திங்கள், 18 அக்டோபர், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 349

த்வாதச (பன்னிரண்டாவது) ஸ்கந்தம் - பன்னிரண்டாவது அத்தியாயம்

(இப்புராணத்தில் சொன்ன விஷயங்களின் சுருக்கமும், பாகவத மஹிமையும் முதலியவை)

 ஸ்ரீஸூத புராணிகர் சொல்லுகிறார்:- அவரவர் விரும்பும் புருஷார்த்தங்களை எல்லாம் நிறைவேற்றிக் கொடுப்பவனாகையால் பரம தர்ம ஸ்வரூபனும் (சிறந்த அற வடிவானவனும்), அளவிறந்த மஹிமை உடையவனுமாகிய பரமபுருஷனுக்கு, நமஸ்காரம். தர்ம மர்யாதைகளை உபதேசாதிகளால் நிலை நிறுத்தி நடத்துபவரும், மஹானுபாவருமான பாதராயண முனிவருக்கு நமஸ்காரம். நன்மைக்கு ஹேதுவான பெருமையுடைய பகவத் பக்தி ரூபமான தர்மத்திற்கு நமஸ்காரம். தர்மோபதேசம் செய்பவனான, நான்முகனுக்கு நமஸ்காரம். நாரதர், ஸ்ரீசுகர் முதலிய அந்தணர்களுக்கு நமஸ்காரம் செய்து, பூர்வர்களின் (முன்னோர்களின்) உபதேச பரம்பரையால் இடைவீடின்றி நடைபெற்று வந்தவைகளும், கீழ் இந்த ப்ரபந்தத்தில் நிரூபிக்கப்பட்டவைகளுமான பாகவத தர்மங்களைச் சுருக்கமாகச் சொல்லுகிறேன்; கேட்பீர்களாக. 

அந்தணர்களே! நீங்கள் எதைப்பற்றி என்னை வினவினீர்களோ, எது மனுஷ்ய ஜன்மம் பெற்ற ஸமஸ்த ஜீவாத்மாக்களுக்கும் கேட்பது முதலியவைகளால் ஆதரிக்கத் தக்கதோ, அத்தகையதும், ஸ்ரீமஹாவிஷ்ணுவின் சரித்ரங்களை எடுத்துரைப்பதும், மிகவும் அற்புதமுமான இந்தப் புராணத்தை உங்களுக்குச் சொன்னேன். இப்புராணத்தில் பாபங்களை எல்லாம் போக்குபவனும், தன்னைப் பற்றினாருடைய ஸம்ஸார பந்தத்தை (உலகியல் கட்டை) அறுப்பவனும், இந்த்ரியங்களுக்கு நியாமகனும் (நியமிப்பவனும்), ஷாட்குண்யபூர்ணனும் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனும்), பக்தர்களுடைய அனிஷ்டங்களை (தீமைகளைப்) போக்கி, இஷ்டங்களை (விருப்பங்களை) நிறைவேற்றுபவனுமாகிய ஸ்ரீமந்நாராயணன், நேரே நிருபிக்கப்படுகிறான். 

வேதாந்தங்களில் மறைத்துக் கூறப்படுபவனும், ஜகத்தில் ஸ்ருஷ்டி (படைத்தல்), ஸம்ஹாரங்களுக்கு (அழித்தல்) காரணனும், பரப்ரஹ்மமென்று பெயர் பெற்றவனுமாகிய பரமபுருஷனை இப்புராணம் நன்றாக நேரே நிரூபித்துச் சொல்லுகின்றது. இதில் 

(முதல் ஸ்கந்தத்தில்) ஸாதுக்களாகிய நீங்கள் என்னை இப்புராணத்தைப் பற்றி வினவின உபாக்யானமும் (சரித்ரமும்), ப்ரக்ருதி புருஷர்களைப் பிரித்தறிகையாகிற ஜ்ஞானமும், பரமாத்மனுடைய ஸ்வரூப (இயற்கைத் தன்மை), ரூப (திவ்ய மங்கள விக்ரஹம்), குண, விபூதிகளை (பெருமை, ஆளுமை, சொத்து) உள்ளபடி அறிகையாகிற விஜ்ஞானமும் கூறப்பட்டன. பிறகு, பக்தியோகமும், அதற்கு அங்கமான வைராக்யமும், பரீக்ஷித்தின் பிறவி முதலிய உபாக்யானமும் (சரித்ரமும்), நாரத மஹர்ஷியின் வ்ருத்தாந்தமும் (சரித்ரமும்), ராஜர்ஷியாகிய பரீக்ஷித்து ப்ராஹ்மண சாபத்தினால் ப்ராயோபவேசம் (இறக்கும் வரை உண்ணா நோன்பு) செய்ததும், 

ஞாயிறு, 17 அக்டோபர், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 348

த்வாதச (பன்னிரண்டாவது) ஸ்கந்தம் - பதினோறாவது அத்தியாயம்

(மஹாபுருஷனுடைய அங்க உப அங்கங்களான அஸ்த்ர (ஆயுதங்கள்) பூஷணாதிகளை (ஆபரணங்கள்) நிரூபித்தலும், த்வாதச ஆதித்ய (12 ஆதித்யர்கள்) வ்யூஹ வர்ணனமும்) 

சௌனகர் சொல்லுகிறார்:- எல்லாம் அறிந்தவர்களில் சிறந்தவரான உம்மை, நாங்கள் இந்த விஷயத்தைப் பற்றி வினவுகிறோம். புராணம், பஞ்சராத்ரம் முதலிய ஸமஸ்த சாஸ்த்ரங்களுடைய உண்மையும் உமக்கு நன்றாகத் தெரியும். ஆகையால், நீர் இந்த விஷயத்தை எங்களுக்குச் சொல்லவேண்டும். பகவதாராதன ரூபமான பாஞ்சராத்ராதி சாஸ்த்ரங்களின் உண்மையை அறிந்து, அவ்வாறே அனுஷ்டிக்கின்ற பெரியோர்கள், கேவல சுத்த ஸத்வமயமான திவ்யமங்கள விக்ரஹம் உடையவனும், ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு வல்லபனுமாகிய பகவானுடைய ஆராதனத்தில், பாணி (கை), பாதாதி (கால்) அங்கங்களையும், ஹ்ருதயம் முதலிய உப அங்கங்களையும், ஸுதர்சனம் முதலிய ஆயுதங்களையும், கிரீடம் முதலிய ஆபரணங்களையும், எந்தெந்த தத்வங்களுக்கு அபிமானி தேவதைகளாக எப்படி த்யானிக்கிறார்களோ, அதையெல்லாம் எங்களுக்கு நிரூபித்துச் சொல்வீராக. 

பகவதாராதன ரூபமான கர்ம யோகத்திற்கு இது வேண்டியதாகையால், நாங்கள் இதை அறிய விரும்புகிறோம். ஜன்ம (பிறப்பு), ஜரா (கிழத்தனம்), மரணாதி ரூபமான ஸம்ஸார (உலகியல்) துக்கங்களை அனுபவிக்கின்ற ஜீவன், அங்க உப அங்காதி கல்பனையோடு கூடிய இக்கர்மயோகத்தில் திறமை உண்டாகப் பெறுவானாயின், ஜன்ம- ஜரா- மரணாதி ரூபமான ஸம்ஸார துக்கங்களைக் கடந்திருக்கையாகிற முக்தியைப் பெறுவான்.

ஸூத புராணிகர் சொல்லுகிறார்:- ஆசார்யர்களை நமஸ்கரித்து ஸ்ரீமஹாவிஷ்ணுவினுடைய அங்க, உப அங்கங்களால் அபிமானிக்கப்பெற்ற அவனுடைய விபூதிகளை (சொத்தை, பெருமையைச்) சொல்லுகிறேன். ப்ரஹ்மதேவன், நாரதர் முதலிய பூர்வாசார்யர்கள் இந்த விபூதிகளை (சொத்தை, பெருமையை) வேதத்தினின்றும், பஞ்சராத்ர சாஸ்த்ரத்தினின்றும் அறிந்து கொண்டார்கள். மாயை என்னும் பெயருடைய ப்ரக்ருதி, மஹத்து, அஹங்காரம், பஞ்சபூதங்கள், காலம் ஆகிய இவ்வொன்பது தத்வங்களாலும் இவற்றின் விகாரங்களான (மாறுபாடுகளான) பதினொரு இந்த்ரியங்கள் பஞ்ச தன்மாத்ரங்கள் (பஞ்ச பூதங்களின் நுட்பமான நிலை) இவைகளாலும், இந்த ப்ரஹ்மாண்டம் நிர்மிக்கப்பட்டதென்று சாஸ்த்ரம் சொல்லுகிறது. மற்றும், ஜீவாத்மாக்கள் நிறைந்த இந்த ப்ரஹ்மாண்டத்தில், மூன்று லோகங்களும் புலப்படுகின்றன. இத்தகையதான இந்த ப்ரஹ்மாண்டத்திற்குப் பரமபுருஷனுடைய திவ்யமங்கள விக்ரஹம் அபிமான தேவதையாகையால், இதை அவனுடைய திவ்யமங்கள விக்ரஹமாகச் சொல்லுகிறார்கள். 

புதன், 13 அக்டோபர், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 347

த்வாதச (பன்னிரண்டாவது) ஸ்கந்தம் - பத்தாவது அத்தியாயம்

(ருத்ரன் மார்க்கண்டேயருக்கு வரங்கொடுத்தல்)

ஸ்ரீஸூத புராணிகர் சொல்லுகிறார்:- அம்மார்க்கண்டேய முனிவர், நாராயணனென்று ப்ரஸித்தி பெற்ற பரமபுருஷன் காட்டின அவனுடைய யோகமாயையின் வைபவத்தை இவ்வாறு அனுபவித்து, அம்மாயையைத் தாண்டுவதற்கு அந்தப் பரமபுருஷனையே சரணம் அடைந்தார்.

மார்க்கண்டேயர் சொல்லுகிறார்:- ஸ்ரீஹரீ! (தன்னைப் பற்றினவர்களின் பாபங்களைப் போக்குகையால் ஹரியென்று பெயர் பெற்றவனே!) தன்னையே சரணமாகப் பற்றினவர்களுக்கு அபயம் கொடுப்பதாகிய உன் பாதமூலத்தை நான் சரணம் அடைந்தேன். தேவர்களும் கூட எவனுடைய மாயையினால் மதியை (புத்தியை) இழந்து, மனம் கலங்கி மோஹிக்கிறார்களோ (மயங்குகிறானோ), அத்தகையனான உன்னுடைய மாயையைக் கடப்பதற்கு, நான் உன்னையே சரணம் அடைகின்றேன்.

ஸ்ரீஸூத புராணிகர் சொல்லுகிறார்:– அப்பொழுது, தன்னுடைய ப்ரமதகணங்களால் (சேவகர்களால்) சூழப்பட்டு பார்வதியுடன் வ்ருஷப (காளை) வாஹனத்தின் மேல் ஏறி, ஆகாயத்தில் திரிகின்ற மஹானுபாவனான உருத்திரன், பரமபுருஷனிடத்தில் மனவூக்கம் உற்றிருக்கின்ற அம்முனிவரைக் கண்டான். பிறகு, பார்வதி அம்மஹர்ஷியைக் கண்டு, கிரீசனைக் குறித்து, “மஹானுபாவனே! இம்முனிவர் தேஹம் (உடல்), இந்த்ரியம் (புலன்), மனம் இவையெல்லாம் சிறிதும் சலியாதபடி அடக்கி, காற்றில்லாத பொழுது, ஜலமும், மீன்களின் கூட்டமும் அசையாதிருக்கப்பெற்ற மாஹாஸமுத்ரம் (பெரும் கடல்) போன்றிருக்கிறார். இவரைக் கிட்டிச் (அருகில்) சென்று காண்போம். நீ விரும்பி ஸித்திகளை (முழுமையான பலன்களை) எல்லாம் கொடுப்பவனல்லவா? ஆகையால், இம்முனிவர் எதை விரும்பித் தவம் செய்கிறாரோ, அந்த ஸித்தியை (பலனை) நீயே இவர்க்குக் கொடுப்பாயாக” என்று மொழிந்தாள். 

