அந்த மூன்று கத்திகள்
அர்ச்சுனனின் மனம் பாரதப் போரில் வெற்றி பெற்ற மமதையில் திளைத்துக் கொண்டிருந்தது.
"கண்ணன் எனக்குத் தேரோட்டினான். தெய்வம் என் அருகே இதோ இப்போது கூட அமர்ந்து கொண்டிருக்கிறது. என் பக்தியின் வலிமையே வலிமை. என்னை விடக் கண்ணன் மேல் அதிக பக்தி செலுத்துபவர் யார் இருக்கமுடியும்?...."
"அப்படி நீயாக முடிவுசெய்து விட முடியுமா? உன்னை விட என்மேல் கூடுதலாக பக்தி செலுத்துபவர்கள் உலகில் இருக்கக் கூடாதா என்ன?'' கண்ணன் கேட்டான்.
அர்ச்சுனன் திடுக்கிட்டான்.
"என் மனத்தில் ஓடுகிற எந்தச் சிறு நினைவையும் உடனே படித்து விடுகிறானே கண்ணன்!"
"நீ என்னை மனத்தில் வைத்து பூஜிக்கிறாய் அர்ச்சுனா! உன் மனத்திலேயே இருக்கும் எனக்கு உன் நினைவுகளைக் கண்டுகொள்வது சிரமமா?'' கண்ணன் கலகலவென்று நகைத்தான். கண்ணன் மேல் தன்னளவு பக்தி செலுத்துபவர் யாருமில்லை என்ற ஆணவம், தொடர்ந்து அர்ச்சுனன் மனத்தில் பால் ஏடு போல் மிதந்து கொண்டிருந்தது.
உள்ளத்தில் எழும் ஆணவ அழுக்கைப் போக்க பகவானை பக்தி செய்ய வேண்டும். பகவானை பக்தி செய்வது குறித்தே, ஆணவம் எழுமானால் அந்த அழுக்கை எப்படி அகற்றுவது? அர்ச்சுனனின் பக்தி சார்ந்த கர்வத்தை அடக்க வேண்டியது தான். கண்ணன் ஒரு முடிவு செய்தான்.
"அர்ச்சுனா! என் பக்தர்களில் சிலரை நேசிக்கிறேன். சிலரை மதிக்கிறேன். நான் மதிக்கும் பக்தை பிங்கலை இங்கே அஸ்தினாபுரத்தின் அருகிலேயே வசிக்கிறாள். அவளைச் சென்று சந்திப்போம் வா!''
"அதற்கென்ன போகலாம். சில பக்தர்களை நேசிப்பதாகவும் சில பக்தர்களை மதிப்பதாகவும் சொன்னாயே? அந்த இரு பக்தர்களிடையே என்ன வேறுபாடு?''
"சுயநலம் சார்ந்து பிரார்த்திப்பவர்களும் என் பக்தர்கள் தான். அவர்கள் வேண்டியதை அருள்கிறேன். அவர்களை நேசிக்கிறேன். எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் பக்தி செலுத்துபவர்களும் அபூர்வமாகச் சிலர் இருக்கிறார்கள். அவர்களை நேசிப்பது மட்டுமல்ல, மதிக்கவும் செய்கிறேன். சுயநலமற்ற பக்தர்களால் தான் பகவானுக்கே ஆற்றல் கூடுகிறது. நான் மதிக்கும் மூதாட்டியான பிங்கலையை நாம் சந்திப்பதில் வேறொரு நோக்கமும் இருக்கிறது''.
"என்ன நோக்கம்?''