திங்கள், 28 செப்டம்பர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 195

 ஒன்பதாவது ஸ்கந்தம் - மூன்றாவது அத்தியாயம்

(சர்யாதியின் வம்சத்தைக் கூறுதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மனுவின் பிள்ளையாகிய சர்யாதி என்னும் மன்னவன், வேதங்களின் பொருள்களை ஆராய்ந்தறிவதில் ஊக்கமுடையவனாயிருந்தான். அவன், ஆங்கிரஸர்களின் ஸத்ரத்தில் (நீண்ட நாட்கள் செய்யப்படும் யாகம்) இரண்டாவது நாள் செய்யவேண்டிய கர்மத்தையெல்லாம் சொன்னான். அவனுக்குத் தாமரையிதழ் போன்ற கண்களுடைய ஸுகன்யை என்னும் ஒரு கன்னிகை இருந்தாள். அவன் அக்கன்னிகையுடன் வனத்திற்குச் சென்று, அங்கு சயவனருடைய ஆச்ரமத்திற்குப் போனான். அந்த ஸுகன்யை, ஸகிகளால் (தோழிகளால்) சூழப்பட்டு, வனத்தில் வ்ருக்ஷங்களைத் (மரங்களைத்) தேடிக்கொண்டு திரிகையில், ஒரு புற்றின் வாயில் மின்மினிப்பூச்சிகள் போன்ற இரண்டு தேஜஸ்ஸுக்களைக் (ஒளியைக்) கண்டாள். இளம்பருவமுடைய அந்த ஸுகன்யை, ஸகிகளால் (தோழிகளால்) தூண்டப்பட்டு, அறியாமையினால் அந்தத் தேஜஸ்ஸுக்களை முள்ளால் குத்தினாள். அப்பொழுது, அந்தப்புற்றின் வாயினின்று வெகுவாக ரக்தம் பெருகிற்று. அந்த க்ஷணமே ஸைன்யங்களுக்கெல்லாம் (படைகளுக்கெல்லாம்) மலமூத்ரங்கள் தடைப்பட்டது. அதைக்கண்டு ராஜர்ஷியாகிய சர்யாதி, வியப்புற்று, தன் வேலைக்காரர்களைப் பார்த்து மொழிந்தான்.

சர்யாதி சொல்லுகிறான்:- நீங்கள் பார்க்கவராகிய ச்யவனருக்கு ஏதேனும் அபராதம் (தவறு) செய்தீர்களா? நம்மைச் சேர்ந்த ப்ராணி எதுவாயினும், ஆச்ரமத்திற்கு ஏதேனும் கெடுதி செய்திருக்க வேண்டும். இது நிச்சயம். இல்லாத பக்ஷத்தில் இப்படிப்பட்ட உபத்ரவம் (தீங்கு, துக்கம்) உண்டாகமாட்டாது.

ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 194

ஒன்பதாவது ஸ்கந்தம் - இரண்டாவது அத்தியாயம்

(கரூஷகன் முதலிய மனுபுத்ரர்கள் ஐவரின் வம்சங்களைக் கூறுதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு தன் பிள்ளையாகிய ஸுத்யும்னன் வனத்திற்குப்போகையில், வைவஸ்வதமனு, பிள்ளைகள் பிறக்க வேண்டுமென்று விரும்பி, யமுனா நதிக்கரையில் நூறாண்டுகள் தவம்செய்தான். அப்பால் அந்தமனு, பிள்ளைக்காக ஸர்வேச்வரனும், ஸ்வதந்த்ரனும், தேவதேவனும், தன்னைப் பற்றினாருடைய வருத்தங்களைப் போக்கும் தன்மையனுமாகிய பகவானை ஆராதித்தான். அனந்தரம் தன்னோடு ஒத்தவர்களான இக்ஷ்வாகு முதலிய பத்துப் பிள்ளைகளைப் பெற்றான். அவர்களில் வ்ருஷத்ரனென்பவன் தன் குருவினால் பசுக்களைப் பாதுகாக்கும்படி ஏற்படுத்தப்பட்டான். அவனும் அப்படியே ராத்ரியில் வீராஸனத்தில் உட்கார்ந்து, மனவூக்கத்துடன் கையில் கத்தியை ஏந்தி, புலி முதலிய துஷ்ட (கொடிய) ஜந்துக்களிடத்தினின்று பசுக்களைப் பாதுகாத்து வந்தான். 

இப்படியிருக்கையில், ஒருநாள் ராத்ரியில் மேகம் மழைபெய்து கொண்டிருக்க, ஒரு பெரும் புலி தொழுவத்தில் நுழைந்தது. அப்பொழுது, அதைக்கண்டு படுத்துக் கொண்டிருக்கும் பசுக்கள் பயந்து, எழுந்து தொழுவத்தில் திரியத் தொடங்கின. பலிஷ்டமாகிய (பலம் பொருந்திய) அந்தப்புலி, ஒரு பசுவைப் பிடித்துக்கொண்டது. பிடியுண்ட பசு, வருந்திக் கதறலிட்டது. வ்ருஷத்ரன் அந்தப் பசுவின் கதறலைக்கேட்டு, அருகே சென்றான். ராத்ரியில் மேகங்கள் மூடிக்கொண்டிருந்தபடியால், நக்ஷத்ரங்களும் தோன்றாமல், மறைந்திருக்கும் தருணத்தில், அவன் இது பசுவென்றும் இது புலியென்றும் அறியாமல், புலியென்னும் எண்ணத்தினால் கபில (சிவப்பு) நிறமுடைய, பசுவின் தலையைக் கத்தியைக்கொண்டு பலத்தினால் வெட்டினான். பசுவின் தலையில் கத்தியை நோக்கி அடிக்கும்பொழுது, அந்தக் கத்தியின் நுனியானது பட்டு, புலியின் காது அறுப்புண்டது. புலி அதனால், மிகவும் பயந்து, வழியெல்லாம் ரத்தத்தைப் பெருக்கிக்கொண்டு, தொழுவத்தின்றும் ஓடிப்போயிற்று. 

அப்பால், சத்ரு வீரர்களை அழிக்கும் திறமையமைந்த வ்ருஷத்ரன், புலி அடியுண்டு மாண்டதென்று நினைத்துக் கொண்டிருக்கையில், பொழுதுவிடிந்து உதயமானபின்பு, தன்னால் அடியுண்டு மாண்டு விழுந்திருக்கின்ற பசுவைக்கண்டு மிகவும் வருந்தினான். அவன் செய்ய வேண்டுமென்ற எண்ணமின்றி அறியாமையால் அபராதம் (தவறு) செய்திருப்பினும், குலாசார்யரான வஸிஷ்டர் அவனைப் பார்த்து “நீ க்ஷத்ரியாதமன் (க்ஷத்ரியர்களில் மிகவும் தாழ்ந்தவன்). இனி, க்ஷத்ரியாதமனாகவும் கூட நீ இருக்கமாட்டாய். நீ இந்தப் பாபத்தினால், கீழ்மகனாகக் கடவாய்” என்று சபித்தார். 

இவ்வாறு தன் குருவினால் சபிக்கப்பட்ட வ்ருஷத்ரன், கைகளைக்குவித்து, அப்படியே அந்தச் சாபத்தைப் பெற்றுக்கொண்டான். அப்பால், வீரனாகிய வ்ருஷத்ரன், ஜிதேந்திரியனாகி (இந்த்ரியங்களை வென்று), முனிவர்களுக்கு இஷ்டமான பகவத் உபாஸனமாகிற வ்ரதத்தை ஏற்றுக்கொண்டான். அவன் சில நாட்களில் ஸர்வ பூதங்களுக்கும் அந்தராத்மாவாயிருப்பவனும், ஸமஸ்த தோஷங்களும் தீண்டப்பெறாதவனும், பரப்ரஹ்மமென்று கூறப்படுகின்றவனுமாகிய, பரமபுருஷனிடத்தில் சிறந்த ஜ்ஞான நிஷ்டை (உறுதியான அறிவு) உண்டாகப் பெற்று, ஸமஸ்த பூதங்களுக்கும் நண்பனாகி, ஸுக, துக்கங்கள் இரண்டையும் துல்லியமாகப் பாவிக்கும் தன்மையனானான். இஹலோக (இந்த உலகத்து) போகங்களிலும் (இன்பங்களிலும்), பரலோக (ஸ்வர்க்கம் முதலிய மற்ற உலக) போகங்களிலும் (இன்பங்களிலும்) பற்றற்று, ராகம் (விருப்பு, வெறுப்பு) முதலிய தோஷங்களால் மனம் கலங்கப்பெறாமல், இந்த்ரியங்கள் (புலன்கள்) எல்லாம் நினைத்தபடி அடங்கப்பெற்று, தேஹத்தை ஒழிய (தன் உடலைத் தவிர) அதைச்சேர்ந்த மற்ற பரிக்ரஹங்கள் (சுற்றம், சொத்து, வேலைக்காரர்கள்) எவையுமின்றி, தெய்வாதீனமாய்க் கிடைத்த அன்னாதிகளால் (உணவினால்) தேஹதாரணம் (உடலை நிலைநிறுத்தி) பண்ணிக் கொண்டிருந்து பரமாத்மாவினிடத்தில் ஆத்மாவை அர்ப்பணம் செய்து, தான் பரமாத்மாவுக்கு சேஷப்பட்டவனென்றும் (அடிமை என்றும்), தன்னுடைய ஸத்தாதிகளெல்லாம் (இருப்பு, நீடிப்பு, செயல் அனைத்தும்) அந்தப் பரமாத்ம அதீனமென்றும் (பகவானுக்கு உட்பட்டது என்றும்) அனுஸந்தித்து, மஹானந்த ரூபமான பகவத் உபாஸனமாகிற ஜ்ஞானத்தினால் ஸந்தோஷம் அடைந்து, மற்ற விஷயங்களில் சிறிதும் விருப்பின்றி மனவூக்கமுற்று, மாறாத பக்தியோகத்தில் நிலைநின்று, மூடர், குருடர், செவிடர் இவர்களின் ஆகாரம் (வடிவு) உடையவனாகி, இப்பூமியில் திரிந்து கொண்டிருந்தான். 

சனி, 26 செப்டம்பர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 193

 நவம (ஒன்பதாவது) ஸ்கந்தம் – முதல் அத்தியாயம்

(வைவஸ்வத மனுவின் பிள்ளையான ஸுத்யும்னன் ஒரு வனத்தில் ப்ரவேசித்துப் பெண்ணுருவம் பெறுதலும், அவ்வனத்தில் ப்ரவேசித்தவர் அனைவரும் பெண்ணுருவம் பெறுதற்குக் காரணம் கூறுதலும்)

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- மஹானுபாவரே! மன்வந்தரங்களையெல்லாம் கேட்டேன். அளவற்ற வீரச்செயல்களையுடைய பகவான், அம்மன்வந்தரங்களில் செய்த வீர்யங்களையும் சொல்லக் கேட்டேன். ஸத்யவ்ரதனென்னும் ராஜர்ஷி த்ரமிடதேசங்களுக்கு ப்ரபுவாயிருந்தானென்றும், அவன் முன்கல்பத்தின் முடிவில் பரமபுருஷனைப் பணிந்து, ஜ்ஞானம் பெற்றானென்றும், அவன் இக்கல்பத்தில் விவஸ்வானுடைய பிள்ளையாகப் பிறந்து, ச்ராத்த தேவனென்னும் பெயர் பெற்று, மனுவாயிருக்கும் அதிகாரத்தைப் பெற்றானென்றும், அவனே வைவஸ்வதமனுவென்றும் வழங்கி வருகிறானென்றும், இக்ஷ்வாகு முதலிய மன்னவர்கள் அவனுடைய பிள்ளைகளென்றும், நீர் சொல்லக் கேட்கலானேன். 