உருத்திரன் சொல்லுகிறான்:- இவர் ப்ரஹ்மரிஷி. இவர் இஹலோக (இந்த உலக) ஸுகங்களையாவது (இன்பங்களையாவது), பரலோக (பிற உலக) ஸுகங்களையாவது எவற்றையும் விரும்புகிறவரல்லர். ஆயிரம் சொல்லியென். இவர், அழிவற்ற பரமபுருஷனான பகவானிடத்தில் அனன்ய ப்ரயோஜனமான (பகவானைத் தவிர வேறு எந்த பலனையும் விரும்பாத) பக்தி கைகூடப் பெற்றவர். (ஒரு ப்ரயோஜனத்தையும் (பலனையும்) எதிர்பாராமல், பகவானிடத்தில் நிலை நின்ற பக்தியுடையவர்கள், எதையும் விரும்ப மாட்டார்கள்). 

பவானி! ஆயினும் ஸாதுவாகிய இம்முனிவருடன், ஸம்பாஷணம் (உரையாடல்) செய்வோம். (“அவ்வளவு மாத்ரத்தினால் என்ன ப்ரயோஜனம் (பலன்)? என்கிறாயோ?” சொல்லுகிறேன் கேள்.) ப்ராணிகளுக்கு, ஸத்புருஷர்களோடு ஸமாகமம் (தொடர்பு) நேருமாயின், இதுவே அவர்களுக்குப் பரம லாபமாம்.

ஸ்ரீஸூத புராணிகர்  சொல்லுகிறார்:- ஸத்புருஷர்களுக்குக் கதியும், ஸர்வ வித்யா நிர்வாஹகனும் (எல்லா வித்யைகளையும் நியமிப்பவனும்), ஸமஸ்த ப்ராணிகளுக்கும் ஈச்வரனும், மஹானுபாவனுமாகிய அவ்வுருத்திரன் இவ்வாறு மொழிந்து, அம்மஹர்ஷியிடம் சென்றான். அம்முனிவர், அந்தக்கரண (மனதின்) வ்ருத்திகளை (எண்ணங்களை) எல்லாம் அடக்கி, பரமபுருஷனிடத்தில் மனத்தை நிலைநிறுத்தி, அவனையே த்யானித்துக் கொண்டிருக்கையால், ஒன்றான ஜகதீச்வரனும், ஸமஸ்த ஜகத்திற்கும் அந்தராத்மாவுமாகிய பரமபுருஷனுடைய அம்சமாகையால் அத்தன்மைகளெல்லாம் அமையப்பெற்ற பார்வதியும் பரமேச்வரனுமாகிய அவ்விருவரும் எதிரில் வந்து நின்றிருப்பதையும், தன் தேஹத்தையும் மற்றுமுள்ள ப்ரபஞ்சத்தையும் அறியாதிருந்தார். 

மஹானுபாவனாகிய கிரீசனும் அதை அறிந்து, பகவத் உபாஸனத்தினால் (பகவானை த்யானிப்பதால்) தனக்கு ஏற்பட்டிருக்கின்ற பரகாய ப்ரவேச ஸாமர்த்யமாகிற (வேறு ஒருவது உடலில் புகும் திறமையாகிற)  சக்தியினால் காற்று ரந்தரத்தில் (த்வாரத்தில்) ப்ரவேசிப்பது போல், அம்முனிவருடைய ஹ்ருதய ஆகாசத்தில் (இதயத்தில்) ப்ரவேசித்தான். 

வெள்ளி, 8 அக்டோபர், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 346

த்வாதச (பன்னிரண்டாவது) ஸ்கந்தம் - ஒன்பதாவது அத்தியாயம்

(மார்க்கண்டேயர் பகவானுடைய மாயையைக் காண வேண்டுமென்று விரும்ப, அவ்விருப்பத்தைப் பகவான் நிறைவேற்றுதல்)

ஸுதர் சொல்லுகிறார்:– ப்ருகு வம்சத்தை மேன்மைப்படுத்தும் மஹானுபாவரே! நரனை நண்பனாகவுடைய நாராயணன், மிகுந்த மதியுடைய மார்க்கண்டேயரால் இவ்வாறு நன்கு துதிக்கப் பெற்று, ஸந்தோஷம் அடைந்து, அவரைக் குறித்து மொழிந்தான்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:– ஓ, ஓ! மார்க்கண்டேயரே! நீர் மனவூக்கத்துடன் தவம், வேதமோதுதல், இந்த்ரிய நிக்ரஹம் (புலனடக்கம்) இவற்றைக் குறைவற அனுஷ்டித்து, என்னிடத்தில் அழிவில்லாத பக்தியைச் செய்ததனால் ஸித்தி பெற்றீர் (முழுமை அடைந்தீர்); ப்ரஹ்ம ரிஷிகளில் சிறந்தவரும், ஆகிவிட்டீர். நீர் ஒரு ப்ரயோஜனத்தையும் (பயனையும்) விரும்பாமல், நைஷ்டிக ப்ரஹ்மசர்ய (ப்ரஹ்மசர்யத்திலிருந்து வழுவாமல் நிலை நிற்கும்) வ்ரதத்தை அனுஷ்டித்ததற்கு நாங்கள் அனைவரும் ஸந்தோஷம் அடைந்தோம். உமக்கு நன்மை உண்டாகுக. வரம் கொடுக்கிறவர்களில் சிறந்த என்னிடத்தினின்று உமக்கிஷ்டமான வரத்தை வேண்டிக் கொள்வீராக.

மார்க்கண்டேய ரிஷி சொல்லுகிறார்:– தேவதைகளுக்கெல்லாம் தேவர்களான ப்ரஹ்மாதிகளுக்கும் நியாமகனே (நியமிப்பவனே)! தன்னையே சரணமாக அடைந்தவர்களின் வருத்தங்களைப் போக்கும் தன்மையனே! ஆச்ரிதர்களை (அடியார்களைக்) கைவிடாதவனே! உனக்கு ஜயம் உண்டாகுக. நீ எனக்குப் புலப்பட்டாயே (தெரிந்தாயே) இந்த வரமே எனக்குப் போதும். (இதற்கு மேல் நான் விரும்ப வேண்டியது ஒன்றும் இல்லை. ப்ரஹ்மதேவன் முதலியவர்களும் கூட மனத்தை யோகத்தினால் பரிசுத்தம் செய்து எவனுடைய அழகான பாதார விந்தங்களைக் காண வேண்டுமென்று விரும்புகிறார்களோ, அத்தகைய நீ என் கண்களுக்குப் புலப்படாய். இதற்கு மேற்பட்ட வரம் என்ன இருக்கின்றது?) ஆயினும், உன்னுடைய ஆச்சர்ய சக்தியைக் காண விரும்புகிறேன். ப்ரஹ்மாதி லோக பாலர்களோடு கூடிய இவ்வுலகமெல்லாம் உன்னுடைய ஆச்சர்ய சக்தி ரூபமான மாயையினால் ஸ்ருஷ்டிக்கப்பட்ட (படைக்கப்பட்ட) தேவர், திர்யக்கு (விலங்கு), மனுஷ்யர், ஸ்தாவரம் (மரம்,செடி) என்னும் பேதத்தை (வேற்றுமையைக்) காண்கின்றது. அத்தகைய மாயையைக் காண விரும்புகிறேன். அதை எனக்குக் காட்டுவாயாக.

செவ்வாய், 5 அக்டோபர், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 345

த்வாதச (பன்னிரண்டாவது) ஸ்கந்தம் - எட்டாவது அத்தியாயம்

(மார்க்கண்டேயர் தவம் செய்தலும், அவர் காமாதிகளால் (காதல் ஆசை) மயங்காதிருத்தலும், நர-நாராயணர்களை ஸ்தோத்ரம் செய்தலும்)

சௌனகர் சொல்லுகிறார்:- ஸூதரே! நீர் நெடுநாள் ஜீவித்திருப்பீராக. நல்லியற்கை உடையவரே! பிறருடைய கார்யங்களை நிறைவேற்றிக் கொடுக்கும் தன்மையரே! பேச வல்லவர்களில் சிறந்தவரே! நாங்கள் இன்னம் என்ன கேட்க வேண்டும் என்று விரும்புகிறோமோ, அதையும் எங்களுக்குச் சொல்வீராக. அபாரமான அஜ்ஞான அந்தகாரத்தில் (அறியாமையாகிற இருட்டில்) அழுந்தி உழல்கின்ற ஜந்துக்களை நீர் அதினின்று கரையேற்றுவிக்கின்றீர். (ஆகையால், நீர் நெடுநாள் வளர்ந்த வாழ்நாளுடையவராகி எங்களைப் போன்றவர்களின் அஜ்ஞானத்தை (அறியாமையைப்) போக்கிக் கொண்டிருப்பீராக). 

ஜனங்கள் மார்க்கண்டேய மஹர்ஷியைச் சிரஞ்சீவியென்று சொல்லுகிறார்கள். இவர் கல்பாந்தத்திலும் (கல்ப முடிவிலும்) கூட மரணம் அடையாமல், மிகுந்திருந்தாரல்லவா. மற்றும், இவர், “எவன் இந்த ஜகத்தையெல்லாம் கல்பாந்தத்தில் விழுங்கினானோ அத்தகைய பகவானையும் கண்டாரல்லவா? பார்க்க வம்ச ச்ரேஷ்டரான அந்த மார்க்கண்டேயர், இதே கல்பத்தில் எங்கள் வம்சத்தில் பிறந்தவர். இந்தக் கல்பத்தில், நைமித்திகம், ப்ராக்ருதம் முதலிய ப்ரளயங்களில் எவ்விதமான ப்ரளயமும் இதுவரையில் ப்ராணிகளுக்கு நேரிடவில்லை. இப்படியிருக்க, அவர் ப்ரளயத்தில் மிகுந்திருந்தாரென்பது எவ்வாறு பொருந்தும், மற்றும், அவர் ஒருவரே ப்ரளய ஆர்ணவத்தில் (ஊழி வெள்ளத்தில்) திரிந்து கொண்டிருந்து, ஓர் ஆலிலையின் மேல் சயனித்துக்கொண்டிருக்கிற சிறிய சிசு ரூபியான (குழந்தை வடிவான) பரமபுருஷனைக் கண்டாரென்றும் சொல்லுகிறார்கள். 

ஸூதரே! இவ்விஷயத்தில் எங்களுக்குப் பெரிய ஸம்சயமாய் (ஸந்தேஹமாய்) இருக்கின்றது. ஆகையால், அந்த வ்ருத்தாந்தத்தை (சரித்ரத்தைக்) கேட்க வேண்டும் என்று எங்களுக்கு மிகவும் குதூஹலம் (உத்ஸாஹம்) உண்டாயிருக்கின்றது. அதைச் சொல்லி, எங்கள் ஸம்சயத்தை (ஸந்தேஹத்தைப்) போக்குவீராக. நீர் யோகிகளில் சிறந்தவர். ஆகையால், எல்லாவற்றையும் ஸாக்ஷாத்கரிக்கும் (நேராகப் பார்க்கும்) திறமையுடையவர்; அன்றியும், புராணங்களிலும் நல்ல அறிஞரென்று நன்கு புகழப்பட்டவர்.

