புதன், 31 மார்ச், 2021

ஶ்ரீராமப் பிரியன் பரதன் - டி.எம்.ரத்தினவேல்

பகவான் மஹாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான ஸ்ரீராமாவதார சரிதத்தின் ஒவ்வொரு நிகழ்வும் அதையே நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. அது போன்ற ஒரு நிகழ்வை இத்தருணத்தில் காண்போம்.


சக்கரவர்த்தி தசரதரிடமிருந்து இரண்டு வரங்கள் பெற்றாள் கைகேயி. ஒரு வரத்தினால் அவள் மகன் பரதன் மன்னனாகப் பட்டாபிஷேகம் செய்துகொண்டு நாடாள்வது என்றும், மற்றொரு வரத்தினால் ஸ்ரீராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டும் என்றும் முடிவாயிற்று. அயோத்தி மக்கள் கைகேயியையும் பரதனையும் தூற்றினார்கள். ஸ்ரீராமன் கானகம் செல்வதில் யாருக்கும் உடன்பாடில்லை இச்செய்தியைக் கேள்விப் பட்ட பரதன் சொல்லொணா துன்பத்துக்கு ஆளானான். தன் தாய் கைகேயின் மீது வெறுப்பும் கோபமும் கொண்டான். அயோத்தி மக்களும் அரண்மனைவாசிகளும், ஸ்ரீராமரை காட்டுக்கு அனுப்பியதில் பரதனுக்கும் பங்கு உண்டு என்று குற்றம் சாட்டினார்கள்.


அந்தக் குற்றச்சாட்டை மறுத்த பரதன், அன்னையர்களான கௌசல்யா மற்றும் சுமித்திரையை பாதம் தொட்டு வணங்கி, கபடமில்லாமல், தான் குற்றமற்றவன் என்பதை வலியுறுத்தி சரளமாகப் பின்வருமாறு, உறுதியான குரலில் கூறினான்.


''தாயே! ஸ்ரீராமரை காட்டுக்கு அனுப்பியதில் என் சம்மதம் இருந்தது என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அப்படி என் சம்மதம் இருந்தது என்றால் மாதா, பிதா, புத்திரனைக் கொன்ற பெரும்பாவம் என்னைச் சேரட்டும்.


சாதுவான பசுக்கள் மற்றும் வேத வித்தகர்களான பிராமணர்களைக் கொளுத்திய பாவம் என்னைச் சேரட்டும்.


பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கொன்ற பாவமும், பிரியமான நண்பனுக்கும், நாடாளும் மன்னனுக்கும் விஷம் தந்த பாவமும் என்னைச் சேரட்டும்.


என்னென்ன பாதகங்களும், மனம், சொல், உடலாலும் செய்யப்படுவதாக கவிகளால் கூறப்படுகிறதோ, அந்தப் பாவங்கள் எல்லாம் எனக்கு வந்து சேரட்டும்!

ஶ்ரீமத் பாகவதம் - 288

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – எழுபத்து இரண்டாவது அத்தியாயம்

(ஸ்ரீ க்ருஷ்ணன் பீமஸேனனைக் கொண்டு ஜராஸந்தனை வதித்தல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஒருகால், ஸபையினிடையில் முனிவர்கள், ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைச்யர்கள், ப்ராதாக்கள், ஆசார்யர்கள், குலவ்ருத்தர்கள் (குலத்துப் பெரியோர்கள்), ஜ்ஞாதிகள் (பங்காளிகள்), ஸம்பந்திகள், பந்துக்கள் இவர்களால் சூழப்பட்ட யுதிஷ்டிரன், இவர்கள் அனைவரும் கேட்டுக் கொண்டிருக்கையில் ஸ்ரீக்ருஷ்ணனைக் குறித்து இவ்வாறு மொழிந்தான்.

யுதிஷ்டிரன் சொல்லுகிறான்:- கோவிந்தனே! ப்ரபூ! யாகங்களில் சிறந்த ராஜஸூய யாகத்தினால் பரிசுத்தமான உன் விபூதிகளான தேவதைகளை ஆராதிக்க விரும்புகிறேன். அதை நீ நிறைவேற்ற வேண்டும். அசுபங்களைப் (தீமைகளைப்) போக்கவல்ல உன் பாதுகைகளை எவர்கள் நல்ல மனமுடையவர்களாகித் தேஹத்தினால் (உடலினால்) ஸர்வ காலமும் உபசரிப்பதும், மனத்தினால் த்யானிப்பதும், வாயால் துதிப்பதும் செய்கின்றார்களோ, அவர்கள் மோக்ஷத்தை அடைகின்றார்கள். 

