கத்து பக்தரின் குடிசைக்கு வந்து முடிச்சை அவிழ்த்தால், அதில் 5, 6 சாளக்கிராமங்கள் இருந்தன. வட நாட்டு பக்தர் திகைத்துப் போனார். தாம் எடுத்து முடிந்தது மண்தான். திறந்தால் சாளக்ராமங்கள் இருக்கின்றன என்றால், இவரிடம் ஏதோ விசேஷ பாவம் இருக்கிறது என்று புரிந்தது. அதனால், “ஏன் தாங்கள் ஸ்ரீரங்கனைத் தரிசனம் செய்வதில்லை . காரணம் என்ன?” என்று வினவினார்.

சனி, 29 ஆகஸ்ட், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 176

 எட்டாவது ஸ்கந்தம் - எட்டாவது அத்தியாயம்

(ஸமுத்ரத்தில் தோன்றின ஸ்ரீமஹாலக்ஷ்மி பகவானை வரித்தலும், அம்ருதத்தை அஸுரர்கள் பறித்தலும், பகவான் மோஹினி அவதாரம் செய்தலும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு, சிவபெருமான் விஷத்தைப் பக்ஷிக்கையில் (பருகுகையில்), இந்திரன் முதலிய ஸமஸ்த தேவதைகளும், பலி முதலிய ஸமஸ்த அஸுரர்களும், ஸந்தோஷம் அடைந்து, வலிவுடன் ஸமுத்ரத்தைக் கடைந்தார்கள். பிறகு, அந்த ஸமுத்திரனின்றும் காமதேனு உண்டாயிற்று. தயிர், பால், நெய், முதலியவற்றால் அக்னிஹோத்ரம் (வேதத்தில் விதிக்கப்பட்ட நித்ய அக்னி கார்யம்) முதலிய வைதிக (வேதத்தில் விதிக்கப்பட்ட) கர்மங்களுக்கு உபயோகப்படுவதாகிய அக்காமதேனுவை, ப்ரஹ்மவாதிகளான ரிஷிகள் அங்கீகரித்தார்கள். தேவதைகள் வந்து, ஹவிர்ப்பாகங்களைப் (யாகங்களில் தேவதைகளைக் குறித்து ஹோமம் செய்யப்படுபவற்றை) பெறுகிற யஜ்ஞாதி (யாகம் முதலிய) கர்மங்களுக்கு வேண்டிய பால், தயிர், நெய், முதலிய பரிசுத்தமான ஹவிஸ்ஸுக்களுக்காக (யாகங்களில் தேவதைகளைக் குறித்து ஹோமம் செய்யப்படும் பொருட்களுக்காக) அவர்கள் அதை அபேக்ஷித்தார்கள் (விரும்பினார்கள்). பிறகு சந்த்ரன் போல் வெளுத்த நிறமுடைய உச்சைச்ரவஸ் என்கிற குதிரை உண்டாயிற்று. அதை, பலிசக்ரவர்த்தி விரும்பினான். இந்திரன், தனக்கு அதில் விருப்பம் உண்டாயினும், காம (ஆசை) க்ரோதங்கள் (கோபம், சினம்) செய்யலாகாதென்ற பகவானுடைய நியமனத்தை நினைந்து, அவ்விருப்பத்தை வெளியிடாமலே இருந்தான். அப்பால், ஐராவதமென்கிற சிறந்த யானையொன்று உண்டாயிற்று. அதுவும், சந்திரன் போல் வெளுத்திருந்தது. மற்றும், அக்கஜேந்தரம் (யானை) சிகரங்கள் போன்ற நான்கு தந்தங்களால் ருத்ரனுடைய கைலாஸ பர்வதத்தின் சோபையைப் (அழகைப்) பறித்தது. 

மன்னவனே! அதன்பிறகு, எட்டுத் திக்கஜங்களும், அப்ரமு முதலிய எட்டு யானைப்பேடுகளும், கௌஸ்துபமென்னும் ரத்னமும், உண்டாயின. அந்தக் கௌஸ்துப ரத்னம் பத்மராகம். ரத்னங்களில் சிறந்த அந்தக் கெளஸ்துபமணியை, பகவான் தன் மார்புக்கு அலங்காரமாகக் கொள்ள விரும்பினான். பிறகு, ஸ்வர்க்கலோகத்திற்கு அலங்காரமாகிய பாரிஜாதமென்னும் வ்ருக்ஷம் (மரம்) உண்டாயிற்று. 

மன்னவனே! நீ இப்பூமண்டலத்தில் விரும்புவோர்களின் விருப்பங்களையெல்லாம் நிறைவேற்றிக் கொடுப்பது போல, அந்தப் பாரிஜாத வ்ருக்ஷம் (மரம்) ஸமஸ்த ப்ராணிகளின் விருப்பங்களையும் ஸர்வகாலங்களிலும் நிறைவேற்றிக்கொடுக்கும் தன்மையுடையது. அப்பால், கழுத்தில் பொன்னலங்காரங்கள் பூண்டு, அரையில் அழகான ஆடைகளை உடுத்தித் திகழ்கின்ற அப்ஸரஸ்த்ரீகள் உண்டானார்கள். அவர்கள், அழகிய நடைகளாலும், விலாஸங்கள் (அழகு, ஒளி) அமைந்த கண்ணோக்கங்களாலும், ஸ்வர்க்கவாஸிகளுக்கு மனக்களிப்பை விளைவிக்கும் தன்மையுள்ளவர்கள். பிறகு, பகவானிடத்தில் மிக்க மனவூக்கமுடைய ஸ்ரீமஹாலக்ஷ்மி தன் தேஹ காந்தியால் (உடல் ப்ரகாசத்தால்) மின்னல் போலத் திசைகளையெல்லாம் விளங்கச் செய்து கொண்டு, மேற்கிளம்பினாள். தேவதைகள், அஸுரர்கள், தானவர்கள் முதலிய அனைவரும் அவளுடைய அழகு, காம்பீர்யம் (மேன்மை), வயது, தேஹ காந்தி (உடல் ப்ரகாசம்), பெருமை முதலிய குணங்களால் மனம் பறியுண்டு, அவளிடத்தில் மனவிருப்பம் கொண்டார்கள்.

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 175

 எட்டாவது ஸ்கந்தம் - ஏழாவது அத்தியாயம்

(தேவாஸுரர்கள் க்ஷீரஸமுத்ரத்தை கடைகையில் அதினின்று உண்டான விஷத்தை ருத்ரன் பருகுதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அந்தத் தேவதைகளும், அஸுரர்களும், வாஸுகியிடம் சென்று, ஸமுத்ரம் கடைவதன் பலனான அம்ருதத்தில் உனக்கும் பாகம் கொடுக்கிறோமென்று ப்ரார்த்தித்து, அதற்கு ஒப்புக்கொண்டுவந்த அந்த ஸர்ப்பராஜனை, மந்தர பர்வதத்தில் கயிறாகச்சுற்றி, ஸந்தோஷத்துடன் அம்ருதத்தைக் கடைய ஆரம்பித்தார்கள். 