ஸுதர் சொல்லுகிறார்:- மஹர்ஷீ! நீர் கேட்ட இவ்விஷயம் உலகங்களின் பாபங்களை எல்லாம் போக்கவல்லது. ஏனென்றால், இந்த வ்ருத்தாந்தத்தில் கலி மலங்களை (கலி யுகத்தின் அழுக்கை) எல்லாம் போக்க வல்லதாகிய ஸ்ரீமந்நாராயணனுடைய கதை, பெரும்பாலும் அமைந்திருக்கின்றது. (இதைச் சொல்லத் தொடங்கினோமானால், ஸ்ரீமந்நாராயணனுடைய கதைகளையே பெரும்பாலும் சொல்ல வேண்டியதாய் வரும். ஆகையால், இந்த வ்ருத்தாந்தம் மிகவும் பாவனமாய் (தூய்மைப்படுத்த வல்லதாய்) இருக்கும்). 

திங்கள், 4 அக்டோபர், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 344

த்வாதச (பன்னிரண்டாவது) ஸ்கந்தம் - ஏழாவது அத்தியாயம்

(அதர்வ வேதத்தின் விபாகத்தைக் கூறுதல்)

ஸுதர் சொல்லுகிறார்:- அதர்வ வேதத்தை அறிந்த ஸமந்தர் என்பவர் தன் சிஷ்யரான கபந்தரென்பவருக்குத் தான் அத்யயனம் செய்த அதர்வ வேத ஸம்ஹிதையை உபதேசித்தார். அக்கபந்தர் அந்த அதர்வ ஸம்ஹிதையை இரண்டு சாகைகளாகப் (கிளைகளாகப்) பிரித்துப் பத்யரென்னும் சிஷ்யர்க்கு ஒரு சாகையையும், வேததர்சர் என்னும் சிஷ்யர்க்கு ஒரு சாகையையும் உபதேசித்தார்.

ப்ரஹ்மரிஷியே! சௌல்காயனி, ப்ரஹ்மபிலி, மௌத்கலர், பிப்பலாயனர் என்னும் இந்நால்வரும் ப்ரஸித்தர்கள் அல்லவா? அவர்கள் வேததர்சருடைய சிஷ்யர்கள். பத்யருடைய சிஷ்யர்களையும் சொல்லுகிறேன்; கேட்பீராக. 

குமுதர், சுனகர், ஜாஜலி என்னும் இம்மூவரும் பத்யருடைய சிஷ்யர்கள். (வேததர்சர் தன்னுடைய ஸம்ஹிதையை நான்கு பாகங்களாகப் பிரித்துத் தன் சிஷ்யர்கள் நால்வர்க்கும் உபதேசித்தார். பத்யர், தன் ஸம்ஹிதையை மூன்று பாகங்களாகப் பிரித்துத் தன் சிஷ்யர்கள் மூவர்க்கும் உபதேசித்தார்). அவர்களில் ஜாஜலி அதர்வ வேதத்தை நன்றாக உணர்ந்தவர். பப்ருவும், ஆங்கிரஸ கோத்ரத்தில் பிறந்த ஸைந்தவாயனரும் சௌனகருடைய சிஷ்யர்கள்.(அந்த சௌனகர், தன் ஸம்ஹிதையை இரண்டு சாகைகளாகப் பிரித்துத் தன் சிஷ்யர்களுக்கு உபதேசிக்க) அவ்விருவரும் அவ்விரண்டு சாகைகளை அவரிடத்தினின்று பெற்றார்கள். பப்ரு, ஸைந்தவாயனர் ஆகிய அவ்விருவருடைய சிஷ்யர்களான ஸாவர்ணி, நக்ஷத்ரகல்பர், சாந்திகல்பர் ஆகிய இவர்களும் காச்யபர்களும் ஆங்கிரஸர்களும் அதர்வ வேதத்தின் சாகைகளைப் பிரித்து ப்ரவர்த்திப்பித்தார்கள் (கற்பித்தார்கள்). முனிவரே! இவ்வாறு வேத ஸம்ஹிதா விபாகத்தைச் (பிரிவைச்) சொன்னேன். இனிமேல் பௌராணிகர்களைச் சொல்லுகிறேன், கேட்பீராக. 

ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 343

த்வாதச (பன்னிரண்டாவது) ஸ்கந்தம் - ஆறாவது அத்தியாயம்

(பரீக்ஷித்து மோக்ஷம் அடைதலும், ஜனமேஜயன் ஸர்ப்பயாகம் செய்தலும், வேதங்களின் சாகைகளை நிரூபித்துக் கூறுதலும்)

ஸூதர் சொல்லுகிறார்:- ஸமஸ்த ஆத்மாக்களையும் ஸமமாகப் பார்க்கும் தன்மையரும், வ்யாஸ மஹர்ஷியின் குமாரரும், பரப்ரஹ்மத்தையே மனனம் செய்பவருமாகிய ஸ்ரீசுகமுனிவரால் இவ்வாறு மொழியப் பெற்ற பரீக்ஷித்து மன்னவன், வணங்கின தலையினால் அவருடைய பாத கமலத்தை ஸ்பர்சித்து (தொட்டு), கைகளைக் குவித்துக் கொண்டு, அம்முனிவரைக் குறித்து மேல்வாறு கூறினான்.

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- தேவரீர் என்னிடத்தில் கருணை கூர்ந்து, ஆதி அந்தங்கள் (முதல், முடிவு) அற்றவனும், தன்னைப் பற்றினாருடைய ஸம்ஸார பந்தத்தை (உலகியல் கட்டைப்) போக்கும் தன்மையனுமான பரமபுருஷனுடைய ஸ்வரூபத்தையும், உபாஸனத்தையும் (த்யானத்தையும்), நான் ஸாக்ஷாத்கரித்தாற் போல் (நேரில் பார்த்து அறிந்தது) அறியும்படி எனக்கு உபதேசித்தீராகையால், நான் ஸித்தார்த்தனானேன். (விரும்பின பொருள் கிடைக்கப்பெற்றேன்); அனுக்ரஹிக்கப்பட்டேன் (அன்புடன் அனைத்து ஆதரவு செய்யப்பட்டவன், ஆசீர்வதிக்கப் பட்டவன் ஆனேன்). இவ்வளவு அனுக்ரஹம் செய்யப் பெற்றேனாகையால், எனக்கு இனி கேட்க வேண்டியது என்ன இருக்கின்றது? பற்றினவரைக் கைவிடாமல் காக்கும் தன்மையனான பரமபுருஷனிடத்தில் நிலை நின்ற மனமுடையவர்களும், வாத்ஸல்ய (அப்பொழுது ஈன்ற கன்றிடம் பசு காட்டும் பரிவு), ஸௌசீல்யாதி (உயர்ந்தவராய் இருந்தும், தாழ்ந்தோருடன் இரண்டறக் கலந்து பரிமாறும் பண்பு) குணங்களால் மேன்மையுற்றவர்களுமாகிய உம்மைப் போன்ற பெரியோர்கள், ஆத்ம ஸ்வரூபாதிகளை (ஜீவாத்மா, பரமாத்மாவின் இயற்கைத் தன்மைகளை) அறியாதவர்களும், ஆத்யாத்மிகம் முதலிய தாபங்களால் 

  1. ஆத்யாத்மிகம் (சரீரத்திற்கு ஏற்படும் தலைவலி, சளி முதலிய நோய்கள் மற்றும் மன நோய்களான காமம், கோபம், பயம் முதலியன

  2. ஆதிதெய்விகம் (குளிர், சூடு, மழை முதலியவற்றால் ஏற்படும் துன்பங்கள்), 

  3. ஆதிபௌதிகம் (ம்ருகம், பறவை, மனிதர் முதலியவற்றால் வரும் துன்பங்கள்) 

என்ற மூன்று வகையான துன்பங்களால் வருந்துகிறவர்களுமாகிய ப்ராணிகளிடத்தில் அனுக்ரஹம் செய்வது பெரிய ஆச்சர்யமாக எனக்குத் தோற்றவில்லை. (அவர்களுக்கு அதுவே தன்மையல்லவா?) உத்தம ச்லோகனான பகவானுடைய குணாதிகளையே முக்யமாக நிரூபிக்கிற இப்புராண ஸம்ஹிதையை உம்மிடத்தினின்று நான் கேட்டேன். உம்மால் நிரூபிக்கப்பட்டதும், பயங்களுக்கிடமாகாததும், மஹாநந்த ஸ்வரூபமுமாகிய பரப்ரஹ்மத்தின் அனுபவத்தில் அழுந்தினேன். ஆகையால், தக்ஷகன் முதலிய ம்ருத்யுக்களிடத்தினின்று நான் சிறிதும் பயப்படவில்லை. 

ப்ரஹ்ம ரிஷி! நான் மௌன வ்ரதத்தை ஏற்றுக் கொண்டு, விஷய அபிலாஷங்களும் (உலக விஷயங்களில் ஆசையும்), அவற்றின் வாஸனைகளும் (ஆழ்ந்த மனப்பதிவுகளும்) தீரப் பெற்ற மனத்தை அதோக்ஷஜனிடத்தில் (இந்திரியங்களால் விளையும் அறிவுகளுக்கெட்டாத பரமபுருஷனிடத்தில்) நிலைநிறுத்தி, ப்ராணன்களை (உயிரை) விட விரும்புகிறேன். எனக்கு அனுமதி கொடுப்பீராக. நீர் கேவல ஆநந்த ரூபமான (இன்பமே வடிவான) பகவத் ஸ்வரூபத்தை (பகவானின் இயற்கைத் தன்மையை) எனக்குத் தெரிவித்து, ஜ்ஞான, விஜ்ஞான நிஷ்டையை உண்டாக்கி (சிறந்த அறிவில் நிலைபெறச் செய்து), தேஹாத்மப்ரமம் (இந்த உடலே ஆத்மா என்கிற தவறான எண்ணம் – மனக்கலக்கம்), ஸ்வதந்த்ராத்ம ப்ரமம் (நாம் பகவானது கட்டளைக்கு உட்படாது தன்னிச்சைப்படி செயல்படும் வல்லமை உடையவர்கள் என்ற மனக்கலக்கம்) இவற்றிற்கிடமான அஜ்ஞானத்தைப் போக்கினீர். ஆகையால் நான் க்ருதார்த்தன் (வேண்டியதைப் பெற்றவன்) ஆனேன்.

சனி, 25 செப்டம்பர், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 342

த்வாதச (பன்னிரண்டாவது) ஸ்கந்தம் - ஐந்தாவது அத்தியாயம்

(ஸ்ரீசுகர் பரீக்ஷித்துக்கு மீளவும் சுருக்கமாக ப்ரஹ்ம ஸ்வரூபத்தை உபதேசித்து,  தக்ஷக ஸர்ப்பம் கடிப்பதனால் நேரும் மரண பயத்தைப் போக்குதல்.)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இந்தப் புராண ஸம்ஹிதையில் தன்னைப் பற்றினாருடைய ஸம்ஸார பந்தத்தைப் போக்கும் தன்மையனும், ஸர்வாந்த்ராத்மாவும் (எல்லோரையும் உள் இருந்து நியமிப்பவனும்), ஷாட்குண்யபூர்ணனுமாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) பரமபுருஷன், அடிக்கடி நிரூபிக்கப்படுகிறான். (இதில் பரமபுருஷனுடைய குணங்களைச் சொல்லாமல், அன்யபரமான (மற்றவற்றைச் சொல்லும்) பாகம் சிறிதும் கிடையாது). 

