ஏழாவது ஸ்கந்தம் - பதிமூன்றாவது அத்தியாயம்
(ஸன்யாஸியின் தர்மங்களையும், ப்ரஹ்லாதனுக்கும் – அஜகர வ்ரதத்திலிருந்த (மலைப்பாம்பைப் போன்று கிடைத்ததைக் கொண்டு ஜீவிக்கும் வாழ்க்கை முறையைப் பின்பற்றும்) முனிவருக்கும் நேர்ந்த ஸம்வாதத்தையும் கூறுதல்)
ஸ்ரீநாரதர் சொல்லுகிறார்:- வானப்ரஸ்தன், தனக்கு ஏற்பட்ட நியமங்களை அனுஷ்டித்தபின்பு, வேறு ஆச்ரம தர்மங்களை அனுஷ்டிக்க வல்லனாயிருப்பானாயின், இவ்வாறு அனுஸந்தித்துத் தேஹத்தை மாத்ரம் மிகுத்திக் கொண்டு, தேஹத்தைத் தொடர்ந்த மற்ற எல்லாவற்றையும் துறந்து, ஸன்யாஸ ஆச்ரமத்தைக் கைப்பற்றி, ஒரு க்ராமத்தில் ஒருநாளுக்கு மேல் தங்காமல், எதிலும் விருப்பின்றி, பூமியில் ஸஞ்சரிக்க வேண்டும். இந்த ஸன்யாஸி, துறக்கப்பட்டவைகளில் எதையேனுமொன்றைக் கைப்பற்றுவானாயின், கௌபீனம் (கோவணம்), அரையிலுடுக்கும் வஸ்த்ரம் (இடுப்பில் உடுத்திக்கொள்ளும் துணி) இவற்றை மாத்ரமே கைப்பற்றலாம். ஆபத்தில்லாத ஸமயத்தில், த்ரிதண்டம், கமண்டலு, உபவீதம், அரை ஞாண் இவை தவிர மற்ற எதையும் கைப்பற்றலாகாது. குளிர், காற்று முதலியவற்றைப் பொறுக்க முடியாத ஆபத்காலத்தில், போர்வை முதலியவற்றை மாத்ரமே அங்கீகரிக்கலாம். எங்கும் நியதமாக வாசம் செய்யாமல் பிக்ஷையெடுத்து (பிச்சை எடுத்து) ஜீவித்துக்கொண்டு ஆத்ம அனுபவத்தினால் (தனது ஆத்மா மற்றும் பரமாத்ம த்யானத்தினால்) ஸந்தோஷமுற்றுத் தனியனாகவே திரிய வேண்டும். ஸமஸ்த பூதங்களுக்கும் நண்பனாகி, கோபமின்றி, ஸ்ரீமந் நாராயணனே ப்ராப்யனும் (அடையப்பட வேண்டியவனும்), ப்ராபகனும் (அடைவதற்கு வழியும்), ஆதாரமும் (காப்பவனும்) என்னும் மனவுறுதியுற்று, சேதனா சேதனங்களைக் காட்டிலும் விலக்ஷணனும் (வேறானவனும்), ஸ்வரூபத்தினாலும், ஸ்வபாவத்தினாலும் விகாரமற்றவனுமாகிய (மாறுபாடு இல்லாதவனும்), பரமாத்மாவினிடத்தில் இந்த ஜகத்தெல்லாம் இருப்பதாகவும், பரப்ரஹ்மமென்று ஓதப்படுகிற அந்த பரமாத்மா சேதனா சேதன ரூபமான இந்த ஜகத்தில் எங்கும் அந்தராத்மாவாய் இருப்பதாகவும் பாவிக்க வேண்டும். காலை, மாலைகளில் தேஹத்தைக்காட்டிலும் வேறுபட்ட ஆத்மஸ்வரூபத்தை உணர்ந்த ஸன்யாஸி, பரமாத்ம ஸ்வரூபத்தை ஆராயவேண்டும். ஸ்வப்ன அவஸ்தையில் (கனவு நிலையில்), தேஹத்தைக் காட்டிலும் விலக்ஷணனான (வேறானவனான) ஆத்மாவின் தோற்றத்தை ஆராய்ந்து, அப்பொழுது பகவானே விசித்ரமான மார்க்கங்களையும், தங்களையும் மற்றும் பலவகையான வஸ்துக்களையும் படைத்து, அனுபவிப்பிக்கிறான் என்பதையும் ஆராய்ந்தறிய வேண்டும். ஸம்ஸார பந்த, மோக்ஷங்கள் பகவானுடைய ஸங்கல்பத்தினால் ஏற்படுகின்றவைகளேயன்றி, அவை ஜீவனுக்கு இயற்கையிலே ஏற்பட்டவை அன்றென்றும் அனுஸந்திக்க வேண்டும். ஸம்ஸாரிகள், தப்பாமல் நேர வேண்டிய மரணத்தை எவ்வாறு விரும்பமாட்டார்களோ, அவ்வாறே ஸன்யாஸி நிலையற்றதான