ப்ரஹ்மரிஷியே! தனித்தனியே அவர்களுடைய வம்சங்களையும் அவ்வம்சங்களைத் தொடர்ந்த சரித்ரங்களையும், எங்களுக்குச் சொல்ல வேண்டும். மஹாபாகரே! நாங்கள் அதனைக் கேட்கவேண்டுமென்று விருப்பமுற்றிருக்கிறோம். அந்த வைவஸ்வத மனுவின் வம்சத்தில் புண்யமான புகழுடையவர்களும், பெரியவர்களுமாக முன்பு எவரெவர் கழிந்தார்களோ, இனி எவரெவர் பிறக்கப்போகிறார்களோ, இப்பொழுது எவரெவர் இருக்கிறார்களோ, அவர்களுடைய ஸமஸ்தமான விக்ரமங்களையும் எங்களுக்குச் சொல்வீராக.

ஸ்ரீஸூதர் சொல்லுகிறார்:- ப்ரஹ்ம வித்துக்களான அந்தணர்களின் ஸபையில் மேலான தர்மங்களை அறிந்த மஹானுபாவராகிய சுகமுனிவர் பரீக்ஷித்து மன்னவனால் இவ்வாறு வினவப்பெற்று, மேல்வருமாறு கூறினார்.

ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 192

 எட்டாவது ஸ்கந்தம் – இருபத்து நான்காவது அத்தியாயம்

மத்ஸ்யாவதார வ்ருத்தாந்தம் 

(ஸத்யவ்ரத மன்னவன் மேன்மேலும் உருவம் வளர்ந்து வரப்பெற்ற மத்ஸ்ய (மீன்) ரூபியான பகவானை ஸ்தோத்ரம் செய்தல்) 

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- மஹானுபாவரே! அற்புதமான செயல்களையுடைய பகவானுடைய முதல் அவதாரத்தின் சரித்ரத்தைக் கேட்க விரும்புகிறோம். அவன் முதலில் ஆச்சர்யமான ஒரு மத்ஸ்யம் (மீன்) போலத் தோன்றினானென்று கேள்வி. தான் ஸர்வேச்வரனாயிருந்தும் காமத்திற்கு உட்பட்ட ஜீவன் போலத் தமோகுணமே இயற்கையாயிருப்பதும், பெருங்கோபமுடையதும் உலகங்களால் நிந்திக்கப்படுவதுமான மத்ஸ்ய (மீன்) உருவத்தை எந்த ப்ரயோஜனத்திற்காகக் (பயனுக்காகக்) கொண்டானோ, அதைக் கேட்க விரும்புகிறோம். ஜ்ஞானாதி குணங்கள் நிறைந்த முனிவரே! இவற்றையெல்லாம் எங்களுக்கு உள்ளபடி மொழிவீராக. உத்தமச்லோகனான பகவானுடைய சரித்ரம் ஸமஸ்தலோகங்களின் பாபத்தையும் போக்குமல்லவா?

ஸுதர் சொல்லுகிறார்:- பரீக்ஷித்து மன்னவனால் இவ்வாறு வினவப்பெற்ற ஸ்ரீசுகமுனிவர் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் மத்ஸ்ய (மீன்) அவதார வ்ருத்தாந்தத்தை மொழிந்தார்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஈச்வரன் பசுக்களையும், ப்ராஹ்மணர்களையும், தேவதைகளையும் ஸாதுக்களையும், வேதங்களையும் பாதுகாக்கும் பொருட்டும், தர்மம், அர்த்தம் முதலிய புருஷார்த்தங்களை அவர்களுக்கு நிறைவேற்றிக்கொடுக்கும் பொருட்டும் மத்ஸ்யாதி (மீன் முதலிய) உருவங்களை ஏற்றுக்கொள்கிறான். அவன் மேன்மையும் தாழ்மையுமுடைய தேவ மனுஷ்யாதி பூதங்களில் பிறந்து அவற்றைப்போலச் செயல்களைச் செய்துகொண்டிருப்பினும் கர்மத்தினால் விளைகின்ற தேவ மனுஷ்யாதி தாரதம்யத்தை (ஏற்றத்தாழ்வுகளை) ஏற்றுக்கொள்கிறதில்லை. காற்று எல்லா இடங்களிலும் வ்யாபித்திருப்பினும் அவ்வவற்றின் தோஷங்கள் தீண்டப் பெறாதிருப்பதுபோல ஈச்வரனும் தேவ மனுஷ்யாதி யோனிகளில் (குலங்களில்) பிறந்து அவற்றோடொத்த உருவம் செயல் முதலியன உடையவனாயினும் அவற்றின் தோஷங்கள் தன்மேல் தீண்டப் பெறுவதில்லை. அவன் ஸமஸ்த கல்யாண குணங்களும் அமைந்து ப்ராக்ருதமான ஸத்வாதி குணங்களின் ஸம்பந்தமற்றவனுமாயிருப்பான். 

முன் கல்பத்தின் முடிவில் ப்ராஹ்மமென்னும் நைமித்திக ப்ரளயம் (சதுர்முக ப்ரஹ்மாவின் ஒரு பகல் முடிந்து இரவு நேரத்தில் ஏற்படும் அழிவு) உண்டாயிற்று. அப்பொழுது பூலோகம் முதலிய மூன்று லோகங்களும் ஸமுத்ரத்தில் முழுகின. பகற்பொழுது முடிந்து ராத்ரிகாலம் நேரிட்டமையால் உறக்கம் நேரிட்டுப் படுத்துக்கொள்ள விரும்புகின்ற ப்ரஹ்மதேவனுடைய முகத்தினின்றும் நழுவின வேதங்களை அருகிலிருந்த ஹயக்ரீவனென்னும் தானவேந்த்ரன் பறித்துக் கொண்டு போயினான். அப்பொழுது தானவ ச்ரேஷ்டனாகிய ஹயக்ரீவன் செய்த கார்யத்தை அறிந்து ஸர்வேச்வரனான பகவான் அவ்வஸுரனைக் கொன்று வேதங்களை ப்ரஹ்மாவுக்கு மீட்டுக்கொடுக்கும் பொருட்டு மத்ஸ்ய (மீன்) உருவம் கொண்டான். 

கீழ் நடந்த அந்தக் கல்பத்தில் ஸத்யவ்ரதனென்னும் ஒரு ராஜர்ஷி இருந்தான். அவன் கோபமில்லாமை முதலிய ஆத்ம குணங்களெல்லாம் நிறைந்து ஸ்ரீமந்நாராயணனையே பரமகதியாகப் பற்றி ஜலத்தையே ஆஹாரமாகக் கொண்டு தவம்புரிந்து வந்தான். அந்த ஸத்யவ்ரதனென்னும் ராஜர்ஷியே இந்த மஹாகல்பத்தில் விவஸ்வானுக்குப் பிள்ளையாகப் பிறந்து ச்ராத்ததேவனென்னும் பெயர் பெற்றுப் பகவானால் மனுவாயிருக்கும் அதிகாரத்தில் ஏற்படுத்தப்பட்டான். அந்த ஸத்யவ்ரதன் ஒருகால் க்ருதமாலையென்னும் (வைகை) நதியில் ஜலதர்ப்பணம் பண்ணிக்கொண்டிருக்கையில், அவன் கைஜலத்தில் ஒரு மத்ஸ்யம் (மீன்) தோன்றிற்று. அப்பால் த்ரமிட (தமிழ்) தேசத்து அரசனாகிய அந்த ஸத்யவ்ரதன் தன் கையிலிருக்கும் அம்மத்ஸ்யத்தை (மீனை) ஜலத்துடன் நதி ஜலத்தில் விட்டான். அவன் மிக்க மன இரக்கமுடையவன். அந்த மன்னவனை நோக்கி அந்த மத்ஸ்யம் (மீன்) மிகவும் மன இரக்கத்திற்கிடமான இந்த வார்த்தைகளைச் சொல்லிற்று.

சனி, 19 செப்டம்பர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 191

 எட்டாவது ஸ்கந்தம் – இருபத்து மூன்றாவது அத்தியாயம்

(பலி ஸுதலம் (பூமிக்குக் கீழ் இருக்கும் உலகம்) போய்ச் சேருதலும், இந்த்ரன் ஸ்வர்க்கம் சேர்ந்து ஸந்தோஷமுற்றிருத்தலும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மஹானுபாவனாகிய பலி ஸமஸ்த ஸாதுக்களாலும் புகழப்பட்டு, பக்தி தலையெடுத்து, ஆநந்த நீர்களால் கண்கள் கலங்கவும் உரை தழதழக்கவும் பெற்று இவ்வாறு மொழிந்த புராண புருஷனாகிய பகவானை நோக்கி மொழிந்தான்.

பலி சொல்லுகிறான்:- ஆ! என்ன ஆச்சர்யம்! உன்னை வணங்குவதற்காகச் செய்யும் முயற்சியே உன் பக்தர்கள் விரும்பும் ப்ரயோஜனத்தை நிறைவேற்றுவதில் தவறாதிருக்கின்றது. நான் உன்னை வணங்க முயன்ற மாத்ரத்தில் ஸத்வகுணம் தலையெடுத்த லோகபாலர்களான இந்த்ரன் முதலிய தேவதைகளுக்கும்கூட இதுவரையில் ஒருகாலும் கிடைக்காத உன் அநுக்ரஹம் அஸுரனும், நீசனுமாகிய (தாழ்ந்தவனுமான) எனக்கு நேர்ந்தது.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மஹாபலி இவ்வாறு மொழிந்து பகவானை நமஸ்கரித்து ப்ரஹ்மதேவனையும், ருத்ரனையும் வணங்கி வருண பாசங்களினின்றும் விடுபட்டு மனக்களிப்புற்றுத் தன் பரிவாரங்களோடு ஸுதலலோகம் (பூமிக்குக் கீழ் இருக்கும் உலகம்) போக முயன்றான். பகவான் இவ்வாறு பலியிடத்தினின்றும் ஸ்வர்க்கத்தை மீட்டு இந்தரனுக்குக் கொடுத்து அதிதியின் விருப்பத்தை நிறைவேற்றி இந்திரனுக்குத் தம்பியாகையால் உபேந்தரனென்று பெயர் பெற்று ஜகத்தையெல்லாம் பாதுகாத்து வந்தான். அப்பொழுது, ப்ரஹ்லாதன் தன் வம்சத்தை வளரச் செய்பவனும், தன் பேரனுமாகிய பலி பகவானுடைய அனுக்ரஹம் பெற்றுப் பாசங்களினின்றும் விடுபட்டுத் திகழ்வதைக் கண்டு பக்தியினால் வணக்கமுற்றுப் பகவானை நோக்கி இவ்வாறு மொழிந்தான்.