குருகுலாலங்காரனே! பகவான் விஷ ஜ்வாலைகளால் (நெருப்புக் கொழுந்துகளால்) தீவரமாயிருக்கின்ற வாஸுகியின் முகத்தை அஸுரர்கள் பிடித்துக்கொள்ளும்படி செய்ய விரும்பி, முதலில் தான் முகத்தைப் பிடித்துக்கொண்டான். பிறகு, தேவதைகளும் முகத்தையே பிடித்துக்கொண்டார்கள். பகவானும், தேவதைகளும், முகத்தைப் பிடித்துக்கொண்டதை அஸுர ச்ரேஷ்டர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. “நாங்கள் நன்கு வேதாத்யயனம் செய்தவர்கள்; சாஸ்த்ரங்களைக் கற்றவர்கள்; பிறவியாலும், நற்செயல்களாலும், ப்ரஸித்தி பெற்றவர்கள். இத்தகைய நாங்கள், அமங்களமான (சுபம் இல்லாத) ஸர்ப்பத்தின் வாலைப் பிடிக்கமாட்டோம்” என்று சொல்லி அஸுரர்கள் வெறுமனேயிருந்தார்கள். பரமபுருஷன் அதைக்கண்டு, புன்னகை செய்துகொண்டே, முகத்தைவிட்டுத் தேவதைகளும் தானுமாக வாலைப் பிடித்துக்கொண்டான். இவ்வாறு அந்தத் தேவாஸுரர்கள் இன்னபாகத்தை இன்னவர் பிடித்துக்கொள்ள வேண்டியதென்று ஏற்பாடு செய்துகொண்டு, பெரிய முயற்ச்சியுடன் க்ஷீரஸமுத்ரத்தைக் கடைந்தார்கள். அவ்வாறு கடையும் பொழுது, வெறும் ஜலத்தில் ஆதாரமில்லாதிருந்த மந்தரபர்வதம், ஜலத்தில் அமிழ்ந்து போய்விட்டது. 

கௌரவ ச்ரேஷ்டனே! மஹாபலிஷ்டர்களான தேவாஸுரர்கள், அந்த மந்தர பர்வதத்தை (மலையை) எவ்வளவு ப்ரயத்னப்பட்டு (முயற்சி செய்து) எடுக்கப்பார்த்தும், அது பெரும்பாரமாகையால் அவர்களுக்கு சாத்யப்படவில்லை (இயலவில்லை). ஜலத்தில் முழுகியே போய்விட்டது. அந்தத் தேவாஸுரர்கள், மிகுந்த பலமுடைய தெய்வத்தினால் தங்கள் பௌருஷம் (ஆண்மை, வீரம், வலிமை) வீணாகப்பெற்று, மன வருத்தமுற்று, முக ஒளி மழுங்கி, நின்றார்கள். வீணாகாத ஸங்கல்பமுடையவனும், அளவற்ற வீர்யமுடையவனும், ஸர்வேச்வரனுமாகிய அந்த அஜித பகவான், அவ்வாறு விக்னம் (தடை) நேர்ந்ததைக் கண்டு, அற்புதமான பெரிய ஆமையின் உருவம் தரித்து, ஜலத்தில் முழுகி, அப்பர்வதத்தை (அம்மலையை) மேலுக்கெடுத்தான். அக்குலபர்வதம் (மலை) மேலெழுந்து வரக்கண்டு, தேவாஸுரர்கள் அனைவரும் மீளவும் கடையத் தொடங்கினார்கள். லக்ஷ யோஜனை விஸ்தாரமுடைய கூர்மரூபியான அந்த பகவான், மற்றொரு ஜம்பூ த்வீபம் (ஜம்பூ தீவு) போலப் பேருருவம் உடையவனாகி, மந்தர பர்வதத்தைத் (மலையைத்) தன் முதுகினால் தாங்கிக் கொண்டிருந்தான். 

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 174

 எட்டாவது ஸ்கந்தம் - ஆறாவது அத்தியாயம்

(தேவதைகளுக்குப் பகவான் ஸேவை ஸாதித்தலும், தேவதைகள் அவனை ஸ்தோத்ரம் செய்தலும், அவனுடைய ஆஜ்ஞையின் (கட்டளையின்) மேல் அம்ருதத்திற்காக க்ஷீரஸமுத்ரத்தைக் கடைய ப்ரயத்னம் (முயற்சி) செய்தலும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மன்னவனே! தன்னைப் பற்றினாருடைய தாபங்களைப் (துன்பங்களைப்) போக்கும் தன்மையனும், ஸர்வேச்வரனுமாகிய பகவான், ஆயிரம் ஸூர்யர்கள் உதித்தாற்போலத் திகழ்கின்ற பேரொளியுடையவனாகி, அந்த ப்ரஹ்மாதி தேவதைகளுக்கெதிரே வந்து தோன்றினான். பிரமன் முதலிய அத்தேவர்கள் அனைவரும், பகவானுடைய ஒளிப்பெருக்கினால் கண்கள் தடைபட்டு, ஆகாயத்தையாவது, திசைகளையாவது, பூமியையாவது, தம்மையாவது காணப்பெறவில்லை. இனி எதிரே தோற்றியிருக்கும் ப்ரபுவை எவ்வாறு காண்பார்கள்? 

பகவானுடைய திவ்யமங்கள விக்ரஹம், மரகத ரத்னம்போல் நிர்மலமாய் (அழுக்கற்றதாய்) இருந்தது. அவனுடைய திருக்கண்கள், தாமரை மலரின் உட்புறம்போல் சிவந்திருந்தன. அவன், உருக்கி அழுக்கு நீக்கப்பட்ட பொன் போலத் திகழ்கின்ற பீதாம்பரத்தை உடுத்திருந்தான். அவனுடைய அங்கங்களெல்லாம் தெளிந்து அழகாயிருந்தன. அவன், அழகான முகமும் அழகிய புருவங்களும் அமைந்து, பெரிய ரத்னங்கள் இழைக்கப்பெற்ற கிரீடமும், தோள்வளைகளும், அணிந்திருந்தான். தாமரை மலர் போன்ற அவனது முகம், குண்டலங்களால் திகழ்கின்ற கபோலங்களின் (கன்னங்களின்) காந்தியால் மிகவும் அழகாயிருந்தது. மற்றும், அவன் அரைஞாண்மாலை, கைவளை, முத்துமாலை, சிலம்பு, தண்டை, கௌஸ்துபமணி, வனமாலை இவைகளை அணிந்து, மார்பில் வீற்றிருக்கின்ற ஸ்ரீமஹாலக்ஷ்மியால் மிகவும் விளக்கமுற்றிருந்தான். ஸுதர்சனம் முதலிய அவனுடைய அஸ்த்ரங்கள், புருஷ உருவத்துடன் அவனைப் பணிந்திருந்தன. தேவர்களில் தலைவனாகிய ப்ரஹ்மதேவன், அத்தகைய பரமபுருஷனுடைய திருவுருவத்தைக்கண்டு, ருத்ரனும் மற்றுமுள்ள தேவதைகளும் தானுமாக, அவனுக்கு ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம்செய்து, அவனை ஸ்தோத்ரம் பண்ணினான்.

