த்வாதச (பன்னிரண்டாவது) ஸ்கந்தம் - பன்னிரண்டாவது அத்தியாயம்
(இப்புராணத்தில் சொன்ன விஷயங்களின் சுருக்கமும், பாகவத மஹிமையும் முதலியவை)
ஸ்ரீஸூத புராணிகர் சொல்லுகிறார்:- அவரவர் விரும்பும் புருஷார்த்தங்களை எல்லாம் நிறைவேற்றிக் கொடுப்பவனாகையால் பரம தர்ம ஸ்வரூபனும் (சிறந்த அற வடிவானவனும்), அளவிறந்த மஹிமை உடையவனுமாகிய பரமபுருஷனுக்கு, நமஸ்காரம். தர்ம மர்யாதைகளை உபதேசாதிகளால் நிலை நிறுத்தி நடத்துபவரும், மஹானுபாவருமான பாதராயண முனிவருக்கு நமஸ்காரம். நன்மைக்கு ஹேதுவான பெருமையுடைய பகவத் பக்தி ரூபமான தர்மத்திற்கு நமஸ்காரம். தர்மோபதேசம் செய்பவனான, நான்முகனுக்கு நமஸ்காரம். நாரதர், ஸ்ரீசுகர் முதலிய அந்தணர்களுக்கு நமஸ்காரம் செய்து, பூர்வர்களின் (முன்னோர்களின்) உபதேச பரம்பரையால் இடைவீடின்றி நடைபெற்று வந்தவைகளும், கீழ் இந்த ப்ரபந்தத்தில் நிரூபிக்கப்பட்டவைகளுமான பாகவத தர்மங்களைச் சுருக்கமாகச் சொல்லுகிறேன்; கேட்பீர்களாக.
அந்தணர்களே! நீங்கள் எதைப்பற்றி என்னை வினவினீர்களோ, எது மனுஷ்ய ஜன்மம் பெற்ற ஸமஸ்த ஜீவாத்மாக்களுக்கும் கேட்பது முதலியவைகளால் ஆதரிக்கத் தக்கதோ, அத்தகையதும், ஸ்ரீமஹாவிஷ்ணுவின் சரித்ரங்களை எடுத்துரைப்பதும், மிகவும் அற்புதமுமான இந்தப் புராணத்தை உங்களுக்குச் சொன்னேன். இப்புராணத்தில் பாபங்களை எல்லாம் போக்குபவனும், தன்னைப் பற்றினாருடைய ஸம்ஸார பந்தத்தை (உலகியல் கட்டை) அறுப்பவனும், இந்த்ரியங்களுக்கு நியாமகனும் (நியமிப்பவனும்), ஷாட்குண்யபூர்ணனும் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனும்), பக்தர்களுடைய அனிஷ்டங்களை (தீமைகளைப்) போக்கி, இஷ்டங்களை (விருப்பங்களை) நிறைவேற்றுபவனுமாகிய ஸ்ரீமந்நாராயணன், நேரே நிருபிக்கப்படுகிறான்.
வேதாந்தங்களில் மறைத்துக் கூறப்படுபவனும், ஜகத்தில் ஸ்ருஷ்டி (படைத்தல்), ஸம்ஹாரங்களுக்கு (அழித்தல்) காரணனும், பரப்ரஹ்மமென்று பெயர் பெற்றவனுமாகிய பரமபுருஷனை இப்புராணம் நன்றாக நேரே நிரூபித்துச் சொல்லுகின்றது. இதில்
(முதல் ஸ்கந்தத்தில்) ஸாதுக்களாகிய நீங்கள் என்னை இப்புராணத்தைப் பற்றி வினவின உபாக்யானமும் (சரித்ரமும்), ப்ரக்ருதி புருஷர்களைப் பிரித்தறிகையாகிற ஜ்ஞானமும், பரமாத்மனுடைய ஸ்வரூப (இயற்கைத் தன்மை), ரூப (திவ்ய மங்கள விக்ரஹம்), குண, விபூதிகளை (பெருமை, ஆளுமை, சொத்து) உள்ளபடி அறிகையாகிற விஜ்ஞானமும் கூறப்பட்டன. பிறகு, பக்தியோகமும், அதற்கு அங்கமான வைராக்யமும், பரீக்ஷித்தின் பிறவி முதலிய உபாக்யானமும் (சரித்ரமும்), நாரத மஹர்ஷியின் வ்ருத்தாந்தமும் (சரித்ரமும்), ராஜர்ஷியாகிய பரீக்ஷித்து ப்ராஹ்மண சாபத்தினால் ப்ராயோபவேசம் (இறக்கும் வரை உண்ணா நோன்பு) செய்ததும்,