பரனே (மேலானவனே)! பற்பநாபனே! அவர்கள் எந்தெந்த மனோரதங்களை (மனதின் விருப்பங்களை) விரும்புகிறார்களோ, அவற்றையும் பெறுகின்றார்கள். பரிசர்யை (பணிவிடை) முதலியன செய்யாதவர்கள், சக்ரவர்த்திகளாயினும், அவற்றைப் பெற முடியாது. (நீ பக்தர்களிடத்தில் பக்ஷபாதமுடையவனாகையால் (சார்ந்து இருப்பவனாகையால்), உன் பாதார விந்தங்களைப் பற்றின எங்கள் மனோரதம் (விருப்பம்) எல்லாம் ஸுகமாக நிறைவேறக்கூடுமல்லவா?) 

தேவர்களுக்கும் தேவனே! ஆகையால், இவ்வுலகம் உன் பாதார விந்தங்களைப் பணிதலின் ப்ரபாவத்தைக் (பெருமையைக்) காணுமாக. குருக்கள், ஸ்ருஞ்சயர்கள் இவர்களுக்குள் எவர்கள் உன்னைப் பணிகின்றார்களோ, எவர்கள் பணிகிறதில்லையோ, அவ்விருவர்களின் நிலைமையையும் காட்டுவாயாக. (உன்னைப் பணிகிறவர்கள், க்ஷேமம் பெறுவதையும், பணியாதவர்கள், அதைப் பெறாதொழிவதையும், உலகத்தவர்களுக்கு ப்ரத்யக்ஷமாகும்படி (தெளிவாகும்படி) காட்டுவாயாக) கெட்ட குணங்கள் எவையுமின்றிக் கல்யாண குணங்கள் நிறைந்திருக்கிற பரப்ரஹ்மரூபனான உனக்கு, தன்னுடையவனென்றும், பிறனென்றும் பேதபுத்தி (வேறுபாடு) கிடையாது. 

நீ ஸமஸ்த பூதங்களுக்கும் அந்தராத்மாவாயிருப்பவன். (பல சரீரங்களையுடைய ஒருவனுக்குத் தன் சரீரங்களுக்குள் சிலவற்றில் தன்னுடையவையென்னும் நினைவும், சிலவற்றில் பிறனுடையவையென்னும் நினைவும், உண்டாகாதல்லவா? ஜகத்தெல்லாம் உனக்குச் சரீரமாகையால், அதில் சிலவற்றில் ப்ரீதியும் (அன்பும்), சிலவற்றில் அப்ரீதியும் (அன்பின்மையும்) உண்டாகாது). நீ எல்லாவற்றையும் ஸமமாகப் பார்க்குந் தன்மையன்; தனக்கு அஸாதாரணமாயிருப்பதும், அளவற்றதுமாகிய ஆநந்தத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவன். உனக்கு ராகம் (விருப்பு), த்வேஷம் (வெறுப்பு) முதலியவை எவையும் கிடையாது. ஆயினும், உன்னைப் பணிகிறவர்களிடத்தில் தான் உனது அனுக்ரஹம் (அருள்). அதிலும், பணிகைக்கு உரியபடி தான் பலன் கொடுப்பாய். கல்பவ்ருக்ஷம், தன்னைப் பணிகிறவர்களுக்குப் பலன் கொடுக்குமேயன்றி, தன்னைப் பணியாதவர்களுக்குப் பலன் கொடுக்காது. இதைப் பற்றி அந்தக் கல்பவ்ருக்ஷத்திற்குப் பக்ஷபாதம் (ஓரவஞ்சனை) என்று சொல்லக்கூடுமோ? அவ்வாறே, நீயும் உன்னைப் பணிகிறவர்களின் மனோரதங்களை நிறைவேற்றுவது பக்ஷபாதமாகாது (ஓரவஞ்சனையன்று).