புதன், 19 ஆகஸ்ட், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 173

 எட்டாவது ஸ்கந்தம் - ஐந்தாவது அத்தியாயம்

(ஐந்தாவது மனு, ஆறாவது மனு இவர்களையும், துர்வாஸருடைய சாபத்தினால் ஐச்வர்யத்தை இழந்த தேவதைகள் பகவானை ஸ்தோத்ரம் செய்ததையும் கூறுதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மன்னவனே! இந்தக் கஜேந்த்ர மோக்ஷமென்னும் பகவானுடைய சரித்ரம், மிகவும் புண்யமானது; பாபங்களையெல்லாம் போக்கும். இதை உனக்கு மொழிந்தேன். இனி, ஐந்தாவதான ரைவத மன்வந்தரத்தைச் சொல்லுகிறேன். கேட்பாயாக. 

ரைவதனென்பவன், ஐந்தாவது மனுவாயிருந்தான். அவன் தாமஸ மனுவுக்கு உடன் பிறந்தவன். பலி, விந்த்யன் முதலானவர்கள், அவனுடைய பிள்ளைகள். அவர்களில், அர்ஜுனனென்பவன் ப்ரதானன் (முக்யமானவன்). அம்மனுவின் அந்தரத்தில் விபுவென்பவன் இந்த்ரனாயிருந்தான். பூததயன் முதலியவர்கள் தேவதைகளாயிருந்தார்கள். ஹிரண்யரோமர், வேதசிரர், ஊர்த்வபாஹு முதலியவர்கள் ஸப்த ரிஷிகளாயிருந்தார்கள். சுப்ரரென்பவருடைய பத்னி, விகுண்டையென்பவள். பகவான் வைகுண்டனென்று பேர் பூண்டு, வைகுண்டரென்னும் தேவ ச்ரேஷ்டர்களுடன் தன்னுடைய அம்சத்தினால், அவர்களுக்குப் பிள்ளையாகப் பிறந்தான். தேவியாகிய ஸ்ரீமஹாலக்ஷ்மியின், வேண்டுகோளின்மேல் அவளுடைய இஷ்டத்தை நிறைவேற்றும் பொருட்டு, அந்த வைகுண்டன், லோகாலோக பர்வதத்தின் (மலையின்) மேல், வைகுண்டமென்னும் லோகத்தைப் படைத்தான். அதை, லோகாலோக பர்வதத்திலுள்ள (மலையிலுள்ள) ஜனங்கள் நமஸ்கரிக்கிறார்கள். அந்த வைகுண்ட பகவானுடைய ப்ரபாவமும், குணங்களும், மஹத்தான ஸ்ம்ருதிகளும், என்னால் கூடுமானவளவு சொல்லப்பட்டன. 

அவனுடைய மஹிமைகளையெல்லாம் ஒருவராலும் சொல்ல முடியாது. எவன் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் குணங்களையெல்லாம் சொல்லுகிறானோ, அவன் பூமியிலுள்ள தூள்களையெல்லாம் கணக்கிட்டவனாவான். சக்ஷுவின் புதல்வன், சாக்ஷுஷனென்று ப்ரஸித்தி பெற்றவன். அவன் ஆறாவது மனுவாயிருந்தான். பூரு, புருஷன், ஸுத்யும்னன் முதலியவர்கள் சாக்ஷுஷ மனுவின் புதல்வர்கள். அப்பொழுது மந்த்ரத்ருமன் என்பவன், இந்த்ரனாயிருந்தான். ஆப்யர் முதலியவர்கள் தேவகணங்களாய் இருந்தார்கள். ஹவிஷ்மான், வீரகர் முதலியவர்கள் ஸப்தரிஷிகளாய் இருந்தார்கள். அந்த ஆறாவது மன்வந்தரத்திலும், பகவான் வைராஜருடைய பார்யையாகிய (மனைவியாகிய) ஸம்பூதியிடத்தில், தன்னுடைய அம்சத்தினால் அஜிதனென்று ப்ரஸித்தனாய் அவதரித்தான். அவன், க்ஷீரஸமுத்ரத்தைக் (பாற்கடலைக்) கடைந்து, தேவதைகளுக்கு அம்ருதத்தைத் திரட்டிக்கொடுத்தான். க்ஷீரஸமுத்ரத்தைக் கடையும்பொழுது, மந்தர பர்வதம் (மலை) அசைகையில், அப்பகவான் கூர்மரூபியாய் அம்மந்தர பர்வதத்தைத் (மலையைத்) தன் முதுகில் தரித்தான்.

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

தர்ம வழி - ஶ்ரீ ஜமதக்னிஜீ

“ ‘தர்மம் சர’ என்கிறது வேதம். அந்த தர்ம வழியில் வாழ்ந்து அதை நமக்கெல்லாம் போதித்தவர் சாட்சாத் ராமசந்திர மூர்த்தி. ராமாயணம் முழுக்க அந்த தர்மம் போஷிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டு இருக்கிறது. ராமர் எப்படி எல்லாம் தர்மத்தின் வழி நின்றார்ங்கறதை பற்றி கொஞ்சம் பார்ப்போமா?” என்றபடி தமது சொற்பொழிவை துவக்கினார் ஸ்ரீ ஜமதக்னி ஜீ.

''ராமர் சீதையை வால்மீகி ஆஸ்ரமத்துக்கு அனுப்பி விட்ட நேரம். அப்போ ராமருக்கு யாகம் வளர்க்க வேண்டிய ஒரு சூழல் வந்தது. பக்கத்திலேயே வசிஷ்டர் இருந்தார். சீதா இல்லாம எப்படி யாகம் பண்றது? சீதையும் லக்ஷ்மியும் ஒண்ணுதான். ஸ்வர்ண ரூபமாகதான் மஹா லக்ஷ்மி இருப்பா. அதனால, தங்கத்தால் சீதையின் உருவத்தைச் செய்து தன் பக்கத்தில் அதனை நிறுத்திக் கொண்டு யாகம் பண்ணார் ராமர். தங்கம் விக்கற விலைல லக்ஷ்மியை தங்க வைக்க தங்கத்தை வாங்க முடியாதேன்னு நமக்கு சொல்லத் தோணும். ஆனா, லக்ஷ்மி எங்கெல்லாம் தங்குவாள்னு தெரியுமா? 

