சனி, 30 ஜனவரி, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 267

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – ஐம்பத்தொன்றாவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ணன் காலயவனனை முசுகுந்தனுடைய திருஷ்டியால் (பார்வையால்) தஹிப்பித்தலும் (எரித்தலும்), முசுகுந்தன் ஸ்ரீக்ருஷ்ணனைத் துதித்தலும், ஸ்ரீக்ருஷ்ணன் முசுகுந்தனுக்கு வரம் கொடுத்தலும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அப்பொழுது, உயர்கின்ற சந்த்ரன் போல் பார்க்கப் பதினாயிரம் கண்கள் வேண்டும்படி அழகியனும், கறுத்துப் பொன்னிறமுள்ள பட்டு வஸ்த்ரம் தரித்து, மார்பில் ஸ்ரீவத்ஸமென்னும் அடையாளம் அமைந்து, கழுத்தில் திகழ்கின்ற கௌஸ்துப மணியை அணிந்து, திரண்டு உருண்டு நீண்ட நான்கு பாஹு தண்டங்களும் (கைகளும்), அப்போதலர்ந்த செந்தாமரை மலர்போல் சிவந்தழகிய திருக்கண்களும், என்றும் ஸந்தோஷமுற்று அளவற்ற ஸௌந்தர்யமும், அழகிய கபோலங்களும் (கன்னங்களும்) பரிசுத்தமான புன்னகையும், திகழ்கின்ற மகரகுண்டலங்களும் அமைந்த முகாரவிந்தமும் (திருமுகத் தாமரையும்) விளங்கப்பெற்று மிகவும் விளங்குகின்ற அந்த ஸ்ரீக்ருஷ்ணன், பட்டணத்து வாசலினின்று வெளிக் கிளம்பி வருவதைக் கண்டு காலயவனன், நாரதரிடத்தில் ஸ்ரீக்ருஷ்ணன் இத்தகைய அடையாளங்களுடையவன் என்று கேட்டிருப்பவனாகையால், “ஸ்ரீவத்ஸமென்னும் அடையாளமுடையவனும், நான்கு புஜ தண்டங்கள் (கைகள்) உடையவனும், செந்தாமரைக்கண்ணனும், வனமாலை அணிந்தவனும், பேரழகனுமாகிய இப்புருஷன் வாஸுதேவனேயாக வேண்டும். நாரதர் சொன்ன லக்ஷணங்களெல்லாம் இவனிடத்தில் அமைந்திருக்கின்றன. ஆகையால், இவன் மற்றொருவனுமல்லன். இவன் ஆயுதமில்லாதிருக்கின்றனன். இவனோடு நான் காலால் நடந்து கொண்டு, ஆயுதமில்லாமலே யுத்தம் செய்யவேண்டும்” என்று நிச்சயித்துக்கொண்டு, அம்மஹானுபாவன் தன்னை எதிர்க்காமல் பராங்முகனாய் (முகத்தைத் திருப்பிக்கொண்டு வேறு திசையில்) ஓடக் கண்டு, யோகிகளுக்கும் கூட எட்டாத அப்பரம புருஷனைப் பிடிக்க முயன்று, பின் தொடர்ந்தோடினான்.

ஸ்ரீக்ருஷ்ணன், அடிகள் தோறும் தன்னைக் கையில் அகப்படுகிறவன் போல் காட்டிக் கொண்டே, அந்த யவனனை வெகுதூரம் இழுத்துக் கொண்டு போய், பர்வத குஹையில் சேர்த்தான். “நீ யது குலத்தில் பிறந்தவன். நீ பலாயனம் செய்வது (போரில் பின் வாங்குவது) யுக்தமன்று (ஸரியன்று)” என்று பழித்துக்கொண்டே அந்த யவனன், வேகமாகத் தொடர்ந்து சென்றும், பாபங்கள் தொலையப் பெறாதவனாகையால், இவனைப் பெறவில்லை. மஹானுபாவனாகிய ஸ்ரீக்ருஷ்ணனோவென்றால், இவ்வாறு பழிக்கப் பெற்றும், பேசாமல் பர்வத குஹையில் நுழைந்தான். அக்காலயவனனும், அந்தப் பர்வத குஹையில் நுழைந்து, அங்கு வேறொரு மனுஷ்யன் படுத்திருக்கக் கண்டான். அவன், “வாஸுதேவன் என்னை இவ்வளவு தூரம் இழுத்துக்கொண்டு வந்துவிட்டு, இப்பொழுது ஸாதுவைப்போல் பேசாமல் படுத்திருக்கிறான். நிச்சயம். இவன் க்ருஷ்ணனே” என்று, மூடனாகையால், அம்மனிதனை ஸ்ரீக்ருஷ்ணனாகவே நினைத்து, அவனைப் பாதத்தினால் உதைத்தான். நெடுநாளாய்த் தூங்கிக்கொண்டிருக்கிற அப்புருஷன் எழுந்து, மெல்ல மெல்லக் கண்களை விழித்து, திசைகளையெல்லாம் பார்த்துக் கொண்டு, வந்து பக்கத்திலிருக்கின்ற அந்த யவனனைக் கண்டான். 

பரத வம்சாலங்காரனே! அந்த யவனன், கோபமுற்றிருக்கிற அப்புருஷனுடைய கண் பட்ட மாத்ரத்தில் பற்றி எரிகின்ற, தன் தேஹத்தினின்று (உடலிலிருந்து) உண்டான அக்னியால் தஹிக்கப்பட்டு (எரிக்கப்பட்டு), அந்த க்ஷணமே பஸ்மமானான் (சாம்பலானான்).

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- ப்ரஹ்மர்ஷீ! யவனனைக் கொன்ற அப்புருஷன் யாவன்? யாருடைய வம்சத்தில் பிறந்தவன்? எத்தகைய வீர்யமுடையவன்? அவன் எந்தக் காரணத்தினால் குஹைக்குள் சென்று படுத்திருந்தான்? அவனுடைய தேஜஸ்ஸு (ஆற்றல்) எத்தகையது?

வெள்ளி, 29 ஜனவரி, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 266

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – ஐம்பதாவது அத்தியாயம்

(ஜராஸந்தாதிகளோடு யுத்தமும், ஸமுத்ரத்தினிடையில் த்வாரகாபுரியை நிர்மித்துத் தன் பந்துக்களை அவ்விடம் கொண்டு போய்ச் சேர்த்தலும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பரத ச்ரேஷ்டனே! கம்ஸனுக்கு அஸ்தியென்றும், ப்ராஸ்தியென்றும் இரண்டு பட்ட மஹிஷிகள் (ராணிகள்) இருந்தார்கள். அவர்கள், பர்த்தாவான (கணவனான) கம்ஸன் முடிகையில், துக்கத்தினால் வருந்தித் தந்தையாகிய ஜராஸந்தனுடைய க்ருஹத்திற்குப் போனார்கள். அப்பால், வருத்தமுற்றிருக்கின்ற அந்த கம்ஸ மஹிஷிகள் (ராணிகள்), மகத தேசங்களுக்கு ப்ரபுவும், தங்கள் தந்தையுமாகிய ஜராஸந்தனுக்குத் தங்கள் வைதவ்யத்தின்  (விதவையானதன்) காரணத்தையெல்லாம் விஸ்தாரமாகத் தெரிவித்தார்கள்.   

அந்த ஜராஸந்தன், அப்ரியமான (விரும்பத்தகாத) அந்தச் செய்தியைக் கேட்டு, சோகம், கோபம் இவைகளுடன் கூடி, பூமியில் யாதவப் பூண்டே இல்லாதபடி செய்யப் பெருமுயற்சி கொண்டான். அவன் இருபத்து மூன்று அக்ஷௌஹிணி ஸைன்யங்களைத் (தேர் 21870; குதிரை 65610; யானை 21870; காலாட்படை 109350 கொண்ட பெரும் படை அக்ஷௌஹிணி ஸைன்யம் எனப்படும்) திரட்டிக் கொண்டு சென்று, யாதவர்களின் முக்ய பட்டணமாகிய மதுராவை எல்லாத் திசைகளிலும் தகைந்தான் (முற்றுகை இட்டான்). ஸ்ரீக்ருஷ்ணன், கரை புரண்ட ஸமுத்ரம் போன்றிருக்கிற அந்த ஜராஸந்தனுடைய ஸைன்யத்தையும் (படையையும்), அவனால் தன் பட்டணம் தகையப்பட்டிருப்பதையும் (முற்றுகை இடப்பட்டிருப்பதையும்), தன் ப்ரஜைகளெல்லாம் பயந்து, வ்யாகுலம் (வருத்தம்) உற்றிருப்பதையும் கண்டு, பாரத்தை நீக்குகையாகிற காரணத்திற்காக மானிட உருவத்தை ஏற்றுக் கொண்டவனும், தன்னைப் பற்றினவர்களுடைய வருத்தங்களைப் போக்கும் தன்மையனும், ஷாட்குண்ய பூர்ணனுமாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) அந்த ஸ்ரீக்ருஷ்ணன், அந்தத் தேச காலங்களுக்குத் தகுந்திருக்கும்படி தன்னுடைய அவதாரத்தின் ப்ரயோஜனத்தை ஆராய்ந்து, இவ்வாறு செய்யவேண்டுமென்று நிச்சயித்துக் கொண்டான். 

“இந்த மாகதன் (மகத நாட்டு அரசன் ஜராசந்தன்) திரட்டிக்கொண்டு வந்திருக்கிற இந்த ராஜாக்களின் ஸைன்யம், பல அக்ஷெளஹிணி (தேர் 21870; குதிரை 65610; யானை 21870; காலாட்படை 109350 கொண்ட பெரும் படை அக்ஷௌஹிணி ஸைன்யம் எனப்படும்) கணக்குடையது. போர்வீரர்களும், குதிரைகளும், தேர்களும் அளவற்றிருக்கின்றன. இந்த ஸைன்யம் (படை) முழுவதும் பூமிக்குப் பாரமாயிருக்கிறதாகையால், இதை வதித்து (அழித்து) விடுகிறேன். மாகதனை (மகத நாட்டு அரசன் ஜராசந்தனை) மாத்ரம் இப்பொழுது வதிக்கலாகாது (அழிக்கலாகாது). ஏனென்றால், அவனை வதிக்காமல் விட்டு விடுவோமாயின், அவன் மீளவும் ஸைன்யங்களைத் (படைகளைத்) திரட்டிக்கொண்டு வருவான். அவற்றையும் வதிக்கலாம். அவதரித்தது, பூமியின் பாரத்தை நீக்குவதும், ஸத் புருஷர்களைக் காப்பதும், துஷ்டர்களை வதிப்பதும் ஆகிய இவற்றிற்காகவன்றோ? இதுவன்றி, என்னுடைய அவதாரத்திற்கு வேறு சில ப்ரயோஜனங்களும் உண்டு. 

ஒருகால், மிகவும் தலையெடுத்து வளர்ந்து வருகின்ற அதர்மத்தை அழிப்பதற்காகவும், தர்மத்தைப் பாதுகாப்பதற்காகவும், நான் தேஹத்தை ஏற்றுக்கொள்ளுகிறேன்” என்று இவ்வாறு ஸ்ரீக்ருஷ்ணன் சிந்தித்துக் கொண்டிருக்கையில், அப்பொழுதே ஸூர்யனுடைய ஒளி போன்ற ஒளியுடையவைகளும், ஸாரதியோடு (தேர் ஓட்டுபவர்) கூடினவைகளும், மற்றும் வேண்டிய பரிகரங்களெல்லாம் (உபகரணங்களெல்லாம்) அமைந்தவைகளுமாகிய இரண்டு ரதங்கள் (தேர்கள்) ஆகாயத்தினின்று இறங்கி வந்தன. அமானுஷங்களான (மனிதர்களுக்கு அப்பாற்பட்ட) பழைய ஆயுதங்களும், திடீரென்று வந்து தோன்றின. அப்பால், ஸ்ரீக்ருஷ்ணன் அவற்றைக் கண்டு, பலராமனைப் பார்த்து மொழிந்தான்.