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- ராஜனே! சத்ருக்களை அழிப்பவனே! நீ நன்றாக நிச்சயித்தாய். மங்களமான உன்புகழ், இதனால் உலகங்கள் முழுவதும் நிரம்பும். ரிஷிகளுக்கும், பித்ரு தேவதைகளுக்கும், உனது நண்பர்களான எங்களுக்கும், ஆயிரம் சொல்லி என்? ஸமஸ்த பூதங்களுக்கும், யாகங்களில் சிறந்த இந்த ராஜஸூய யாகம் இஷ்டமானது (விருப்பமானது). ஸமஸ்த ராஜர்களையும் ஜயித்து, ஜகத்தையெல்லாம் வசப்படுத்திக் கொண்டு, ஸம்பாரங்களை (யாகத்திற்கு வேண்டியவற்றை) எல்லாம் ஸித்தப்படுத்தி, பெருமையுடைய இந்த யாகத்தை நடத்துவாயாக. 

ராஜர்களை எப்படி ஜயிப்பேனென்று சங்கிக்க வேண்டாம். இதோ இருக்கின்ற உன் ப்ராதாக்களாகிய பீமஸேனாதிகள், லோக பாலர்களான தேவதைகளின் அம்சங்களால் பிறந்தவர்கள். இவர்களால் ஸமஸ்த ராஜர்களையும் அனாயாஸமாகவே ஜயிக்கக்கூடும். மற்றும், இந்திரியங்களை வெல்ல முடியாதவர்களால் வருந்தியும் வெல்ல முடியாத நான், இந்த்ரியங்களை வென்று என்னிடத்தில் பக்தியினால் தாழ்ந்த மனமுடைய உன்னால், வெல்லப்பட்டேன். இனி உனக்கு எது தான் ஸாதிக்க முடியாதது? என்னையே முக்யமாகப்பற்றி, என்னிடத்தில் நிலை நின்ற மனமுடையவனை, எத்தகைய தேவனாயினும் தேஜஸ்ஸினாலாவது (ஆற்றலாலோ), யசஸ்ஸினாலாவது (பெருமையினாலோ), செல்வத்தினாலாவது, ஸைன்யம் (படை) முதலிய ஸம்ருத்திகளாலாவது (ஸொத்துக்களாலோ) இவ்வுலகத்தில் பரிபவிக்க (அவமதிக்க) முடியாது. இனி, மன்னவர்கள் பரிபவிக்க (அவமதிக்க) வல்லரல்லரென்பதைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ?

செவ்வாய், 30 மார்ச், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 287

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – எழுபத்தொன்றாவது அத்தியாயம்

(உத்தவன் யுதிஷ்டிர யாகத்திற்குப் போக வேண்டுமென்று நிரூபிக்கையில், ஸ்ரீக்ருஷ்ணன் அப்படியே அங்கீகரித்துப் போதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மிகுந்த மதியுடைய உத்தவன், தேவ ரிஷியாகிய நாரதர் மொழிந்ததைக் கேட்டு, ஜராஸந்தனை எதிர்க்கையே முக்யமென்கிற ஸபிகர்களின் (ஸபையோர்களின்) அபிப்ராயத்தையும், ராஜஸூயத்திற்குப் போக வேண்டுமென்கிற ஸ்ரீக்ருஷ்ணனுடைய அபிப்ராயத்தையும் அறிந்து, மேல்வருமாறு கூறினான்.

உத்தவன் சொல்லுகிறான்:- தேவனே! “அத்தையின் பிள்ளையாகிய யுதிஷ்டிரன் யாகம் செய்யப் போகிறான். அவனுக்கு நீ ஸஹாயம் (உதவி) செய்யவேண்டும்” என்று நாரத மஹரிஷி மொழிந்தாரல்லவா? அதை அவச்யம் செய்யவேண்டும். சரணம் விரும்புகிற ராஜர்களைக் காக்க வேண்டியதும் அவச்யமே. இரண்டும் முக்யமான கார்யங்களே. 