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 172

 எட்டாவது ஸ்கந்தம் – நான்காவது அத்தியாயம்

(முதலை கந்தர்வரூபம் பெறுதலும், கஜேந்த்ரம் பகவானுடைய ஸாயுஜ்யம் (பகவனோடு ஒத்த ஆனந்தம்) பெறுதலும், பகவான் ப்ராணிகளின் (ஜீவராசிகளின்) ஹிதத்தைக் (நன்மையைக்) கூறுதலும்)

ஸ்ரீசுகர்சொல்லுகிறார்:- ப்ரஹ்மதேவன், ருத்ரன் முதலிய தேவதைகளும், ரிஷிகளும், கந்தர்வர்களும் பகவான் செய்த கஜேந்த்ர மோக்ஷமாகிற அந்தச் செயலைப் புகழ்ந்து அவன்மேல் ஓயாமல் பூமழை பொழிந்தார்கள். ஆகாயத்தில் தேவதுந்துபி வாத்யங்கள் முழங்கின. கந்தர்வர்கள் ஆடல், பாடல்களை நடத்தினார்கள். ரிஷிகளும், சாரணர்களும், ஸித்தர்களும் அப்பரமபுருஷனை ஸ்தோத்ரம் செய்தார்கள். கஜேந்த்ரத்தை ஹிம்ஸித்த (துன்புறுத்திய) அம்முதலை உடனே தேவரிஷியின் சாபத்தினின்று விடுபட்டு மிகவும் ஆச்சர்யமான உருவம்பெற்று ஹூஹூவென்னும் கந்தர்வ ச்ரேஷ்டனாய் விளங்கிற்று. அக்கந்தர்வன் சிறந்த புகழுடையவனும், சிறப்புடைய பிரமன் முதலிய தேவர்களால் புகழத் தகுந்தவனும், அழிவற்றவனும், புகழுக்கு ஆதாரனும் (அடிப்படையானவனும்), புகழத்தகுந்த குணங்களும் நற்கதைகளும் அமைந்து விளங்குகின்ற ஸர்வேச்வரனுமாகிய அப்பரமபுருஷனைத் தலையால் வணங்கி அவனைப் பாடினான். 

அந்தப் பாடலைக்கேட்டு ஸந்தோஷம் அடைந்த பகவானால் அக்கந்தர்வன் அருள்புரியப்பெற்று ஜகதீசனை ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்கரித்து ப்ரஹ்ம தேவன் முதலியவர்கள் பார்த்துக் கொண்டிருக்கையில் பாபம் தீரப்பெற்றுத் தன்னுடைய லோகம் போய்ச்சேர்ந்தான். கஜேந்த்ரமோவென்றால் பகவானுடைய கரம் பட்டமையால் கர்ம பந்தத்தினின்றும் விடுபட்டு அரையில் (இடுப்பில்) பீதாம்பரம் தரித்து நான்கு புஜங்கள் விளங்கப்பெற்றுப் பகவானுடைய ஸாரூப்யத்தை (பகவானை ஒத்த ரூபத்தை) அடைந்தது. 

அக்கஜேந்த்ரம் பூர்வஜன்மத்தில் பாண்டிய தேசத்துக்கு ப்ரபுவும் த்ரமிடர்களில் சிறந்தவனுமாகிய இந்த்ரத்யும்னனென்னும் மன்னவனாயிருந்தது. அம்மன்னவன் பகவானைப் பணிகையாகிற வ்ரதத்தை மிக்க மனவூக்கத்துடன் அனுஷ்டிக்கும் தன்மையுடையவன். ஒருகால் அவன் ஜடை தரித்துத் தவத்தில் நிலைநின்று மலயமென்னும் குலபர்வதத்தில் ஆச்ரமத்தை ஏற்படுத்திக் கொண்டு மனவூக்கத்துடன் மௌன வ்ரதத்தை முன்னிட்டுப் பகவானை ஆராதித்துக் கொண்டிருந்தான். 

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 171

 எட்டாவது ஸ்கந்தம் - மூன்றாவது அத்தியாயம்

கஜேந்த்ரம் பகவானைத் துதிசெய்தலும், பகவான் வந்து அதை விடுவித்தலும்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அந்தக் கஜேந்த்ரம் இவ்வாறு புத்தியால் நிச்சயித்து, மனத்தை வேறு விஷயங்களினின்றும் திருப்பி, ஹ்ருதயத்தில் நிறுத்தி, பூர்வஜன்மத்தில் தான் அப்யஸித்திருந்த மஹிமையுடையதான ஒரு ஸ்தோத்ரத்தை ஜபித்து “ஓம் சேதனாசேதன ரூபமான இந்த ப்ரபஞ்சத்தின் ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (காத்தல்), ஸம்ஹாரங்களுக்கு (அழித்தல்) ஆதி (முதல்) காரணனும், மேன்மையுடைய ப்ரஹ்மாதிகளுக்கும் மேலாயிருப்பவனும், ஷாட்குண்யபூர்ணனுமாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய), பரமபுருஷனுக்கு நமஸ்காரம். 

இந்த ப்ரபஞ்சமெல்லாம் எவனிடத்தில் மறைகின்றதோ, எவனிடத்தினின்று உண்டாகின்றதோ, எவன் இதைப் படைத்துப் பாதுகாக்கின்றானோ, எவன் இந்த ப்ரபஞ்சத்திற்குள் புகுந்து நியமித்துக்கொண்டு, எல்லாம் தானேயென்னும்படி அமைந்திருக்கிறானோ, எவன் சேதனாசேதனங்களுக்கு அந்தர்யாமியாயிருந்தும் ஸ்வரூபம் (பெயர், உருவமே) மாறப்பெறுகின்ற அசேதனத்தைக் (அறிவில்லாத ஜடப்பொருட்களைக்) காட்டிலும் ஸ்வபாவம் (தனது குணமான அறிவு) மாறப்பெறுகின்ற சேதனர்களைக் காட்டிலும் விலக்ஷணனாயிருக்கிறானோ (வேறானவனாய் இருக்கின்றானோ), எவன் தனக்கு மேற்பட்டவன் எவனுமின்றி ஸ்வதந்தரனாயிருக்கிறானோ (தன் விருப்பப்படி செயல்பட வல்லவனோ), அத்தகைய பரமபுருஷனை நான் சரணம் அடைகிறேன். 