எவனுடைய அனுக்ரஹத்தினின்று ப்ரஹ்மதேவனும், கோபத்தினின்று ருத்ரனும் உண்டானார்களோ, அத்தகைய ஸர்வகாரணனான பரமபுருஷனை, இந்த ப்ரபந்தம் ஆதியோடந்தமாக (முதலிருந்து முடிவு வரை) நிரூபித்துச் சொல்லுகின்றது. (காரண வஸ்துவே (எது எல்லாவற்றிற்கும் காரணமோ) த்யேயம் (அதுவே த்யானிக்கத் தக்கது) என்று சாஸ்த்ரங்கள் முறையிடுகின்றன. ஆகையால், காரண வஸ்துவை அடி தோறும் நிரூபித்துச் சொல்லுகிற இந்த ப்ரபந்தத்தைக் கேட்பவர்களுக்குக்  காரண வஸ்து த்யானம் அனாயாஸமாக (எளிதாக) நேரிடுமாகையால், அவர்களுக்கு மோக்ஷம் என்னும் பரம புருஷார்த்தம் கையிலங்கு நெல்லிக் கனியாகும் (உள்ளங்கையில் உள்ள நெல்லிக்கனி போல் தெளிவாக எளிதில் தெரியும்) என்பதில் ஸந்தேஹமில்லை) (“மரணம் ஸமீபிக்கப் பெறாமல் ஜீவித்திருக்கிறவர்களுக்கு அன்றோ இவை எல்லாம் உபாயங்களாம் (வழிகள்). மரணம் ஸமீபித்திருக்கிற நான் என்ன செய்வேனென்று நீ சிந்திக்க வேண்டாம்.”) 

ராஜனே! மரணம் அடையப்போகிறேனே என்னும் “இப்பசு புத்தியை (பசுபுத்தி - அவிவேகம்) துறப்பாயாக. (ஏனென்றால், நானென்று தோற்றுகிற ஆத்ம வஸ்து நித்யம் (அழிவற்றது); ஆகையால், அதற்கு மரணம் கிடையாது). நீ தேஹம் போல் முன்பில்லாமல் இப்பொழுது உண்டாகவில்லை; தேஹத்தைப்போல் மரணம் அடையப்போகிறதும் இல்லை. நீ உண்டாகி மீளவும் பீஜாங்குரம் (விதையிலிருந்து முளை; முளையிலிருந்து விதை) போல் புத்ர, பௌத்ராதிகளுடன் உண்டாகப் போகிறதுமில்லை. இந்த அவஸ்தைகளெல்லாம் தேஹத்திற்கே உள்ளவையன்றி, தேஹத்தைக் காட்டிலும் விலக்ஷணனான (வேறானவனான) உனக்கு அவை கிடையாது. 

புதன், 22 செப்டம்பர், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 341

த்வாதச (பன்னிரண்டாவது) ஸ்கந்தம் - நான்காவது அத்தியாயம்

(நைமித்திகம் முதலிய நான்குவகை ப்ரளயங்களை நிரூபித்தல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மன்னவனே! பரமாணு (மிகச்சிறிய பொருள்) முதல் த்விபரார்த்தம் வரையிலுள்ள பரமாணு (மிகச்சிறிய துகள் – ஜன்னல் வழியே வரும் ஸூர்ய கிரணங்களில் தெரியும் சிறு தூசியின் 30ல் ஒரு பங்கு பரமாணு) முதல் த்விபரார்த்தம் (ப்ரஹ்மாவின் ஆயுளின் அளவு த்விபரார்த்தம் எனப்படும். 

  1. க்ருத யுகம் 1728000 மனித வருடங்கள்; 

  2. த்ரேதா யுகம் 1296000 மனித வருடங்கள்; 

  3. த்வாபர யுகம் 864000 மனித வருடங்கள்; 

  4. கலி யுகம் 432000 மனித வருடங்கள். 

ஆக இவை நான்கும் சேர்ந்த ஒரு சதுர் யுகம் 4320000 மனித வருடங்கள். 1000 சதுர்யுகம் சதுர்முக ப்ரஹ்மாவின் ஒரு பகல்; அது போல் மற்றுமொரு 1000 சதுர்யுகம் சதுர்முக ப்ரஹ்மாவின் ஒரு இரவு; ஆக 2000 சதுர்யுகங்கள் சதுர்முக ப்ரஹ்மாவின் ஒரு நாள். அதாவது 4320000 * 2000 = 864,00,00,000 மனித வருடங்கள் சதுர்முக ப்ரஹ்மாவின் ஒரு நாள். 864,00,00,000 * 360 = 311040,00,00,000 மனித வருடங்கள் சதுர்முக ப்ரஹ்மாவின் ஒரு வருடம். ப்ரஹ்மாவின் ஆயுள் 100 வருடங்கள்; அதாவது 3,11,04,000 கோடி மனித வருடங்கள். இதுவே த்விபரார்த்தம் எனப்படும்.) காலத்தின் ஸ்வரூபத்தையும், க்ருத, த்ரேதாதி யுகங்களின் பரிமாணத்தையும் உனக்கு முன்னமே மொழிந்தேன். கல்பத்தையும், ப்ரளயத்தையும் விரித்துச் சொல்லுகிறேன்,கேட்பாயாக. (தைனந்தின கல்பமென்றும், மஹா கல்பமென்றும் கல்பம் இரண்டு விதம்). நாலாயிரம் யுகங்கள் சேர்ந்தால் ப்ரஹ்மதேவனுக்கு ஒரு தினம் (ஒரு பகல்) என்று கூறப்படுகின்றது. அதையே (தைனந்தின) கல்பமென்று உணர்வாயாக. 

மன்னவனே! அதில் பதினான்கு மனுக்கள் க்ரமமாக வருவார்கள். அந்த நாலாயிர யுகங்களடங்கிய கல்பத்தின் முடிவில் ப்ரளயம் உண்டாகும். அதுவும் அந்தக் கல்பத்தைப் போலவே நாலாயிரம் யுகங்களடங்கியது. அதையே ப்ரஹ்மதேவனுக்கு ஓரிரவென்று கூறுகிறார்கள். அப்பொழுது, இம்மூன்று லோகங்களும் மறைந்து போகின்றன. இந்த ப்ரளயத்தை நைமித்திக ப்ரளயமென்று சொல்லுவார்கள். இந்த ப்ரளயத்தில், ஜகத் ஸ்ருஷ்டி கர்த்தாவான (உலகைப் படைப்பவரான) ப்ரஹ்மதேவன், ஜகத்தையெல்லாம் தனக்குள் அடக்கிக் கொண்டு, ஆதிசேஷனகிற படுக்கையில் படுத்துக் கொண்டிருப்பான். ப்ரஹ்மதேவனுடைய சயனத்திற்கு நிமித்தமாயிருக்கையால், நைமித்திக ப்ரளயமென்று கூறப்படும். உலகங்களுக்கு எல்லாம் மேற்பட்டதாகிய ஸத்யலோகத்தில் வாஸம் செய்கின்ற ப்ரஹ்மதேவனுடைய வாழ்நாளாகிய இரண்டு பரார்த்தங்கள் கடக்கையில், மஹத்து, அஹங்காரம் இவைகளும், பஞ்ச பூதங்களும் ஆகிய ஏழு ப்ரக்ருதிகளும், மறைகின்றன. 

ஞாயிறு, 19 செப்டம்பர், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 340

த்வாதச (பன்னிரண்டாவது) ஸ்கந்தம் - மூன்றாவது அத்தியாயம்

(பூமி கீதங்களால் ராஜ்ய தோஷாதிகளையும், தோஷ (குறைபாடு, கெடுதி) பூயிஷ்டமான (அதிகமான) கலியில் தோஷங்களைப் போக்குவது ஸ்ரீஹரி நமஸ்காரமே என்பதையும் கூறுதல்.)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இப்பூமி, தன்னைப் பிறர் இடத்தினின்று ஜயித்து, ஸ்வாதீனப்படுத்தி (தன் வசப் படுத்திக்) கொள்வதில் முயற்சியுடைய மன்னவர்களை நோக்கி,  தனக்குள் பரிஹஸிக்கின்றது (சிரிக்கிறது). ம்ருத்யுவுக்கு (யமனுக்கு) விளையாட்டு பொம்மைகள் போன்ற இம்மன்னவர்கள், என்னைப் பிறர் வசத்தில் போகாதபடி வென்று, ஸ்வாதீன (தன்வசப்)படுத்திக் கொண்டு பூஜிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். தங்கள் தந்தை மரணம் அடைந்ததைக் கண்டவர்களாகையால், அவனைப் போல் தாமும் மரணம் அடைவது நிச்சயமென்பதை அறிந்தவர்களாயினும் இம்மன்னவர்கள், இவ்வாறு விரும்புவது வீணே. இவர்கள் இவ்விருப்பத்தினால் நீர்க்குமிழி போல் நிலையற்றதாகிய சரீரத்தில், “இது நிலை நின்றிருப்பது” என்னும் பெரிய விச்வாஸம் (நம்பிக்கை) உண்டாகப் பெறுகிறார்கள். (இப்பூமி, தமக்கே நிலைநின்றிருக்க வேண்டும் என்னும் வீண் விருப்பத்தினால், சரீரம் நீர்க்குமிழி போல் நிலையற்றது என்பதையும் மறந்து விடுகிறார்கள். 

இந்த்ரிய ஸுகங்களில் மன விருப்பமுற்று இருப்பானாயின், ராஜ்ய ப்ராப்தி (அரசு கிடைப்பது) நேராதாகையால், முதலில் ஆறு இந்த்ரியங்களையும் ஜயித்து, (அவ்வழியால் தேவதைகளின் அனுக்ரஹத்தைப் பெற்று), கண்டகங்கள் (முள் செடிகள்) போன்ற ராஜன், மந்திரி, மற்றுமுள்ள ஸஹாயர்கள் (துணையாய் இருப்பவர்), பட்டணத்து ஜனங்கள், அவர்களுக்கு ஆப்தர்கள் (நண்பர்கள்), யானைப் பாகர்கள் இவர்களை எல்லாம் ஜயித்து, இவ்வாறு க்ரமமாக (முறையாக) ஸமுத்ரங்களை அரைநாண் மாலையாகவுடைய (ஸமுத்ரங்களால் சூழப்பட்ட) பூமண்டலம் முழுவதையும் ஜயிக்க வேண்டும் என்று மனத்தில் பேராசை கொண்டு, ஸமீபித்திருக்கின்ற ம்ருத்யுவையும் (மரணத்தையும்) ஆலோசிக்கிறதில்லை. 

இவ்வாறு ஸமுத்ரங்களால் சூழப்பட்ட பூமண்டலத்தை ஜயித்து, பிறகு ஸமுத்ரத்தினிடையிலுள்ள த்வீபங்களையும் ஜயிக்க விரும்புகிறார்கள். பூமண்டலத்தையும், த்வீபாந்தரங்களையும் ஜயிப்பது, இந்த்ரிய ஜயத்திற்கு (புலன்களை வெல்வதற்கு) எவ்வளவு பயன்? இது நச்வரம் (அழியக்கூடியது) ஆகையால், இந்த்ரிய ஜயத்திற்கு இதைப் பயனாக நினைக்கவும் கூடாது. ஆனால், அதற்குப் பலன் யாதெனில், இந்த்ரிய ஜயத்திற்கு மோக்ஷம் பெறுகையே பயனாம். 

குருகுலத்தை மேன்மைப்படுத்தும் தன்மையனே! மனுக்களும், மனுபுத்ரர்களும் (தர்ம மார்க்கத்தில் நிலைநின்று, ஒரு மயிரிழையும் (சிறிதும்) பிசகாமல்) என்னை ஆண்டு வந்தும், கடைசியில் என்னை விட்டு, மரணம் அடைந்தார்களே அன்றி, என்னையும் தம்மோடு கூடக் கட்டிக் கொண்டு போகவில்லை. இப்பொழுதும் அவர்களே நிலையாயிருந்து ஆள்கின்றார்களென்பதும் இல்லை. புத்தியில்லாத இம்மூடர்கள், அப்படிப்பட்ட என்னை யுத்தத்தினால் ஸ்வாதீன (தன் வசப்)படுத்திக் கொள்ளப் போகிறார்களாம். இவர்களும் அவர்களைப் போலவே என்னை விட்டுத் தனியே போகப் போகிறார்களன்றி, என்னையும் தம்மோடு கூடக் கொண்டு போகப் போகிறதும் இல்லை; இங்கேயே நிலையாயிருந்து என்னை ஆளப்போகிறதும் இல்லை. இவர்களது விருப்பமெல்லாம் வீணேயன்றி, சிறிதும் உண்மையன்று. 