செவ்வாய், 26 ஜனவரி, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 265

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – நாற்பத்தொன்பதாவது அத்தியாயம்

(அக்ரூரன் ஹஸ்தினாபுரத்திற்குச் சென்று ஸமாசாரம் (செய்தி) தெரிந்து கொண்டு வந்து ஸ்ரீகிருஷ்ணனுக்குச் சொல்லுதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அந்த அக்ரூரன் கௌரவேந்த்ரர்களுடைய புகழ்களை வெளியிடுகிற தேவாலயம் முதலியவைகளால் அடையாளம் செய்யப் பெற்ற ஹஸ்தினாபுரத்திற்குச் சென்று, அங்கு பீஷ்மருடன் கூடியிருக்கின்ற த்ருதராஷ்ட்ரனையும், விதுரனையும், குந்தியையும், பாஹ்லிகனையும், அவன் பிள்ளையாகிய ஸோமதத்தனையும், க்ருபாசார்யரையும், த்ரோணாசார்யரையும், கர்ணன், துர்யோதனன் அச்வத்தாமா இவர்களையும், பாண்டவர்களையும், மற்றுமுள்ள நண்பர்களையும் கண்டான். 

அவ்வக்ரூரன், உரியபடி பந்துக்களைக் கிட்டி, அவர்களால் க்ஷேமம் விசாரிக்கப் பெற்று, தானும் அவர்களை க்ஷேமம் வினவினான். துஷ்டர்களான பிள்ளைகளுடையவனும், மனோதைர்யம் அற்பமாயிருக்கப் பெற்றவனும், அற்ப புத்திகளான கர்ணாதிகளின் அபிப்ராயத்தை அனுஸரிக்கும்  தன்மையனுமாகிய ராஜனான த்ருதராஷ்ட்ரனுடைய நடத்தையை ஆராயும் பொருட்டு, அவ்விடத்தில் சிலமாதங்கள் வஸித்திருந்தான். யுதிஷ்டிரனிடத்தில் ப்ரஜைகளுக்கு ப்ரீதி உண்டாயிருப்பதையும், அவர்களுடைய தேஜஸ்ஸு (பராக்ரமம்), ஓஜஸ்ஸு (ஆயுதங்களைத் தாங்கும் திறன்), பலம் (உடல் வலிமை), வீர்யம்  (வீரம்), வணக்கம் (அடக்கம்), நாட்டு மக்களிடம் அன்பு முதலிய குணங்களையும், பொறுக்க முடியாதிருக்கின்ற த்ருத்ராஷ்ட்ரன் பிள்ளைகளான துர்யோதனாதிகள் செய்த விஷம் கொடுத்தது முதலிய கொடுஞ் செயல்களும், இன்னும் அவர்கள் செய்ய நினைத்திருப்பதும் ஆகிய எல்லாவற்றையும் ப்ருதையும் (குந்தியும்), விதுரனும் அக்ரூரனுக்குச் சொன்னார்கள். ப்ருதை (குந்தி) முன்னமே தன் ப்ராதாவான அக்ரூரன்  வந்திருப்பதைக் கண்டு, அவனிடம் சென்று, பிறந்த அகத்தை நினைத்துக் கொண்டு, கண்ணும், கண்ணீருமாய் அந்த அக்ரூரனைக் குறித்து இவ்வாறு மொழிந்தாள்.

ப்ருதை சொல்லுகிறாள்:- நல்லியற்கையுடையவனே! என் தாய் தந்தைகளும், சகோதரர்களும், சகோதரிகளும், சகோதரர்களின் புத்ரர்களும், உறவுப் பெண்களும், தோழிகளும் எங்களை  நினைக்கின்றார்களா? எங்கள் ப்ராதாவாகிய வஸுதேவனுக்குப் பிள்ளையாகப் பிறந்தவனும், சரணம் அடையத் தகுந்தவனும், ஷாட்குண்ய பூர்ணனும் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனும்), பக்தர்களுடைய தோஷங்களைப் பாகையாகக் கொள்ளும் (பாகை - உபஹாரம்) தன்மையனுமாகிய ஸ்ரீக்ருஷ்ணனும், தாமரைக்கண்ணனாகிய பலராமனும், அத்தையின் பிள்ளைகளான யுதிஷ்டிராதிகளை நினைக்கிறார்களா? 

செந்நாய்களிடையில் அகப்பட்ட மான் பேடை (பெண் மான்) போல், சத்ருக்களின் (எதிரிகளின்) இடையில் அகப்பட்டு வருந்துகின்ற என்னையும், தந்தையற்றவர்களான என் பிள்ளைகளையும், அந்த ராம, க்ருஷ்ணர்கள் வந்து, நல்வார்த்தைகளால் ஸமாதானப்படுத்துவார்களா? இவ்வாறு குந்தி அக்ரூரனைப் பார்த்து மொழிந்து, ஸ்ரீக்ருஷ்ணனை நினைத்து, புத்தியில் தோன்றுகிற அந்தப் பகவானை வேண்டுகிறாள்.  

ஸ்ரீக்ருஷ்ணா! எல்லாம் அறிந்தவனே! அறிஞர்களில் உனக்கு மேற்பட்டவர்கள் உண்டோ? அனைவர்க்கும் அந்தராத்மாவாயிருப்பவனே! எங்கள் வருத்தம் உனக்குத் தெரியவில்லையா? ஜகத்தைப் பாதுகாக்கும் பொருட்டு இப்பூமியில் அவதரித்தவனே! குழந்தைகளுடன் வருத்தமுற்று உன்னையே சரணம் அடைகின்ற என்னைப் பாதுகாப்பாயாக.  

திங்கள், 25 ஜனவரி, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 264

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – நாற்பத்தெட்டாவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ணன் த்ரிவக்ரையின் க்ருஹத்திற்கும், அக்ரூரனுடைய மாளிகைக்கும் போய், அவர்களை அனுக்ரஹித்து, அக்ரூரனை ஹஸ்தினாபுரத்திற்கு அனுப்புதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அனந்தரம் (பிறகு), ஸர்வாந்தராத்மாவும், எல்லாவற்றையும் ஒரே ஸமயத்தில் ஸாக்ஷாத்கரிப்பவனுமாகிய பகவான், த்ரிவக்ரையென்னும் ஸைரந்த்ரி (அந்தப்புர பணிப்பெண்), அக்ரூரன் இவர்களுக்குத் தான் வருகிறேனென்று சொன்னதையும், அவர்களுடைய அபிப்ராயத்தையும் ஆராய்ந்து காம விகாரத்தினால் (காதல் கிளர்ச்சியால்) தபிக்கப்பட்ட (எரிக்கப்பட்ட) ஸைரந்த்ரிக்கு (அந்தப்புர பணிப்பெண்ணிற்கு) ப்ரியம் செய்ய விரும்பி, அவளுடைய க்ருஹத்திற்குச் சென்றான். அங்கு, வீட்டிற்கு வேண்டிய உபகரணங்கள் பலவும் விலையுயர்ந்து நிறைக்கப்பட்டிருந்தன. காம போகத்திற்கு (காதல் ஆசை அனுபவிக்க) வேண்டிய கருவிகள் பலவும் ஸம்ருத்தமாயிருந்தன (நிறைந்திருந்தன). மற்றும், அந்த க்ருஹம், முத்துமாலைகளாலும், த்வஜங்களாலும் (கொடிகளாலும்), மேற்கட்டுகள், படுக்கைகள், ஆஸனங்கள் இவைகளாலும், நல்ல மணமுள்ள தூபங்களாலும், அத்தகைய தீபங்களாலும், அத்தகைய பூமாலைகளாலும், கந்தங்களாலும் (வாசனை பொருட்களாலும்) பலவர்ணங்களால் எழுதப்பட்டு மிகவும் அழகாயிருப்பவைகளும், காம சாஸ்த்ரத்தில் (ஆண் பெண் உறவு பற்றிய சாஸ்த்ரத்தில்) நிரூபிக்கப்பட்டவைகளுமாகிய பலவகைச் சித்ரங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. 

ஸ்ரீக்ருஷ்ணன், இத்தகையதான தன் மாளிகையைக் குறித்து வருவதைக் கண்டு, அந்த ஸைரந்த்ரி (அந்தப்புர பணிப்பெண்) மிகவும் பரபரப்புற்று, அப்பொழுதே ஆஸனத்தினின்று எழுந்து, ஸகிகளுடன் (தோழிகளுடன்) அவ்வச்சுதனை உரியபடி எதிர்கொண்டு, சிறந்த ஆஸனம் முதலிய உபசாரங்களால் பூஜித்தாள். பிறகு, உத்தவன் அந்த ஸைரந்த்ரியால் நன்றாகப் பூஜிக்கப்பட்டு, அவள் தனக்காகக் கொடுத்த ஆஸனத்தை ஸ்பர்சித்து (தொட்டு), வெறுந்தரையிலேயே உட்கார்ந்தான். ஸ்ரீக்ருஷ்ணனோ வென்றால், காமக் கலவியில் (காதல் சேர்த்தியில்) ஆழ்ந்த மனமுடைய உலகத்தவர்களின் நடத்தையை அனுஸரித்து, புதியதும், விலையுயர்ந்ததுமாகிய படுக்கையின் மேல் ஏறி உட்கார்ந்தான். 

அந்த ஸைரந்த்ரி (அந்தப்புர பணிப்பெண்), எண்ணெய் தேய்த்து, அரைப்பு முதலியன பூசி, ஸ்நானம் செய்து, வெண்பட்டாடை உடுத்து, ஆபரணங்களை அணிந்து, பூமாலைகள் சூட்டி, சந்தனம், குங்குமம் முதலிய கந்தங்கள் (வாசனைப் பொருள்) பூசித் தாம்பூலம் (வெற்றிலை பாக்கு), ஆஸவம் (திராட்சை ரஸம்) இவற்றால் வாய் மணக்க, அம்ருதம் போன்ற மேலான மத்யபானம் செய்து (கள் அருந்தி), மற்றும் பலவகைகளாலும் தன் தேஹத்தை அலங்கரித்துக் கொண்டு, வெட்கம் நிறைந்த மந்த ஹாஸம் (புன்னகை) அமைந்த விலாஸங்களோடு (விளையாட்டோடு) கூடிய, கண்ணோக்கங்களோடு கூடி ஸ்ரீக்ருஷ்ணனிடம் சென்றாள். புதிய கலவி (சேர்த்தி) ஆகையால் வெட்கமுற்று, சங்கித்து நிற்கின்ற அப்பெண்மணியை அழைத்து, வளையினால் அலங்கரிக்கப்பட்ட கையைப் பிடித்து, படுக்கையின் மேல் உட்கார வைத்துக் கொண்டு, சந்தனம் கொடுத்தமையாகிற சிறிது புண்யம் செய்த அப்பெண்மணியுடன் க்ரீடித்தான் (இன்புற்றான்).  

ஞாயிறு, 24 ஜனவரி, 2021

மங்கைக்காதலி - மணப்பாக்கம் கோமான் வெங்கடாச்சாரி

“மானிடர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே!” என்று கூறினாள் சூடிக்கொடுத்தச் சுடர்கொடி. காதலர் இருவர் கருத்து ஒருமித்து ஆதரவு பட்டதே இன்பம் என்பர் ஆன்றோர். மானுடத்தை காதலித்த கவிஞர் ஒரு கோடி என்றால் தெய்வத்திடம் ஆராக்காதல் கொண்ட தொண்டர்கள் பலகோடி சேரும். ஆண்டாள் போன்று ஆழ்வார்களில் திருமங்கைக் காதலியும் ஒருவர். அவளது மனம் ஆண்டவனின் அருளையே நாடி இருந்தது.