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 190

 எட்டாவது ஸ்கந்தம் – இருபத்து இரண்டாவது அத்தியாயம்

(பகவான் பலிக்கு அருள்புரிந்து அவனை ஸுதலம் என்னும் விவரலோகத்தில் (கீழ் உலகத்தில்) இருத்திப் பலவரங்களைக் கொடுத்துத் தன்னையும் அவனுக்கு த்வாரபாலகனாகச் செய்தல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மன்னவனே! பலி இவ்வாறு பகவானால் வஞ்சிக்கப்பட்டு ஸத்யத்தினின்று நழுவும்படி எவ்வளவு முயற்சி செய்யினும் மனவுறுதி மாறப்பெறாமல் சிறிதும் தழதழப்பின்றிக் கம்பீரமாக இவ்வாறு மொழிந்தான்.

பலி சொல்லுகிறான்:- மேன்மையுடைய ப்ரஹ்மாதிகளாலும் புகழத்தகுந்த மிக்க புகழுடையவனே! தேவதைகளில் சிறந்தவனே! நீ என் வார்த்தையைப் பொய்யென்று நினைப்பாயாயின், அதை மெய்யாகச் செய்கிறேன். அது வஞ்சனமாக (ஏமாற்றமாக) வேண்டாம். உன் மூன்றாமடியை என் தலைமேல் வைப்பாயாக. நான் நரகத்திற்காவது, ஸ்தானத்தினின்று நழுவினதற்காவது, வருணபாசங்களால் கட்டுண்டமைக்காவது, மஹத்தான துக்கம் நேர்ந்தமைக்காவது, சொத்தையெல்லாம் இழந்தமைக்காவது நீ என்னை நிக்ரஹம் செய்ததற்காவது (தண்டித்ததற்காவது) பயப்படவில்லை. பொய் பேசுவதற்கும் அபகீர்த்திக்குமே (பழிக்குமே) நான் பயப்படுகின்றேன். நான், ப்ராணிகளுக்கு மேன்மையுடையவர்களால் நேர்ந்த தண்டனை புகழத் தகுந்தது என்று நினைக்கிறேன். இப்படிப்பட்ட தண்டனையைத் தாய், தந்தையர்களாவது, உடன் பிறந்தவர்களாவது, நண்பர்களாவது எனக்குச் செய்யமாட்டார்கள். நீ அஸுரர்களான எங்களுக்குக் கண்மறைவிலிருந்து ஹிதம் (நன்மை) செய்யும் குருவாயிருக்கின்றாய். சௌர்யம் (சூரத்தனம்), வீர்யம் (வீரம்) முதலிய பல குணங்களால் ஏற்பட்ட மதங்களால் (கர்வத்தால்) கண் தெரியாதிருக்கின்ற எங்களுக்கு அந்த மதங்களை (கர்வங்களை) எல்லாம் போக்கும்படியான கண்ணைக் கொடுத்தாற் போலிருக்கின்றாய். மற்றும், பல அஸுரர்கள் உன்னிடத்தில் த்வேஷம் (பகைமை) வேரூன்றி மாறாதிருந்து அனன்ய ப்ரயோஜனர்களான (பகவானைத் தவிர்த்து வேறு பலன் எதையும் விரும்பாத) பக்தியோக நிஷ்டர்களுக்கும் கிடைக்க அரிதான ஸித்தியைப் பெற்றார்கள். நீ மஹானுபாவன். உன் செயல்கள் அற்புதமானவை; எண்ணிறைந்தவை. அவற்றை இப்படிப்பட்டவையென்று எவர்க்கும் சிந்திக்க முடியாது. அப்படிப்பட்ட உன்னால் நான் நிக்ரஹிக்கப்பட்டு (தண்டிக்கப்பட்டு) வருணபாசங்களால் கட்டுண்டும் சிறிதும் லஜ்ஜிக்கவில்லை (வெட்கப்படவில்லை); துக்கிக்கவுமில்லை. நீ என்னை நிக்ரஹித்ததும் (தண்டித்ததும்), கட்டினதும் எனக்குப் புகழே. மற்றும், என் பாட்டனாகிய ப்ரஹ்லாதன் உன் பக்தர்களால் மிகவும் புகழப்பட்டவன். அவனுடைய கீர்த்தி எங்கும் நிறைந்திருக்கின்றது. அவன் தன் தந்தையும் உனக்குச் சத்ருவுமான ஹிரண்யகசிபுவினால் பலவாறு துக்கங்களை மூட்டி ஹிம்ஸிக்கப்பட்டும் உன்னையே ஸகலவித பந்துவாகவும் (உறவாகவும்) மேலான புருஷார்த்தமாகவும் பற்றி, “மரணம் அடையும் தன்மையுள்ள ஜீவனுக்கு இந்தத் தேஹத்தினால் என்ன ப்ரயோஜனம்? ஆயுள் கழிவது மாத்ரமேயன்றி மற்றொன்றுமில்லை. இது எத்தனை காலம் இருந்தாலும் கடைசியில் துறக்கப்போகின்றதே அன்றி, விடாமல் கூடவே இருக்கப் போகின்றதில்லை. பணத்தைப் பங்கிட்டுக்கொண்டு போகின்றவர்களாகையால் திருடர்கள் போன்ற பந்துக்களாலாவது (உறவினர்களாலும்) என்ன ப்ரயோஜனம்? ஸம்ஸாரத்தை மேன்மேலும் வளர்த்துக்  கொள்வதற்குக் காரணமான பார்யையால்தான் (மனைவியால்தான்) என்ன ப்ரயோஜனம்? வீடு, வாசல் முதலியவற்றால் தான் என்ன ப்ரயோஜனம்!” என்று நிச்சயித்து மஹா குணமுடையவனும், பேரறிஞனும், பாகவத ச்ரேஷ்டனுமாகிய அந்த ப்ரஹ்லாதன் ஸம்ஸார ஜனங்களுடைய ஸஹவாஸத்தினின்றும் (தொடர்பிலிருந்தும்) பயந்து, நீ  அவனது தைத்ய குலத்தையெல்லாம் அழிப்பவனாயினும், எவ்விதத்திலும் பயத்திற்கிடமில்லாத உன் பாதாரவிந்தத்தையே நிலைநின்ற புருஷார்த்தமாக நினைத்து அதையே சரணம் அடைந்தான். அப்படியே நானும் தெய்வாதீனமாய் என் சத்ருவாகிய (எதிரியாகிய) உன் ஸமீபத்திற்கு வரும்படி செய்யப்பட்டேன். மற்றும், இவ்வுலகத்தில் புருஷன் எதனால் மதி (புத்தி) கெட்டுத் தான் யமனுக்கு அருகாமையில் இருக்கின்ற தன் பிழைப்பை நிலையற்றதென்று அறிய முடியாதிருக்கிறானோ, அப்படிப்பட்ட செல்வப் பெருக்கினின்றும் என்னை நீ பலாத்காரமாக நழுவச் செய்தாய். ஆகையால் இவ்வாறு மஹோபகாரம் செய்த உன் பாதார விந்தங்களையே நானும் சரணம் அடைகின்றேன்.

வியாழன், 17 செப்டம்பர், 2020

திருப்பதி சென்றால், திருப்பம் உருவாகும், விருப்பம் நிறைவேறும்! - திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்

கோடிக்கணக்கான பக்தர்களின் குறைகளைத் தீர்த்து வைத்து அவர்களின் குடும்பங்களில் குதூகலம் நிறையச் செய்யும் வரப்பிரசாத மூர்த்தியாய் திகழ்கின்றார் திருப்பதி ஸ்ரீவெங்கடாஜலபதி. அதனால் தான் ‘திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஒரு திருப்பம் நேருமடா! உன் விருப்பம் கூடுமடா!’ என்று கவிஞர்கள் திருமலையின் புகழைப் போற்றி பாடுகின்றனர். உலகத்தில் விளங்குகின்ற எண்ணற்ற ஆலயங்களில் முதன்மை இடத்தில் முத்திரை பதிக்கிறது திருப்பதி!

ஆண்டுக்கு சுமார் ஐநூறு கோடிக்கும் மேலாக தங்கமாகவும், பணமாகவும் தங்களது காணிக்கைகளை வழங்குகின்றார்கள் பக்தர்கள். தங்களை நல்ல நிலையில் வாழவைத்து, தங்களின் வேண்டுகோளைப் பூர்த்தி செய்ததற்கு நன்றிக் கடனாக பக்தர்கள் செலுத்தும் காணிக்கை தானே, உண்டியலில் போடும் எண்ணற்ற கோடிகள்! காணிக்கை தொகையே இப்படி உச்சநிலையில் இருந்தால் வணங்கும் பக்தர்களுக்கு பெருமாள் எப்படி வாரிக் கொடுத்திருப்பார் என்று எண்ணிப் பாருங்கள். ‘ஸ்ரீநிவாசர்’ என்றால் திருமகளான லக்ஷ்மி தேவியை நிரந்தரமாக தன் மார்பில் வசிக்கச் செய்கிறவர் என்று பொருள். அப்படி இருப்பவர் அள்ளிக் கொடுக்காமல் கிள்ளியா கொடுப்பார்?

புதன், 16 செப்டம்பர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 189

 எட்டாவது ஸ்கந்தம் – இருபத்தொன்றாவது அத்தியாயம்

(பகவான் மூன்றாவது அடிக்கு இடமில்லாமையால் பலியைப் பந்தனம் செய்தல் [கட்டுப்படுத்துதல்])

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ப்ரஹ்மதேவன் பகவானுடைய பாதம் தன் வாஸஸ்தானமாகிய (இருப்பிடமாகிய) ஸத்யலோகத்தில் வந்திருப்பதைக் கண்டு அந்தப் பாதத்திலுள்ள சந்த்ரன் போன்ற நகங்களின் காந்திகளால் தன் வாஸஸ்தானமெல்லாம் (இருப்பிடமெல்லாம்) ஒளிமழுங்கப்பெற்று ஆதரவுடன் எதிர்கொண்டு சென்றான். அவ்வாறே மிகப்பெரிய வ்ரதங்களை அனுஷ்டித்தவர்களான மரீசி முதலிய ரிஷிகளும் ப்ரஹ்ம நிஷ்டர்களான ஸனந்தனர் முதலிய யோகிகளும் அந்த பகவானுடைய பாதத்தை எதிர்கொண்டார்கள். ருக்கு, யஜுஸ்ஸு முதலிய வேதங்கள் ஆயுர்வேதம் முதலிய உபவேதங்கள் நியமங்கள் மீமாம்ஸா, ந்யாயங்கள், தர்க்கம், ராமாயணாதி இதிஹாஸங்கள், சிக்ஷை முதலிய அங்கங்கள், புராணங்கள், பஞ்சராத்ராதி ஸம்ஹிதைகள் ஆகிய இவற்றின் அபிமானி தேவதைகளும், யோகமாகிற காற்றினால் வீசப்பெற்றுக் கிளர்ந்தெரிகின்ற ஜ்ஞானமாகிற அக்னியினால் புண்ய, பாப கர்மங்களாகிற கல்மஷங்களையெல்லாம் (மலங்களை) பஸ்மம் செய்து விளங்குகின்றவர்களும் அந்த பகவானுடைய பாதாரவிந்தங்களை த்யானித்த மஹிமையால் ஜ்ஞானயோக ப்ரசுரமான (ஜ்ஞானயோகம் நிறைந்து இருக்கும்) ஸத்யலோகம் சென்று அங்கு வாஸம் செய்பவர்களுமான மற்றவர்களும் அந்தத் த்ரிவிக்ரமனுடைய பாதத்தை வணங்கினார்கள். 