வியாழன், 16 செப்டம்பர், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 339

த்வாதச (பன்னிரண்டாவது) ஸ்கந்தம் - இரண்டாவது அத்தியாயம்

(ஸ்ரீசுகர் பரீக்ஷித்து மன்னவனுக்குக் கலியுக ப்ராதுர்பாவத்தின் (தோன்றுவதின்) அடையாளங்களைக் கூறுதல்.)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ராஜனே! பிறகு, பலிஷ்டமான (சக்தி வாய்ந்த) காலத்தினால், தர்மம், ஸத்யம், சௌசம் (தூய்மை), பொறுமை, தயை, ஆயுள், பலம், நினைவு இவை நாளுக்கு நாள் க்ஷீணிக்க (குறையப், அழியப்) போகின்றன. கலியில், பணமே மனுஷ்யர்களுக்கு ஆபிஜாத்யம் (நற்குலப் பிறப்பு), ஆசாரம், குணம் இவற்றிற்குக் காரணமாம். 

தர்ம வ்யவஸ்தைக்கும், ந்யாய வ்யவஸ்தைக்கும் (அறம், நேர்மை இவற்றிற்கு) தன பலமே காரணமாம். தம்பதிகளாயிருக்கைக்குக் காரணம் அவரவர்களின் அபிருசியே (விருப்பமே) அன்றி, ஆபிஜாத்யாதிகள் (நற்குலப் பிறப்பு) காரணமாக மாட்டாது. க்ரய, விக்ரய (விற்பது, வாங்குவது) வ்யவஹாரத்தில் (செயல்களில்), வஞ்சனையே முக்யமாயிருக்கும் அன்றி, நிஷ்கபடமென்பது (சூது, வாது இன்மை) சிறிதும் புலப்படாது. ஆண்மை, பெண்மைகளின் மேன்மைக்குக் கலியின் திறமையே காரணமாயிருக்குமன்றி, ஆண்மை, பெண்மைகளுக்கு முக்யமான மற்ற குணங்கள் காரணமாக மாட்டாது. 

ப்ராஹ்மண்யத்திற்கு, நூல் மாத்ரமே (யஜ்ஞோப வீதமே) அடையாளமாயிருக்குமன்றி, உபநயனாதி ஸம்ஸ்காரங்களும், மற்ற வித்யாதிகளும் புலப்படவே மாட்டாது. ப்ரஹ்மசர்யாதி ஆச்ரமங்களுக்கு, தண்டம், அஜினம் (மான் தோல்) முதலியவைகளே அடையாளமாக இருக்குமன்றி, ஆசார விசேஷம் (நன்னடத்தை) புலப்படாது. ஒரு ஆச்ரமத்தினின்று ஆச்ரமாந்தர (மற்ற ஆச்ரமத்தை) ப்ராப்திக்கும் (அடைவதற்கும்), ஒரு வர்ணத்தினின்று வர்ணாந்தர (வேறு ஜாதியை) ப்ராப்திக்கும் (அடைவதற்கும்), நீச, உத்தம பாவ ப்ராப்திக்கும் (தாழ்ந்த, உயர்ந்த நிலை அடைவதற்கும்), வேஷமே அடையாளமாக  இருக்குமன்றி, ஆசார விசேஷம் (நன்னடத்தை) அடையாளமாகாது. 

தாரித்ரியத்தினால் (ஏழ்மையால்) நியாயம் தோற்றுப் போகும். பலபடப் பேசுகையே (வெட்டிப் பேச்சே) பாண்டித்யத்திற்கு (அறிவுடைமைக்கு) அடையாளமாம். பணமில்லாமையே அஸாது (நல்லவன் அன்று) என்பதற்குக் காரணமாம். ஸாதுவாயிருக்கைக்கு தம்பமே (வீண் பெருமை) காரணமாம். விவாஹத்திற்கு, ஸ்த்ரீ, புருஷர்கள் ஒருவரை ஒருவர் அங்கீகரிக்கை விதியாசமன்றி, சாஸ்த்ர விதி சிறிதும் புலப்படாது. கேவலம் உடம்பழுக்குப் போகக் குளிக்கையே ஸ்னானமாமன்றி, புண்ய தீர்த்த ஸ்னானமாவது, மந்த்ரானு ஸந்தானமாவது (மந்த்ரம் சொல்வதாவது), தேவதாத்யானமாவது (தேவதைகளை த்யானிப்பதாவது) புலப்படாது. தூரத்திலிருக்கும் ஜலம் தேங்கும் இடமே புண்ய தீர்த்தமாமன்றி, கங்காதிகள் புண்ய தீர்த்தமாக மாட்டாது. 

ஶ்ரீமத் பாகவதம் - 338

த்வாதச (பன்னிரண்டாவது) ஸ்கந்தம் - முதல் அத்தியாயம்

(மேல் வரப்போகிற ஸோம வம்ச பரம்பரையைக் கூறுதல்.)

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- யது வம்சத்திற்கு அலங்காரமாகிய ஸ்ரீக்ருஷ்ணன் தன் வாஸஸ்தானமாகிய (இருப்பிடமாகிய) ஸ்ரீவைகுண்ட லோகம் போகையில், கீழ்ச் சொன்ன யது வம்ச ராஜர்களுக்குள் யாருடைய வம்ச பரம்பரையாக வந்ததோ, மாமுனியே! அதை எனக்குச் சொல்வீராக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மன்னவனே! பூருவின் வம்சத்தில் உபரிசரவஸுவும், அவன் பிள்ளை ப்ருஹத்ரதனும், அவன் பிள்ளை ஜராஸந்தனும், அவன் பிள்ளை ஸஹதேவனும், அவன் பிள்ளை மார்ஜாரியும், அவனுக்கு ச்ருதச்ரவன் முதலாகப் புரஞ்ஜயனீறாக இருபது பிள்ளைகளும் பிறக்கப் போகிறார்கள் என்று முன்னமே (ஒன்பதாவது ஸ்கந்தத்தில்) மொழிந்தேன். 

அந்த ப்ருஹத்ரதனுடைய வம்சத்தில் புரஞ்சயன் என்பவன் கடைசியில் பிறக்கப் போகிறான். அவனுடைய மந்திரியாகிய சுனகனென்பவன் தன் ப்ரபுவாகிய புரஞ்சயனைக் கொன்று, அவனது புதல்வனான ப்ரத்யோதனென்பவனை அரசனாக்கப் போகிறான். அவன் பிள்ளை அலகனென்பவன். அவன் பிள்ளை விசாகயூபன். அவன் பிள்ளை ராஜகன். அவன் பிள்ளை நந்திவர்த்தனன். அவனுக்கு ப்ரத்யோதனர் என்னும் பெயருடைய ஐந்து பிள்ளைகள் பிறக்கப் போகிறார்கள். இம்மன்னவர்கள் நூற்று முப்பத்தெட்டு ஸம்வத்ஸரங்கள் பூமியைப் பாதுகாக்கப் போகிறார்கள். அவர் பிள்ளை சிசுநாகன். அவன் பிள்ளை காகவாணன். அவன் பிள்ளை க்ஷேமதாமன். அவன் பிள்ளை க்ஷேத்ரஜ்ஞன். அவன் பிள்ளை விதிஸாரன். அவன் பிள்ளை அஜாதசத்ரு. அவன் பிள்ளை தர்ப்பகன். அவன் பிள்ளைஅஜயன். அவன் பிள்ளை நந்திவர்த்தனன். அவன் பிள்ளை மஹாநந்தி.

கௌரவ மன்னவர்களில் சிறந்தவனே! சிசுநாகன் முதலிய இம்மன்னவர்கள் கலியுகத்தில் முன்னூற்று அறுபது ஸம்வத்ஸரங்கள் பூமியை ஆளப் போகிறார்கள். மஹாநந்தியின் பிள்ளை மஹாபத்மபதி. அவன் சூத்ர ஸ்த்ரீ (பெண்) கர்ப்பத்தில் பிறந்தவன்; மஹாபலமுடையவன்; மிகவும் ப்ரஸித்தி பெற்றவன். அவனுக்கு நந்தனென்று மற்றொரு பெயரும் உண்டு. அவன் க்ஷத்ரிய குலத்தை எல்லாம் பாழாக்கப் போகிறான். (க்ஷத்ரிய குலம் முழுவதும் அவனோடு அற்றுப் போய் விடப் போகிறது) 

அந்த மஹாபத்மபதி என்னும் நந்தன், யாவராலும் தாண்டப்படாத சாஸனம் (ஆளுமை) உடையவனாகி, இரண்டாவது பரசுராமன் போல் ஏகச் சத்ராதிபத்யத்துடன் (தன்னெதிரில் குடை நிழலில் வருகிறவன் மற்றொருவனும் இல்லாதபடி) பூமண்டலத்தை ஆளப் போகிறான். 

புதன், 8 செப்டம்பர், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 337

ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – முப்பத்தொன்றாவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ண நிர்யாணமும் (தன்னுடைய அஸாதாரணமான உருவத்தில் ஒருமித்தலும்), வஸுதேவாதிகள் பரலோகம் போதலும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பிறகு, (தாருகன் போன பின்பு) ப்ரஹ்மதேவனும், பத்னியாகிய பார்வதியோடு ருத்ரனும், மஹேந்த்ரன் முதலிய தேவதைகளும், மரீசி முதலிய ப்ரஜாபதிகளோடு கூடிய முனிவர்களும், பித்ரு தேவதைகளும், ஸித்தர்களும், கந்தர்வர்களும், வித்யாதரர்களும், மஹோரகர்களும், சாரணர்களும், யக்ஷர்களும், ராக்ஷஸர்களும், கின்னரர்களும், அப்ஸரஸ்த்ரீகளும், கருடலோகத்திலுள்ள பக்ஷிகளும், மைத்ரேயர் முதலிய ப்ராஹ்மணர்களும், பகவானுடைய நிர்யாணத்தை (தன்னுடைய அஸாதாரணமான உருவத்தில் ஒருமித்தலைப்) பார்க்க விரும்பி, மிகுந்த ஆவலுடையவர்களாகி, அவனுடைய செயல்களையும், பிறவிகளையும் பாடுவதும், பிதற்றுவதுமாகி, அவ்விடம் வந்தார்கள். அவர்கள் விமானங்களின் வரிசைகளால் ஆகாயத்தை நிரம்பச் செய்து மிகுந்த பக்தியுடன் பூமழைகளைப் பொழிந்தார்கள். 

ஸமர்த்தனாகிய ஸ்ரீக்ருஷ்ண பகவானும் தன் விபூதிகளாகிய (சொத்துக்களாகிய) ப்ரஹ்மாதிகளைப் பார்த்துத் தன்னுடைய அவதாரத்திற்குக் காரணமாகிய தன்னிடத்தில் தன்னை ஒருமித்ததாக த்யானித்துத் தாமரையிதழ் போன்ற தன் கண்களை மூடினான். அம்மஹானுபாவன், தாரணைக்கும், த்யானத்திற்கும் சுபாச்ரயமும் (நன்மை செய்வதும் த்யானத்திற்கு ஏற்றதும்), உலகங்கட்கெல்லாம் அழகியதுமான தன் திருமேனியை அக்னி ஸந்துக்ஷணம் செய்வதான (அக்கினியை வளர்த்தி எரியச் செய்வதான) யோகதாரணையால் தஹிக்காமல், அத்திருமேனியோடு கூடவே தன் வாஸஸ்தானமாகிய வைகுண்ட லோகத்திற்கு ஸுகமாக எழுந்தருளினான். அப்பொழுது ஆகாயத்தில் தேவதுந்துபி வாத்யங்கள் முழங்கின. ஆகாயத்தினின்று பூமழைகளும் பொழிந்தன. ஸத்யம், தர்மம், தைர்யம், புகழ், செல்வம் இவையெல்லாம் பூமியை விட்டு அத்திருமேனியைத் தொடர்ந்து சென்றன. 

