வெள்ளி, 28 அக்டோபர், 2022

செவ்வாய், 25 அக்டோபர், 2022

வெள்ளி, 21 அக்டோபர், 2022

செவ்வாய், 11 அக்டோபர், 2022

அமுக்தமால்யதா - ஜி.மகேஷ்

“கிருஷ்ண தேவராயா விழி திறப்பாய்” கம்பீரமாக ஒலித்தது அந்தக் குரல். அந்தக் குரல் கிருஷ்ண தேவராயரின் செவியில் தேன்போல பாய்ந்தது. நொடியில் உறக்கம் விட்டு எழுந்தார் அந்த மாமன்னர். தன்னை இப்படி மரியாதை இல்லாமல் அழைக்க யாருக்கும் இதுவரை துணிவு வந்தது கிடையாது. மற்ற நேரமாய் இருந்திருந்தால் மன்னன் ஆவேசத்தில் பொங்கி இருப்பான்.


ஆனால், அந்தக் குரல் அமுதத்தை விட இனிமையாக இருக்கவே அவன் தன்னை மறந்து குரல் வந்த திக்கை நோக்கினான். அங்கே நின்றிருந்த உருவத்தின் கருநீல வண்ணமும் அதன் ஒளியும் மேகத்தையே நாணச் செய்தது. அந்த உருவத்தின் கண்களைக் கண்டு தாமரைகள் வெட்கி, தலை குனிந்தது. அவனது பீதாம்பரத்தின் காந்தி கருடனின் சுவர்ண நிற சிறகைப் பழித்தது.


மார்பில் இருந்த கவுஸ்துப மணி உதிக்கும் சூரியனின் ஒளியை மழுங்கச் செய்தது. ஒரு கையால் தாமரைக் கொடி போல பொலிவுடன் விளங்கும் திருமகளின் கரத்தை பற்றிய படி கோவிந்தன் நின்றிருந்த விதமே மனதை மயக்கியது. கை நழுவிய பொருள் போல் விழுந்து சேவித்தான் மன்னன்.  பிறகு கை குவித்து பய பக்தியோடு அருகில் மாதவன், சொல்வதை கேட்க சித்தமாக நின்று கொண்டான். மாதவன் வாய் மலர்ந்து பேச ஆரம்பித்தான்.


“உலகம் உன் வீரத்தையும், புவியாளும் திறனையும் போற்றுகிறது. ஆனால் என்னை அதிகம் கவர்ந்தது உன் பக்தியும், நீ அழகாக பாடும் தெலுங்கு பிரபந்தங்களும் தான். சத்ய பாமாவின் கதையை எத்தனை அழகாகக் பாடினாய்.  அப்பப்பா அதன் சொற்சுவையும் பொருட்சுவையும் ஆயர்பாடி வெண்ணெயை மிஞ்சி விட்டது. அற்புதம் அபாரம்.” என்று மொழிந்தபடியே தன் கருநீல விழிகளை உருட்டி கிருஷ்ண தேவ ராயனை நோக்கினான் கண்ணன்.