ஒன்பதாவது ஸ்கந்தம் - இரண்டாவது அத்தியாயம்
(கரூஷகன் முதலிய மனுபுத்ரர்கள் ஐவரின் வம்சங்களைக் கூறுதல்)
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு தன் பிள்ளையாகிய ஸுத்யும்னன் வனத்திற்குப்போகையில், வைவஸ்வதமனு, பிள்ளைகள் பிறக்க வேண்டுமென்று விரும்பி, யமுனா நதிக்கரையில் நூறாண்டுகள் தவம்செய்தான். அப்பால் அந்தமனு, பிள்ளைக்காக ஸர்வேச்வரனும், ஸ்வதந்த்ரனும், தேவதேவனும், தன்னைப் பற்றினாருடைய வருத்தங்களைப் போக்கும் தன்மையனுமாகிய பகவானை ஆராதித்தான். அனந்தரம் தன்னோடு ஒத்தவர்களான இக்ஷ்வாகு முதலிய பத்துப் பிள்ளைகளைப் பெற்றான். அவர்களில் வ்ருஷத்ரனென்பவன் தன் குருவினால் பசுக்களைப் பாதுகாக்கும்படி ஏற்படுத்தப்பட்டான். அவனும் அப்படியே ராத்ரியில் வீராஸனத்தில் உட்கார்ந்து, மனவூக்கத்துடன் கையில் கத்தியை ஏந்தி, புலி முதலிய துஷ்ட (கொடிய) ஜந்துக்களிடத்தினின்று பசுக்களைப் பாதுகாத்து வந்தான்.
இப்படியிருக்கையில், ஒருநாள் ராத்ரியில் மேகம் மழைபெய்து கொண்டிருக்க, ஒரு பெரும் புலி தொழுவத்தில் நுழைந்தது. அப்பொழுது, அதைக்கண்டு படுத்துக் கொண்டிருக்கும் பசுக்கள் பயந்து, எழுந்து தொழுவத்தில் திரியத் தொடங்கின. பலிஷ்டமாகிய (பலம் பொருந்திய) அந்தப்புலி, ஒரு பசுவைப் பிடித்துக்கொண்டது. பிடியுண்ட பசு, வருந்திக் கதறலிட்டது. வ்ருஷத்ரன் அந்தப் பசுவின் கதறலைக்கேட்டு, அருகே சென்றான். ராத்ரியில் மேகங்கள் மூடிக்கொண்டிருந்தபடியால், நக்ஷத்ரங்களும் தோன்றாமல், மறைந்திருக்கும் தருணத்தில், அவன் இது பசுவென்றும் இது புலியென்றும் அறியாமல், புலியென்னும் எண்ணத்தினால் கபில (சிவப்பு) நிறமுடைய, பசுவின் தலையைக் கத்தியைக்கொண்டு பலத்தினால் வெட்டினான். பசுவின் தலையில் கத்தியை நோக்கி அடிக்கும்பொழுது, அந்தக் கத்தியின் நுனியானது பட்டு, புலியின் காது அறுப்புண்டது. புலி அதனால், மிகவும் பயந்து, வழியெல்லாம் ரத்தத்தைப் பெருக்கிக்கொண்டு, தொழுவத்தின்றும் ஓடிப்போயிற்று.
அப்பால், சத்ரு வீரர்களை அழிக்கும் திறமையமைந்த வ்ருஷத்ரன், புலி அடியுண்டு மாண்டதென்று நினைத்துக் கொண்டிருக்கையில், பொழுதுவிடிந்து உதயமானபின்பு, தன்னால் அடியுண்டு மாண்டு விழுந்திருக்கின்ற பசுவைக்கண்டு மிகவும் வருந்தினான். அவன் செய்ய வேண்டுமென்ற எண்ணமின்றி அறியாமையால் அபராதம் (தவறு) செய்திருப்பினும், குலாசார்யரான வஸிஷ்டர் அவனைப் பார்த்து “நீ க்ஷத்ரியாதமன் (க்ஷத்ரியர்களில் மிகவும் தாழ்ந்தவன்). இனி, க்ஷத்ரியாதமனாகவும் கூட நீ இருக்கமாட்டாய். நீ இந்தப் பாபத்தினால், கீழ்மகனாகக் கடவாய்” என்று சபித்தார்.
இவ்வாறு தன் குருவினால் சபிக்கப்பட்ட வ்ருஷத்ரன், கைகளைக்குவித்து, அப்படியே அந்தச் சாபத்தைப் பெற்றுக்கொண்டான். அப்பால், வீரனாகிய வ்ருஷத்ரன், ஜிதேந்திரியனாகி (இந்த்ரியங்களை வென்று), முனிவர்களுக்கு இஷ்டமான பகவத் உபாஸனமாகிற வ்ரதத்தை ஏற்றுக்கொண்டான். அவன் சில நாட்களில் ஸர்வ பூதங்களுக்கும் அந்தராத்மாவாயிருப்பவனும், ஸமஸ்த தோஷங்களும் தீண்டப்பெறாதவனும், பரப்ரஹ்மமென்று கூறப்படுகின்றவனுமாகிய, பரமபுருஷனிடத்தில் சிறந்த ஜ்ஞான நிஷ்டை (உறுதியான அறிவு) உண்டாகப் பெற்று, ஸமஸ்த பூதங்களுக்கும் நண்பனாகி, ஸுக, துக்கங்கள் இரண்டையும் துல்லியமாகப் பாவிக்கும் தன்மையனானான். இஹலோக (இந்த உலகத்து) போகங்களிலும் (இன்பங்களிலும்), பரலோக (ஸ்வர்க்கம் முதலிய மற்ற உலக) போகங்களிலும் (இன்பங்களிலும்) பற்றற்று, ராகம் (விருப்பு, வெறுப்பு) முதலிய தோஷங்களால் மனம் கலங்கப்பெறாமல், இந்த்ரியங்கள் (புலன்கள்) எல்லாம் நினைத்தபடி அடங்கப்பெற்று, தேஹத்தை ஒழிய (தன் உடலைத் தவிர) அதைச்சேர்ந்த மற்ற பரிக்ரஹங்கள் (சுற்றம், சொத்து, வேலைக்காரர்கள்) எவையுமின்றி, தெய்வாதீனமாய்க் கிடைத்த அன்னாதிகளால் (உணவினால்) தேஹதாரணம் (உடலை நிலைநிறுத்தி) பண்ணிக் கொண்டிருந்து பரமாத்மாவினிடத்தில் ஆத்மாவை அர்ப்பணம் செய்து, தான் பரமாத்மாவுக்கு சேஷப்பட்டவனென்றும் (அடிமை என்றும்), தன்னுடைய ஸத்தாதிகளெல்லாம் (இருப்பு, நீடிப்பு, செயல் அனைத்தும்) அந்தப் பரமாத்ம அதீனமென்றும் (பகவானுக்கு உட்பட்டது என்றும்) அனுஸந்தித்து, மஹானந்த ரூபமான பகவத் உபாஸனமாகிற ஜ்ஞானத்தினால் ஸந்தோஷம் அடைந்து, மற்ற விஷயங்களில் சிறிதும் விருப்பின்றி மனவூக்கமுற்று, மாறாத பக்தியோகத்தில் நிலைநின்று, மூடர், குருடர், செவிடர் இவர்களின் ஆகாரம் (வடிவு) உடையவனாகி, இப்பூமியில் திரிந்து கொண்டிருந்தான்.