 ஒரு நாள் அரங்க மாளிகையின் நடுவே கருங்கடல் வண்ணனாய் கண்டோர் களிப்புறும் வகையில் அரிதுயில் அமர்ந்த ஆனந்தமூர்த்தியிடம் மையல் கொண்டு ஆராக்காதல் அடைந்து விட்டாள். எப்பொழுதும் ஒரே ஏக்கம். மனதிற்குள்ளே கம்பளிப் பூச்சிகள் நெளிவதைப்போன்று ஒரே கிறுகிறுப்பு. எங்கு நோக்கினும் எந்நேரத்திலும் தன் காதலனின் திருவுருவையேக் கண்டாள். காதல் பெருகிடின் கருத்தொழிந்து பித்துற்ற நிலையில் பேதுருளானாள்.


பறவைக் கூட்டம் ஒன்று வானவெளியில் பறந்து செல்வதை கண்டாள். அவைகளுடன் தன் பிரிவாற்றாமையை சொல்லி அழ அவள் எண்ணியிருக்க வேண்டும் மாறாக ஒருகால் அந்த பறவைக் கூட்டங்கள் தனக்கு உதவி புரிந்து தன் காதலனுடன் தன்னை சேர்த்து வைக்காதா என்ற ஏக்கமும் சேர்ந்திருக்கிறது.


செம்போத்து என்ற ஒரு பறவை உண்டு, காக்கை போன்ற உடலமைப்பு. ஆனால் அதன் இறகுகள் பொன்னிறமாயும் வண்ணம் கொள்பவை அவை. அந்த செம்போத்தை பார்த்து விளிக்கிறாள் திருமங்கை காதலி.


‘திருத்தாய் செம்போத்தே, திருமாமகள் தன்கணவன்,

மருத்தார்தொல்புகழ் மாதவனை வரத் திருத்தாய் செம்போத்தே.’



மனமிகுந்த மாலையையணிந்த என் மாதவனை என்னிடம் வரும்படியாக சொல். தான் யாரிடம் பேசுகிறோம் என்ன பேசுகிறோம் என்பதை மறந்த அவள், அடுத்ததாக அங்கே பறந்து வந்த ஒரு காக்கையையை பார்த்து விளிக்கிறாள். காக்கைகள் கரைந்தால் யாராவது விரும்பிய விருந்தினர் வீட்டுக்கு வருவது என்பது பலர் நம்புவது உண்டு. அந்த நம்பிக்கை தோன்றவும் காகத்தைப் போன்ற கருமுகில் வண்ணன் என் காதலன் தொல்புகழ் உத்தமன் இங்கு என்னை காண காக்கையே கரைவாயாக என்று வேண்டுகிறாள்.

ஶ்ரீமத் பாகவதம் - 263

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – நாற்பத்தேழாவது அத்தியாயம்

(கோபிகைகளுக்கும், உத்தவனுக்கும் நடந்த ஸம்வாதத்தையும் (உரையாடலையும்), அவர்களுக்கு ஸ்ரீக்ருஷ்ணனிடத்திலுள்ள ப்ரேமாதியத்தையும் (அளவு கடந்த அன்பையும்) வர்ணித்தல்).

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- நீண்ட புஜ தண்டங்கள் (கைகள்) உடையவனும், அப்போதலர்ந்த செந்தாமரை இதழ் போன்ற கண்களுடையவனும், பொன்னிறமான ஆடை உடுத்தியிருப்பவனும், தாமரை மலர் மாலை அணிந்தவனும், தாமரை மலர் போல் திகழ்கின்ற முகமுடையவனும், நிர்மலமாய் விளங்குகின்ற குண்டலங்களுடையவனும், ஸ்ரீக்ருஷ்ணனுடைய ப்ருத்யனுமாகிய (சேவகனுமாகிய) அவ்வுத்தவனைக் கண்டு, பரிசுத்தமான புன்னகையுடைய கோபிகைகள் அனைவரும் “அழகிய காட்சியுடையவனும், ஸ்ரீக்ருஷ்ணனுடைய வேஷம் போன்ற வேஷமுடையவனுமாகிய இப்புருஷன் யாவன்? எங்கிருந்து வந்தான்? யாருடையவன்” என்று மொழிந்து கொண்டு, ஸ்ரீக்ருஷ்ணனுடைய பாதார விந்தங்களையே பணியும் தன்மையனான அவ்வுத்தவனை ஆவலுடன் சூழ்ந்துகொண்டார்கள். அந்தக் கோபிகைகள், வெட்கத்தோடு கூடின மந்தஹாஸத்தினாலும் (புன்னகையாலும்), கண்ணோக்கத்தினாலும், இனிய உரையினாலும், அர்க்யம் முதலிய மற்றும் பல உபசாரங்களாலும், அவ்வுத்தவனை நன்றாக அர்ச்சித்து, ஏகாந்தத்தில் (தனி இடத்தில்) ஆஸனம் அளித்து, ஸுகமாக உட்காரச்செய்து, ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு வல்லபனான ஸ்ரீக்ருஷ்ணனிடத்தினின்று ஸமாசாரம் (செய்தி) கொண்டு வந்தவனென்று தெரிந்துகொண்டு, நமஸ்காரம் செய்து, வணக்கத்துடன் மேல்வருமாறு வினவினார்கள்.

கோபிகைகள் சொல்லுகிறார்கள்:- நீ, யாதவர்களுக்கு ப்ரபுவாகிய ஸ்ரீக்ருஷ்ணனுடைய ப்ருத்யனென்றும் (சேவகன் என்றும்), அவனிடத்தினின்று ஸமாசாரம் (செய்தி) கொண்டு வந்தவனென்றும் நாங்கள் தெரிந்து கொண்டோம். ப்ரபுவாகிய ஸ்ரீக்ருஷ்ணன், தாய், தந்தைகளான யசோதா, நந்தர்களுக்கு ப்ரியம் செய்ய விரும்பி, உன்னை இவ்விடம் அனுப்பினான். இல்லாத பக்ஷத்தில், அவாப்த ஸமஸ்த காமனாகிய (விரும்பியது அனைத்தும் அடையப்பெற்றவனான) அந்த ஸ்ரீக்ருஷ்ணனுக்கு நிஹீனமாகிய (மிகவும் தாழ்ந்ததான) இந்தக் கோகுலத்தில் நினைக்கத்தகுந்த வஸ்துவொன்று இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை. தாய், தந்தை முதலிய பந்துக்களிடத்தில் உண்டாகும் ஸ்னேஹமாகிற பாசத்தை எத்தகைய முனிவனாலும் கூடத் துறக்க முடியாதல்லவா? (ஆகையால் அவன் தாய் தந்தைகளிடம் நல்வார்த்தை சொல்லும் பொருட்டே உன்னை அனுப்பியிருக்க வேண்டுமன்றி வேறில்லை). 

பந்துக்களைத் தவிர மற்றவரிடத்தில் உண்டாகும் ஸ்னேஹம் (நட்பு, ப்ரியம், பாசம்) ப்ரயோஜனத்தைப் பற்றினது (ஒரு பலனைக் கருதி ஏற்படுவது). அந்த ப்ரயோஜனம் (பலன்) கைகூடும் வரையில் மாத்ரமே ஸ்னேஹித்திருப்பது (நட்புடன் இருப்பது) போலப் பாவிப்பார்கள். பரபுருஷனை (கணவனைத் தவிர வேறு ஆண்மகனைப்) புணரும் தன்மையுள்ள பெண்களிடத்தில் புருஷர்களின் ஸ்னேஹம் (நட்பு, ப்ரியம், பாசம்) போலவும், தேன் நிறைந்த புஷ்பங்களில் வண்டுகள் செய்யும் ஸ்னேஹம் (நட்பு, ப்ரியம், பாசம்) போலவும், ப்ரயோஜனத்தைப் பற்றி (ஒரு பலனைக் கருதி) வரும் ஸ்னேஹம் (நட்பு, ப்ரியம், பாசம்) உண்மையன்று. பணமில்லாதவனை விலைமாதர்களும் (வேசிகளும்), ரக்ஷிக்கும் திறமையற்ற மன்னவனை ப்ரஜைகளும், வித்யையைக் கற்ற சிஷ்யர்கள் ஆசார்யனையும், தக்ஷிணை கொடுத்த யஜமானனை ருத்விக்குகளும், பழங்கள் மாறின வ்ருக்ஷத்தைப் (மரத்தை) பக்ஷிகளும், போஜனம் (உணவு) அளித்தவனுடைய க்ருஹத்தை அதைப் புசித்த அதிதிகளும், நெருப்பு பற்றி எரிந்த அரண்யத்தை (காட்டை) ம்ருகங்களும் (விலங்குகளும்), அன்புடன் தொடர்கின்ற மாதைப் (பெண்ணை) புணர்ச்சி கூடப் பெற்ற (சேர்ந்து அனுபவித்த) கள்ளக் காதலனும் துறக்கின்றார்களல்லவா? ஆகையால், ப்ரயோஜனத்தைப் பற்றி (ஒரு பலனைக் கருதி) வரும் ஸ்னேஹம் (நட்பு, ப்ரியம், பாசம்) ப்ரயோஜனம் (பலன்) கைகூடும் வரையில் மாத்ரமே இருக்குமேயன்றி அதற்குமேல் தொடராது.

வெள்ளி, 22 ஜனவரி, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 262

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – நாற்பத்தாறாவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ணன் உத்தவனைக் கோகுலத்திற்கு அனுப்பி நந்தகோப, யசோதைகளையும், கோபிகைகளையும் ஸமாதானப்படுத்துதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மதுரையில் உத்தவனென்பவன் ஒருவன் உளன். அவன் வ்ருஷ்ணிகளில் (ஸ்ரீக்ருஷ்ணன் அவதரித்த குலம்) சிறந்தவன்; ஸ்ரீக்ருஷ்ணனுக்கு ப்ரியமுள்ள நண்பனும், மந்திரியுமாயிருப்பவன்; ப்ருஹஸ்பதிக்கு நேரே சிஷ்யன்; இயற்கையாகவே புத்தியுடையவர்களில் சிறந்தவன்; மிகவும் புகழத்தகுந்தவன்; ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் மாறாத பக்தியுடையவன். தன்னை சரணம் அடைந்தவர்களின் மன வருத்தங்களைப் போக்கும் தன்மையுள்ள ஸ்ரீக்ருஷ்ணன், அவனை ஒருகால் ரஹஸ்யத்தில் அழைத்து, தன் கையினால் அவன் கையைப் பிடித்துக் கொண்டு இவ்வாறு மொழிந்தான்.

ஸ்ரீக்ருஷ்ணன் சொல்லுகிறான்:- நல்லியற்கையுடையவனே! உத்தவா! நீ கோகுலத்திற்குப் போய் எங்கள் தாய் தந்தைகளாகிய நந்தகோப, யசோதைகளுக்கும், கோபிகைகளுக்கும் ப்ரீதியை விளைப்பாயாக. என்னைப் பிரிந்தமையால் உண்டான அவர்களுடைய மன வருத்தத்தை என் வார்த்தைகளால் போக்குவாயாக. கோபிகைகள் என்னிடத்திலேயே  நிலைநின்ற மனமுடையவர்கள்; என்னையே ப்ராணனாக (உயிராக) உடையவர்கள்; எனக்காகத் தேஹ (உடலைப்) போஷணத்தைத் (பராமரிப்பதைத்) துறந்தவர்கள்; மன இரக்கமுடையவனும், மிகுந்த அன்பனும், அந்தராத்மாவுமாகிய என்னையே எப்பொழுதும் மனத்தினால் சரணம் அடைந்திருப்பவர்கள். “எவர்கள் எனக்காக லோக தர்மங்களையெல்லாம் துறந்திருப்பவர்களோ, அவர்களை நான் போஷிப்பது வழக்கமாகையால், நீ கோகுலத்திற்குச் சென்று, என்னுடைய வார்த்தைகளால் கோபிகைகளின் மன வருத்தத்தைப் போக்குவாயாக.” 