அந்தப் பரமபுருஷன், தன் ஸங்கல்பத்தினால், தன்னிடத்தில் தானே தேவ மனுஷ்யாதி நாம ரூபங்களுக்கு இடமாயிருக்குமாறு தோற்றுவித்த இந்த ப்ரபஞ்சத்தை ஒருகால் நாம ரூபங்களுக்கிடமாகாதிருக்குமாறு தன்னிடத்திலேயே மறையச் செய்கிறான். என்றும் குறுகாமல் அளவிடக் கூடாத ஜ்ஞானத்தையுடைய அப்பரமபுருஷன், காரண தசையில் (இந்த ப்ரபஞ்சம் படைக்கப்படுவதற்கு முன்) ஸூக்ஷ்மமாயும் (பெயர், உருவம் அற்று இருப்பதும்), கார்யதசையில் (இந்த ப்ரபஞ்சம் படைக்கப்பட்ட பின்) ஸ்தூலமாயுமிருக்கிற (பெயர், உருவங்களுடன் கூடி இருப்பதும்), இந்த ப்ரபஞ்சத்தை இரண்டு தசைகளிலும் ஸாக்ஷாத்கரிக்கிறான். அவன், தனக்குத் தானே காரணன்; ப்ரக்ருதியைக் (அசேதனத்தைக்) காட்டிலும் விலக்ஷணனான (வேறான) ஜீவனைக் காட்டிலும் விலக்ஷணனாயிருப்பவன் (வேறானவனாய் இருப்பவன்). அவன் என்னைப் பாதுகாப்பானாக. இரண்டு பரார்த்தங்கள் அடங்கின கல்பத்தின் முடிவில், இந்த ஜகத்திற்கெல்லாம் காரணமான பூமி முதலிய ஸமஸ்த பூதங்களும், அவற்றின் கார்யமான ஸமஸ்த லோகங்களும், அவற்றைப் பாதுகாக்கின்ற ப்ரஹ்மாதிகளும் அழிந்து போகையில், மிகவும் ஸூக்ஷ்மமாகையால் அறிய முடியாததும் அளவிடமுடியாததுமான தமஸ்ஸு (மூலப்ப்ரக்ருதியின் மிக நுட்பமான நிலை) ஒன்று மாத்ரமே மிகுந்திருக்கின்றது. அப்பொழுது, ஸர்வேச்வரன் அந்தத் தமஸ்ஸுக்கு (மூலப்ப்ரக்ருதியின் மிக நுட்பமான நிலைக்கு) அந்தர்யாமியாய் நியமித்துக்கொண்டு, ஹேயங்கள் (கெட்ட குணங்கள்) எவையும் தீண்டப்பெறாமல் விளங்குகிறான். ஸத்வகுணம் தலையெடுக்கப் பெற்ற மஹாயோகிகளும், அந்தப் பரமபுருஷனுடைய ஸ்வரூபத்தை அறியமாட்டார்கள்.

வியாழன், 13 ஆகஸ்ட், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 170

 எட்டாவது ஸ்கந்தம் – இரண்டாவது அத்தியாயம்

(கஜேந்த்ர மோக்ஷ வ்ருத்தாந்தம்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மன்னவனே! திரிகூடமென்று பேர்பெற்ற ஒரு பர்வதம் (மலை) இருக்கிறது. அது பால் ஸமுத்ரத்தினால் சூழப்பட்டிருக்கும்; மிகுந்த அழகுடையது. அது பதினாயிரம் யோஜனைகள் உயர்ந்திருக்கும்; நாற்புறத்திலும் அவ்வளவு விஸ்தாரமுடையது. அதற்கு வெள்ளியும், இரும்பும், பொன்னுமாகிய மூன்று சிகரங்கள் உண்டு. அப்பர்வதம் அம்மூன்று சிகரங்களால் ஸமுத்ரத்தையும், திசைகளையும் விளங்கச் செய்கின்றது. ரத்னங்களாலும் தாதுக்களாலும் (தங்கம், வெள்ளி, இரும்பு முதலிய கனிமங்களாலும்) விசித்ரங்களான மற்றும் பல சிகரங்களாலும் திசைகளைத் திகழச் செய்கின்றது. பலவகையான வ்ருக்ஷங்களும் (மரங்களும்), கொடி, செடிகளும், புதர்களும் அருவிகளின் கோஷங்களும் (ஓசைகளும்) அதில் அமைந்திருக்கும். பால் ஸமுத்ரத்தின் அலைகள் அப்பர்வதத்தின் தாழ்வரைகள்மேல் நாற்புறத்திலும் மோதி அலம்புகின்றன. பச்சை நிறமுடைய மரகத ரத்னங்களால் அப்பர்வதம் முழுவதும் பச்சை நிறமாயிருக்கும். அம்மலையின் சரிவுகளில் ஸித்தர்களும், சாரணர்களும், கந்தர்வர்களும், வித்யாதரர்களும், உரகர்களும், கின்னரர்களும், அப்ஸர ஸ்த்ரீகளும் விளையாடிக் கொண்டிருப்பார்கள். மற்றும், தம் வீர்யத்தைப் புகழும் தன்மையுடைய ஸிம்ஹங்கள் குஹைகளில் இருந்து நடத்துகிற கின்னராதிகளின் ஸங்கீத கோஷத்தைக் கேட்டு வேறு ஸிம்ஹங்கள் வந்து கர்ஜனை செய்கின்றனவென்று நினைத்து அதைப் பொறுக்க முடியாமல் எதிர்த்துக் கர்ஜனை செய்கின்றன. 

அப்பர்வதம் சரிவுகளிலுள்ள பலவகை அரண்யங்களில் (காடுகளில்) உலாவுகின்ற யானை, குதிரை, கடா முதலிய நாற்கால் ஜந்துக்களால் அழகாயிருக்கும். மற்றும், அதில் தேவதைகள் இறங்கி விளையாடுவதற்கு உரிய பலவகை உத்யானங்கள் (தோட்டங்கள்) விளங்குகின்றன. அவற்றில் ஆச்சர்யமான வ்ருக்ஷங்கள் (மரங்கள்) திகழ்கின்றன. அவற்றில் பற்பல பறவைகள் இனிய குரலுடன் குலாவிக் கொண்டிருக்கும். நிர்மலமான ஜலமுடைய நதிகளும், தடங்களும் அங்கு நிறைந்திருக்கும். அவற்றில் ரத்னங்களே மணலாகப் பெற்ற மணற்குன்றுகள் பற்பலவும் திகழ்வுற்றிருக்கும். அவ்விடத்திலுள்ள ஜலமும் காற்றும் தெய்வ மடந்தையர் ஸ்னானம் செய்யும்பொழுது உடம்பில் பூசுகிற வாஸனை வஸ்துக்களால் பரிமளித்துக் கொண்டிருக்கும். இத்தகையதான அந்த திரிகூடபர்வதத்தின் சாரலில் மஹானுபாவனாகிய வருணனுடைய உத்யானம் (தோட்டம்) திகழ்கின்றது. அது ருதுமத்தென்னும் பேருடையது. அதில் தெய்வ மடந்தையர்கள் ஸர்வகாலமும் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 169