ப்ரபூ! திக்விஜயம் செய்த பின்பு தான் ராஜஸூய யாகம் நடத்தவேண்டும். ஆகையால், முன்பு திக்விஜயம் செய்யவேண்டும். அதற்கு நீ உதவி செய்ய வேண்டியது அவச்யமாகையால், நாம் இங்கிருந்து முதலில் இந்த்ர ப்ரஸ்தத்திற்குப் போகவேண்டும். அங்கு, யுதிஷ்டிரனால் அனுமதி கொடுக்கப் பெற்று, அவனுடைய ப்ரயோஜனத்திற்காகவே, ஜராஸந்தனை வதிப்பாயாக. அவ்வாறு திக்விஜயத்திற்காக ஜராஸந்தனைக் கொல்வது, ராஜஸூயத்தை நடத்துவது, ராஜர்களை விடுவிப்பது ஆகிய இரண்டு ப்ரயோஜனங்களையும் (பலன்களையும்) நிறைவேற்றும் என்று எனக்குத் தோற்றுகிறது. 

கோவிந்தனே! முதலில் ராஜஸூயத்திற்குப் போவோமாயின், இதனாலேயே நாம் விரும்புகிற பெரிய ப்ரயோஜனமும் கைகூடுகின்றது. ஜராஸந்தனைக் கொன்று ராஜர்களைச் சிறையினின்று விடுவிக்கிற உனக்கு புகழும் உண்டாகும். அந்த ஜராஸந்தன், பதினாயிரம் யானை பலமுடையவன். பிறர்க்குப் பொறுக்கமுடியாத கொடிய பலமுடைய பீமஸேனனைத் தவிர மற்ற பலிஷ்டர்கள் (பலசாலிகள்) அனைவர்க்கும் அவன் வருந்தியும் பொறுக்க முடியாதவன். பீமஸேனன் அவனோடொத்த பலமுடையவனாகையால், அவனை வெல்ல வல்லனே. ஆனால், அவனை த்வந்த்வ (ஒருவரோடு ஒருவர் செய்யும்) யுத்தத்தினால் வெல்ல வேண்டுமன்றி, நூறு அக்ஷௌஹிணி (தேர் 21870; குதிரை 65610; யானை 21870; காலாட் படை 109350 கொண்ட பெரும் படை அக்ஷௌஹிணி ஸைன்யம் எனப்படும்) ஸைன்யங்கள் (படைகள்) போர் செய்தாலும் வெல்ல முடியாது. அளவற்ற ஸைன்யங்களையுடைய அம்மகத ராஜனோடு பீமஸேனனுக்கு த்வந்த்வ (ஒருவரோடு ஒருவர் செய்யும்) யுத்தம் எப்படி நேருமென்றால், அவன் ப்ராஹ்மண விச்வாஸமுடையவன். அவர்கட்கு வேண்டினவற்றை எல்லாம் நிறைவேற்றிக் கொடுக்கும் தன்மையன். அவன், ப்ராஹ்மணர்கள் வேண்டினால், ஒருகாலும் மறுக்கமாட்டான். ஆகையால், பீமஸேனன் ப்ராஹ்மண வேஷம் பூண்டு, அவனிடம் சென்று, த்வந்த்வ (ஒருவரோடு ஒருவர் செய்யும்) யுத்தத்தை யாசிக்க வேண்டும். நீ ஸமீபத்தில் இருப்பாயாயின், த்வந்த்வ (ஒருவரோடு ஒருவர் செய்யும்) யுத்தம் செய்கின்ற அம்மகதராஜனைப் பீமஸேனன் வதித்து விடுவான். 

ப்ரபஞ்சத்தின் (உலகத்தின்) ஸ்ருஷ்டி (படைப்பு), ஸம்ஹாரங்களுக்கு (அழித்தல்) நீயே ஆதிகாரணன். காலத்தை சரீரமாக உடையவனும், ப்ராக்ருத (ஸத்வ, ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களுடன் கூடிய) உருவங்களற்றவனுமாகிய உனக்கு, ப்ரஹ்ம, ருத்ரர்களிருவரும் அம்சங்களே. அவ்விருவர் மூலமாய் நீயே ஸ்ருஷ்டி (படைப்பு), ஸம்ஹாரங்களை  (அழித்தல்) நடத்துகின்றாய். இவ்வாறு நீ ஜராஸந்தனை வதிப்பாயாயின், அவனால் தகையுண்ட (சிறை வைக்கப்பட்ட) ராஜர்களின் பத்னிகள், தங்கள் சத்ருவாகிய ஜராஸந்தனைக் கொன்றதும், தங்களைச் சிறையினின்று விடுவித்ததுமாகிய நிர்மலமான (தூய்மையான) உன் சரித்ரத்தை, தத்தம் க்ருஹங்களில் குழந்தைகளைச் சீராட்டுவது முதலிய ஸமயங்களில் பாடுவார்கள். கோபிகைகளும், உன்னைச் சரணம் அடைந்த முனிவர்களும், நாங்களும், முதலையிடத்தினின்று யானையை விடுவித்தது, ராவணனிடத்தினின்று ஜனகராஜன் திருமகளான ஸீதையை விடுவித்தது, கம்ஸனிடத்தினின்று தாய், தந்தைகளான தேவகி, வஸுதேவர்களை விடுவித்தது, முதலிய உன் வ்ருத்தாந்தங்களைப் (கதைகளைப்) பாடுவது போல, அவர்களும் இந்த வ்ருத்தாந்தத்தைப் பாடுவார்கள். 