உத்தவனே! அந்தக் கோபிகைகள், ப்ரீதிக்கிடமானவைகள் எல்லாவற்றிலும் மிகவும் ப்ரீதிக்கிடமாகிய நான் தூரத்தில் இருப்பினும், என்னையே நினைத்துக் கொண்டு, என்னைப் பிரிந்திருக்கையால் என்னைக் கண்டு அனுபவிக்க வேணுமென்னும் பேராவலுற்று, அதனால் தழதழத்து, மெய்மறந்து, மோஹித்திருப்பார்கள். நான் கோகுலத்தினின்று புறப்பட்டு வரும்பொழுது, “சீக்கிரத்தில் திரும்பி வருகிறேன்” என்று சொல்லியனுப்பின வார்த்தைகளை நம்பி, என்னுடையவர்களான கோபிகைகள், என்னிடத்தில் மனத்தை நிலை நிறுத்தி, விரஹ தாபத்தினால் தஹிக்கப்பட்டவர்களாகவே மிகவும் வருத்தத்துடன் பெரும்பாலும் ப்ராணன்களைத் (உயிரைத்) தரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகையால், அவர்களை அவச்யம் ஸமாதானப்படுத்த வேண்டும்.

வியாழன், 21 ஜனவரி, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 261

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – நாற்பத்து ஐந்தாவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ணன்  தாய் தந்தைகளை ஸமாதானப்படுத்தி, உக்ரஸேனனுக்கு ராஜ்யாபிஷேகம் செய்து, உபநயனம் செய்யப்பெற்று, ஸாந்தீபனியிடம் வித்யா அப்யாஸம் செய்து (கல்வி கற்று), குரு தக்ஷிணை கொடுத்து மீண்டு வருதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- புருஷோத்தமனாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணன், சிறந்த புருஷார்த்த ஸ்வரூபனாகிய தன்னுடைய உண்மையைத் தன் தாய் தந்தைகள் தெரிந்து கொண்டிருப்பதை அறிந்து, அவர்களுக்கு அத்தெளிவு தொடர்ந்து வரலாகாதென்று நினைத்து, ஜனங்களையெல்லாம் மதிமயங்கச் செய்வதாகிய தன் மாயையைப் பரப்பினான். பிறகு, ஸ்ரீக்ருஷ்ணன் தமையனுடன் தாய் தந்தைகளிடம் சென்று, வினயத்தினால் வணங்கி, ஆதரவுடன் “அம்மா! அண்ணா!” என்று மொழிந்து மனக்களிப்புறச் செய்து கொண்டு மேல்வருமாறு கூறினான்.

ஸ்ரீக்ருஷ்ணன் சொல்லுகிறான்:- அண்ணா! நீங்கள் எங்கள் விஷயத்தில் என்றும் ஆவலுற்றிருப்பினும், உங்கள் புதல்வர்களாகிய எங்கள் பால்யம், பௌகண்டம், கைசோரம் முதலிய

(பால்யம் - ஐந்து வயது வரையில். பௌகண்டம் - அதற்குமேல் பத்து வயது வரையில். கைசோரம் - அதற்கு மேல் பதினைந்து வயதுவரையில் என்றுணர்க. ஐந்துக்கு மேல் ஒன்பது வரையில் பௌகண்டம். அதற்குமேல் பதினாறுவரையில் கைசோரமென்று சிலர். இவ்விஷயம் பதினைந்தாவது அத்யாயத்தின் முதல் ச்லோக வ்யாக்யானத்தில் முனிபாவப்ரகாசிகையில் காண்க.) 

இளம்பருவங்களெல்லாம் உங்களுக்கெட்டாத ஏதோ ஒரு இடத்தில் கடந்து போயின. பாக்யமற்றவர்களாகையால், நாங்கள் இதுவரையில் உங்களருகாமையில் வாஸம் செய்து வளரப்பெற்றிலோம். இளம்பிள்ளைகள், தாய் தந்தைகளின் க்ருஹத்தில் இருந்து, அவர்களால் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்த்துச் சீராட்டப் பெற்று, எத்தகைய ஸந்தோஷத்தை அடைவார்களோ, அத்தகைய ஸந்தோஷத்தை நாங்கள் அடையப்பெற்றிலோம். 

தர்மம் முதலிய ஸமஸ்த புருஷார்த்தங்களுக்கும் விளை நிலமாகிய தேஹத்தைப் (உடலைப்) படைத்து, வளர்த்தவர்களான தாய் தந்தைகள் விஷயத்தில் பட்ட கடனை நூறாண்டுகள் சுஷ்ரூஷை (பணிவிடை) செய்யினும் தீர்த்துக்கொள்ள வல்லவனாக மாட்டான். எவன், தான் ஸமர்த்தனாயிருந்தும், அந்தத் தாய் தந்தைகளுக்குத் தேஹத்தினாலும், தனத்தினாலும், ஜீவனத்தைக் கல்பிக்காது போவானோ, அவன் லோகாந்தரம் (வேறு உலகம்) போகையில், யமதூதர்கள் அவனைத் தன் மாம்ஸத்தைத் தானே புசிக்கச் செய்வார்கள்; இது நிச்சயம். 

புதன், 20 ஜனவரி, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 260

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – நாற்பத்து  நான்காவது அத்தியாயம்

(சாணூரன், முஷ்டிகன், கூடன், தோஸலன், கம்ஸன் இவர்களை வதித்தல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மஹானுபாவனாகிய மதுஸூதனன், தான் ஸங்கல்பித்திருந்ததையே பிறர்வாயால் நிச்சயப்படுத்திக் கொண்டு, சாணூரனை எதிர்த்தான். பலராமனும் முஷ்டிகனை எதிர்த்தான். அப்பொழுது, அந்த ஸ்ரீக்ருஷ்ண-சாணூரர்களும், பலராம-முஷ்டிகர்களும் கைகளைக் கைகளாலும், பாதங்களைப் பாதங்களாலும் கட்டிக்கொண்டு, ஒருவரையொருவர் ஜயிக்க விரும்பி, ஒருவரையொருவர் பலாத்காரமாகப் பிடித்திழுத்தார்கள். அவர்கள், முட்டிகளால் முட்டிகளையும், முழங்கால்களால் முழங்கால்களையும், தலைகளால் தலைகளையும், மார்புகளால் மார்புகளையும், ஒருவர்க்கொருவர் அடித்துக் கொண்டார்கள். சுழற்றுவது, தள்ளுவது, எதிர்ப்பது, பின்னே நகருவது இவைகளால் அவர்கள் ஒருவரையொருவர் தகைந்தார்கள். ஒருவரையொருவர் ஜயிக்க விரும்புகிற அவர்கள், கீழ் விழுந்தவனைக் கால் கைகளை மடக்கி மேல் தூக்குதல், கைகளால் எடுத்துக் கொண்டு போதல், அப்புறம் தள்ளுதல், கைகால்களை நீட்டவொட்டாமல் மடக்குதல், இவைகளால் ஒருவர் தேஹத்தை (உடலை) ஒருவர் பீடித்தார்கள். ராஜனே! அப்பொழுது மடந்தையர்கள் எல்லாரும் கூட்டங்கூட்டமாய் ஒன்று சேர்ந்து, ராம க்ருஷ்ணர்களிடத்தில் மன இரக்கமுற்று, ஒரு பக்கத்தில் பலமும், ஒரு பக்கத்தில் துர்ப்பலமுமாய் (பலமின்றியும்) இருக்கிறதாகையால், “இது ஸமமான யுத்தமன்று. விஷம யுத்தம்” என்று மொழிந்தார்கள்.

மடந்தையர்கள் சொல்லுகிறார்கள்:- இந்த ராஜ ஸபையில் அதிகரித்தவர்களுக்குப் பெரிய அதர்மமே. ஆ! என்ன வருத்தம்? ஏனென்றால் இவர்கள், துர்ப்பலர்களான (பலம் குறைந்த) பாலர்களும், பலிஷ்டர்களான (பலம் மிகுந்த) மல்லர்களும், சண்டை செய்வதை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். அரசன் இந்த விஷம யுத்தத்தைப் பார்ப்பானாயின், ஸபையினர் கூடாதென்று தடுக்கவேண்டும். அரசன் பார்த்துக் கொண்டிருக்கையில், தாங்களும் ஸம்மதித்திருக்கின்றார்களல்லவா? ஸமஸ்த அங்கங்களும் வஜ்ராயுதம் போல உறுதியாயிருக்கப் பெற்றவர்களும், பெரிய மலை போன்றவர்களுமாகிய இந்த மல்லர்கள் எங்கே? மிகவும் மென்மைக்கிடமான அங்கங்களுடையவர்களும், யௌவன (வாலிப) வயது நேரப் பெறாதவர்களுமாகிய இந்தக் குழந்தைகள் எங்கே? (ஆகையால், பலிஷ்டர்களையும் (பலம் மிகுந்தவர்களையும்), துர்ப்பலர்களையும் (பலம் குறைந்தவர்களையும்) சண்டைக்கு விட்டு வேடிக்கை பார்ப்பது யுக்தமன்று (ஸரியன்று)). ஆகையால், இந்த ஸபைக்குப் பெரிய அதர்மம் உண்டாகும். இது நிச்சயம். ஆனால், என்ன செய்யலாம்? எவ்விடத்தில் அதர்மம் உண்டாகுமோ, அவ்விடத்தில் ஒரு க்ஷணங்கூட இருக்கலாகாது. அப்புறம் போக வேண்டும். 

பண்டிதனாயிருப்பவன், ஸபையினருக்கு நேரும் தோஷங்களை நினைத்து, ஸபைக்குள் நுழையலாகாது. தெரிந்து சொல்லாதிருப்பினும், தெரியாமல் விபரீதமாகச் சொல்லினும், தெரிந்திருக்கையில் தெரியாதென்று சொல்லினும், பயத்தை அடைவான். ஆகையால், ஸபையில் நுழையலாகாது. சத்துருவைச் சுற்றிச் சுழன்று,  இந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய தாமரை முகம் வேர்வைத் துளிகளால் நிறைந்து, ஜலத்துளிகள் நிறைந்த கமலம் போல் திகழ்கின்றது, பாருங்கள். முழுவதும் சிவந்த கண்களுடையதும், முஷ்டிகன் மேல் கோபமுற்றிருப்பதும், சிரிப்பு, பரபரப்பு இவைகளால் அழகாயிருப்பதுமாகிய பலராமனுடைய முகத்தை நீங்கள் ஏன் பார்க்கலாகாது? பாருங்கள். 

திங்கள், 18 ஜனவரி, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 259

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – நாற்பத்து மூன்றாவது அத்தியாயம்

(ஸ்ரீராம க்ருஷ்ணர்கள், குவலயாபீடமென்னும் கஜத்தையும் (யானையையும்), பாகனையும் வதித்து, மல்லரங்கத்திற்குள் நுழைதலும், ஜனங்கள் அவர்களைப் பற்றிப் பேசுதலும், சாணூரனுக்கும் ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் ஸம்பாஷணமும் (உரையாடலும்))

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- சத்ருக்களைஅழிப்பவனே! பிறகு, மற்றை நாள் காலையில் ராமனும், க்ருஷ்ணனும் ஸ்னானாதி கர்மங்களை முடித்துக் கொண்டு, மல்லர்களின் கோஷத்தையும் துந்துபி வாத்யங்களின் முழக்கத்தையும் கேட்டு, அதைப் பார்க்க வந்தார்கள். ஸ்ரீக்ருஷ்ணன், மல்லரங்கத்தின் வாசலில் வந்து அங்கு யானைப் பாகனால் தூண்டப்பட்டு நின்றிருக்கின்ற குவலயாபீடமென்னும் கஜத்தைக் (யானையைக்) கண்டான். ஸ்ரீக்ருஷ்ணன், அரைத்துணியை இழுத்துக் கட்டிச் சுருண்டு இருண்ட முன்னெற்றிக் குழல்களை ஒதுக்கி, மேக கர்ஜனம் போல் கம்பீரமான ஒலியுடன் யானைப் பாகனைப் பார்த்து மொழிந்தான்.