 அஷ்டம (எட்டாவது) ஸ்கந்தம் – முதலாவது அத்தியாயம்

(ஸ்வாயம்புவன், ஸ்வரோசிஷன், உத்தமன், தாமஸன் என்னும் நான்கு மனுக்களைக் கூறுதல்)

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- அஜ்ஞான அந்தகாரத்தைப் (அறிவின்மை என்னும் இருட்டைப்) போக்கும் குருவான ஸ்ரீசுகமஹர்ஷியே! இதுவரையில் ஸ்வாயம்புவ மனுவின் வம்சத்தை நீர் விவரித்துச் சொல்லக் கேட்டேன். அவ்வம்சத்தில் சேர்ந்த ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைச்ய, சூத்ரர்களென்கிற நான்கு வர்ணத்தவர்கள் அனுஷ்டிக்க வேண்டிய பற்பல வகையான அழகிய தர்மங்களையும், ப்ரஜாபதிகளான மரீசி முதலியவர்களின் ஸ்ருஷ்டி (படைப்பு) க்ரமத்தையும் (முறையையும்), நீர் சொல்லக் கேட்டேன். இனி, மற்ற மனுக்களின் சரித்ரங்களையும், அவர்கள் வம்சங்களையும் சொல்வீராக.

இணையெதிரில்லாத மஹானுபாவனும், தன்னைப் பற்றினாருடைய பாபங்களைப் போக்கும் தன்மையனுமாகிய பகவானுடைய அவதாரங்களையும், சரித்ரங்களையும், எந்தெந்த மன்வந்தரங்களில் பண்டிதர்கள் பாடுகிறார்களோ, அந்தந்த மன்வந்தர சரித்ரங்களையெல்லாம் கேட்க விரும்புகிற எனக்கு அவற்றைச் சொல்வீராக. ஜகத்ரக்ஷகனான பகவான், நடந்த மன்வந்தரத்தில் செய்தவைகளையும், நடக்கிற மன்வந்தரத்தில் செய்கின்றவைகளையும், நடக்கப்போகிற மன்வந்தரத்தில் செய்யப்போகிறவைகளையும், எனக்குச் சொல்வீராக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இப்பொழுது நடக்கும் கல்பத்தில் ஸ்வாயம்புவன் முதலிய ஆறு மனுக்கள் கடந்தார்கள். அவர்களில் முதல்வனான ஸ்வாயம்புவ மனுவின் வம்சத்தில் தேவாதிகளான ஸமஸ்த ப்ராணிகளும் பிறந்தார்கள். அவனுடைய வம்சத்தையும், சரித்ரத்தையும், உனக்கு விஸ்தாரமாகச் (விரிவாகச்) சொன்னேன். அந்த மனுவின் பெண்களான ஆஹூதி, தேவஹூதி என்னும் இருவரிடத்திலும் ஷாட்குண்ய பூர்ணனான (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப் பெற்றவனுமான) ஸர்வேச்வரன் கபிலனென்றும், யஜ்ஞனென்றும் இரண்டு உருவங்களால் பிள்ளையாகப் பிறந்தான். அவர்களில், மஹானுபாவரான கபிலருடைய வ்ருத்தாந்தத்தை நான் சொல்லக் கேட்டாயல்லவா? இப்பொழுது யஜ்ஞனென்னும் பகவானுடைய சரித்ரத்தைச் சொல்லுகிறேன், கேட்பாயாக. 

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

அன்பு நூல்… - மேஜர் நாராயணன்

"யார் ஒருவர் ராம நாமத்தைக் கேட்கிறாரோ அல்லது சொல்கிறாரோ, யார் ஒருவர் ராமாயணத்தை காது குளிர சொல்கிறாரோ அவர்களுக்கு 16 விதமான பேறுகள் நிச்சயம் கிடைத்து விடும் என ஒரு பெரிய லிஸ்ட்டே சொல்றார் மகரிஷி வால்மீகி. அந்த 16 பேறுகள் என்னென்ன தெரியுமா? கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நல்லொழுக்கம், நோயின்மை, முயற்சி, வெற்றி" என்றார் 'மனதிற்கினியான்' என்ற தம் சொற்பொழிவில் மேஜர் நாராயணன்.

“உலகத்துல கஷ்டத்தை அனுபவிக்காத மனிதர்களே இருக்க முடியாது. என்ன கஷ்டம் வந்தாலும் சரி பகவான்கிட்ட சரணாகதி பண்ணிட்டோம்னா போதும், அவை வந்த இடம் தெரியாமல் ஓடி விடும். 'பகவானே நீயே பார்த்துக்கோ எனக்கு ஒண்ணும் தெரியாது'ன்னு total surrender செய்வதுதான் சரணாகதி. அந்த சரணாகதி தத்துவத்துக்கு அதிக அளவு முக்கியத்துவம் ராமாயணத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ராமாயணத்தின் ஒவ்வொரு காண்டத்திலும் சரணாகதி வரும். பால காண்டத்தில் தேவர்கள் சரணாகதி செய்வார்கள், அயோத்யா காண்டத்தில் ரிஷிகள் யாகத்தை காப்பாற்றணும்னு சரணாகதி பண்ணுவார்கள், கிஷ்கிந்தா காண்டத்தில் சுக்ரீவன் ராமரிடத்தில் சரணாகதி பண்ணுவார். சுந்தர காண்டத்தில் ராமரே சமுத்திரராஜனிடம் சரணாகதி பண்ணுவார்.

யுத்த காண்டத்தில் விபீஷண சரணாகதி வரும். 'சரணாகத வத்சலன்'னு ராமருக்கு ஒரு பெயரே உண்டு. ராவணனோடு போர் புரியும்போதுகூட 'இன்று போய் நாளை வா'ன்னு பெருமாள் சொல்றார். என்ன காரணம்? ‘நாளையாவது இவன் சரணாகதி பண்ணிட மாட்டான்னா'ன்னு நினைச்சாராம் ராமர்.

காருண்ய குணத்துக்கு எடுத்துகாட்டாய் விளங்கியவர் ராமர். ஸ்ரீரங்கத்தில் எட்டாம் திருநாள் உற்சவத்தின்போது, பெருமாளுக்கு மோஹினி கோலம். தாயார்போல அலங்காரம் பண்ணிவிடுவார்கள். அவருக்குக் கண் அலங்காரம் பண்ணி முடித்த பராசர பட்டரிடம் பெருமாள் கேட்பாராம்: ‘நான் தாயாரைப் போலவே இருக்கேன் இல்லையா? அதேமாதிரி வைர ஊசி மாலை, புஷ்ப பாவாடை, அட்டிகை, கூந்தல் இதெல்லாம் பார்த்தா தாயார் மாதிரியே இருக்கு இல்லயா?'ன்னு பெருமாள் கேட்கும் பொழுது, பட்டர் சொல்வாராம்: 'இல்லை... உம்மிடம் தாயாரின் கண்களில் தெரியும் அந்தக் கருணை, காருண்யம் இல்லை'னு. அந்தக் காருண்ய ரூபமாக, கருணாமூர்த்தியாகவே இருந்தவர் ராமர்.