அப்பால் பெரும்புகழனாகிய ப்ரஹ்மதேவன் தான் எவனுடைய நாபிகமலத்தினின்று உண்டானானோ, அப்படிப்பட்ட ஸ்ரீமஹாவிஷ்ணுவின் பாதம் வெகுதூரம் உயரக் கிளம்பி வந்திருப்பதைக்கண்டு அதற்கு அர்க்யம், பாத்யம் முதலிய உபசாரங்களைச் செய்து நன்றாகப் பூஜித்துப் பக்தியுடன் ஸ்தோத்ரம் செய்தான். மன்னவனே! அப்பொழுது ப்ரஹமாவின் கமண்டலு ஜலம் அந்தப் பகவானுடைய பாதத்தை அலம்புவதற்காக விடப்பட்டு அப்பாதத்தின் ஸம்பந்தத்தினால் பரிசுத்தமாகி ஸ்வர்க்க நதியாயிற்று. அந்த நதியே கங்கையென்று கூறப்படுகின்றது. அந்நதி பகவானுடைய கீர்த்தியைப் போல நிர்மலமாகி ஆகாயத்தில் த்ருவமண்டலத்தில் விழுந்து அங்கிருந்து கீழே பெருகி வந்து மூன்று லோகங்களையும் பவித்ரம் செய்கின்றது. அப்பால் அம்மஹாபுருஷன் தன் தேஹ விஸ்தாரத்தைக் (உடலின் நீளத்தைக்) குறுக்கிக் கொண்டான். பின்பு முன்போலவே வாமன ரூபியாயிருக்கின்ற தங்கள் நாதனாகிய பகவானுக்கு லோகநாதர்களான (உலகின் தலைவர்களான) ப்ரஹ்மதேவன் முதலியவர்களும் அவர்களைத் தொடர்ந்த மற்றவர்களும் ஜலங்களால் அர்க்யம், பாத்யம் முதலிய உபசாரங்கள் செய்து வாஸனையுள்ள சிறந்த பூமாலைகளாலும் திவ்ய சந்தனப்பூச்சுக்களாலும் பரிமளமுள்ள மேலான தூபங்களாலும், தீபங்களாலும், பொரிகளாலும், அக்ஷதைகளாலும், சிறந்த பழங்களாலும் அவனுடைய வீர்யமஹிமை அமைந்த ஸ்தோத்ரங்களாலும் அத்தகைய ஜய சப்தங்களாலும் (மங்கள வார்த்தைகளாலும்) ஆடல், பாடல்களாலும் சங்கம், துந்துபி முதலிய பலவகை வாத்யகோஷங்களாலும் பூஜை செய்தார்கள். 

செவ்வாய், 15 செப்டம்பர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 188

 எட்டாவது ஸ்கந்தம் – இருபதாவது அத்தியாயம்

(பலி விஷ்ணுவின் கபடத்தை (சூதை, ஏமாற்றுவதை) அறிந்தும் பொய் பேசப் பயந்து ப்ரதிஜ்ஞை செய்தபடி கொடுக்கையும், பகவான் வளர்ந்து உலகங்களை அளத்தலும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மன்னவனே! யாகம் செய்கின்ற பலி தன் குல ஆசார்யனாகிய சுக்ரனால் இவ்வாறு சொல்லப்பெற்று க்ஷணகாலம் ஒன்றும் பேசாதிருந்து தான் செய்ய நினைத்ததையே நிச்சயித்துக்கொண்டு சுக்ராசார்யனை நோக்கி மொழிந்தான்.

பலி சொல்லுகிறான்:- நீர் சொன்னது வாஸ்தவமே (உண்மையே). இது க்ருஹஸ்தர்களின் (இல்லறத்தில் இருப்பவர்களின்) தர்மம்தான். இது க்ருஹஸ்தர்களின் (இல்லறத்தில் இருப்பவர்களின்) அர்த்தம் (பொருள்), காமம் (இன்பம்), புகழ், ஜீவனம் இவைகளை எவ்விதத்திலும் அழிக்காது. பாதுகாத்துக் கொடுக்கும். நானும் க்ருஹஸ்தனே (இல்லறத்தனே). ஆயினும் ப்ரஹ்லாதனுடைய பேரனாகிய நான் கொடுக்கிறேனென்று ப்ரதிஜ்ஞை செய்து (வாக்குக் கொடுத்து) இப்பொழுது பொருளாசையால் வஞ்சகனைப் போல ப்ராஹ்மணனை எப்படி நிராகரிப்பேன்? இந்தப் பூமிதேவி “அஸத்யத்தைக் (பொய்யைக்) காட்டிலும் வேறு அதர்மம் கிடையாது” என்று மொழிந்தாள். “பொய் பேசும் புருஷனைத் தவிர மற்ற எல்லாவற்றையும் நான் தரிப்பேன்” என்று நினைத்தாள். “மேரு மந்தராதி பர்வதங்களைத் தாங்குவதுங்கூட எனக்கு வருத்தமன்று. பொய்பேசும் புருஷனைத் தரிப்பது எனக்குப் பொறுக்க முடியவில்லை” என்பது பூமியின் கருத்து. ஆகையால் நான் எப்படிப் பொய் சொல்லுவேன்? மற்றும், நான், நரகம், ஏழ்மை, ஸமுத்ரம் போல் கடக்க முடியாத பெருந்துயரம், ஸ்தானத்தினின்று நழுவுதல், மரணம் ஆகிய இவற்றுள் எதனின்றும் பயப்படவில்லை. ப்ராஹ்மணனை ஏமாற்றுகையாகிற இம்மஹாபாபத்தினின்றுமே நான் பயப்படுகிறேன். 

பூமி முதலிய எல்லாப் பொருள்களும், புருஷன் மரணம் அடைந்த பின்பு அவனை இவ்வுலகத்திலேயே துறக்கப்போகின்றனவல்லவா? அத்தகைய பொருள்களைப் புருஷன் தான் ஜீவித்திருக்கும் பொழுதே ஏன் கொடுக்கலாகாது. எதைக் கொடுத்தால் ப்ராஹ்மணன் ஸந்தோஷம் அடையமாட்டானோ, அப்படிப்பட்ட வஸ்துவைக் கொடுப்பதனால் என்ன உபயோகம்? அவன் ஒன்று கேட்க, நாம் மற்றொன்றைக் கொடுத்தால் அவனுக்கு எப்படி ஸந்தோஷம் உண்டாகும்? அவன் ஸந்தோஷம் அடையவில்லையாயின், அந்தக் கொடை வீண். ததீசர், சிபி முதலிய பெரியோர்கள் துறக்க முடியாத ப்ராணன்களாலும் ப்ராணிகளுக்கு நன்மையைச் செய்தர்கள். இனி பூமி முதலிய மற்ற வஸ்துக்களைப் பற்றி விசாரிக்க வேண்டுமோ. 

திங்கள், 14 செப்டம்பர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 187

 எட்டாவது ஸ்கந்தம் – பத்தொன்பதாவது அத்தியாயம்

(பகவான் மூன்றடி பூமி வேண்டுதலும், பலி கொடுப்பதாக ஒப்புக்கொள்ளச் சுக்ரன் வேண்டாமென்று தடைசெய்தலும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு தர்மம் அமைந்து உண்மையும் மதுரமுமாக மொழிந்த பலிசக்ரவர்த்தியின் வசனத்தைக் கேட்டுப் பகவான் ஸந்தோஷம் அடைந்து அவனைப் புகழ்ந்து இதை மொழிந்தான்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- ஓ மன்னவனே! உன் வசனம் உண்மையும் ப்ரியமுமாயிருக்கின்றது. மற்றும், இது உன் குலத்தின் பெருமைக்குப் பொருந்தித் தர்மம் அமைந்து புகழையும் விளைக்கவற்றாய் இருக்கின்றது. நீ பரலோக ஸாதனமான தர்மத்தின் நிர்ணயத்திற்காக உன் பாட்டனும் உன் குலத்தில் வயது முதிர்ந்தவனும் மிக்க சாந்தனுமாகிய ப்ரஹ்லாதனையே ப்ரமாணமாகக் கொண்டிருக்கின்றாய். ப்ரஹ்லாதனுடைய ஆசாரத்தினாலேயே (நடத்தையாலேயே) அவனுடைய வம்சத்தில் பிறந்த உன்னுடைய ஆசாரமும் (நடத்தையும்) நன்றாயிருக்குமென்று தெரிகின்றது. இந்த உன் வம்சத்தில் யாசிக்கும் ப்ராஹ்மணனுக்கு இல்லையென்று சொல்லுகிற நிஸ்ஸத்வனாவது (ஸத்வ குணம் நிரம்பப் பெறாதவனாவது) கொடுக்கிறேனென்று ப்ரதிஜ்ஞை செய்து (வாக்குக் கொடுத்து) கொடாதிருக்கிற க்ருபணனாவது (மட்டமான கஞ்சனாவது) இதுவரையில் பிறந்ததும் இல்லை. இனி பிறக்கப்போவதும் இல்லை. இப்பொழுது பிறந்திருக்கிறானென்பதும் இல்லை. மன்னவனே! தானம் செய்ய வேண்டிய காலத்தில் யாசகன் கேட்ட பின்பு கொடுக்கிறவனும் யுத்தத்தில் பின் வாங்குகிறவனும் ஸ்வதந்த்ரமில்லாதவர்களும் (தன் விருப்பப்படி செய்ய வல்லமை இல்லாதவர்களும்) இந்த வம்சத்தில் மூன்று தலைமுறையாகக் கிடையாது. ஆகாயத்தில் சந்திரன் போல், இந்த வம்சத்தில் ப்ரஹ்லாதன் மிக்க புகழுடன் ப்ரகாசித்துக் கொண்டிருக்கிறானல்லவா? 