ஸ்ரீக்ருஷ்ணன் சொல்லுகிறான்:- ஓ, யானைப்பாகனே! யானைப்பாகனே! வழிவிட்டு ஒதுங்கிப் போவாயாக. கால தாமதம் செய்ய வேண்டாம். வழி விட மாட்டாயாயின், இப்பொழுது யானையுடன் உன்னைக் கொன்று யமலோகத்திற்கு அனுப்பி விடுகிறேன்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு விரட்டப்பட்ட அந்த யானைப் பாகன் கோபமுற்று, கோபமுற்றிருப்பதும், மிருத்யு, காலன், யமன் இவர்களை நிகர்த்திருப்பதுமாகிய யானையை ஸ்ரீக்ருஷ்ணன் மேல் தூண்டினான். யானைகளில் சிறந்த அந்தக் குவலயாபீடம், க்ருஷ்ணனை எதிர்த்துப் பலாத்கரித்துத் (பலத்துடன்) துதிக்கையினால் அவனைப் பிடித்துக் கொண்டது. அந்த ஸ்ரீக்ருஷ்ணன், அதன் துதிக்கையினின்று நழுவி, அதை அடித்து, அதன் கால்களில் மறைந்து கொண்டான். யானை அவனைக் காணாமல் மிகவும் கோபாவேசமுற்று, க்ராணேந்த்ரியத்தினால் (மோப்பத்தால்) கண்டறியும் தன்மை உடையதாகையால், மோந்து பார்த்து, அவனிருக்குமிடம் தெரிந்து கொண்டு, அவனைத் துதிக்கையால் ஸ்பர்சித்தது (தொட்டது). அந்த ஸ்ரீக்ருஷ்ணன், பலாத்காரமாக வெளிப்பட்டு, மிகுந்த பலமுடைய அந்த யானையை வாலில் பிடித்துக் கொண்டு, கருடன் ஸர்ப்பத்தை அவலீலையாக (விளையாட்டாக) இழுப்பது போல, இருபத்தைந்து வில்லளவு தூரம் பிடித்திழுத்தான். அப்பகவான், வாலைப் பிடித்துக் கொண்டிருக்கின்ற தன்னைப் பிடித்துக் கொள்ள, யானை வலப்புறத்தில் திரும்பும் பொழுது இடப்புறத்தில் இழுப்பதும், இடப்புறத்தில் திரும்பும் பொழுது வலப்புறத்தில் பிடித்திழுப்பதுமாகி, தான் குழந்தையாயிருக்கும் பொழுது பசுவின் கன்றின் வாலைப் பிடித்திழுத்து அத்துடன் சுற்றுவது போல இருபுறமும் தன்னைப் பிடிப்பதற்காகச் சுழல்கின்ற அந்த யானையுடன் தானும் சுழன்று கொண்டிருந்தான். 

சனி, 16 ஜனவரி, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 258

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – நாற்பத்திரண்டாவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ணன் கூனியை அநுக்ரஹித்து, வில்லை முறித்து, அதைக் காக்கும் புருஷர்களையும் முடித்துக் கம்ஸனுக்குப் பயத்தை விளைவித்து, தன் விடுதிக்கு போதலும், கம்ஸன் மல்யுத்தத்திற்காக  சபை சேர்த்து  நந்தாதிகளை வரவழைத்தலும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அனந்தரம் (பிறகு), ராஜமார்க்கத்தில் போய்க் கொண்டிருக்கின்ற மாதவன், பாத்ரத்தில் அங்கராகத்தை (உடலுக்கான நறுமணப்பூச்சுக்களை) எடுத்துக் கொண்டு போகின்றவளும், யௌவன (இளம்) வயதினால் விளக்கமுற்று அழகிய முகமுடையவளுமாகிய, ஒரு கூனியைக் கண்டு, புன்னகையுடன் மனக்களிப்பை விளைத்துக் கொண்டு, இவ்வாறு மொழிந்தான்.

ஸ்ரீக்ருஷ்ணன் சொல்லுகிறான்:- பெண்மணீ! அழகிய இடையுடையவளே! நீ யார்? இந்தப் பட்டணத்தில் இவ்வங்கராகம் (உடலுக்கான நறுமணப்பூச்சுக்களை) யாருக்குக் கொண்டு போகின்றனை? உண்மையை எனக்குச் சொல்வாயாக. அல்லது யாருக்காவது இருக்கட்டும். சிறந்த இந்த அங்கராகத்தை (உடலுக்கான நறுமணப்பூச்சுக்களை) எங்களுக்குக் கொடுப்பாயாக. அதனால் உனக்குச் சீக்ரத்தில் நன்மை உண்டாகும்.

கூனி சொல்லுகிறாள்:- அழகனே! நான் கம்ஸனுக்கு இஷ்டமான பணிக்காரி; த்ரிவக்ரை என்னும் பெயருடையவள். (கழுத்து, துடை, இடை இம்மூன்றும் கோணலாயிருக்கையால், த்ரிவக்ரை என்னும் பெயர் எனக்கு உண்மையாயிருக்கும்). நான், அக்கம்ஸனால் அங்கராகம் (உடலுக்கான நறுமணப்பூச்சுக்களை) கூட்டிக் கொடுக்கும் கார்யத்தில்  நியமிக்கப்பட்டிருக்கின்றேன். நான் கூட்டிக் கொடுக்கிற அங்கராகம் (உடலுக்கான நறுமணப்பூச்சுக்களை) கம்ஸனுக்கு மிகவும் ப்ரியமாயிருக்கும். அந்த அங்கராகத்தைப் (உடலுக்கான நறுமணப்பூச்சுக்களை) பூச உங்களைத் தவிர மற்ற எவன்தான் உரியவன்? எவனும் உரியவனன்று.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பகவானுடைய அங்க ஸௌஷ்டவம் (வடிவழகு), ஸௌகுமார்யம் (மென்மை), புன்னகை, பேச்சு, நோக்கம் இவைகளால் மனம் பறியுண்டு, ஈரமாயிருக்கின்ற அந்த அங்கராகத்தை (உடலுக்கான நறுமணப்பூச்சுக்களை) ராம க்ருஷ்ணர்கள் இருவர்க்கும் கொடுத்தாள். அனந்தரம் (பிறகு), அவர்கள் தங்கள் மேனியின் நிறத்தைக்காட்டிலும் வேறு நிறமுடையதாகையால் பரபாகத்துடன் (மாறுபட்ட வண்ணமுடைய – contrast ஆக இருக்கக்கூடிய) திகழ்கின்ற அந்த அங்கராகத்தைப் (உடலுக்கான நறுமணப்பூச்சுக்களை) பூசிக்கொண்டு மிகவும் விளங்கினார்கள். மஹானுபாவனாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணன் அருள் புரிந்து, தன் காட்சியின் பயனைக் காட்ட முயன்று, அழகிய முகமுடைய த்ரிவக்ரையென்னும் பெயர் பூண்ட அக்கூனியைக் கூன் நிமிர்த்து நேராகச் செய்ய மனங்கொண்டான். அப்பரமபுருஷன், அக்கூனியின் நுனிக்கால்களிரண்டையும் தன்பாதங்களால் மிதித்து, இரண்டு விரல்கள் உயரத்தூக்கப் பெற்ற தன் ஹஸ்தத்தினால் (கையினால்) அவளுடைய மோவாயைப் (முகவாய்க்கட்டையைப்) பிடித்துக் கொண்டு, அவள் தேஹத்தை (உடலை) நிமிரத் தூக்கினான். அவள், அப்பொழுதே சரீரம் நேராகி, ஏற்றக் குறைவுகளின்றி ஸமமாயிருக்கப் பெற்று, பருத்த நிதம்பங்களும் (புட்டங்களும்), ஸ்தனங்களுமுடையவளாகி, முகுந்தனுடைய ஸ்பர்சத்தினால் அந்த க்ஷணமே சிறந்த மடந்தையாய் விட்டாள். அப்பால், அழகும், குணங்களும், மேன்மையும் உடைய அம்மாதரசி,  மன்மத விகாரம் (காமக் கிளர்ச்சி) உண்டாகப் பெற்று, புன்னகை செய்து கொண்டே ஸ்ரீக்ருஷ்ணன் உத்தரீயத்தைப் பிடித்திழுத்து மொழிந்தாள்.

கூனி சொல்லுகிறாள்:- வீரனே! எங்கள் வீட்டிற்குப் போவோம்? வருவாயாக. நான் இவ்விடத்தை விட்டுப்போக முடியாதிருக்கின்றேன். புருஷ ச்ரேஷ்டனே! உன்னால் கலக்கப்பட்ட மனமுடைய என் மேல் அருள் புரிவாயாக.

வேதம் கேட்கவேண்டும் - முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மாசாரியார்

வேதம் புரியாது என்பார்கள். ஆனால், அதை கேட்க வேண்டும் என்ற எண்ணம் வருவதே பெரிய ஏற்றம். வேத சப்தம் நம்மை கேட்கப் பண்ணுகிறது.

அதர்வண வேதம் சொல்கிறது....

ஒருவர் கோயிலுக்குப் போய் பகவானைச் சேவிக்கிறார். பகவான் இவரை அனுக்ரஹித்தாரா என்பதை எப்படி தெரிந்து கொள்வது?!


கோயிலில் ஓரிடத்தில் வேத பாராயணம் நடக்கிறது. அந்த வேத சப்தத்தைக்கேட்டு அங்கே போய் அவர் உட்கார்ந்து கண்ணை மூடிக்கொண்டு கேட்கிறார். எப்போது வேதத்தைக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு வேத பாராயணத்தைக் கேட்கிறாறோ அப்போது பகவான் அவரைப் பார்த்து விட்டான் என அர்த்தம்.


ந்ருஸிம்ஹ அவதாரத்தின் முன்பு பகவான் சொன்னான் 'யதா வேதேஷூ' என்று. எவன் வேகத்தை நிந்திக்கிறானோ, அவனுக்கு நற்கதி கிடைக்காது என்று அர்த்தம். 


வேத மந்திரங்களுக்கு அர்த்தம் தெரியாமல் ஒருவர் ஹோமம் பண்ணினாலும் பலன் கிடைக்குமா என்று சிலருக்கு சந்தேகம். பலன் கிடைக்கும் என்கிறது வேதம்.


ப்ரம்மச்சாரி பையன் தன் உபநயனத்தின்போது (பிக்ஷாடணம்) - பிச்சை எடுக்கக் கற்றுக் கொள்கிறான். ஒவ்வொரு வீட்டின் முன்பும் 'பவதி பிஷாந்தேஹி' என்கிறான். அதன் அர்த்தம் அவனுக்குத் தெரியாது. ஆனால், அந்த வீட்டுப் பெண்மணி அவன் பாத்திரத்தில் அரிசியை இடுகிறாள். பாத்திரம் நிறைகிறது. இவனுக்கு அர்த்தம் தெரியாமல் போனாலும் அந்த பெண்மணிக்கு தெரிந்ததால் பிட்ஷை கிடைத்தது. அது போல், வேத மந்திரத்துக்கு நமக்கு அர்த்தம் தெரியாவிட்டாலும் தேவதைகளுக்குத் தெரியும். அவர்கள் ஓடி வந்து நாம் கொடுப்பதை ஸ்வீகரித்து நம்முடைய அபீஷ்டத்தை பூர்த்தி பண்ணுவார்கள். 


முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மாசாரியார் உரையிலிருந்து... - கௌசல்யா


நன்றி - தீபம் ஜூன் 2018


ஶ்ரீமத் பாகவதம் - 257

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – நாற்பத்தொன்றாவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ணன் மதுராபுரியில் நுழைதலும், வண்ணான், கூனி முதலியவர்களை அனுக்ரஹித்தலும்.)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஷாட்குண்ய பூர்ணனாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) ஸ்ரீக்ருஷ்ணன் இவ்வாறு துதி செய்கின்ற அக்ரூரனுக்கு ஜலத்தில் தன்னுடைய திவ்ய உருவத்தைக் காட்டி, நடன ஆட்டமாடுவதற்காக ஏற்றுக்கொண்ட வேஷத்தைக் காட்டி மறைப்பது போல மறைந்தான். அந்த அக்ரூரனும், அவ்வுருவம் மறைந்ததைக் கண்டு ஜலத்தினின்று மேல் கிளம்பி, த்வரையுடன் (விரைவாக) அவச்யமாக (கட்டாயமாக) அனுஷ்டிக்க வேண்டிய மாத்யாஹ்னிகம் முதலிய  நித்ய கர்மத்தையெல்லாம் செய்து முடித்து, வியப்புடன் ரதத்தின் மேல் ஏறினான். ஸ்ரீக்ருஷ்ணன் அவ்வக்ரூரனைப் பார்த்து, “அண்ணா! நீ ரதத்திலாவது, பூமியிலாவது, ஆகாயத்திலாவது, ஜலத்திலாவது ஏதேனும் அற்புதம் கண்டீரா? உம்மைப் பார்த்தால் ஏதோ ஒரு அற்புதம் கண்டவர் போல் தோற்றுகிறது” என்று வினவினான். அதைக் கேட்டு அக்ரூரன், ஸ்ரீக்ருஷ்ணனைப் பார்த்துப் பூமியிலாவது, ஆகாயத்திலாவது, ஜலத்திலாவது எவ்வளவு ஆச்சர்யங்கள் உண்டோ அவையெல்லாம் விச்வரூபனாகிய உன்னிடத்தில் இருக்கின்றன. அத்தகைய உன்னைக் காண்கின்ற நான் என்ன கண்டேன்? உன்னிடத்தில் இல்லாத அற்புதம் ஒன்றையும் நான் காணவில்லை. 

அளவற்ற ஸ்வருப, ஸ்வபாவங்களுடையவனே! எவனிடத்தில் எல்லா அற்புதங்களும் அமைந்திருக்கின்றனவோ, அத்தகைய உன்னைக் கண்ட நான், பூமியிலாவது, ஆகாயத்திலாவது, ஜலத்திலாவது என்ன அற்புதம் கண்டேன்? உன்னையொழிய வேறொரு அற்புதமும் நான் காணவில்லை என்று மொழிந்து, காந்தினியின் புதல்வனாகிய அவ்வக்ரூரன், ரதத்தை ஓட்டிக்கொண்டு சென்று, மாலை வேளையில் ராமனையும், க்ருஷ்ணனையும் மதுரையில் சேர்த்தான். 

மன்னவனே! வழியில் ஆங்காங்கு க்ராமத்து ஜனங்கள் வந்து, ராம க்ருஷ்ணர்களைக் கண்டு, மிகவும் ஸந்தோஷம் அடைந்து, வைத்த கண்ணை வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். அக்ரூரன் ராம க்ருஷ்ணர்களை மதுரையில் கொண்டு சேர்ப்பதற்குள்ளாகவே நந்தன் முதலிய கோபர்கள் உபவனத்தில் சென்று, ஸ்ரீராம க்ருஷ்ணர்கள் வருவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். மஹானுபாவனும், ஜகதீச்வரனுமாகிய ஸ்ரீக்ருஷ்ணன், அவர்களுடன் கலந்து, தன் கையினால் வணக்கமுடைய அக்ரூரனை கையில் பிடித்துப் புன்னகை செய்து கொண்டு, மொழிந்தான்.

ஸ்ரீக்ருஷ்ணன் சொல்லுகிறான்:- நீர் தேரை ஓட்டிக்கொண்டு பட்டணத்திற்குள் நுழைந்து முன்னதாகவே மாளிகைக்குப் போய்ச் சேருவீராக. நாங்கள் இங்கு இறங்கியிருந்து, நாளை உதயத்தில் உங்கள் பட்டணத்தைப் பார்க்க வருகின்றோம்.

அக்ரூரன் சொல்லுகிறான்:- ப்ரபூ! உங்களை விட்டு  நான் தனியே பட்டணத்திற்குள் நுழைய மாட்டேன்,  நாதா! உன் பக்தனாகிய என்னைக் கைவிடலாகாது. நீ பக்தர்களிடத்தில் வாத்ஸல்யம் (கன்றிடம் தாய் பசுவிற்கும், குழந்தையிடம் தாய்க்கும் உள்ள பரிவு, அன்பு, ப்ரீதி) உடையவனல்லவா? ஆகையால், என்னைத் தனியே விடவேண்டாம். இந்த்ரியங்களால் விளையும் அறிவுகளுக்கு எட்டாத பரமனே! நீயும் இப்பொழுதே என்னுடன் புறப்பட்டு வருவாயாக, நாமெல்லோரும் போவோம். தேவச்ரேஷ்டனே! உன் தமையனான பலராமனோடும், கோபாலர்களோடும், நண்பர்களோடும் வந்து நீ எங்கள் க்ருஹத்தை நாதனோடு கூடினதாகச் செய்ய வேண்டும். எந்தப் பாததூளியை அலம்பின ஜலத்தைப் பருகினும், சிரத்தில் தரிப்பினும், எங்கள் பித்ருக்களும், அக்னிகளும், தேவதைகளும் த்ருப்தி அடைகின்றார்களோ, அத்தகைய உன் பாத தூளியால், நீ க்ருஹஸ்தர்களான எங்கள் க்ருஹத்தைப் புனிதம் செய்வாயாக. 

வெள்ளி, 15 ஜனவரி, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 256

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – நாற்பதாவது அத்தியாயம்

(அக்ரூரன் ஸ்ரீக்ருஷ்ணனை ஸ்தோத்ரம் செய்தல்)

அக்ரூரன் சொல்லுகிறான்:- ஸமஸ்த ப்ரபஞ்சத்திற்கும் காரணங்களான மஹத்து முதலிய தத்தவங்களுக்குக் காரணனும், நாராயணனென்று அஸாதாரணமான நாமம் பெற்றவனும், ஆதிபுருஷனும் (தனக்குத் தானே காரணமாகி வேறு காரணமற்றவனும்), விகாரங்களற்றவனுமாகிய (மாறுபாடுகள் இல்லாதவனுமான) உன்னை நமஸ்கரிக்கின்றேன். 

இந்த பிரபஞ்சமெல்லாம் எவனிடத்தினின்று உண்டாயிற்றோ, அப்படிப்பட்ட ப்ரஹ்மதேவன் உன்னுடைய நாபியாகிற தடாகத்தில் முளைத்த தாமரை மொக்கினின்று உண்டானான். (வ்யஷ்டி ஸ்ருஷ்டியை ப்ரஹ்மதேவன் மூலமாகவும், ஸமஷ்டி ஸ்ருஷ்டியை நீயே நேராகவும் நடத்துகின்றாயாகையால் காரணங்களுக்கும் காரணன் நீயேயென்பதில் ஸந்தேஹம் உண்டோ) ஜகத் ஸ்ருஷ்டிக்குக் (உலக படைப்புக்குக்) காரணங்களான பூமி, ஜலம், அக்னி, வாயு, ஆகாசம் ஆகிய பஞ்சபூதங்களும், இவற்றிற்குக் காரணமான அஹங்காரமும், அதற்குக் காரணமான மஹத்தும், அதற்குக் காரணமான மூல ப்ரக்ருதியும், ஸாத்விக அஹங்காரத்தின் கார்யங்களான ஜ்ஞானேந்தரிய, கர்மேந்த்ரியங்களும், மனமும், அவற்றிற்கு அபிமானிகளான தேவதைகளும், அவ்விந்த்ரியங்களின் விஷயங்களான சப்தாதிகளும் ஆகிய இவையெல்லாம் உனக்குச் சரீரங்கள். (நீ மூல ப்ரக்ருதியைச் சரீரமாகக்கொண்டு, மஹத்து முதலிய தத்வங்களைச் சரீரமாகவுடைய நீயாய் விரிகின்றாயாகையாலும், மூலப்ரக்ருதியையும், மஹத்து முதலியவற்றையும் சரீரமாகக் கொண்டு அவற்றை நியமித்துக் கொண்டிருக்கின்றாயாகையாலும், ஜகத்திற்க்கு உபாதான காரணம் (material cause – மண் குடத்திற்கு மண் போல்), நிமித்த காரணம் (efficient cause - மண் குடத்திற்கு குயவன் போல்) ஆகிய இரண்டு காரணங்களும் நீயே.) 

உன் சரீரங்களான மூலப்ரக்ருதி முதலியன ஜடங்களாகையால் (அறிவற்றவையாகையால்)  அந்தராத்மாவான உன்  ஸ்வரூபத்தை அறியாதிருப்பது போல, ஜ்ஞான ஸ்வரூபர்களான ஜீவாத்மாக்களும், உன்னை அறிகிறதில்லை. ஏனென்றால், அவர்கள் ஆத்மாவல்லாத தேஹத்தை (உடலை) ஆத்மாவாகவும், உனக்குப் பரதந்த்ரர்களான (உனது நியமனத்திற்கு உட்பட்ட) தங்களை ஸ்வதந்த்ரர்களாகவும் (தன்னிச்சையாக செயல்படுபவர்களாகவும்) ப்ரமித்து, தேஹத்தைக் காட்டிலும் விலக்ஷணர்களும் (வேறானவர்களும்), உனக்குச் சேஷப்பட்டிருப்பவர்களுமான (உடைமையாய், அடிமையாய் இருப்பவர்களுமான) தங்கள் ஸ்வரூபத்தையே அறிகிறதில்லை. இனி, உன்னை எவ்வாறு அறியப்போகிறார்கள்? 

ப்ரஹ்மதேவனும்கூடத் தன் சரீரத்திற்குக் காரணங்களான ஸத்வ, ரஜஸ், தமோ குணங்களால் தொடரப்பட்டு, ப்ரக்ருதியின் குணங்களான ஸத்வ, ரஜஸ், தமஸ்ஸுக்களைக் காட்டிலும் விலக்ஷணனும் (வேறானவனும்), அவற்றிற்கு நியாமகனுமாகிய (நியமிப்பவனுமான) உன் ஸ்வரூபத்தை அறிகிறதில்லை. மற்ற ஜீவாத்மாக்கள் எவ்வாறு அறிவார்கள்? (ஆனால், ஒருவரும் அறியார்களாயின், பரமாத்ம ஸ்வரூபம் முயல்கொம்போடு (இல்லாத ஒன்று) ஒத்ததேயாகுமென்று சங்கிக்க (ஸந்தேஹப்பட) வேண்டாம். தேஹாத்மாபிமானம் (இந்த உடலே ஆத்மா என்கிற மனக்கலக்கம்) முதலிய அவிவேகமுடையவர்களின் (பகுத்தறிவு அற்றவர்களின்) கட்கண்ணுக்கு (புறக்கண்ணுக்கு) அறியக் கூடாதவனாயினும், யோகத்தினால் பரிசுத்தமான மனமுடையவர்களுக்கு அறியத்தகுந்தவனே.) சில யோகிகள், மஹா புருஷனும், ஸர்வேச்வரனுமாகிய உன்னையே நேரில் உபாஸிக்கிறார்கள். சில ஸாதுக்கள், ஸூர்யன், இந்த்ரன் முதலிய தேவதைகளுக்கு அந்தராத்மாவான உன்னையும், சிலர் தங்கள் சரீரங்களின் அவயவங்களான (உருப்புக்களான) கண், ஹ்ருதயம் முதலிய இடங்களில் இருக்கின்ற உன்னையும், சிலர் ஸமஸ்த பூதங்களிலும் அந்தராத்மாவாயிருக்கின்ற உன்னையும் உபாஸிக்கின்றார்கள். 