நலம் தரும் நாமம்! - உ.வே.கருணாகரச்சாரியார் ஸ்வாமி

இராமாயணத்தில், வானரங்கள் கடலில் போட்ட கற்கள் எல்லாம் மிதந்தது என்று வரும். கற்கள் எப்படி மிதக்கும் எனக் கேள்வி எழுப்பினோமானால், ராம நாமத்தால்தான் கற்கள் எல்லாம் மிதந்தன என்று தெரிய வரும். ஆம்! வானரங்கள் கற்களை கடலில் போடுவதற்கு முன் அதில், 'ராம' என்ற நாமத்தை எழுதித்தான் கடலில் போட்டார்கள். இப்படி ராம நாமத்தின் பெருமையைச் சொல்லிக்கொண்டே போகலாம் என்றார் 'ராம நாம மகிமை' என்ற தம் உபன்யாசத்தில் உ.வே.கருணாகராச்சாரியார்.

"ராம நாமம், நம் பாவத்தை எல்லாம் போக்க வல்லது. எப்படி? நாம் செய்த பாவம் எல்லாம் 'ரா' என்று சொல்லும் பொழுது, வெளியில் போய் விடுகிறது. நாம் செய்த பாவங்கள் என்ன என்பது நமக்குத்தான் நன்றாகத் தெரியும். ஆனால், அதைப் போக்கிக் கொள்ள வழி தெரியாமல்தான் திண்டாடுகிறோம். ஆக, 'ரா' என்று சொல்லும் பொழுது நாம் இத்தனை நாட்கள் செய்த பாவங்கள் எல்லாம் போய் விடுகின்றன. 'ம்' என்று சொல்லும்பொழுது வாய் மூடிக்கொள்வதால் மீண்டும் பாவங்கள் உள்ளே வராது. சம்சாரம் என்னும் பெரிய கடலை, தாண்டவைக்கக் கூடிய பேராற்றல் வாய்ந்தது ராம நாமம்.

எந்த ஊர்ல போய் கோயில்கள்ல ராமர் விக்ரகத்தைப் பார்த்தோமானால், ராமர் நம்மைப் பார்த்து சந்தோஷமாக புன்முறுவல் பூத்த முகத்தோடுதான் காட்சி தருவார். 'புன்னகை புனிதன்' ராமர்.

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 168

ஏழாவது ஸ்கந்தம் - பதினைந்தாவது அத்தியாயம்

(க்ருஹஸ்தாச்ரமத்தைச் சேர்ந்த சில தர்மங்களைக் கூறி மேல் மோக்ஷ தர்மங்களைச் சுருக்கமாய்க் கூறுதல்)

ஸ்ரீநாரதர் சொல்லுகிறார்:- யுதிஷ்டிர மன்னவனே! ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைச்யர்களில் சிலர் தங்கள் தங்கள் வர்ணாச்ரம தர்மங்களை ஊக்கத்துடன் அனுஷ்டிக்கிறார்கள். சிலர், உபவாஸம் முதலிய தவத்தில் ஊக்கமுற்றிருக்கிறார்கள். சிலர், வேதாத்யயனத்திலும், ஓதுவிப்பதிலும் நிலையுற்றிருக்கிறார்கள். சிலர், ஜ்ஞானயோகம், கர்மயோகம் இரண்டிலும் நிலைநின்றிருக்கிறார்கள். அழிவற்ற பலன் விரும்புகிறவன், பித்ருக்களைக் குறித்துச் செய்யும் ச்ராத்தங்களில், அன்னாதிகளை, கர்மயோகத்தை உதவியாகக் கொண்டு, ஜ்ஞான யோகத்தையே முக்யமாகச் செய்பவனுக்குக் கொடுக்கவேண்டும். தேவதைகளைக் குறித்துச் செய்யும் கார்யங்களிலும், ஹவிஸ்ஸுக்களை ஜ்ஞானயோக நிஷ்டனுக்கே கொடுக்க வேண்டும். ஜ்ஞானயோக நிஷ்டன் நேராத பக்ஷத்தில், கர்மயோக நிஷ்டர் முதலிய மற்றவர்களில் ஜ்ஞானாதி தாரதம்யத்தைப் பார்த்துக் கொடுக்க வேண்டும். விச்வேதேவ ஸ்தானத்தில் (விச்வா என்பவரின் பத்து புதல்வர்களான வஸு, ஸத்ய, க்ரது, தக்ஷ, கால, காம, த்ருதி, குரு, புரூரவ, ஆர்த்ரவ என்பவர்கள் விச்வேதேவர்கள் ஆவர்; புரூரவ, ஆர்த்ரவ என்கிற இரண்டு விச்வேதேவர்கள் ஸ்தானத்தில், ச்ராத்தத்தில் ப்ராஹ்மணர்களை புஜிப்பிக்க வேண்டும்) இரண்டு ப்ராஹ்மணர்களையும், பித்ரு ஸ்தானத்தில் மூன்று ப்ராஹ்மணர்களையும், புஜிப்பிக்கவேண்டும். அல்லது, இரண்டு ஸ்தானங்களிலும் ஒவ்வொரு ப்ராஹ்மணனையாவது புஜிப்பிக்க வேண்டும். 