திங்கள், 29 மார்ச், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 286

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – எழுபதாவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ணனுடைய தினசர்யையும் (அன்றாட வாழ்க்கை முறை), அவன் ஸபையிலிருக்கும் பொழுது ஜராஸந்தனால் தகையப்பட்ட (முற்றுகை இடப்பட்ட) ராஜர்களிடத்தினின்று தூதன் வருதலும், நாரதர் வருகையும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பரீக்ஷித்து மன்னவனே! மேல் பகவானுடைய தினசர்யையைச் (அன்றாட வாழ்க்கையை) சொல்லுகிறேன்; கேட்பாயாக. விடியற்காலம் ஸமீபித்திருக்கையில், பற்பல உருவங்கொண்ட ஸ்ரீக்ருஷ்ணனாகிற கணவர்களால் கழுத்தில் அணைக்கப்பட்ட அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய பத்னிகள், மேல்வருகிற விரஹத்தை (பிரிவை) நினைத்து வருந்தி, கூவுகின்ற கோழிகளைச் சபித்தார்கள். 

மந்தார வனத்தினின்று வீசுகின்ற காற்றுக்களால் உறக்கம் தொலையப்பெற்ற வண்டுகள் பாடிக்கொண்டிருக்கையில், மற்றும் பல பறவைகள் ஸ்துதி பாடகர்கள் போல் ஸ்ரீக்ருஷ்ணனை எழுப்பின. அன்பிற்கிடமான ஸ்ரீக்ருஷ்ணனுடைய மார்பை அடைந்திருக்கின்ற ருக்மிணி முதலிய மடந்தையர்கள், அந்த விடியற்கால முஹூர்த்தம் (நேரம்) மிக்க மங்களமாயினும், அன்பனுடைய ஆலிங்கனத்திற்கு (அணைப்பிற்கு) விகடனத்தை (விலக்கை - கடனம் - சேர்த்தி. அதில்லாமை – விகடனம்) விளைக்கையால், அதைப் பொறுக்க முடியாதிருந்தார்கள். 

ஸ்ரீக்ருஷ்ணன், ப்ராஹ்ம முஹூர்த்தத்தில் (ஸூர்ய உதயத்திற்கு 1 மணி 36 நிமிடம் முன்பு ஆரம்பித்து, ஸூர்ய உதயத்திற்கு 48 நிமிடம் முன்பு வரை உள்ள 48 நிமிட மிக நல்ல நேரம்) எழுந்து, சுத்த ஜலத்தை ஆசமனம் செய்து, தெளிந்த இந்திரியங்கள் (புலன்கள்) உடையவனாகி, ப்ரக்ருதியைக் (அறிவற்ற ஜடப்பொருட்களின் மூலமான மூலப்ரக்ருதியைக்) காட்டிலும் விலக்ஷணனும் (வேறானவனும்), இணையெதிர் இல்லாதவனும், ஸ்வயம்ப்ரகாசனும் (தானே தோன்றுபவனும்), தனக்குச் சரீரமாகாத வஸ்து எதுவுமே இல்லாதவனும், ஜாதி முதலிய ஏற்பாடுகளற்றனும், தன்னிடத்தில் தான் விகாரம் (மாறுபாடு) அற்றிருக்கையாகிற நிலைமையினால் புண்ய பாபங்களாகிற கல்மஷங்கள் (அழுக்கு) என்றும் தீண்டப்பெறாதவனும், பரப்ரஹ்மமென்னும் பெயருடையவனும், இந்த ப்ரபஞ்சத்தின் (உலகத்தின்) ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (காத்தல்), ஸம்ஹாரங்களுக்குக் (அழித்தல்) காரணமாயிருக்கையாகிற சக்தியினால் வெளியிடப்பட்ட ஆனந்தமயமான ஸ்வரூபமுடையவனுமாகிய தன்னை த்யானித்தான். 