இந்த வம்சத்தில் பிறந்த ஹிரண்யாக்ஷன் தானொருவனே கதையை ஆயுதமாகக் கொண்டு திக்விஜயத்திற்காக இந்தப் பூமியெல்லாம் திரிந்தும் தன்னோடு எதிர்த்துச் சண்டை செய்யும் வீரன் எவனும் கிடைக்கப்பெறவில்லை. மஹாஜலத்தில் பூமியை மேலுக்கெடுப்பதற்காக வராஹ உருவம்கொண்ட மஹாவிஷ்ணு அவனை மிகவும் ப்ரயாஸப்பட்டுக் (முயற்சி செய்து) கொன்று தான் ஜயித்ததாக நினைத்தான். ஆகையால் அந்த ஹிரண்யாக்ஷனுடைய வீர்யம் அளவற்றதென்று அறிவாயாக. இவ்வாறு இந்த வம்சத்தில் பிறந்தவர்கள் யுத்த வீரர்களாகி ப்ராண ஆபத்திலும் (உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட போதும்) பின் வாங்கமாட்டார்கள். அந்த ஹிரண்யாக்ஷனுடைய வதத்தைக் கேட்டு அவனுடைய ப்ராதாவாகிய (உடன் பிறந்தவனாகிய) ஹிரண்யகசிபு முன்பு கோபாவேசம் கொண்டு தன் ப்ராதாவைக் (உடன் பிறந்தவனைக்) கொன்ற விஷ்ணுவை வதிக்கும் பொருட்டு அவ்விஷ்ணுவின் ஸ்தானத்திற்குச் சென்றான். அம்மஹாவிஷ்ணுவும் சூலத்தைக் கையிலேந்தி ம்ருத்யுவைப் (எமனைப் / மரணத்தைப்) போல் வருகின்ற அந்த ஹிரண்யகசிபுவைக் கண்டு இவனை வெல்ல முடியாதென்று நினைத்து மாயாவிகளில் சிறந்தவனும் அந்தந்த ஸமயங்களுக்குத் தகுந்த ப்ரயோஜனங்களை அறிந்தவனுமாகிய அவ்விஷ்ணு “நான் எங்கெங்குப் போகிறேனோ அங்கங்கெல்லாம் இந்த ஹிரண்யகசிபு ப்ராணிகளுக்கு ம்ருத்யுவைப் (எமனைப் / மரணத்தைப்) போன்று வந்து நிற்கின்றான். ஆகையால் இப்பொழுது வெளியில் புலப்படுகிற நான் இவனுடைய ஹ்ருதயத்தில் ப்ரவேசிக்கிறேன்” என்று சிந்தித்தான். 

ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 186

 எட்டாவது ஸ்கந்தம் – பதினெட்டாவது அத்தியாயம்

(பகவான் வாமனனாக அவதரித்துப் பலியின் யாகபூமிக்குப்போக, அவன் பகவானை ஸத்கரித்தல் [கெளரவித்தல்])

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு ப்ரஹ்மதேவனால் துதிக்கப்பட்ட செயல்களும் ப்ரபாவங்களுமுடையவனும், கர்மத்தினால் விளையும் மரணம், பிறவி இவை அற்றவனும், மோக்ஷம் கொடுப்பவனுமாகிய பகவான் நான்கு புஜங்கள் (கைகள் / தோள்கள்) அமைந்து சங்கம், கதை, தாமரை, மலர், சக்ரம் இவை தரித்துப் பீதாம்பரம் உடுத்தித் தாமரையிதழ் போல் மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட கண்கள் விளங்கப்பெற்று அதிதியிடத்தில் ஆவிர்ப்பவித்தான் (தோன்றினான்). அப்பரமபுருஷன் கறுத்து நிர்மலனாகிக் (அழுக்கற்று) காதுகளில் அணிந்த மகரகுண்டலங்களின் சோபையால் (அழகால்) ஒளிப்பெருக்குடன் திகழ்கின்ற முகாரவிந்தமும் (முகத் தாமரையும்), மார்பில் ஸ்ரீவத்ஸமென்னும் திருமருவும், திகழ்கின்ற கைவளை, தோள்வளை, கிரீடம், அரைநாண்மாலை, முத்துமாலை, சிலம்பு, தண்டை இவைகளும் திகழப் பெற்றிருந்தான். வண்டினங்கள் முரலப் (மொய்க்கப்) பெற்றதும் தனக்கு அஸாதாரணமாயிருப்பதும் மிக்க அழகு பொருந்தியதுமாகிய வனமாலையால் விளக்கமற்ற ஸர்வஜ்ஞனாகிய (அனைத்தும் அறிந்தவனான) அப்பரமபுருஷன் கச்யபப்ரஜாபதியின் க்ருஹத்திலுள்ள அதிகாரத்தையெல்லாம் தன்னுடைய தேஹ காந்தியால் போக்கிக்கொண்டு கழுத்தில் அணிந்த கௌஸ்துபமணியுடன் ப்ரகாசித்தான். அப்பொழுது திசைகளும், ஜலங்களும் பிராணிகளின் மனங்களும் தெளிந்தன. ப்ரஜைகள் ஸந்தோஷம் அடைந்தன. வர்ஷருது முதலிய ருதுக்கள் தத்தம் குணங்கள் அமைந்திருந்தன. த்யுலோகம் (தேவ லோகம்), அந்தரிக்ஷலோகம் (இடைப்பட்ட ஆகாசம்), பூலோகம் ஆகிய மூன்று லோகங்களும், தேவதைகளும், அக்னி ஜ்வாலைகளும், பசுக்களும், ப்ராஹ்மணர்களும், பர்வதங்களும் (மலைகளும்) ஸந்தோஷம் அடைந்தன. பாத்ரபத (ஆவணி / புரட்டாசி) மாஸத்தின் சுக்லபக்ஷத்தில் த்வாதசியினன்று ச்ரவண நக்ஷத்ரத்தில் அபிஜித் என்கிற முஹூர்த்தத்தில் ஸர்வேச்வரன் அதிதியிடத்தில் ஆவிர்ப்பவித்தார் (தோன்றினார்). அச்வினி முதலிய ஸமஸ்த நக்ஷத்ரங்களும், குரு, சுக்ரன் முதலிய க்ரஹங்களும் அந்தப் பகவானுடைய ஜன்மத்தை மேன்மை பெறும்படி செய்தன. 

அந்த த்வாதசியினன்று பகலில் பகவான் ஆவிர்ப்பவிக்கும் (தோன்றும்) பொழுது ஸூர்யன் ஆகாயத்தின் இடையில் வந்திருந்தான். என்று பகவான் அவதரித்தானென்று சொல்லுகிறார்களோ அந்த த்வாதசி திதி விஜயை என்று கூறப்படுகின்றது. அப்பொழுது சங்கம், துந்துபி, ம்ருதங்கம், பணவம், ஆனகம் முதலிய பல வாத்யங்கள் முழங்கின. நானாவிதமான வாத்யங்களின் த்வனிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து பெருங்கோஷம் உண்டாயிற்று. அப்ஸர மடைந்தையர்கள் மனக்களிப்புற்று ஆடினார்கள். சிறப்புடைய கந்தர்வர்கள் பாடினார்கள். முனிவர்களும், தேவர்களும், மனுக்களும், பித்ருக்களும், அக்னிகளும், ஸித்தர், வித்யாதரர், கிம்புருஷர், கின்னரர், சாரணர், யக்ஷர், ராக்ஷஸர், ஸுபர்ணர், நாகர் ஆகிய இவர்களும் கூட்டம் கூட்டமாயிருந்து ஸ்தோத்ரம் செய்தார்கள். 

உபதேவதைகள் ஆடல் பாடல்களைச் செய்து அந்தப் பரமனைப் புகழ்ந்தார்கள். ஆதித்யர்கள் அந்த ஆச்ரமம் முழுவதும் புஷ்பங்களால் இறைத்தார்கள். அதிதி அவ்வாறு தன் கர்ப்பத்தினின்று உண்டான அந்தப் பரமபுருஷனைக் கண்டு வியப்புற்று ஸந்தோஷம் அடைந்தாள். தன்னுடைய ஆச்சர்யமான சக்தியோகத்தினால் திவ்யமங்கள விக்ரஹம் கொண்டிருக்கிற பகவானைக் கண்டு ப்ரஹ்மதேவனும் வியப்புற்று “ஜய விஜயீ பவ” என்றான். 

சனி, 12 செப்டம்பர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 185

 எட்டாவது ஸ்கந்தம் – பதினேழாவது அத்தியாயம்

(அதிதி பயோவ்ரதத்தை (இதன் விவரம் 16வது அத்யயத்தில் சொல்லப்பட்டது) அனுஷ்டிக்கையில், பகவான் அவளுடைய விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு அவளுக்குப் பிள்ளையாகப் பிறந்தல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு தன் பர்த்தாவாகிய கச்யபரால் வ்ரதத்தை அனுஷ்டிக்கும்படி உபதேசிக்கப்பட்ட அந்த அதிதி சோம்பலின்றி மனவூக்கத்துடன் பன்னிரண்டு நாள் அந்தப் பயோவ்ரதத்தை அனுஷ்டித்தாள். அவள் புத்தியாகிற ஸாரதியைக் கொண்டு மனத்தினால் இந்திரியங்களாகிற துஷ்ட (தன் விருப்பப்படி உலக விஷயங்களில் ஈடுபடும்) குதிரைகளை அடக்கி மற்றொன்றிலும் செல்லாத புத்தியினால் மஹாபுருஷனும், ஸர்வேச்வரனுமாகிய வாஸுதேவனையே சிந்தித்துக் கொண்டிருந்து பயோவ்ரதத்தை அனுஷ்டித்தாள். 

அவள், ஸர்வாந்தராத்மாவும் ஷாட்குண்ய பூர்ணனுமாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) வாஸுதேவனிடத்தில் மனத்தை மற்றொன்றிலும் செல்லாதபடி புத்தியினால் நிலை நிறுத்தி வ்ரதத்தை அனுஷ்டித்துக் கொண்டிருக்கையில், பீதாம்பரம் உடுத்திச் சதுர்புஜனாய், சங்கம், சக்ரம், கதை இவை தரித்துத் திகழ்கின்ற ஆதிபுருஷனாகிய வாஸுதேவ பகவான் அவளுக்கு ப்ரத்யக்ஷமாய் வந்து தோன்றினான். அந்த அதிதி அவ்வாறு கண்ணுக்குப் புலப்படுகின்ற வாஸுதேவ பகவானைக் கண்டு விரைந்தெழுந்து ப்ரீதியினால் (அன்பு மிகுதியால்) தழதழத்துச் (ஒன்றும் பேச முடியாதபடி குரல் வெளிவராமல்) சரீரத்தைத் (தன் உடலை) தண்டம் போல் (தடி / குச்சி போல்) பூமியில் சாய்த்து நமஸ்கரித்தாள். அவள் எழுந்து கைகூப்பிக் கொண்டு வெறுமனே நின்றிருந்தாளன்றி, ஆனந்த நீர்களால் கண்கள் கலங்கி உடம்பெல்லாம் மயிர்க்கூச்சம் நிறைந்து அந்தப் பகவானுடைய காட்சியாகிற மஹோத்ஸவத்தினால் (பெரு விழாவினால்) சரீரத்தில் (உடலில்) நடுக்கம் உண்டாகப்பெற்று ஸ்தோத்ரம் செய்ய முடியாதிருந்தாள். 

குருகுலாலங்காரனே! அனந்தரம் அந்த அதிதி, ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கும், யஜ்ஞங்களுக்கும், உலகங்களுக்கும் நாதனாகிய பகவானைக் கண்டு கண்களால் பருகுபவள் போன்று ப்ரீதியினால் தழதழத்த உரையுடன் மெல்ல மெல்லத் துதிசெய்யத் தொடங்கினாள்.