பிறரால் அறிய முடியாத கதியையுடைய ஸ்ரீக்ருஷண பகவான், அவ்வாறு தன்னுலகத்திற்குப் போகையில், ப்ரஹ்மதேவனை முன்னிட்டுக் கொண்டிருக்கிற தேவாதிகள் அனைவரும் அவன் போன விதம் காணப்பெறாமல் வியப்புற்றார்கள். ஆகாயத்தில் மேக மண்டலத்தில் மின்னல் மின்னி அது அம்மேக மண்டலத்தினின்று மறையும்பொழுது, “அது இன்னவிதமாகப் போயிற்று” என்று அதன் போக்கு எவ்வாறு மனுஷ்யர்களுக்குத் தெரிகிறதில்லையோ, அவ்வாறே அந்த ஸ்ரீக்ருஷ்ணன் போன போக்கு தேவதைகளுக்குத் தெரியவில்லை. 

மன்னவனே! அந்த ப்ரஹ்ம, ருத்ராதிகள், ஸ்ரீக்ருஷ்ணன் யோக மஹிமையால் பூமியைத் துறந்து போனதைக் கண்டு வியப்புற்று, அவனைப்புகழ்ந்து கொண்டே தங்கள் தங்கள் இருப்பிடம் போய்ச் சேர்ந்தார்கள். ராஜனே! பரமபுருஷன் யாதவாதி குலங்களில் இதர ப்ராணிகளைப் போல் ஜனிப்பது (பிறப்பது), மரிப்பது (இறப்பது) முதலிய சேஷ்டைகள் செய்வதெல்லாம் அனுகரணமே (நடிப்பே) ஒழிய உண்மையன்று. கூத்தாடுகிற நடன் ராமாதிகளின் வேஷம் பூண்டு, அவர்களின் சரித்ரங்களை அபிநயிப்பானாயின் (நடிப்பானாயின்), அது அவன் ஏற்றுக் கொண்டதேயன்றி உண்மையாகாதல்லவா? இப்பரமபுருஷன், சேதனா சேதன ரூபமான (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களைக் கொண்ட) இவ்வுலகத்தை எல்லாம் படைத்து, அதற்குள் புகுந்து தரித்துக் கொண்டு, வெளியில் ராம, க்ருஷ்ணாதி அவதாரங்களைச் செய்து, கடைசியில் ஜகத்தை எல்லாம் ஸம்ஹரித்து, அளவிறந்த ஜ்ஞானானந்த மயமான தன் ஸ்வரூபத்தைத் தானே அனுபவிக்கையாகிற பெருமையில் இழிந்து, ஜகத் ஸ்ருஷ்டி (உலகைப் படைத்தல்) முதலிய வியாபாரங்களெல்லாம் ஒழியப் பெற்று, வெறுமெனே இருக்கின்றான். (இவ்வாறு அளவற்றதாகிய அவனுடைய மஹிமஸமுத்ரத்தில் பிறர்க்குத் தெரியாதபடி இவன் தன்னுலகம் சேர்ந்தான் என்கிற இது ஒரு திவலையேயாம் (சிறு துளி) அன்றி வேறொன்றும் அன்று.) 

செவ்வாய், 7 செப்டம்பர், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 336

ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – முப்பதாவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ணன் மெளஸல (உலக்கை) வியாஜத்தினால் (சிறு காரணத்தைக்கொண்டு) தன் குலத்தை ஸம்ஹரித்தல்.)

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- பிறகு, மஹா பாகவதரான உத்தவர் பதரிவனம் போகையில் ஜகத்காரணனான பகவான் என்ன செய்தான்? அப்பகவான், தன்குலம் ப்ராஹ்மண சாபத்தினால் வருத்த முற்றிருக்கையில் ஸமஸ்த ப்ராணிகளுடைய நேத்ரங்களுக்கும் (கண்களுக்கும்) மிகவும் ப்ரியமான தன் சரீரத்தை எப்படி துறந்தான்? (தன் சரீரத்தைத் துறந்து சென்றானா, அல்லது அந்தச் சரீரத்தோடு கூடவே தன் பதவிக்குச் சென்றானா?) ஸ்த்ரீகள் (பெண்கள்) இப்பகவானுடைய திருமேனியில் படிந்த தன் கண்களை இழுக்க முடியாதிருந்தார்கள் அல்லவா? மற்றும், இத்திருமேனி ஸத்புருஷர்களின் காது வழியாய் நுழைந்து, ஹ்ருதயத்தில் சித்ரம் எழுதினாற் போல் படிந்து, அதினின்று பேராமல் (விலகாமல்) திகழ்ந்து கொண்டிருக்கும் அல்லவா? மற்றும், இத்திருமேனியின் சோபை தன்னைப் புகழ்கின்ற கவிகளின் வாக்குக்களுக்குப் பிறர் விரும்பும்படியான அழகை விளைத்துக் கொண்டிருக்கும் அல்லவா? அர்ஜுனனுடைய திருத்தேர் முன் வீற்றிருந்த இத்திருமேனியைக் கண்டு யுத்தத்தில் அடியுண்டவர்கள் அனைவரும் இப்பகவானுடைய ஸாம்யத்தை (ஒத்த நிலையை) அடைந்தார்களல்லவா? (அத்தகைய திருமேனியை அப்பகவான் துறந்து போனானா? அல்லது அத்திருமேனியோடு கூடவே போனானா? அதையும் விவரித்துச் சொல்வீராக).

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஆகாசத்திலும், பூமியிலும், அந்தரிக்ஷத்திலும் (வாயு மண்டலம்) மஹத்தான உத்பாதங்கள் (தீய அறிகுறிகள்) பலவும் உண்டாவதைக் கண்டு, ஸுதர்மை என்னும் தன் ஸபையில் உட்கார்ந்திருக்கின்ற யதுக்களைக் குறித்து ஸ்ரீக்ருஷ்ணன் மொழிந்தான்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- த்வாரகையில் பயங்கரமான பெரிய உத்பாதங்கள் (தீய அறிகுறிகள்) பலவும் புலப்படுகின்றன. இவை நம் குலத்தின் விநாசத்திற்கு (அழிவிற்குக்) ஹேதுக்களாய் (காரணங்களாய்) இருக்கின்றன. ஓ! யதுகுலகுமாரர்களே! இனி ஒரு முஹூர்த்த காலமும் நாம் இங்கிருக்கலாகாது. கிழவிகளும், குமரிகளுமான பெண்டிர்கள் அனைவரும் சங்கோத்தாரம் என்னும் க்ஷேத்ரத்திற்குப் போவார்களாக. நாமோ என்றால், ஸரஸ்வதி நதி மேற்கு முகமாகப் பெருகி, ஸமுத்ரத்தில் போய் விழும்படியான ப்ரபாஸ தீர்த்தத்திற்குப் போவோம். அங்கு ஸ்னானம் செய்து, பரிசுத்தர்களாகி, உபவாஸமிருந்து, ஸ்னானம் செய்விப்பது, சந்தனம் ஸமர்ப்பிப்பது, புஷ்பம் அக்ஷதை முதலிய மற்றும் பூஜா உபகரணங்களைக் கொடுப்பது, இவைகளால் தேவதைகளை ஆராதிப்போம். 

பிறகு, மிகுந்த பாக்யமுடைய அந்தணர்களால் சாந்தி கர்மம் செய்விக்கப் பெற்று, அவர்களுக்குப் பசுக்கள், பூமி, ஸுவர்ணம், வஸ்த்ரம் இவைகளையும், யானை, குதிரை, தேர், வீடு இவைகளையும் கொடுத்துப் பூஜிப்போம். இவ்வாறு செய்வது மிகவும் நன்மையான கார்யம்; மங்களத்தை விளைவிக்கும். தேவதைகளுக்கும், ப்ராஹ்மணர்களுக்கும், கோக்களுக்கும் செய்யும் பூஜை, ப்ராணிகளுக்கு மிகுந்த நன்மையை விளைக்கும். ஆகையால், நாம் இவ்வாறு செய்வது நலம்.

ஶ்ரீமத் பாகவதம் - 335

ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – இருபத்தொன்பதாவது அத்தியாயம்

(பகவான் உத்தவருக்கு மீளவும் பக்தியோகத்தைக் காட்டிலும் ஸுகரமான (எளிதான) உபாயத்தை உபதேசித்தல்.)

உத்தவர் சொல்லுகிறார்:- அச்சுதனே! (பற்றினவர்களைக் கைவிடாது பாதுகாக்கும் தன்மையனே!) இந்திரியங்களை (புலன்களை) வெல்ல முடியாதவனுக்கு இந்த யோகாப்யாஸம் (யோகப் பயிற்சி) அனுஷ்டிக்க (செய்வது) நிரம்ப வருத்தமாயிருக்கும் என்று எனக்குத் தோற்றுகிறது. புருஷன் அனாயாஸமாக (எளிதாக) எப்படி ஸித்தியைப் பெறுவானோ, அப்படி ஒரு உபாயத்தை ஸ்பஷ்டமாக (தெளிவாகச்) சொல்லவேண்டும். 

செந்தாமரைக் கண்ணனே! மனத்தை வசப்படுத்த முயன்ற யோகிகள், அதற்காகச் செய்யும் உபவாஸாதிகளால் (உண்ணா நோன்பு) இளைத்து, அவ்வளவிலும் மனம் குதிரப்பெறாமையால் (நிலை பெறாமையால்) பெரும்பாலும் வருந்துகிறார்கள். ஆகையால், “இது நன்று. இது தீது” என்னும் விவேகமுடையவர்கள் ஆநந்தத்தைக் கறக்கின்ற உன் பாதார விந்தத்தையே உபாயமாகப் பற்றுகிறார்கள். 

ஜகதீசனே! இவர்கள் உன்னுடைய மாயையில் அகப்பட்டு ஏமாறுகிறதில்லை. ஏனென்றால், “நாம் பக்தி யோகம் செய்கிறோம்” என்னும் கர்வமாவது, “நாம் கர்மயோகம் செய்கிறோம்” என்னும் கர்வமாவது அவர்களுக்குக் கிடையாதல்லவா? மற்றவர்களோ என்றால் அவ்வாறு கர்வப்படுவதற்கு இடமுண்டாகப் பெற்று, அந்த துரபிமானத்தினால் (வீண் கர்வத்தால்) உன்னுடைய மாயையில் அகப்பட்டு, ஏமாறுகிறார்கள். 

அச்சுதனே! (ஆச்ரிதர்களைக் கைவிடாதவனே!) இன்னவன் இனையவனென்று தரம் பாராமல் அனைவர்க்கும் பந்துவாயிருப்பவனே! உன்னைப் பற்றின மாத்ரத்தினால் உன்னுடைய மாயையைத் தாண்டுவதென்னும் இதுவும், நீ உன்னை ஒழிய வேறொரு சரணமறியாத உன் பக்தர்களிடத்தில் இட்ட வழக்காயிருப்பதுவும், உன் தன்மையை உணர்ந்தவர்களுக்கு ஓர் ஆச்சர்யமன்று. ஜகதீச்வரர்களான ப்ரஹ்மாதிகளுடைய அழகிய கிரீடங்கள் உறையும்படியான பாத பீடத்தை (கழல்களை) உடையவனாயினும் நீ ப்ருந்தாவனத்தில் பசுக்களை வேணுகானத்தினால் களிப்புறச் செய்துகொண்டு, அவைகளுடன் கலந்திருத்தலைப் பெறாப்பேறாக விரும்பினாய் அல்லவா? மற்றும், ராமாவதாரத்தில் வானரங்களின் ஸ்னேஹத்தை (நட்பை) விரும்பி, அவைகளுடன் கலந்திருந்தாய் அல்லவா? அத்தகைய பரத்வ (மேன்மை), ஸௌலப்ய (எளிமை), வாத்ஸல்ய (பரிவு), ஸௌசீல்யாதி (பெரியவராய் இருந்தும், தாழ்ந்தோரிடம் இரண்டறக் கலந்து பறிமாறுதல்) குணங்களுடையவனானது பற்றியே ஸமஸ்த ஆத்மாக்களுக்கும் அன்பனும், ஸ்வாமியும், ஆச்ரிதர்களுடைய (அடியவர்களுடைய) விருப்பங்களையெல்லாம் ஈடேற்றிக் கொடுப்பவனுமாகிய உன்னை, நீ செய்யும் உபகாரங்களை அறிந்தவன் எவன் தான் கைவிடுவான். 