அனந்தரம் (பிறகு) ஸத்புருஷர்களில் ச்ரேஷ்டனாகிய (சிறந்தவனான) பகவான், ஜலத்தில் ஸ்னானம் செய்து, வஸ்த்ரங்களை உடுத்து, ஸந்தியாவந்தனம் முதலிய க்ரியாகலாபத்தைச் (செயல்களைச்) செய்து, அக்னியில் ஹோமம் செய்து, மௌன வ்ரதத்துடன் காயத்ரீ ஜபம் செய்தான். அப்பால், உயர்கின்ற ஸூர்யனைப் பூஜித்து, தன்னுடைய அம்சங்களான தேவதைகளுக்கும், ரிஷிகளுக்கும், பித்ருக்களுக்கும் தர்ப்பணம் செய்து, குல வ்ருத்தர்களான (பெரியோர்களான) அந்தணர்களை ச்ரத்தையுடன் ஆராதித்து, பொன் கொப்பி (தங்கப் பூண்) இடப் பெற்றவைகளும், ஸாதுக்களும், முத்து மாலைகள் இடப்பெற்றவைகளும், மிகுந்த பாலுடையவைகளும், முதல் ஈற்றாயிருப்பவைகளும் (தாய் வயிற்றிலிருந்து முதலில் ப்ரஸவித்தவைகளும்), நல்ல கன்றுடையவைகளும், நல்ல வஸ்த்ரத்தினால் அலங்கரிக்கப்பட்டவைகளும், குளம்புகளில் வெள்ளி அலங்காரம் செய்யப் பெற்றவைகளுமாகிய பசுக்களை, வெண்பட்டு மான்  தோல், எள்ளு இவற்றுடன் நன்கு அலங்காரம் செய்யப் பெற்ற அந்தணர்களுக்கு, பத்மம் (பத்மமென்பது ஒரு பெரிய கணக்கு) பத்மமாகக் கொடுத்தான். 

சனி, 27 மார்ச், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 285

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – அறுபத்தொன்பதாவது அத்தியாயம்

(நாரத முனிவர் வந்து,  ஸ்ரீக்ருஷ்ணன் தன் பத்னிகளின் க்ருஹங்களில் ஒவ்வொன்றிலும் அமைந்து, இல்லற வாழ்க்கையில் ஊன்றியிருப்பதைக் கண்டு வியப்புறுதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- நரகாஸுரன் ஸ்ரீக்ருஷ்ணனால் அடியுண்டு மாண்டதையும், ஸ்ரீக்ருஷ்ணனொருவன் பல மடந்தையர்களை மணம் புரிந்ததையும் கேட்ட நாரதர், அவனைப் பார்க்க விரும்பினார். ‘‘ஸ்ரீக்ருஷ்ணன் ஒருவனே பதினாறாயிரம் ஸ்த்ரீகளை ஒரே சரீரத்துடன் (திருமேனியோடு), ஒரே காலத்தில், தனித்தனியே அந்தந்த க்ருஹங்களில் மணம் புரிந்தானென்பது மிகவும் அற்புதம்” என்று அந்தத் தேவர்ஷியாகிய நாரதர் வியப்புற்று, அவனைப் பார்க்க விரும்பி, த்வாரகாபுரிக்கு வந்தார். 