வியாழன், 10 செப்டம்பர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 184

 எட்டாவது ஸ்கந்தம் - பதினாறாவது அத்தியாயம்

(அதிதி தன் புதல்வர்களான தேவதைகள் ஐச்வர்யத்தை இழந்து, காணாது போனமைக்கு வருந்தித் தன் கணவரான கச்யபரிடத்தில் அதன் பரிஹாரத்தை வேண்ட அவர் பயோவ்ரதத்தை (விவரம் கீழே) அனுஷ்டிக்கும்படி உபதேசித்தல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அப்பொழுது தேவதைகளின் தாயான அதிதி, தன் புதல்வர்கள் காணாது போய், தைத்யர்கள் ஸ்வர்க்கத்தைக் கைப்பற்றி வருகையில், நாதன் (தலைவன், காப்பாற்றுபவன்) அற்றவள் போலப் பரிதபித்தாள். இப்படியிருக்கையில், வெகுகாலமாய் ஸமாதியினின்று ஓய்ந்திருக்கின்ற ஜ்ஞானாதிகரான (ஆத்ம தத்வ ஜ்ஞானத்தை அடைந்தவரான) கச்யப முனிவர் உத்ஸவங்களும், அதற்குக் காரணமான ஸந்தோஷமும் அற்றுச் சூன்யம் (ஒன்றும் இல்லாமல்) போலிருக்கிற அந்த அதிதியின் ஆச்ரமத்திற்கு ஒருகால் வந்தார். குருகுலாலங்காரனே! அம்முனிவர் விதிப்படி பூஜை செய்யப்பெற்று, ஆஸனத்தில் உட்கார்ந்து முகம் வாடி நிற்கிற தன் பத்னியான அதிதியை நோக்கி இவ்வாறு மொழிந்தார்.

கச்யபர் சொல்லுகிறார்:- மங்கள ஸ்வபவமுடையவளே! இப்பொழுது இவ்வுலகத்தில் ப்ராஹ்மணர்களுக்காவது, பசுக்களுக்காவது, தர்மத்திற்காவது, ம்ருத்யுவின் இச்சையை அனுஸரித்திருக்கிற மற்ற ஜனங்களுக்காவது, ஒரு கெடுதியும் இல்லையே? என் அகமுடையவளே (மனைவியே)! நமது அகத்தில் (இல்லத்தில்) தர்மத்திற்காவது (அறம், நற்செயல்), அர்த்தத்திற்காவது (பொருள்), காமத்திற்காவது (இன்பம்) ஏதேனும் கெடுதி நேரிட்டிருக்கின்றதா என்ன? இந்த இல்லற வாழ்க்கையில் இந்த்ரியங்களை வெல்லமுடியாத மூடர்களே வருந்துவார்களன்றி, உன்னைப் போன்ற ஜிதேந்த்ரியர்கள் (புலன்களை வென்றவர்கள்) மனப்பற்றைக் கொள்ளமாட்டார்கள். நீ குடும்ப கார்யத்தில் ஊக்கமுற்றிருக்கையில், அதிதிகள் வந்து எதிர்கொள்வது முதலியன செய்து, உன்னால் பூஜை செய்யப்பெறாமல் நம் க்ருஹத்தினின்று திரும்பிப் போனார்களா என்ன? 

அதிதிகள் வந்து ஜலத்தினாலும்கூடப் பூஜை செய்யப்பெறாமல் திரும்பிப்போவார்களாயின், அவ்வீடுகள் நரிகள் வஸிக்கும் பாழிகள் போன்றவைகளேயாம். பதிவ்ரதையே! நல்லியற்கையுடையவளே! நான் புறப்பட்டுப் போனபின்பு, நீ மனவருத்தமுற்றுத் தகுந்தகாலங்களில் ஆஹவனீயம் (இல்லறத்தில் இருப்பவன் வேதத்தில் விதிக்கப்பட்ட ஹோமம் முதலிய அக்னி கார்யங்களைச் செய்வதற்கு மூன்று அக்னிகளை எப்பொழுதும் இல்லத்தில் வைத்து வளர்த்து பூஜிக்க வேண்டும். 

1.கார்ஹபத்ய அக்னி - என்பது மேற்கு திசையில் இருக்கும் அக்னி; ஹோமம் செய்யும் போது மனைவி கார்ஹபத்ய அக்னியின் அருகில் அமர்ந்து கொள்ள வேண்டும்; 

2.ஆஹவனீய அக்னி - என்பது கார்ஹபத்ய அக்னியிலிருந்து எடுக்கப்பட்டு புனிதப்படுத்தப்பட்ட, ப்ரதான ஹோமம் செய்வதற்கான, கிழக்கு திசையில் இருக்கும் அக்னி; 

3.தக்ஷிணாக்னி என்பது தெற்கு திசையில் இருக்கும் அக்னி) 

முதலிய அக்னிகளில் ஹவிஸ்ஸுக்களால் (ஹோமத்தில் தேவதைகளுக்காக அக்னியில்  கொடுக்கப்படும் நெய்யுடன் சேர்ந்த அன்னம், புரோடாசம் என்கிற மாவினால் ஆன பண்டம் இவற்றால்) ஹோமம் செய்யாமல் தவறிப்போயினையா என்ன? அக்னி உரியபடி பூஜிக்கப்பட்டு வருமாயின், எல்லா விருப்பங்களையும் கறக்கும் (தரும்). க்ருஹஸ்தாச்ரமத்திலிருக்கும் (இல்லற தர்மத்தில் இருக்கும்) புருஷன் அந்த அக்னியின் பூஜையினால் புண்யலோகங்களைப் பெறுவான். ப்ராஹ்மணனையும், அக்னியையும் ஸமஸ்த தேவதாஸ்வரூபனான பகவானுக்கு முகமென்று ச்ருதிகள் கூறுகின்றன. ஆழ்ந்த மனமுடையவளே! உன் புதல்வர்கள் அனைவரும் க்ஷேமமாயிருக்கின்றார்களல்லவா? உன் முகக்குறிகளால் உன்மனம் அஸ்வஸ்தமாயிருப்பது (நலம் இன்றி இருப்பது) போலத் தோற்றுகின்றது. அதற்குக் காரணம் இன்னதென்று தெரியவில்லையாகையால், உன்னை வினவுகின்றேன், சொல்வாயாக.

செவ்வாய், 8 செப்டம்பர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 183

 எட்டாவது ஸ்கந்தம் – பதினைந்தாவது அத்தியாயம்

(வாமனாவதார வ்ருத்தாந்தம் பலி விரிஜித் யாகம் செய்து ஸ்வர்க்கத்தை ஜயிக்கையில் தேவதைகள் பயந்து மறைதல்)

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- ஸர்வேச்வரனாகிய ஸ்ரீமஹாவிஷ்ணு, தான் அவாப்தஸமஸ்தகாமனாயும் (விரும்பியது அனைத்தையும் அடையப்பெற்றவனாயும்), ஸமஸ்த ப்ரபஞ்சத்திற்கும் ஈச்வரனாயும் இருந்தும், ஒன்றும் இல்லாத தாழ்ந்தவன் போல், பலியிடம் மூன்று அடி நிலத்தை ஏன் வேண்டினான்? தான் வேண்டியதைப் பெற்றும், ஏன் பலியை அடக்கிக் கட்டுக்குள் வைத்தான்? நான் இதை தங்களிடமிருந்து அறிய விரும்புகிறேன்; ஏனென்றால், யாகங்கள் அனைத்துக்கும் ப்ரபுவும் பூர்ணனுமான (நிறைவாளனுமான) பகவானது இச்செயல் மிகவும் ஆச்சர்யமாய் இருக்கிறது.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ப்ருகுவின் புதல்வரான சுக்ராசாரியரையும் ப்ருகு மகர்ஷியின் வம்சத்தினரான மற்ற ப்ராஹ்மணர்களையும், வேண்டியது அனைத்தையும் கொடுத்து, அவர்களின் சிஷ்யனான பலி பணிவிடை செய்து பூஜித்தான். அந்த பலி போரில் இந்த்ரனால் அடிக்கப்பட்டு, தன் தேஜஸ் இழந்து நின்றபோது, அவர்கள் அவனை மீண்டும் உயிர்ப்பித்தார்கள். அந்த மஹானுபாவர்கள் பலிக்கு முறைப்படி ராஜ்யாபிஷேகம் செய்து வைத்தனர். அளவற்ற சக்தியும், தன் சிஷ்யனிடம் ப்ரீதியும் உடைய அந்த ப்ருகு வம்சத்து ப்ராஹ்மணர்கள், ஸ்வர்க்கத்தைக் ஜெயிப்பதில் நோக்குடைய பலிக்கு, பகவானைப் ப்ரீதி அடையச் செய்யும் விச்வஜித் என்ற யாகத்தைச் செய்வித்தனர்.  

அந்த யாகத்தில், ஹோம குண்டத்தில் ஹவிஸ்ஸால் ஹோமம் செய்தபோது, யாகத்தீயிலிருந்து தங்கத் தகடுகள் பொருத்தப்பட்ட  (அல்லது பொன்னாடைகளால் போர்த்தப்பட்ட) தேர், சூர்யனுடைய குதிரைகள் போன்ற பச்சை நிறமுள்ள குதிரைகள், சிங்கம் பொறித்த தேர்க்கொடி ஆகியன வெளிவந்தன. பின், தங்கக் கம்பிகளால் சுற்றப்பட்ட தெய்வீகத்தன்மை வாய்ந்த வில்லும், குறையாத அம்புகள் உடைய இரண்டு அம்புறாத்தூணிகளும், திவ்யமான கவசமும் வந்தன. தாத்தாவான ப்ரஹ்லாதன் எப்போதும் வாடாத பூக்களாலான ஒரு மாலையையும், சுக்ராசாரியார் ஒரு சங்கையும் பலிக்குக் கொடுத்தனர். 

திங்கள், 7 செப்டம்பர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 182

 எட்டாவது ஸ்கந்தம் – பதினான்காவது அத்தியாயம்

(மனு முதலியவர்களுக்கு ஏற்பட்ட செயல்களை விவரித்துக் கூறுதல்)

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- மஹானுபாவரே! மன்வந்தரத்தில் சொல்லப்பட்ட இந்த மனு முதலியவர்களில் எவரெவர் எந்தெந்த வ்யாபாரத்தில், யாவரால் நியமிக்கப்பட்டிருக்கிறார்களோ, அவற்றை எல்லாம் விவரித்துச் சொல்வீராக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மன்னவனே! மனுக்கள், மனுபுத்ரர்கள், ஸப்தரிஷிகள், இந்த்ரர்கள், தேவதைகள் ஆகிய இவர்கள் அனைவரும் யஜ்ஞாதி (யஜ்ஞன் முதலிய) அவதாரங்களைச் செய்த பரமபுருஷனால், தத்தம் வ்யாபாரங்களில் நியமிக்கப்படுகிறார்கள். மன்னவனே! பரமபுருஷனுடைய அவதாரங்களான யஜ்ஞன், முதலியவர்களை மொழிந்தேனல்லவா? 

மனு முதலியவர்கள், அந்த யஜ்ஞன் முதலியவர்களால் தூண்டப்பட்டு, உலகத்தின் போஷணத்தை (பாதுகாப்பை, காப்பாற்றுதலை) நடத்துகிறார்கள். காலக்ரமத்தில் அத்யயனம் செய்பவர் இல்லாமையால் அழிந்து போன வேத ஸமூஹங்களைத் தங்கள் யோக ப்ரபாவத்தினால் ஸப்தரிஷிகள் ஸாக்ஷாத்கரித்து (நேரில் கண்டு) ப்ரசாரம் செய்கிறார்கள். அந்த வேதங்களே ஸனாதனமான (பழமையான, எப்போதுமுள்ள) தர்மத்தை அறிவிக்கின்றன. 

ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 181

 எட்டாவது ஸ்கந்தம் – பதிமூன்றாவது அத்தியாயம்

(ஏழாம் மனு முதல் மற்ற மனுக்களைக் கூறுதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இப்பொழுது இருக்கும் மனு ஏழாவது மனு. இவன் விவஸ்வானுடைய புதல்வன்; ராத்ததேவனென்று பெயர்பெற்றவன். இவனுடைய பிள்ளைகளைச் சொல்லுகிறேன் கேட்பாயாக. 

சத்ருக்களை அழிப்பவனே! இந்த ஏழாம் மனுவாகிய வைவஸ்வத மனுவுக்கு, இக்ஷ்வாகு, நபகன், த்ருஷ்டன், சர்யாதி, நரிஷ்யந்தன், நாபாகன், திஷ்டன், கரூஷகன், ப்ருஷத்ரன், வஸுமான் என்று பத்துப் பிள்ளைகள். 

இந்த மன்வந்தரத்தில் ஆதித்யர்கள், வஸுக்கள், ருத்ரர்கள், விச்வேதேவர்கள், மருத்துக்கள், அச்வினர்கள், ருபுக்கள் ஆகிய இவர்கள் தேவதைகளாய் இருக்கிறார்கள். புரந்தரனென்பவன் அவர்களுக்கு ப்ரபுவான இந்த்ரனாயிருக்கிறான். கச்யபர், அத்ரி, வஸிஷ்ட்டர், விஸ்வாமித்ரர், கௌதமர், ஜமதக்னி, பரத்வாஜர் என்னும் இவர்கள் இம்மன்வந்தரத்து ரிஷிகளாக ஏற்பட்டிருக்கிறார்கள். இம்மன்வந்தரத்திலும், பகவான் கச்யபரிடத்தினின்று அதிதிக்குப் பிள்ளையாக அவதரித்தான். இவன் விவஸ்வான் முதலிய ஆதித்யர்களுக்குப் பின்பிறந்தவன்; உபேந்த்ரனென்னும் பெயருடையவன். இவனே வாமன உருவம் கொண்டவன். இவ்வாறு ஏழு மன்வந்தரங்களை உனக்குச் சுருக்கமாகச் சொன்னேன். இனிமேல் வரப்போகிற மன்வந்தரங்களைச் சொல்லுகிறேன் கேட்பாயாக. 

பகவானுடைய அவதாரங்கள் அமைந்தவையாகையால், அவையும் அவச்யம் கேட்கத் தகுந்தவைகளே. மன்னவனே! விவஸ்வானுடைய பத்னிகள் இருவர். அவர்கள் விச்வகர்மாவென்னும் ப்ரஜாபதியின் புதல்விகள். ராஜேந்தரனே! அவர்கள் ஸம்ஜ்ஞையென்றும், சாயையென்றும் பெயருடையவர்கள். உனக்கு நான் இவர்களை முன்னமே (ஆறாவது ஸ்கந்தத்தில்) சொல்லியிருக்கிறேன். அவனுக்குப் படபையென்று மூன்றாம் பார்யையும் (மனைவியும்) ஒருத்தி உண்டென்று சிலர் சொல்லுகிறார்கள். அவர்களில், யமனென்றும், ச்ராத்த தேவனென்றும் ஸம்ஜ்ஞையின் பிள்ளைகள் இருவர். அவளுக்கு யமியென்று ஒரு பெண்ணும் உண்டு. அவள்தான் யமுனா நதி. சாயையின் பிள்ளைகளையும் சொல்லுகிறேன், கேள். 

சனி, 5 செப்டம்பர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 180

 எட்டாவது ஸ்கந்தம் - பன்னிரண்டாவது அத்தியாயம்

(மோஹினியின் அழகைக் கண்டு ருத்ரன் மதி மயங்கின வ்ருத்தாந்தத்தைக் கூறுதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பகவான் பெண்ணுருவம் கொண்டு அஸுரர்களை மதி மயக்கி, தேவதைகளுக்கு அம்ருதபானம் செய்வித்தானென்ற வ்ருத்தாந்தத்தை (கதையை) ருத்ரன் கேள்விப்பட்டு, பார்வதியுடன் வ்ருஷபவாஹனத்தின் மேலேறி ஸமஸ்த பூதகணங்களும் தொடர்ந்து வரப்பெற்று, பகவானுடைய பெண்ணுருவத்தைப் பார்க்க விரும்பி, அம்மதுசூதனன் இருக்கின்ற இடத்திற்கு வந்தான். அந்த ருத்திரன் உமையும் தானுமாகப் பகவானால் ஆதரவுடன் பூஜிக்கப்பெற்று, ஸுகமாக உட்கார்ந்து தானும் பகவானைப் பூஜித்துப் புன்னகையுடன் அவனைக் குறித்து இவ்வாறு மொழிந்தான்.

ருத்ரன் சொல்லுகிறான்:- தேவர்களுக்கும் தேவனே! உலகமெங்கும் நிறைந்திருப்பவனே! சேதனாசேதன ரூபமான ஜகத்திற்குள் புகுந்து நியமிப்பவனே! ஜகத்தெல்லாம் தானேயென்னும்படி அதைச் சரீரமாகவுடையவனே! சேதனாசேதன ரூபமான ஸமஸ்த வஸ்துக்களுக்கும் நீயே அந்தராத்மாவாய் இருக்கின்றாய். நீயே ஸகல ஜகத்காரணன் (எல்லா உலகக்கும் காரணம்). காரண அவஸ்தையில் (ஸ்ருஷ்டிப்பதற்கு முன்பு) நாமரூப விபாகங்களுக்கிடமின்றி (பெயர், உருவம் என்கிற வேறுபாடுகள் இன்றி) ஸூக்ஷ்மமான (நுட்பமாய் இருந்த) சேதனாசேதனங்களை நியமிப்பவன் நீயே. ஸூக்ஷ்ம  (பெயர், உருவம் என்கிற வேறுபாடுகள் இன்றி நுட்பமாயிருந்த) சேதனாசேதனங்களைச் சரீரமாகவுடைய உன்னிடத்தினின்றே இந்த ப்ரபஞ்சமெல்லாம் உண்டாயிற்று. இது உன்னிடத்திலேயே கடைசியில் மறைகின்றது. இதனுடைய ஸ்திதியும் (நீடிப்பும்) உன்னால் தான் நடக்கின்றது. இந்த ப்ரபஞ்சமெல்லாம் நீயே. நீ இந்த ப்ரபஞ்சத்தைக் காட்டிலும் இயற்கையில் விலக்ஷணனாயிருப்பவன் (வேறாய் இருப்பவன்). நீ தனக்குத்தானே தோற்றும் தன்மையுள்ள ஆத்ம வஸ்துக்களையும் (ஜீவாத்மாக்களையும்), பிறர்க்கே தோற்றும் தன்மையுள்ள அசேதனங்களையும் (அறிவற்ற ஜடப்பொருட்களையும்), சரீரமாகவுடையவன். ஆயினும், அந்தச் சேதனாசேதனங்களின் விகாரங்கள் (மாறுபாடுகள்) தன் மேல் தீண்டப்பெறாதவன். ப்ரபஞ்சத்திற்குள்ள ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (காத்தல்), ஸம்ஹாரங்கள் (அழித்தல்) உனக்குக் கிடையாது. நீ ஸ்வரூபத்தினாலும் (இயற்கையான தன்மையினாலும்), ஸ்வபாவத்தினாலும் (குணங்களாலும்) விகாரமற்றவன் (மாறுபாடு அற்றவன்). என்றும் ஸங்கோசமின்றி (குறைவின்றி) அழியாததும் அளவற்றதுமான ஜ்ஞானமுடையவன்; அத்தகைய ஜ்ஞானத்தையே வடிவமாகவுடையவன். ஸ்வரூபத்தினாலும் (இயற்கையான தன்மையினாலும்), ஸ்வபாவத்தினாலும் (குணங்களாலும்) அளவற்றவனாகையால், நீயே பரப்ரஹ்மமென்று வேதங்களில் கூறப்படுகின்றனை. ஸத்வ, ரஜஸ், தமஸ் என்கிற மூன்று குணங்களை உடைய ப்ரக்ருதி ஸம்பந்தமாகிற ஸம்ஸாரத்திலிருந்து விடுபடுகையாகிற மோக்ஷமென்னும் நன்மையை விரும்புகிறவர்கள், இஹலோக ஸுகங்களிலும், பரலோக ஸுகங்களிலும் மனப்பற்றைத் துறந்து வேறு ப்ரயோஜனத்தை விரும்பாமல் உன் ஸ்வரூப, குண, விபூதிகளை மனனம் (மனதில் சிந்தனை) செய்து கொண்டு ஜகத்காரணனான உன் பாதாரவிந்தங்களை உபாஸிக்கிறார்கள். எங்கும் நிறைந்திருப்பதும் ஸ்வரூபத்தினாலும் (இயற்கையான தன்மையினாலும்), ஸ்வபாவத்தினாலும் (குணங்களாலும்), விகாரமற்றதும் (மறுபாடு அற்றதும்) சிறுமை, பெருமை, குறுமை முதலிய குணங்களற்றதும் சோகமற்றிருக்கை முதலிய எட்டுக் குணங்கள் அமைந்ததும், கேவல ஜ்ஞான ஆனந்த ஸ்வரூபமுடையதும் (அறிவும், ஆனந்தமுமே தனது இயற்கைத் தன்மையாய் உடையதும்) விகாரங்களற்றதும் (மாறுபாடு அற்றதும்), எல்லாவற்றிற்கும் காரணமும் எல்லாம் தனக்குச் சரீரமுமாகையால் ப்ரக்ருதி, புருஷ ஸ்வரூபமான ஸமஸ்த ப்ரபஞ்சத்தைக் காட்டிலும் வேறாகாததும், தனக்குச் சரீரமான ப்ரபஞ்சத்தைக் காட்டிலும் விலக்ஷணமாயிருப்பதும் (வேறாய் இருப்பதும்), ப்ரபஞ்சத்தின் ஸ்ருஷ்டி  (படைப்பு), ஸ்திதி (காத்தல்), ஸம்ஹாரங்களுக்குக் (அழித்தல்) காரணமுமாகிய பரப்ரஹ்மம் நீயே. உனக்கு நீயே நியாமகனன்றி (நியமிப்பவன் அன்றி) வேறொரு நியாமகன் (நியமிப்பவன்) எவனுமே இல்லை. 