யாகாதி கர்மங்களில் மன விருப்பமுற்ற சில அந்தணர்கள், உன் சரீரங்களான இந்திரன் முதலிய பற்பல தேவதைகளின் நாமங்களையுடைய வேதத்தின் பூர்வ பாகமாகிற வித்யையினால் அறிவிக்கப்பட்ட பல யாகங்களால், அந்தத் தேவதைகளுக்கு அந்தராத்மாவாகி அவர்களைச் சரீரமாகவுடைய உன்னை ஆராதிக்கின்றார்கள். 

வியாழன், 14 ஜனவரி, 2021

ஶ்ரீமன் நாதமுனிகளும் நாலாயிர திவ்ய பிரபந்தமும் - திருப்பதி மா.வரதராஜன்

ஸ்ரீய பதியான ஸர்வேச்வரன் உலக மக்கள் உய்யும் வகை அறிய ஓடி ஓடி பல அவதாரங்கள் எடுத்தும் திருந்தாமையாலே, மானைக் கொண்டு மானைப் பிடிப்பாரைப் போலே, உலக மக்கள் உய்யும் வகை செய்ய வேதப் பயன் கொள்ளவல்ல ஆழ்வார்களையும் ஆசார்யர்களையும் அவதரிக்கச் செய்தான்.


வேதாந்த விழுப்பொருளின் மேலிருந்த விளக்கான சர்வேச்வரனை அடைவதற்காக ஆழ்வார்கள் திவ்யப் பிரபந்தங்களை அருளிச் செய்தார்கள். சுமார் கி. பி. 9-ம் நூற்றாண்டில் தான் இத்திவ்யப் பிரபந்தத்திற்குப் புத்துணர்ச்சி ஏற்பட்டது. இப்புத்துணர்ச்சிக்குக் காரணமானவர் ஆசார்யர்களில் முதல்வரான ஸ்ரீமன் நாதமுனிகள் என்னும் மகாபுருஷர். நாவீறு படைத்த இவ்வந்தணரின் அளவிலாப் பரிவும், பக்தியும், இடையறா முயற்சியும், இத்திவ்யப் பிரபந்தம் வையமறிய வாய்ப்பைத் தந்தது. ஸ்ரீமன் நாதமுனிகள் அவதாரம், நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் சீர்மையை இன்று நாம் அனுபவிக்கக் காரணமாயிற்று. அவ்வாறு நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைப் பேணிக் காத்து, இயலும் இசையும் தொடுத்து முதலாயிரம், பெரிய திருமொழி, இயற்பா, திருவாய்மொழி என்று வரிசைப்படுத்தி அருளின நாதமுனிகளின் அவதாரச் சிறப்பையும், இப் பிரபந்தத்தில் அவருக்கு உள்ள ஈடு பாட்டையும் கீழ் அறிவோமாக.


சுமார் கி. பி. 9-ம் நூற்றாண்டில், அதாவது, முதல் பராந்தகச்சோழன் ஆட்சி காலத்தில், ஆனி மாதம், அனுஷ நட்சத்திரத்தில் வீரநாராயணபுரம் (இப்போது காட்டு மன்னார் கோவில் என்று அழைக்கப்பெறுவது) என்ற கிராமத்தில் ஈச்வரபட்டருக்கு அவதரித்தவர் நாதமுனிகள். இவருக்குத் திருத்தகப்பனார் இட்ட திருநாமம் ஸ்ரீரங்கநாதன் என்பது. வீரநாராயணபுரத்தின் எம்பெருமானின் இசைவின்படி, அவ்வூரில் உள்ள மன்னனாருக்குக் கைங்கர்யம் செய்து வந்தார்.

ஶ்ரீமத் பாகவதம் - 255

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – முப்பத்தொன்பதாவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ணன், அக்ரூரனால்  கம்சனுடைய அபிப்பிராயம் அறிந்து மதுரைக்குப் புறப்படுவதைக் கண்டு கோபிகைகள் வருந்துவதும், நடுவழியில் யமுனையில் ஸ்னானம் செய்கின்ற அக்ரூரனுக்கு ஸ்ரீக்ருஷ்ணன் தன் திவ்யமங்கல விக்ரஹத்தைக் காட்டுதலும்) 

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அக்ரூரன், ராம க்ருஷ்ணர்களால் மிகவும் வெகுமதிக்கப்பட்டு, படுக்கையில் ஸுகமாக உட்கார்ந்து, வழியில் தான் விரும்பின விருப்பங்களையெல்லாம் பெற்றான். ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு வாஸஸ்தானமாயிருப்பவனும், ஷாட்குண்ய பூர்ணனுமாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) பரமபுருஷன், அருள் புரிவானாயின் எதுதான் கிடைக்க அரிது? எதுவும் அரிதன்று. மன்னவனே! ஆயினும், அவனுடைய பக்தர்கள் எதையும் விரும்ப மாட்டார்கள். அப்பொழுது, மஹானுபாவனாகிய தேவகியின் புதல்வன், ஸாயங்கால போஜனம் செய்து, தன் அன்பர்களான வஸுதேவாதிகளிடத்தில் கம்ஸன் இருக்கும் நிலையையும், அவன் செய்ய நினைத்திருப்பதையும் வினவினான்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- அப்பா! நல்லியற்கையுடையவரே! வந்தீரா? உமக்கு நல்வரவாகுக! உங்களுக்கு க்ஷேமம் உண்டாகுக. நம்முடைய ஜ்ஞாதிகளும் (பங்காளிகளும்), பந்துக்களும் ஒரு கெடுதியுமின்றி ஆரோக்யத்துடன் க்ஷேமமாயிருக்கின்றார்களா? மாமனென்னும் பெயர்பூண்டு, நம் குலத்திற்கு வியாதி போன்ற கம்ஸன் வளர்ந்து கொண்டிருக்கையில், நம் பந்துக்களுக்கும், அவர்களுடைய ப்ரஜைகளுக்கும் என்னவென்று க்ஷேமம் விசாரிப்பேன்? க்ஷேமமாவென்று நான் கேட்பதும் கூட அழகன்று. பூஜிக்கத்தக்கவர்களும், நிரபராதிகளுமாகிய தாய், தந்தைகளுக்கு எங்கள் நிமித்தமாக பெருந்துக்கம் உண்டாயிற்று. எங்களைப் பற்றியல்லவோ எங்களுக்கு முன் தோன்றல்களான பிள்ளைகள் அனைவரும் மரணம் அடைந்தார்கள்? எங்களை பற்றியல்லவோ அவர்கள் சிறையில் அடைப்புண்டார்கள்? அது கிடக்கட்டும். நல்லியற்கையுடையவரே! எங்களுக்கு மிகுந்த பந்துவாகிய உம்மைப் பார்க்கவேண்டுமென்று நெடுங்காலமாய் விரும்பிக் கொண்டிருந்தேன். அது இப்பொழுது நேரிட்டது. இது எங்களுக்கு மிகவும் ஆனந்தத்திற்கு இடமாயிருக்கின்றது. அண்ணா! நீர் வந்த காரணத்தைச் சொல்லுவீராக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு பகவானால் வினவப்பெற்ற மது வம்ச அலங்காரனாகிய அவ்வக்ரூரன், கம்ஸன் யாதவர்களிடத்தில் வைரம் (பகைமை) மாறாமல் தொடர்ந்து வருவது, அவன் வஸுதேவனை வதிக்க வேண்டுமென்று முயன்றிருப்பது, முதலிய எல்லாவற்றையும் விஸ்தாரமாகச் (விவரமாகச்) சொன்னான். கம்ஸன் தனுர் யாகமென்னும் வ்யாஜத்தைச் (சாக்கைச்) சொல்லி அழைத்துக்கொண்டு வரச் சொன்னதையும், அவன் தன்னை எதற்காகத் தூதனுப்பினானோ அதையும், வஸுதேவனிடத்தினின்று ஸ்ரீக்ருஷ்ணன் பிறந்ததைப் பற்றி நாரதர் கம்ஸனுக்குச் சொன்ன விவரத்தையும் சொன்னான். சத்ரு (எதிரி) வீரர்களை அழிக்கும் திறமையுடைய ஸ்ரீக்ருஷ்ணன் பலராமன் இவ்விருவரும் அக்ரூரன் சொன்ன செய்தியைக் கேட்டுச் சிரித்து, தந்தையாகிய நந்தகோபனைக்  குறித்து ராஜாவான கம்ஸன் கட்டளையிட்டதையெல்லாம் விண்ணப்பம் செய்தார்கள். அந்த நந்தகோபனும், கோகுலத்திலுள்ள கோபர்களுக்கெல்லாம் மேல்வருமாறு ஆஜ்ஞாபித்தான் (கட்டளை இட்டான்). “பால், தயிர் முதலியவற்றையெல்லாம் சேர்த்து எடுத்துக் கொள்ளுங்கள். மேலான வஸ்துக்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். வண்டிகளில் எருதுகளைப் பூட்டி, ஸித்தப்படுத்துங்கள். நாளைய தினம் எல்லாரும் மதுரைக்குப் போகவேண்டும். ராஜனாகிய கம்ஸனுக்குப் பால், தயிர், நெய் முதலியவற்றைக் கொடுக்க வேண்டும். அந்த மதுராபுரியில், தனுர் யாகம் நடக்கிறதாம்; அதையும் பார்க்கலாகும். நாட்டுப்புறத்து ஜனங்கள் பலரும் அவ்விடம் போகிறார்களாம் (அவர்களையும் பார்க்கலாம்). இவ்வாறு நந்தகோபன் தன் கோகுலத்தில் முழுவதும் ஸூதனைக் (காவல் அதிகாரியைக்) கொண்டு கோஷமிடுவித்தான்.” 

புதன், 13 ஜனவரி, 2021

திருப்பாவை - 30 - கோமான் ஶ்ரீ பாலாஜி

முப்பதாவது பாசுரம்

(இப்பாசுரம் திருப்பாவையின் இறுதிப் பாசுரம். இத்திருப்பாவையை கற்பாருக்கும் கேட்பாருக்கும் ஏன் எல்லாருக்கும் கிடைக்கக்கூடிய பலனை சொல்லும் பாசுரம். சென்ற பாசுரத்தில் பறை என்பதன் அர்த்தத்தை சொன்ன ஆண்டாள், அப்பறையை அடைவதன் மூலம் நமக்குக் கிடைக்கக்கூடிய பாக்யத்தை பலனை இப்பாசுரத்தில் சொல்கிறாள்.)


கண்ணன் ஆண்டாளை மிக மகிழ்ச்சியுடன் பார்த்து இவ்வாறு கேட்க ஆரம்பிக்கிறான்.


“ஆண்டாள், வெகு பிரமாதம் இப்பாவை நோன்பு. என்னிடம் ‘மற்றை நம் காமங்கள் மாற்று’ என்கிறாய். நான் காமங்களுக்கு அப்பாற்ப்பட்டவன் தானே. எதற்கு ‘நம்’ என்று என்னையும் சேர்த்தாய்.”


“ஐயனே, காமம் என்பது வெறும் ஆசையைத் தூண்டி சிற்றின்பத்தை அடைவது மட்டுமல்ல. ஒரு தாய்க்கு தன் குழந்தையின் மேல் வருவது அக்கறை காமம். ஒரு செல்வந்தனுக்கு பணத்தின் மேல் வருவது பேராசை காமம். ஒரு கட்டிளம் காளைக்கு வீரத்தின் மேல் காமம். ஒரு மன்னனுக்கு நாட்டு மக்கள் மேல் கொண்ட பாதுகாப்பு காமம். இப்படி எண்ணற்ற காமங்கள் உண்டு கண்ணா. உனக்கு மட்டும் இல்லையா என்ன, எங்களைப்போன்ற பக்தர்களை பாதுகாத்து அவனுக்கு மோட்சத்தை அளிக்க வேண்டுமே என்ற ‘பரிவு’ ஒரு காமம்தானே கண்ணா. அதனால் தான் நம் காமங்கள் என்றேன். தவறா கண்ணா, மாதவா.


