தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – ஐம்பத்தொன்றாவது அத்தியாயம்
(ஸ்ரீக்ருஷ்ணன் காலயவனனை முசுகுந்தனுடைய திருஷ்டியால் (பார்வையால்) தஹிப்பித்தலும் (எரித்தலும்), முசுகுந்தன் ஸ்ரீக்ருஷ்ணனைத் துதித்தலும், ஸ்ரீக்ருஷ்ணன் முசுகுந்தனுக்கு வரம் கொடுத்தலும்)
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அப்பொழுது, உயர்கின்ற சந்த்ரன் போல் பார்க்கப் பதினாயிரம் கண்கள் வேண்டும்படி அழகியனும், கறுத்துப் பொன்னிறமுள்ள பட்டு வஸ்த்ரம் தரித்து, மார்பில் ஸ்ரீவத்ஸமென்னும் அடையாளம் அமைந்து, கழுத்தில் திகழ்கின்ற கௌஸ்துப மணியை அணிந்து, திரண்டு உருண்டு நீண்ட நான்கு பாஹு தண்டங்களும் (கைகளும்), அப்போதலர்ந்த செந்தாமரை மலர்போல் சிவந்தழகிய திருக்கண்களும், என்றும் ஸந்தோஷமுற்று அளவற்ற ஸௌந்தர்யமும், அழகிய கபோலங்களும் (கன்னங்களும்) பரிசுத்தமான புன்னகையும், திகழ்கின்ற மகரகுண்டலங்களும் அமைந்த முகாரவிந்தமும் (திருமுகத் தாமரையும்) விளங்கப்பெற்று மிகவும் விளங்குகின்ற அந்த ஸ்ரீக்ருஷ்ணன், பட்டணத்து வாசலினின்று வெளிக் கிளம்பி வருவதைக் கண்டு காலயவனன், நாரதரிடத்தில் ஸ்ரீக்ருஷ்ணன் இத்தகைய அடையாளங்களுடையவன் என்று கேட்டிருப்பவனாகையால், “ஸ்ரீவத்ஸமென்னும் அடையாளமுடையவனும், நான்கு புஜ தண்டங்கள் (கைகள்) உடையவனும், செந்தாமரைக்கண்ணனும், வனமாலை அணிந்தவனும், பேரழகனுமாகிய இப்புருஷன் வாஸுதேவனேயாக வேண்டும். நாரதர் சொன்ன லக்ஷணங்களெல்லாம் இவனிடத்தில் அமைந்திருக்கின்றன. ஆகையால், இவன் மற்றொருவனுமல்லன். இவன் ஆயுதமில்லாதிருக்கின்றனன். இவனோடு நான் காலால் நடந்து கொண்டு, ஆயுதமில்லாமலே யுத்தம் செய்யவேண்டும்” என்று நிச்சயித்துக்கொண்டு, அம்மஹானுபாவன் தன்னை எதிர்க்காமல் பராங்முகனாய் (முகத்தைத் திருப்பிக்கொண்டு வேறு திசையில்) ஓடக் கண்டு, யோகிகளுக்கும் கூட எட்டாத அப்பரம புருஷனைப் பிடிக்க முயன்று, பின் தொடர்ந்தோடினான்.
ஸ்ரீக்ருஷ்ணன், அடிகள் தோறும் தன்னைக் கையில் அகப்படுகிறவன் போல் காட்டிக் கொண்டே, அந்த யவனனை வெகுதூரம் இழுத்துக் கொண்டு போய், பர்வத குஹையில் சேர்த்தான். “நீ யது குலத்தில் பிறந்தவன். நீ பலாயனம் செய்வது (போரில் பின் வாங்குவது) யுக்தமன்று (ஸரியன்று)” என்று பழித்துக்கொண்டே அந்த யவனன், வேகமாகத் தொடர்ந்து சென்றும், பாபங்கள் தொலையப் பெறாதவனாகையால், இவனைப் பெறவில்லை. மஹானுபாவனாகிய ஸ்ரீக்ருஷ்ணனோவென்றால், இவ்வாறு பழிக்கப் பெற்றும், பேசாமல் பர்வத குஹையில் நுழைந்தான். அக்காலயவனனும், அந்தப் பர்வத குஹையில் நுழைந்து, அங்கு வேறொரு மனுஷ்யன் படுத்திருக்கக் கண்டான். அவன், “வாஸுதேவன் என்னை இவ்வளவு தூரம் இழுத்துக்கொண்டு வந்துவிட்டு, இப்பொழுது ஸாதுவைப்போல் பேசாமல் படுத்திருக்கிறான். நிச்சயம். இவன் க்ருஷ்ணனே” என்று, மூடனாகையால், அம்மனிதனை ஸ்ரீக்ருஷ்ணனாகவே நினைத்து, அவனைப் பாதத்தினால் உதைத்தான். நெடுநாளாய்த் தூங்கிக்கொண்டிருக்கிற அப்புருஷன் எழுந்து, மெல்ல மெல்லக் கண்களை விழித்து, திசைகளையெல்லாம் பார்த்துக் கொண்டு, வந்து பக்கத்திலிருக்கின்ற அந்த யவனனைக் கண்டான்.
பரத வம்சாலங்காரனே! அந்த யவனன், கோபமுற்றிருக்கிற அப்புருஷனுடைய கண் பட்ட மாத்ரத்தில் பற்றி எரிகின்ற, தன் தேஹத்தினின்று (உடலிலிருந்து) உண்டான அக்னியால் தஹிக்கப்பட்டு (எரிக்கப்பட்டு), அந்த க்ஷணமே பஸ்மமானான் (சாம்பலானான்).
பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- ப்ரஹ்மர்ஷீ! யவனனைக் கொன்ற அப்புருஷன் யாவன்? யாருடைய வம்சத்தில் பிறந்தவன்? எத்தகைய வீர்யமுடையவன்? அவன் எந்தக் காரணத்தினால் குஹைக்குள் சென்று படுத்திருந்தான்? அவனுடைய தேஜஸ்ஸு (ஆற்றல்) எத்தகையது?