ஜீவிதத்தை அபிநந்திக்கலாகாது (விரும்பி மகிழ்ச்சி அடையக்கூடாது). ப்ராணிகளின் உத்பத்தி, விநாசங்களுக்குக் (அழிவுக்குக்) காரணமான காலத்தின் கதியையே எதிர்பார்க்கவேண்டும். கள்ளப் பொய் நூல்களில் (தவறான விஷயங்களைக் கூறும் புத்தகங்களில்) மனம் செலுத்தலாகாது. ஜீவனோபாயமாக எந்த வ்ருத்தியையும் அங்கீகரிக்கலாகாது. ஜல்பம் (இருவர் வாதம் செய்யும் போது, ஒவ்வொருவனும் தன் பக்ஷத்திற்கு ஸாதகமானவற்றையும், எதிரி பக்ஷத்தில் தோஷங்களையும் சொல்லி, வெற்றி அடைய வேண்டும் என்று செய்யப்படும் வாதம் ஜல்பம் எனப்படும்), விதண்டை (தன் பக்ஷத்தை ஸ்தாபிக்காமல், எதிரி பக்ஷத்தைக் கண்டனம் மாத்ரம் செய்யும் வாதத்திற்கு விதண்டை என்று பெயர்) முதலியவற்றிற்கிடமான தர்க்கங்களைத் துறக்க வேண்டும். ஆக்ரஹத்துடன் (பிடிவாதத்துடன்) ஒரு பக்ஷத்தையும் மனத்தில் ஏற்றுக் கொள்ளலாகாது. க்யாதி, லாபாதிகளை (புகழ், ப்ரயோஜனம் முதலியவற்றை) விரும்பி சிஷ்யர்களைச் சேர்த்துக் கொள்ளலாகாது. பல க்ரந்தங்களைப் படிக்கலாகாது. பிறர்க்குப் படிப்பிக்கையும் கூடாது. மடாதிபதியாயிருக்கை முதலிய ஆரம்பங்களைச் செய்யலாகாது. வெளியிந்திரியங்களையும், உள்ளிந்திரியத்தையும் அடக்கிக் கொண்டிருக்க வேண்டும். ஸன்யாஸாச்ரமம் பெரும்பாலும் தர்ம அனுஷ்டானத்திற்காக (கர்மங்களைச் செய்வதற்காக) ஏற்பட்டதன்று. அதில், ஜ்ஞானமே முக்யம். ஆகையால், தர்மங்களைச் செய்தாலும், செய்யலாம்; துறந்தாலும் துறக்கலாம். ஸன்யாஸ ஆச்ரமத்திலிருப்பவன், ஜ்ஞான ஹீனனாயிருப்பானாயின் (ஆத்ம பரமாத்ம விஷயங்களில் அறிவு அற்று இருப்பானேயாகில்), தர்மத்தை அனுஷ்டிக்க வேண்டும். ஜ்ஞானமுடையவன், அதைத் துறக்கலாம். ஜ்ஞானமுடையவனும், ஜ்ஞானயோகத்திற்குத் தடையாகாது இருக்குமாயின், அதை அனுஷ்டிக்கலாம். தடை செய்யுமாயின், அதைத் துறக்க வேண்டும். உபவாஸம் முதலிய வ்ரதங்களை அனுஷ்டிப்பானாயின், அவை தேஹத்திற்குத் தௌர்ப்பல்யத்தை (சக்தி குறைவை) விளைத்து, யோகத்தைக் கெடுக்குமாகையால், அத்தகைய தர்மங்களை ஜ்ஞானயோகத்தையே முக்யமாகக் கொண்ட ஸன்யாஸி அனுஷ்டிக்கலாகாது. மற்றும், ஸன்யாஸி தர்மங்களால் (கர்மங்களால்) ஸாதிக்க வேண்டிய இஹ (இவ்வுலக), பரலோக (ஸ்வர்க்கம் முதலிய வேறு உலக) ஸுகானுபவங்களில் விருப்பமற்றவன். அதர்மம் போல தர்மமும் இஹ (இவ்வுலக), பரலோக (ஸ்வர்க்கம் முதலிய வேறு உலக) ஸுகங்கள் மூலமாய் மோக்ஷத்தைத் தடுக்குமாகையால், அவன் பெரும்பாலும் தர்ம அதர்மங்களை ஸமமாக நினைத்திருக்க வேண்டும். தனக்கு ஜ்ஞானம் உண்டென்பதை அறிவிக்கும் அடையாளங்களையெல்லாம் மறைத்துக்கொண்டு, தன் ப்ரயோஜனத்தையும் பிறர்க்கு அறிவிக்காமல், பகவானுடைய திவ்யமங்கள விக்ரஹத்தையே த்யானித்துக்கொண்டு பித்தம் பிடித்தவன் போலும், ஒன்றும் அறியாத சிறுவனைப் போலவும் இருக்க வேண்டும்.