க்ருதஜ்ஞர்களுக்கு (செய்நன்றி அறிந்தவர்களுக்கு) நீயே பற்றத் தகுந்தவன். ஆத்ம ஸ்வரூபத்தை மறக்கடிக்கும் படியான ஐச்வர்யத்திற்காக எவன் தான் உன்னைத் தவிர வேறொரு தெய்வத்தைப் பணிவான்? ஆரோக்யம், பாக்யம் முதலியவற்றிற்காக ஸூர்யன், அக்னி முதலிய தேவதாந்தரத்தைப் (பிற தேவதைகளைப்) பணிய வேண்டாமோ என்றால், வேண்டியதே இல்லை. உன்னுடைய பாததூளியைப் பணிகிற எங்களுக்கு, எந்த நன்மைதான் ஸித்திக்காது. நாங்கள் விரும்ப மாட்டோமே ஒழிய, விரும்பினால் எல்லாம் ஸுலபமே ஆம். ஜகதீசனே! அறிவுடையவர்கள் நீ செய்த உபகாரத்தை நினைத்து மிகுந்த ஸந்தோஷம் அடைந்து, ப்ரஹ்மாவின் ஆயுஸ்ஸினாலும் நீ செய்யும் உபகாரத்திற்கு ப்ரத்யுபகாரம் (பதில் உதவி) செய்ய முடியாதிருக்கிறார்கள். அவ்வுபகாரந்தான் யாதெனில், சொல்லுகிறேன்.

சனி, 4 செப்டம்பர், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 334

ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – இருபத்தெட்டாவது அத்தியாயம்

(முன்பு விஸ்தரித்துச் சொன்ன ஜ்ஞான யோகத்தைச் சுருக்கிக் கூறுதல்)

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- பிறனுடைய ஸ்வபாவங்களையும் (இயற்கை குணம்), அந்த ஸ்வபாவங்களுக்கு அனுகுணமான தானாதி கர்மங்களையும் புகழ்தலும், அபஹாராதி (கெடுதல்) கர்மங்களைப் பழித்தலும் செய்யலாகாது. சேதனாசேதன ரூபமான (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களைக் கொண்ட) ஜகத்தெல்லரம் என்னை அந்தராத்மாவாக உடையதாகையால், ஒருவாறாயிருப்பதே என்று பாவிக்க வேண்டும். பிறருடைய ஸ்வபாவங்களையும், கர்மங்களையும், எவன் புகழ்தலும், பழித்தலும் செய்கிறானோ, அவன் அசேதனமான தேஹத்தில் ஆத்மாபிமானம் (ஆத்மா என்கிற எண்ணம்) வளரப் பெற்று, தான் அதிகரித்த ஜ்ஞான யோகமாகிற தன் ப்ரயோஜனத்தினின்று சீக்ரத்தில் நழுவப் பெறுவான். 

ராஜஸ அஹங்கார கார்யமான இந்திரியங்கள் நித்ரையினால் மழுங்கி, தங்கள் வியாபாரம் ஓயப் பெற்றிருக்கையில், தேஹத்திலிருக்கும் ஜீவன் அறிவற்று, ம்ருத்யுவை (மரணத்தைப்) போன்ற ஸ்வப்னம் (கனவு) என்னும் ஸூக்ஷ்ம ப்ரக்ருதியை அடைகின்றான்; ஜாக்ரத (விழிப்பு) அவஸ்தையில் (நிலையில்) உள்ள அனுபவங்களெல்லாம் மறையப் பெறுகின்றான். அவ்வாறே தேஹாத்ம அபிமானமுடையவன் (இந்த உடலே ஆத்மா என்கிற எண்னம் உடையவன்), விழித்துக் கொண்டிருந்த போதிலும், தேஹத்தைக் காட்டிலும் விலக்ஷணமான (வேறான) ஆத்ம ஸ்வரூபத்தை உள்ளபடி அறியாமையால், உறங்குகிறவன் போலவே ஆவான். 

ஆத்மா தேஹத்தைக் காட்டிலும் விலக்ஷணன் (வேறானது) என்று தெரியாமையால், தேஹமே ஆத்மாவென்னும் ப்ரமம் உண்டாகின்றது. அப்போழுது, தேஹத்திலிருக்கும் ஜீவன், அறிவு கெட்டு, ம்ருத்யுவைப் (மரணத்தைப்) போன்ற ஸூக்ஷ்ம ப்ரக்ருதியால் மறைக்கப்படுகின்றான். அவ்வாறே நானாவித (பலவித) தேஹங்களைப் பார்த்து, அவற்றையே ஆத்மாக்களென்று ப்ரமிக்கும் புருஷன், தத்வ-ஜ்ஞானம் (ஜீவாத்மா, பரமாத்மா பற்றிய அறிவு) இல்லாமையால், உறங்குகிறவனோடு ஒத்தவனே ஆவான். 

“தேஹ தர்மங்களை ஆத்மாவினிடத்தில் ஏறிட்டுப் புகழ்தலும், பழித்தலும் இவ்வாறு அனர்த்த (கெடுதிக்கு) ஹேதுவாம் (காரணமாம்) என்பது உண்மையே. அந்த தேஹ தர்மங்களெல்லாம், அத்தேஹங்களைச் சேர்ந்தவைகளே என்று அறிந்து புகழ்வதும், பழிப்பதும் செய்வானாயின், அவனுக்கு ஒரு கெடுதியும் இல்லையே” என்றால் சொல்லுகிறேன். 

தேவ மனுஷ்யாதி தேஹங்களும், க்ரிமி முதலிய தேஹங்களும், அசேதனமான ப்ரக்ருதியின் (அறிவற்ற ஜடப்பொருட்களின் மூலமான மூலப்ரக்ருதியின்) பரிணாமங்களே (மாறுபாடுகளே) ஆகையால், ஒரு நிலையில் நிற்காமல் பற்பல அவஸ்தைகளை (நிலைகளை) அடைந்து கொண்டே இருப்பவை; ஆத்மாவைக் காட்டிலும் வேறுபட்டவை. அவற்றில் எது நல்லது? எது கெட்டது? ஒன்று நல்லது என்றும், ஒன்று கெட்டது என்றும் சொல்ல இடமில்லை. தேவாதி தேஹங்களைக் காட்டிலும் மனுஷ்யாதி தேஹங்களும், மனுஷ்யாதி தேஹங்களைக் காட்டிலும் க்ரிமி கீடாதி (புழு, பூச்சி) தேஹங்களும் தாழ்வாயிருக்கின்றன.

க்ரிமி-கீடாதி தேஹங்களைக் காட்டிலும், மனுஷ்யாதி தேஹங்களும், மனுஷ்யாதி தேஹங்களைக் காட்டிலும் தேவாதி தேஹங்களும் மேன்மையாயிருக்கின்றன. இவ்வாறு மேன்மையும், தாழ்மையும் ப்ரத்யக்ஷமாயிருக்க (தெளிவாய் இருக்க), எல்லாம் ஒருவகையே அன்றி பேதமே (மாறுபாடே) இல்லை என்று எவ்வாறு சொல்லலாம் என்றால், மேற்பார்வையில் பேதம் உளதாகத் தெரியினும், எல்லாம் ப்ரக்ருதியின் பரிணாமங்களே ஆகையாலும், நிஷேகம் (விந்துவைச் சேர்த்தல்), கர்ப்பம் (கரு தரித்தல்) முதலிய அவஸ்தைகள் துல்யம் (சமம்) ஆகையாலும், உண்மையில் பேதமில்லை. ஆகையால், நல்லதென்றும், கெட்டதென்றும் ஆராய்வதில் ப்ரயோஜனம் இல்லை. 

தேவாதி சப்தங்களால் சொல்லப்படுவதும், மனத்தினால் நானென்று அபிமானிக்கப்படுவதுமாகிய தேவாதி சரீரம், உண்மையன்று. தேஹங்களிலுள்ள தேவாதி தர்மங்கள் ஆத்மாவினிடத்தில் கிடையாது. ஆகையால், தேஹத்தைப் பற்றியும் ஸ்துதி (புகழ்ச்சி), நிந்தைகள் (இகழ்ச்சி) செய்வது யுக்தமன்று. ஆனால், ஆத்மாவினிடத்தில் தேவாதி தர்மங்கள் உண்மையன்றாயின், அவை உளவென்னும் நினைவு மாத்ரத்தினால், எப்படி அனர்த்தம் (கெடுதி) உண்டாகுமென்றால், சொல்லுகிறேன். 

புதன், 1 செப்டம்பர், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 333

ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – இருபத்தேழாவது அத்தியாயம்

(உத்தவர் கர்ம யோகத்தைப்பற்றி வினவுதலும், ஸ்ரீக்ருஷ்ண பகவான் அதை நிரூபித்துச் சொல்லுதலும்)

உத்தவர் சொல்லுகிறார்:- ப்ரபூ! உன்னுடைய ஆராதன (பூஜா) ரூபமான கர்மயோகத்தைச் சொல்வாயாக. புருஷ ச்ரேஷ்டனே (புருஷர்களில் சிறந்தவனே)! உன் பக்தர்கள் உன்னை எந்த உபகரணங்களால் (கருவிகளால்), எந்த அதிகரணங்களில், எந்தவிதமாக ஆராதிக்கிறார்களோ, அதையும் சொல்வாயாக. 

நாரதர், மஹானுபாவரான வ்யாஸர், என்னுடைய ஆசார்யராகிய ப்ருஹஸ்பதி இவர்களும், மற்றும் பல முனிவர்களும் விடாமல் அனுஷ்டித்துக் கொண்டு வருகிற இந்தக் கர்மயோகமே மோக்ஷ ஸாதனங்களில் சிறந்தது என்று சொல்லுகிறார்கள். மற்றும், மஹானுபாவனாகிய ப்ரஹ்மதேவன், உன்னுடைய முகார விந்தத்தினின்றும் வெளிவந்த இந்தக் கர்மயோகத்தைத் தான் கேட்டுத் தரித்து, ப்ருகு முதலிய தன் புதல்வர்களுக்கு உபதேசித்தான். மற்றும், மஹானுபாவனாகிய ருத்ரன், உன்னிடத்தினின்றும் கேட்ட இந்தக் கர்மயோகத்தைத் தன் பார்யையாகிய (மனைவியாகிய) பார்வதிக்கு மொழிந்தான். 

பற்றினார்க்கு வெகுமதி அளிப்பவனே! பற்றாதார்களுடைய அபிமானத்தை வேரோடு அறுப்பவனே! ஆகையால், ஸம்ப்ரதாய உபதேச அனுஷ்டான (வழிவழியாக உபதேசிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வந்த) பரம்பரைகளால் ப்ராப்தமான (கிடைக்கப்பெற்ற) உன்னுடைய இந்த ஆராதனமே (பூஜையே) ஸமஸ்த வர்ணங்களுக்கும், ஸமஸ்த ஆச்ரமங்களுக்கும், ஆயிரம் சொல்லியென்? ஸ்த்ரீ (பெண்கள்), சூத்ரர்களுக்கும் புருஷார்த்த ஸாதனங்களுக்குள் சிறந்ததென்று எனக்குத் தோற்றுகிறது. 