“ஆண்டாள் உன்னை ‘சொல்லின் செல்வி’ என்றே அழைக்கலாம். சரி உன்னிடம் ஒரு கேள்வி என்னுடைய மற்ற எல்லா அவதாரங்களையும் பாடியுள்ளாய், ஆனால் கூர்ம அவதாரம் பாடினாயோ.”


“கண்ணா, அடுத்தப் பாசுத்திற்கு நீயே எடுத்துக் கொடுத்துவிட்டாய். ‘வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை’...


ஆண்டாளின் தோழிக்கு மறுபடியும் சந்தேகம் வந்துவிட்டது.


“கோதே, நம் மாதவன் கடல் கடைந்தாரா, தேவாசுரர்கள் தானே கடைந்தார்கள் அமிர்தத்திற்காக.”

ஶ்ரீமத் பாகவதம் - 254

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – முப்பத்தெட்டாவது அத்தியாயம்

(அக்ரூரன் நந்தகோகுலம் போகும்பொழுது வழியில் ஸ்ரீ க்ருஷ்ணானுபவத்தைப் பற்றி மனோரதித்தலும், ஸ்ரீக்ருஷ்ணன் அக்ரூரனை ஸத்கரித்தலும்.)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பகவானிடத்தில் ஆழ்ந்த மதியுடைய அக்ரூரனும், அன்றைய தினம், இரவு மதுரையில் இருந்து, மற்றை நாள் விடியற்காலையில் ரதத்தில் ஏறிக்கொண்டு, நந்த கோகுலத்திற்குப் போனான். மிகுந்த பாக்யமுடைய அவ்வக்ரூரன், பகவானிடத்தில் மிகுந்த பக்தி உண்டாகப்பெற்று,  வழியில் போய்க் கொண்டே, இவ்வாறு சிந்தித்தான். “நான் என்ன மங்கல கார்யம் செய்தேனோ? மேம்பட்ட தவம் என்ன செய்தேனோ?” ஸத்பாத்ரமான (தானம் பெறுவதற்கு  தகுதி உடைய சிறந்த) புருஷனுக்கு என்ன தானம் செய்தேனோ? ஏனென்றால், இப்பொழுது  நான் கேசவனைப் பார்க்கப் போகிறேனல்லவா? இல்லாத பக்ஷத்தில், இது எனக்கு எப்படி நேரும்? கீழ் ஜாதியில் பிறந்தவனுக்கு வேதம் சொல்லுவது எவ்வாறு கிடைக்க அரிதோ, அவ்வாறே சப்தாதி விஷயங்களில் சுழித்த (ஆழ்ந்து ஈடுபட்ட) மனமுடைய எனக்கு, உத்தம ச்லோகனான பகவானுடைய இத்தகைய தர்சனம் கிடைப்பது அரிதே. 

ப்ரஹ்மாதி தேவதைகளும்கூட அவனை வெறுமனே புகழ்ந்து மனத்தினால் சிந்திக்க வேண்டுமேயன்றி காணமாட்டார்கள். அத்தகைய பரமபுருஷனுடைய தர்சனம் எனக்கு எவ்வாறு கிடைக்கும்? அல்லது இப்படி அன்று. நீசனாகிய (தாழ்ந்தவனாகிய) எனக்கும்கூட அச்சுதனுடைய தர்சனம் கிடைக்கும். ஏனென்றால், ஆற்று வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போகின்ற புல் முதலியவற்றில் ஒன்று ஒருகால் கரையேறுவதும் உண்டல்லவா? அவ்வாறே கர்ம வசத்தினால் காலமாகிற ஆற்று வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போகிற ஜீவாத்மாக்களுக்குள் ஒருவன், ஒருகால் கரையேறக்கூடும். இப்பொழுது, என்னுடைய அமங்கலமெல்லாம் (தீமைகள் எல்லாம்) பறந்து போயிற்று. இப்பொழுது, என்னுடைய ஜன்மமும் ஸபலமாயிற்று. ஏனென்றால், யோகிகளுக்கும் கூட த்யானிக்கக்கூடியதேயன்றிக் காணக்கூடாததான பகவானுடைய அடித்தாமரையை, நான் வணங்கப் போகிறேனல்லவா? 

கம்ஸன் இப்பொழுது எனக்கு மிகவும் மேம்பட்ட அனுக்ரஹம் செய்தான். ஆ! என்ன ஆச்சர்யம்! நான் அவனால் அனுப்பப்பட்டு, ஸ்ரீக்ருஷ்ணனுடைய பாதார விந்தத்தைப் பார்க்கப்போகிறேனல்லவா! முன்புள்ள பெரியோர்கள், பூமியில் மானிட உருவம் பூண்டு, அவதரித்த இந்தப் பகவானுடைய பாதாரவிதங்களின் நக மண்டலங்களுடைய (நகங்களின்) காந்தியினால் எவ்விதத்திலும் கடக்க முடியாத பாபமாகிற அந்தகாரத்தைக் கடந்தார்கள். (இப்பகவானுடைய பாதங்களை த்யானித்த மாத்ரத்தில், பெரியோர்கள் பாபங்களைக் கடந்தார்களென்றால், அப்பகவானுடைய பாதார விந்தங்களை நேரில் காணப் போகிற என்னுடைய பாபங்கள் தொலைந்தன என்பதில் ஸந்தேஹம் உண்டோ?) ப்ரஹ்ம தேவன், ருத்ரன் முதலிய தேவதைகள், ஸ்ரீமஹாலக்ஷ்மி, பக்தர்கள், முனிவர்கள் இவர்களால் பூஜிக்கப்பட்டதும், அனுசரர்களான (உடன்  பின் செல்பவர்களான, நண்பர்களான) கோபாலர்களுடன் பசு மேய்க்கும் பொருட்டு வனத்தில் ஸஞ்சரிப்பதும், கோபிகைகளின் கொங்கைகளிலுள்ள குங்குமக் குழம்புகளால் அடையாளம் செய்யப்பட்டதுமாகிய ஸ்ரீக்ருஷ்ணனுடைய பாதாரவிந்தத்தை, நான் காணப்போகிறேன். 

செவ்வாய், 12 ஜனவரி, 2021

திருப்பாவை - 29 - கோமான் ஶ்ரீ பாலாஜி

இருபத்தி ஒன்பதாவது பாசுரம்

(இப்பாசுரம் கிட்டத்தட்ட இறுதிப் பாசுரம் போலவேத் தோன்றும். ஆண்டாள் இதுகாறும் கண்ணனிடம் பாவை நோன்பு நோற்றதின் நோக்கம், கிடைக்க வேண்டியவை, கிடைத்தவை எல்லாம் பட்டியலிட்டாள். இப்பாசுரத்தில் அதன் முழுப்பயனைத் தெரிவிக்கிறாள். வாருங்கள் பாசுரத்திற்கு செல்வோம்.)


கண்ணன் ஆண்டாளைப் பார்த்து ஒரு சின்ன புன்னகை செய்து கேட்க ஆரம்பித்தான்.


“ஆண்டாள், பசுக்களோடு வாழ்க்கை, அறிவு ஏதும் இல்லை என்று தெரிவித்தாய். வேறு ஏதேனும் பாக்கி இருக்கிறதா.”


“கண்ணா, தங்களை சந்தித்ததும் என் நோன்பின் முழுப்பயனையும் அடைந்தேன். இருப்பினும் முக்கியமான ஒன்று உள்ளது. கூறுகிறேன் கேளாய். ‘சிற்றஞ் சிறுகாலே வந்துன்னை சேவித்து'...


ஆண்டாளின் தோழிக்கு வழக்கம்போல் சந்தேகம்.


“கோதே, ‘சிற்றஞ்சிறுகாலே’ என்றால் சின்னஞ்சிறிய கால் என்றா அர்த்தம்.”


“பாவாய், ‘காலே’ என்றால் கால்களை குறிக்கவில்லை. பொழுதினைக் குறிக்கிறேன். காலை, சிறுகாலை, சின்னஞ்சிறுகாலை என்று காலையையே வகைப்படுத்தி பார்க்கிறேன். அதிகாலை நேரத்தில் நீராடிவிட்டு நம் கண்ணனை சேவித்து…”


“கோதே, சேவித்து என்றால்…”


“பாவாய், சேவித்து என்பது வணங்குதல் என்ற அர்த்தத்தில் வழங்கப்படும் வார்த்தையடி. நாம் சிற்றஞ்சிறுகாலே நம் கண்ணனை சேவித்து அவனின் பொற்றாமரையடியே போற்றுவோம்.”


“கோதே, ‘பொற்றாமரையடி’ என்றாலே போதும் ‘பொற்றாமரையடியே’ என்று ஏன் ஏகாரத்துடன் விளித்துப் பாட வேண்டும்.”

திங்கள், 11 ஜனவரி, 2021

திருப்பாவை - 28 - கோமான் ஶ்ரீ பாலாஜி

இருபத்தி எட்டாவது பாசுரம்

(ஆண்டாள் சென்ற பாசுரத்தில் ‘கோவிந்தா’ என்று அழைத்தாள். இப்பாசுரத்திலும் அடுத்து வரும் பாசுரத்திலும் ‘கோவிந்த நாமம்’ தான். எப்பேற்ப்பட்ட நாமம் அது. நாமிருப்பதோ இப்பூவுலகில் அதை காப்பவன் கோவிந்தன். கண்ணன் என்னவெல்லாம் செய்வீர்கள் என்றதும் ஒரு பெரிய பட்டியலேப் போட்டாள் ஆண்டாள். அதைக் கேட்டதும் கண்ணன் அவர்களின் நிலை மற்றும் அவர்களின் செயல்கள் பற்றி அறிய ஆசைப்பட்டான். இதனை அறிந்த ஆண்டாள் இப்பாசுரத்தில் தாங்கள் யார் என்ன செய்கிறோம் என்பதை அறிவிக்கிறாள்.)


கண்ணன் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு ஆண்டாளை ஒரு புன்னகையுடன் ஒரு பார்வை வீசிவிட்டு,


“ஆண்டாள் இவ்வளவு பெரிய பட்டியலைப் போடுகின்றாயே. மேலும் நிறைய விஷயங்கள் எல்லோரைக் காட்டிலும் தெளிவாகப் பேசுகின்றாய். நீ எங்கிருந்து வருகிறாய், என்னவெல்லாம் செய்கிறாய்.”


“கண்ணா, நாங்கள் ஆயர்க்குலச் சிறுமிகள். நாங்கள் பிறந்தது முதல் பசுக்களோடே எங்கள் வாழ்க்கை. அவைகளோடு கானகம் செல்வோம் அங்கிருக்கும் கனிகளை உண்டு பசுக்களுக்கும் தருவோம். எங்களுக்கு அவ்வளவு பெரிய அறிவில்லை, ஞானமுமில்லை. நாங்கள் எத்தனையோ ஆண்டுகள் செய்த தவப்பயன் விளைவாய் நீ எங்கள் குலத்தினில் பிறந்திட்டாய். பெரும் புன்னியம் செய்தோம். ‘குறை ஒன்றுமில்லாத கோவிந்தா…..’


“கோதே, இவ்வளவு நேரம் நீ சொன்னவை நம்மைப் பற்றி இருந்தது. திடீரென்று குறை ஒன்றுமில்லாத கோவிந்தா என்கின்றாயே. குறை கோவிந்தனுக்கா, நமக்கா.”


“பாவாய், என்ன தவறு செய்கிறாய். குறை கோவிந்தனுக்கா. அவனோடு சேர்ந்ததால் நமக்கு என்றும் குறையில்லை. அவனது நாமத்துக்கே குறைவில்லை.”


கண்ணன் குறுக்கிட்டு…