வியாழன், 3 செப்டம்பர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 179

 எட்டாவது ஸ்கந்தம் - பதினொன்றாம் அத்தியாயம்

(தேவதைகள் அஸுரர்களை வதித்தலும், நாரதர் வந்து யுத்தத்தைத் தடுத்தலும், சுக்ரன் அஸுரர்களைப் பிழைப்பித்தலும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அப்பால், இந்த்ரன், வாயு முதலிய தேவதைகள் அனைவரும் பரமபுருஷனுடைய பேரருளால், அஸுரர்களின் மாயைகளால் நேர்ந்த மனக்கலக்கம் தீர்ந்து, முன்பு தாங்கள் எவரெவர்களால் த்வந்த்வ யுத்தத்தில் (ஒருவரோடு ஒருவர் செய்யும் சண்டையில்) அடியுண்டார்களோ, அந்த அஸுரர்களை எல்லாம் நன்றாக அடித்தார்கள். மஹானுபாவனாகிய தேவேந்திரன், பெருங்கோபத்துடன் பலியின்மேல் ப்ரயோகிக்க வஜ்ராயுதத்தை எடுத்து நோக்கினான். அப்பொழுது ப்ரஜைகள் “ஆ! ஆ!” என்று இறைச்சலிட்டார்கள். வஜ்ராயுதத்தை ஏந்தின இந்த்ரன், மஹாயுத்தத்தில் பெருங்கோபத்துடன் உலாவிக்கொண்டு சண்டை செய்ய வேண்டுமென்னும் விருப்பத்துடன் எதிரே நிற்கின்ற பலியைப் பொருள் செய்யாமல், இவ்வாறு மொழிந்தான்.

இந்த்ரன் சொல்லுகிறான்:- மூடா! துர்ப்புத்தியுடைய ஒருவன், அறியாத பிள்ளைகளைக் கபடத்தினால் (சூதினால், வஞ்சனையால்) கண்கட்டி ஜயித்து, அவர்கள் பணத்தைப் பறிப்பது போல, மாயையில் ஸமர்த்தர்களான எங்களை, நீ மாயையால் ஜயிக்க விரும்புகின்றாய். கீழான பதவியினின்றும் மேல் பதவியை ஏறப்பார்க்கிறாய். மாயைகளால் ஸ்வர்க்கத்தைக் கைப்பற்ற முயற்சி செய்கிறாய். இத்தகையனான உன்னைத் துஷ்ட ஜந்துக்களைப் (கொடிய பிராணிகளைப்) போல இப்பொழுது நான் வதிக்கின்றேன். துர்மாயைகளைக் (தீமை விளைக்கும் மாயாஜாலங்களைக்) கற்றறிந்து, கொழுத்திருக்கின்ற உன் தலையை நூறு கணுக்களையுடைய (பிரிவுகளை உடைய) வஜ்ராயுதத்தினால் அறுத்து விடுகிறேன். மந்தபுத்தி உடையவனே! நீ உன் ஜ்ஞாதிகளுடன் (கூட்டாளிகளுடன்) வந்து பலமுள்ளவளவும் யுத்தம் செய்வாயாக.

பலி சொல்லுகிறான்:- யுத்தம்செய்ய முயன்றவர்கள், அனைவர்க்கும் காலத்தினால் பரிபாக தசையை (பலன் கொடுக்கும் நிலையை) அடைந்த பூர்வ கர்மங்களுக்குத் தகுந்தபடி கீர்த்தி (புகழ்), ஜயம் (வெற்றி), அபஜயம் (தோல்வி), மரணம் (இறப்பு) இவை க்ரமமாக விளைகின்றன. பண்டிதர்கள், ஜயம் (வெற்றி), அபஜயம் (தோல்வி), புகழ் முதலிய பலன்களைப் பெறுகிற ஜனங்களைப் பார்த்துக் காலத்தினால் பரிபக்வமான (முதிர்ந்த) கர்மத்தின் பலனை அனுபவிக்கிறார்களென்று நினைப்பார்கள். ஆகையால், அவர்கள் ஜயாதிகளைப் (வெற்றிகளைப்) பற்றி ஸந்தோஷிக்கவும் மாட்டார்கள்; அபஜயாதிகளைப் (தோல்விகளைப்) பற்றி வருந்தவுமாட்டார்கள். உண்மை இப்படியிருக்க, ஜயித்தோமென்று ஸந்தோஷிக்கிற நீங்கள் அறிவுடையவர்களாக மாட்டீர்கள். நீங்கள் கர்மத்தினால் விளைகிற ஜயம் முதலிய பலன்களைப் பற்றி உங்கள் தேஹத்தையே காரணமாக நினைக்கிறீர்கள். நீங்கள் அறிஞர்களால் “இப்படியும் சில மூடர்கள் உண்டோ” என்று சோகிக்கத் தகுந்தவர்களாயிருக்கிறீர்கள். ஆகையால், மர்மத்தில் உறுத்தும்படியான உங்கள் வார்த்தைகளை நாங்கள் நன்றென்று கொள்ள மாட்டோம்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- வீரர்களின் கொழுப்பை அடக்கும் திறமையுடைய மஹாவீரனாகிய பலி, இவ்வாறு மேன்மையுடைய தேவேந்த்ரனைப் பலவாறு வைது (திட்டி), அவ்வைதல்களால் (அந்த திட்டுகளால்) அடியுண்ட அவனை மீளவும் காது நுனி வரையில் இழுத்து விடப்பட்ட நாராசபாணங்களால் (சப்திக்கும் அம்புகளால்) அடித்தான். உண்மையை உரைக்கின்ற சத்ருவாகிய பலியினால், இவ்வாறு நிந்திக்கப்பட்ட (பழிக்கப்பட்ட) தேவேந்திரன், மாவெட்டியால் அடியுண்ட யானை போல, அவன் சொன்ன நிந்தனைகளைப் பொறுக்க முடியாமல், எங்கும் தடைபடாததும் சத்ருக்களை அழிப்பதுமாகிய வஜ்ராயுதத்தை, அவன்மேல் ப்ரயோகித்தான். 

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 178

 எட்டாவது ஸ்கந்தம் - பத்தாவது அத்தியாயம்

(அஸுரர்கள் த்வேஷத்தினால் (பகைமையால்) தேவதைகளோடு யுத்தம் செய்கையும், தேவதைகள் அஸுரமாயைகளால் வருந்துவதும், பகவான் அவ்விடம்வந்து ஆவிர்ப்பவித்தலும் (தோன்றுதலும்))

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மன்னவனே! அஸுரர்கள் இவ்வாறு ஸமுத்ரம் கடையும் கார்யத்தில் முயற்சி ஏற்றுக்கொண்டவர்களாயினும், ஸர்வாந்தராத்மாவான பரமபுருஷனிடத்தில் மனப்பற்றின்றிக் கொழுத்து (கர்வமுற்று) இருந்தார்களாகையால், அம்ருதத்தை அடையவில்லை. ராஜனே! பகவான் இவ்வாறு அம்ருதத்தை உண்டாக்கித் தன் பக்தர்களான தேவதைகளைப் பானம் செய்வித்து, ஸமஸ்த பூதங்களும் பார்த்துக் கொண்டிருக்கையில், கருடவாஹனத்தின் மேல் ஏறிக்கொண்டு போனான். 

அவ்வாறு அம்ருதத்தை இழந்த அஸுரர்கள், தங்கள் சத்ருக்களான (எதிரிகளான) தேவதைகளுக்குப் பெரிய பலஸித்தி (பலன்) உண்டானதைப் பொறுக்கமுடியாமல், ஆயுதங்களை ஏந்திக்கொண்டு, தேவதைகளை எதிர்த்தோடினார்கள். அப்பால், தேவக்கூட்டத்திலுள்ளவர் அனைவரும் அம்ருதபானத்தினால் வலித்து, மேன்மையுடன் வளர்ந்திருக்கையாலும், ஸ்ரீமந்நாராயணனுடைய பாதாரவிந்தங்களைப் பணிகையாகிற பலத்தினாலும், உத்ஸாஹமுற்று, ஆயுதங்களை ஏந்திக்கொண்டு, அஸுரர்களை எதிர்த்துச் சண்டை செய்தார்கள்.

மன்னவனே! அந்த க்ஷீரசமுத்ரத்தின் கரையில், தேவதைகளுக்கும், அஸுரர்களுக்கும், மிகப் பயங்கரமான ஸங்குல (குழப்பமான) யுத்தம் நடந்தது. அது தேவாஸுர யுத்தமென்று பேர்பெற்றது. அது, காண்போர்களுக்கு மயிர்க்கூச்சலை விளைத்தது. அப்பொழுது, ஒருவர்க்கொருவர் சத்ருக்களான (எதிரிகளான) தேவாஸுரர்கள், பெரும் கோபாவேசமுற்று, யுத்தத்தில் ஒருவர்மேல் ஒருவர் விழுந்து, பாணங்களாலும், பலவகை ஆயுதங்களாலும், ஒருவரையொருவர் அடித்தார்கள். சங்கு, ம்ருதங்கம், துந்துபி, டமரு முதலிய வாத்யங்களின் த்வனியும் (ஒலியும்), யானைகளின் பிளிறல்களும், குதிரைகளின் கனைப்புக்களும், காலாட்படைகளின் (பூமியில் நின்று யுத்தம் செய்யும் வீரர்களின்) கர்ஜனையும், சேர்ந்து பெருங்கோஷம் உண்டாயிற்று. அந்தத் தேவாஸுர யுத்தத்தில் தேராளிகள் (தேரில் நின்று போர் செய்பவர்கள்) தேராளிகளோடும், காலாட்கள் (பூமியில் நின்று யுத்தம் செய்யும் வீரர்கள்) காலாட்களோடும், குதிரைகள் குதிரைகளோடும், யானைகள் யானைகளோடும் கலந்து, சண்டை செய்தார்கள். அந்தத் தேவாஸுர வீரர்களில் சிலர், ஒட்டைகள் மேலும், சிலர் யானைகள் மேலும், சிலர் கழுதைகள் மேலும், சிலர் வெளுத்த முகமுடைய கரடிகள் மேலும், சிலர் புலிகள் மேலும், சிலர் ஸிம்ஹங்கள் மேலும், சிலர் கழுக்கள் மேலும், சிலர் கங்கபக்ஷிகள் மேலும், சிலர் செந்நாய்கள் மேலும், சிலர் பருந்துகள் மேலும், சிலர் பாஸபக்ஷிகள் மேலும், சிலர் திமிங்கிலமென்கிற மத்ஸ்யங்கள் மேலும், சிலர் சரப மிருகங்கள் மேலும், சிலர் கடாக்கள் மேலும், சிலர் கட்க மிருகங்கள் மேலும், சிலர் பசுக்கள் மேலும், சிலர் எருதுகள் மேலும், சிலர் கவய மிருகங்கள் மேலும், சிலர் அருண மிருகங்கள் மேலும், சிலர் நரிகள் மேலும், சிலர் பெருச்சாளிகள் மேலும், சிலர் ஓணான்கள் மேலும், சிலர் நாய்கள் மேலும், சிலர் மனுஷ்யர்கள் மேலும், சிலர் ஆடுகள் மேலும், சிலர் க்ருஷ்ணஸார மிருகங்கள் மேலும், சிலர் ஹம்ஸங்கள் மேலும், சிலர் பன்றிகள் மேலும், மற்றும் பலர் ஜலம், பூமி, ஆகாயம் இவற்றில் வஸிப்பவைகளும் விகாரமான உருவமுடையவைகளுமான பலவகை ஐந்துக்கள் மேலும் ஏறிக்கொண்டு, சத்ருக்களை (எதிரிகளை) எதிர்த்தார்கள்.