தாமரையிதழ் போன்ற கண்கள் உடையவனே! உன்னுடைய ஆராதன (பூஜா) ரூபமான இந்தக் கர்மயோகம், ஸம்ஸாரத்திற்குக் காரணமான புண்ய, பாப கர்மபந்தத்தை அடியோடு போக்கி விடும். இதை உன்னுடைய பக்தனும் நண்பனுமாகிய எனக்கு மொழிவாயாக. “இது ப்ரஹ்மாதிகளின் உபதேச பரம்பரையால் ப்ராப்தமாய் (கிடைக்கப்பெற்று) இருக்கின்றதே. என்னை ஏன் கேட்கிறாய்?” என்கிறாயோ? சொல்லுகிறேன். கேள். நீ ஜகதீச்வரர்களான (உலகை ஆளுபவர்களான) ப்ரஹ்மாதிகளுக்கும் ஈச்வரன். ஆகையால், நீயே ஸர்வஜ்ஞன் (எல்லாம் அறிந்தவன்). நீயே அதை எனக்கு மொழிவாயாக.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- உத்தவரே! என்னுடைய ஆராதன (பூஜா) ரூபமான கர்மத்தை அறிவிக்கும் சாஸ்த்ரத்திற்குக் கரை (எல்லை) கிடையாது. ஆகையால், அந்த சாஸ்த்ரத்தை முழுவதும் அப்யஸிக்கவாவது (கற்பதாவது), அதில் சொன்ன கர்மயோகத்தை முழுவதும் அனுஷ்டிக்கவாவது (செயல்படுத்துவதாவது) முடியாது. ஆகையால், அதைச் சுருக்கி உள்ளபடி முறையே உமக்குச் சொல்லுகிறேன்; கேட்பீராக. 

வியாழன், 26 ஆகஸ்ட், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 332

ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – இருபத்தாறாவது அத்தியாயம்

(துஷ்ட (கெட்டவர்கள்) ஸஹவாஸத்தினால் (தொடர்பினால்) யோக நிஷ்டைக்கு விக்னம் (இடையூறு) வருமென்றும், சிஷ்ட (நல்லவர்கள்) ஸஹவாஸத்தினால் (தொடர்பினால்), அந்த யோக நிஷ்ட்டை வளர்ந்து வருமென்றும் நிரூபித்துக் கொண்டு, ஸங்கத்தினால் (தொடர்பினால்) யோக ப்ரஷ்டனாவான் (நழுவுவான்) என்பதற்கு உதாஹரணமாக ஐல வ்ருத்தாந்தத்தைக் (சரித்ரத்தைக்) கூறுதல்.) 

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- என்னைக் காண்பதற்குக் காரணமாகிய இம்மனுஷ்ய தேஹத்தைப் பெற்று, ப்ரவ்ருத்தி தர்மத்தை (உலக விஷயங்களில் ஈடுபடும் பாதையைத்) துறந்து, என்னுடைய ஆராதன ரூபமான நிவ்ருத்தி தர்மத்தை (உலக விஷயங்களிலிருந்து விலகும் பாதையை) அனுஷ்டித்துக் கொண்டு வருவானாயின், ஆநந்த மயனாகையால் நிரதிசய (சிறந்த) புருஷார்த்த ஸ்வரூபனும் (விரும்பி அடையப்பட வேண்டியவனும்), ஆத்மாவுக்கும் அந்தராத்மாவாகையால் பரமாத்மாவென்று ப்ரஸித்தி பெற்றவனுமாகிய என்னைப் பெறுவான். 

ஆத்ம, பரமாத்மாக்களின் உண்மையை ஆராய்ந்தறிகையாகிற ஜ்ஞான (அறிவு) நிஷ்ட்டையில் (ஊன்றி இருப்பதில்) இழிந்தவன், தேவாதி (தேவன், மனிதன், விலங்கு, தாவரம் என்கிற) தேஹங்களுக்கு (உடல்களுக்குக்) காரணமாயிருப்பதும், ஸத்வாதி குணங்களையே வடிவாக உடையதுமான ப்ரக்ருதியை (மூலப்ரக்ருதி மற்றும் அதன் மாறுபாடுகளை) விடுபட்டிருப்பானன்றி, அதற்கு உட்பட மாட்டான். (தேவ, மனுஷ்யாதி தேஹங்களிலிருப்பினும், அவற்றில் அஹங்கார ( நான்), மமகாரங்கள் (எனது) அற்றிருப்பான்) அத்தகையன், ப்ரக்ருதியின் கார்யமான சப்தாதி விஷயங்களை அனுபவிப்பினும், தேஹானுபந்தி (உடலோடு தொடர்புடைய) வஸ்துக்களில் என்னுடையவை என்னும் அபிமானம் (எண்ணம்) உண்டாகப் பெறினும், அவ்வஸ்துக்களாலாவது, அவ்விஷயங்களாலாவது, பந்தத்தை அடைய மாட்டான் (கட்டுப்பட மாட்டான்). (இத்தகையன் ஜீவதசையில் சப்தாதி விஷயங்களை அனுபவிப்பினும், அபிநிவேசம் (தீவிர ஈடுபாடு) உண்டாகப் பெறமாட்டானாகையால், அவை அவனுக்கு பந்தகங்களாக மாட்டாது.) 

சிச்னம் (விந்து), உதரம் (வயிறு) இவற்றின் ஸுகங்களையே விரும்பும் தன்மையர்களான அஸத் (அறிவற்ற) புருஷர்களோடு ஒருகாலும் ஸஹவாஸம் (தொடர்பு) செய்யலாகாது. அத்தன்மையுள்ள ஒருவனோடு ஸஹவாஸம் (தொடர்பு) செய்யினும், குருடனைத் தொடர்ந்து செல்கிற குருடன் பள்ளத்தில் விழுவதுபோல், நரகத்தில் விழுவான். ஆகையால் அத்தகையர்களுடைய ஸஹவாஸத்தைத் துறந்து, பகவத் தர்மத்தில் இழிந்து, மோக்ஷத்தை அடைய வேண்டும். 

பெரும் புகழுடைய ஐலன் என்னும் புரூரவ மன்னவன் ஊர்வசியால் இழுக்கப்பட்ட மதியுடையவனாகி, அவளுடன் கலந்திருக்கையில், பல வர்ஷங்களின் ராத்ரிகள் கடந்ததையும், மேல் வரப்போகிற பல ராத்ரிகளையும் அறியாமல், அற்பமான (மட்டமான) விஷயங்களையே அனுபவித்தும், அவற்றில் திருப்தி உண்டாகப் பெறாமல், மேன்மேலும் அவ்விஷயங்களையே அனுபவித்துக் கொண்டிருந்தான். இப்படியிருந்த அந்த ஐல மன்னன், ஒருகால் அவ்வூர்வசி தன்னைத் துறந்து போகையில், அவளைப் பிரிந்திருக்க முடியாமையால், பித்தம் பிடித்தவன் போன்று அரையில் ஆடையுமின்றி, “அடி! என் இன்பநாயகி! நில் நில் போகாதே” என்று புலம்பிக் கொண்டு, தழதழத்து, அவளைப் பின் தொடர்ந்து சென்றான். 

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 331

ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – இருபத்தைந்தாவது அத்தியாயம்

(ஸத்வாதிகுண வ்ருத்திகளையும் (செயல்களையும்), குண யுக்த (குணத்தோடு கூடிய) வஸ்துக்களையும், குணாதீத (குணங்களைக் கடந்த) வஸ்துக்களையும் நிரூபித்தல்.)

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- தனித்தனியே இருப்பவைகளும், ஒன்றோடொன்று கலந்திருப்பவைகளுமான ஸத்வாதி குணங்களுக்குள் எந்தெந்த குணத்தினால் புருஷன் எந்தெந்த அபிநிவேசம் (ஈடுபாடு)  உடையவனாக இருப்பானோ, அதையெல்லாம், புருஷ ச்ரேஷ்டரே! உமக்குச் சொல்லுகிறேன்; ஊக்கத்துடன் கேட்டு உணர்வீராக. 

சமம், தமம், திதிக்ஷை , ஈக்ஷை , தவம், ஸத்யம், தயை, ஸ்ம்ருதி, துஷ்டி, த்யாகம், அஸ்ப்ருஹை, ச்ரத்தை, லஜ்ஜை, தானம், ஆர்ஜவம், விநயம் முதலியவைகளும், ஆத்மானுபவ ஸுகமும் ஸத்வ குணத்தின் வ்ருத்திகள். (ஸத்வ குணத்தின் கார்யங்கள்). 

  1. சமமாவது உள் இந்த்ரியத்தின் அடக்கம். 

  2. தமமாவது வெளி இந்தரியங்களின் அடக்கம். 

  3. திதிக்ஷையாவது ஸுகம், துக்கம் முதலிய த்வந்தவங்களைப் (இரட்டைகளைப்) பொறுத்தல்.

  4. ஈக்ஷையாவது தத்வங்களை ஆராய்ந்தறிதல்.

  5. ஸ்ம்ருதியாவது அனுபவித்த விஷயங்களை மறவாமை. 

  6. துஷ்டியாவது தெய்வாதீனமாய்க் கிடைத்ததைக் கொண்டு ஸந்தோஷம் உற்றிருக்கை .

  7. த்யாகமாவது செலவழிக்கும் தன்மை.

  8. அஸ்ப்ருஹையாவது விஷயங்களில் விருப்பமில்லாமை. 

  9. ச்ரத்தையாவது ஆஸ்திக்யம். அதாவது தெய்வம் உண்டென்னும் நினைவு.

  10. ஆர்ஜவமாவது நேர்மை.  

  11. விநயமாவது வணக்கம். 

விஷயங்களை அனுபவியாதிருக்க முடியாமையாகிற காமம் (ஆசை, விருப்பம்), சேஷ்டை (செயல்), மதம் (கர்வம்), எவ்வளவு பெறினும் ஸந்தோஷம் உறாமை, கர்வம், பொருளாசை, வைஷம்யம் (வேறுபடுத்திப் பார்த்தல்), விஷயபோகம் (உலக விஷயங்களை அனுபவித்தல்), ஸாஹஸ (திறமைக்கு மீறிய) கார்யங்களில் அபிநிவேசம் (ஈடுபாடு), புகழில் ப்ரீதி (தன்னைப் பிறர் ஸ்தோத்ரம் செய்கையில் ஸந்தோஷம் அடையும் தன்மை), பரிஹாஸம் (கேலி) செய்கை, தன் ப்ரபாவத்தை வெளியிடுகை, பலம் உள்ளவளவும் முயற்சி செய்கை, ஆகிய இவை எல்லாம் ரஜோ குண வ்ருத்திகள். (ரஜோகுணத்தின் கார்யங்கள்). 

பொறாமையாகிற க்ரோதம் (சினம்), சிலவு என்றால் மனம் செல்லாமையாகிற லோபம் (கஞ்சத்தனம்), அசாஸ்த்ரீயம் ஆனவற்றை (சாஸ்த்ரத்திற்கு ஒவ்வாதவற்றைப்) ப்ரமாணம் (ஒத்துக்கொள்ளக்கூடிய ஆதாரம்) என்று கூறுகையாகிற அன்ருதம் (உண்மையின்மை), பிறர்க்கு த்ரோஹம் (தீங்கு) செய்தல், யாசித்தல், வஞ்சித்தல், சோர்வுறுதல், கலஹம், சோகம் (வருத்தம்), மோஹம் (மயக்கம்), துக்கம், தைன்யம் (தாழ்ந்து நிற்கும் நிலை), ஆசை , பயம், முயற்சியற்று இருக்கை ஆகிய இவையெல்லாம் தமோகுண வ்ருத்திகள் (தமோ குணத்தின் கார்யங்கள்).