பணப்பெருக்குடையவனும் இப்படியே செய்ய வேண்டுமன்றி, ச்ராத்தத்தில் இதற்குமேல் விஸ்தரித்து ப்ராஹ்மணர்களைப் புஜிப்பிக்கலாகாது. ச்ராத்தத்தில் தெளஹித்ரனைப் புஜிப்பிக்கப் பார்த்தால், அவன் பிள்ளைகளை விட்டு அவனை மாத்ரம் புஜிப்பிக்கத் தோன்றாது. இவ்வாறு பந்துக்கள் பலர் நேருவார்களாகையால், அவர்களை உபேக்ஷிக்க (விலக்க) முடியாமல், ச்ராத்தத்தில் ப்ராஹ்மணர்களை அதிகமாய்ப் புஜிப்பிக்க வேண்டிவரும். அப்படி புஜிப்பிக்கின், தேச காலங்கள், ச்ரத்தை, த்ரவ்யங்கள், ஸத்பாதரங்கள், பூஜை ஆகிய இவையெல்லாம் குணமுள்ளவையாயினும், பந்துக்களுக்குக் கொடுப்பதனால், குணமற்றவையாய் விடும். ஆகையால், அதிகமாய் வளர்த்தலாகாது. முன் சொன்ன புண்ய தேசத்தில், புண்ய காலத்தில், செய்யும்படியாக நேரிட்ட ச்ராத்தத்தில், முனிவர் புசிக்கும் செந்நெல் முதலிய தான்யங்களால் சமைத்த அன்னத்தை ஸ்ரீமஹாவிஷ்ணுவை உத்தேசித்து, ஸத்பாத்ரமான ஒரு ப்ராஹ்மணனுக்குக் கொடுப்பார்களாயின், அது இவ்வுலகத்தில் விருப்பங்களையெல்லாம் கடந்து, கடைசியில் அழிவற்ற பலனான மோக்ஷத்தையும் கொடுக்கும். தேவதைகளுக்கும், ரிஷிகளுக்கும், பித்ருக்களுக்கும், பூதங்களுக்கும், தனக்கும், பந்துக்களுக்கும் அன்னத்தைப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும். அந்தத் தேவர் முதலிய ஸமஸ்த ப்ராணிகளையும், பரமபுருஷ ஸ்வரூபர்களாகவே பாவிக்க வேண்டும். ச்ராத்தத்தில், பித்ருக்கள் முதலியவர்களை உத்தேசித்து மாம்ஸத்தைக் கொடுக்கலாகாது. தானும் தர்மத்தின் உண்மையை ஆராய்ந்து புசிக்கலாகாது. முனிவர்கள் புசிக்கிற செந்நெல் முதலிய தான்யங்களால் சமைத்த அன்னங்களால், பித்ருக்கள் முதலியவர்க்கு மேலான ப்ரீதி விளைவது போலப், பசுக்களை (விலங்குகளை) ஹிம்ஸித்து (கொன்று) மாம்ஸம் கொடுப்பதனால், ப்ரீதி உண்டாகாது. மற்றும், மேலான தர்மத்தை விரும்பும் மனுஷ்யர்களுக்கு, மனோவாக்காயங்களென்கிற (மனது, சொல், உடல் என்கிற) மூன்று கரணங்களாலும் ப்ராணிகளுக்கு த்ரோஹம் (துன்பம்) செய்யாமையாகிற இந்த தர்மத்தைக் காட்டிலும், மேலான தர்மம் மற்றொன்றும் இல்லை. 

சனி, 1 ஆகஸ்ட், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 167

ஏழாவது ஸ்கந்தம் - பதினான்காவது அத்தியாயம்

(க்ருஹஸ்தாச்ரம தர்மங்களைக் கூறுதல்)

யுதிஷ்டிரன் சொல்லுகிறார்:- தேவர்ஷீ! இல்லற வாழ்க்கையில் நிலைநின்ற மனமுடைய என்னைப்போன்றவன், எவ்விதத்தில் இந்த ஸன்யாஸிகள் பெறும் பதவியாகிய மோக்ஷத்தைப் பெறலாமோ, அவ்விதத்தைச் சொல்வீராக.  

ஸ்ரீநாரதர் சொல்லுகிறார்:- மஹாராஜனே! நீ எல்லாம் அறிந்தவனாயினும், உலகத்தவர்களை அனுக்ரஹிக்கும் பொருட்டு நன்றாக வினவினாய். நீ கேட்ட க்ருஹஸ்தாச்ரம தர்மத்தை, உனக்கு நான் சொல்லுகிறேன். இந்தத் தர்மத்தை அனுஷ்டிப்பதனால், புண்ய, பாப கர்மங்கள் தொலைந்து, ஜ்ஞான யோகம் கைகூடும். 

மன்னவனே! க்ருஹஸ்தாச்ரமத்திலிருப்பவன், அவ்வாச்ரமத்திற்குரிய ஸந்தயாவந்தனம் பஞ்ச மஹாயஜ்ஞங்கள் {ப்ரஹ்ம யஜ்ஞ (வேதம் சொல்லுதல்), பித்ரு யஜ்ஞ (தர்ப்பணம்), தேவ யஜ்ஞ (ஹோமம்), பூத யஜ்ஞ (பறவை, விலங்குகளுக்கு பலியிடுதல்), நர யஜ்ஞ (விருந்தோம்பல்) என்பவை பஞ்சமஹாயஜ்ஞங்கள்} முதலிய அவச்யமான கர்மங்களை வாஸுதேவனுக்கு அர்ப்பணமென்னும் புத்தியுடன் அனுஷ்டித்துக் கொண்டு, அவ்வாஸுதேவ பகவானுடைய குணங்களை மனத்தில் நினைந்து, நைந்து, உருகுந் தன்மையுள்ள பாகவதர்களை உபாஸிக்க வேண்டும். 

க்ருஹஸ்தாச்ரம தர்மங்களை அனுஷ்டிக்க வேண்டிய காலம் தவிர மற்ற காலங்களில் சாந்தி முதலிய குணங்கள் அமைந்த ஜனங்களுடன் கூடி, அப்பாகவதர்களிடத்தினின்று அம்ருதம் போன்ற பகவானுடைய அவதார கதைகளை ச்ரத்தையுடன் அடிக்கடி கேட்கவேண்டும். அப்பெரியோர்களின் ஸஹவாஸத்தினால் (தொடர்பினால்), தேஹத்தில் அஹங்காரத்தையும் (நான் என்ற எண்ணத்தையும்), பெண்டிர், பிள்ளை முதலியவர்களிடத்தில் மமகாரத்தையும் (எனது என்ற எண்ணத்தையும்), மெல்ல மெல்லத் துறக்க வேண்டும். ஸ்வப்னத்தினின்று (கனவிலிருந்து) எழுந்தவன், ஸ்வப்னத்தில் (கனவில்)  கண்ட வஸ்துக்களெல்லாம் நிலையற்றவையென்று நினைப்பது போல, தேஹம், வீடு, வாசல், பிள்ளை, பெண்டிர் முதலியவற்றில் அபிமானத்தைத் (பற்றுதலைத்) துறந்து, இவையெல்லாம் நிலையற்றவையென்று நினைக்க வேண்டும். அந்நினைவுடைய பண்டிதன், அத்தேஹம் முதலியவற்றில் மனப்பற்று அற்றவனாயினும், பற்றுடையவன் போல ப்ராண தாரணத்திற்கு (உயிர் இச்சரீரத்தில் இருப்பதற்கு) வேண்டிய காரியத்தை அவற்றால் நடத்திக்கொண்டு, மனுஷ்யத்வம் (மனிதத் தன்மை) முதலியவை அந்தந்த தேஹங்களின் தர்மங்களேயன்றி ஆத்மாவின் தர்மமன்று என்று அனுஸந்திக்கவேண்டும். ஜ்ஞாதிகளும் (பங்காளிகளும்), தாய் தந்தைகளும், பிள்ளைகளும், உடன் பிறந்தவர்களும், நண்பர்களும், மற்றவர்களும் எதைச் சொல்லுகிறார்களோ, எதை விரும்புகிறார்களோ, அதைத்தான் அப்படியே மமகாரமின்றிப் (எனது என்ற எண்ணமின்றி) புகழவேண்டும்.