அப்புரியிலுள்ள உபவனங்களும், உத்யானவனங்களும் (தோட்டங்களும்), பலவகைப் பறவைகளும், வண்டுகளும் இனமினமாய் ஒலிக்கப் பெற்றிருந்தன. மற்றும், அப்புரியிலுள்ள தடாகங்கள், கரு நெய்தல்களும், தாமரைகளும், செங்கழுநீர்களும், ஆம்பல்களும், நெய்தல்களும் மலர்ந்து நிறைந்து, ஹம்ஸங்களும் (அன்னப்பறவகளும்), ஸாரஸங்களும் (நாரைகளும்), உரக்கக் கூவப் பெற்றிருந்தன. அங்கு ஸ்படிகங்களாலும், வெள்ளியாலும் இயற்றப்பட்டவைகளும், சிறந்த மரகத ரத்னங்களாலும், ஸ்வர்ணத்தினாலும், மற்றும் பல ரத்னங்களாலும் இயற்றின கருவிகள் அமைந்தவைகளுமாகிய ஒன்பது லக்ஷம் மாளிகைகள் அமைந்திருந்தன. தெருக்களும், ஸாதாரண மார்க்கங்களும், நாற்சந்தி வீதிகளும், கடைகளும், ஸத்ரங்களும், சாலைகளும், ஸபைகளும், தேவாலயங்களும் தனித்தனியே அமைக்கப்பெற்று, அந்நகரம் மிகவும் அழகாயிருந்தது. மற்றும், ராஜ வீதிகளும், முற்றங்களும், ஸாதாரண வீதிகளும், வீட்டு வாசற்களும், ஜலம் தெளித்து விளக்கி, பதாகைகளும் (விருதுக் கொடிகளும் banner), த்வஜங்களும் (கொடிகளும்) கட்டி, அவற்றால் வெயில் தடுக்கப் பெற்று, மிகவும் ஸுகமாயிருந்தன. 

அந்தப் பட்டணத்தில், ஸ்ரீக்ருஷ்ணனுடைய அந்தப்புரம், ஸமஸ்த ஸம்பத்துக்களும் அமைந்து, ஸமஸ்த லோகபாலர்களாலும் புகழப் பெற்று, மிகவும் அழகாயிருந்தது. அவ்வந்தப்புரம், த்வஷ்டாவென்னும் விஸ்வகர்மாவினால் தன் திறமைகளையெல்லாம் காட்டி நிர்மிக்கப்பட்டதாகையால், மிகவும் அற்புதமாயிருந்தது. ஸ்ரீக்ருஷ்ணனுடைய பத்னிகளின் பதினாறாயிரம் மாளிகைகளால் அலங்காரமுற்று மிகவும் பெரிதாயிருந்தது. நாரதர் அவற்றில் ஒரு மாளிகைக்குள் நுழைந்தார். அம்மாளிகை, பவழங்களால் இயற்றின ஸ்தம்பங்களும், வைடூர்ய ரத்ன மயமான ஸ்தம்பத்தின் மேல் பலகைகளும், இந்த்ர நீல ரத்ன மயமான சாளரங்களும், மரகத ரத்ன மயமான சிறந்த ஸ்தம்பங்களும், விஸ்வகர்மாவினால் நிர்மிக்கப்பட்டவைகளும், முத்துச் சரங்கள் தொங்கி விடப் பெற்றவைகளுமாகிய மேல் கட்டுக்களும், தந்தத்தினால் இயற்றிச் சிறந்த ரத்னங்கள் இழைத்த ஆஸனங்களும், அத்தகைய மஞ்சங்களும் அமைந்து, கழுத்தில் பொன் பதகங்கள் பூண்டு சிறந்த வஸ்த்ரங்களை உடுத்தின தாஸிகளாலும், சொக்காயும், தலைப்பாகையும், சிறந்த வஸ்த்ரங்களும், ரத்னமயமான குண்டலங்களும் அணிந்த புருஷர்களாலும் அலங்கரிக்கப்பட்டு, ரமணீயமாயிருந்தது. 

அவ்விடத்தில் ரத்ன தீபங்களின் கிரண ஸமூஹத்தினால் இருள் முழுவதும் துரத்தப்பட்டிருந்தது. மற்றும், அங்குக் கொடுங்கைகளில் உட்கார்ந்திருக்கின்ற மயில்கள், சாளரங்களின் (ஜன்னல்களின்) ரந்தர மார்க்கங்களால் (இடைவெளிகளில்) வெளி வருகின்ற அகிற்புகையைக் கண்டு, நீர்கொண்ட மேகமென்று நினைத்து, கேகாவென்று சப்தித்துக் கொண்டு, நர்த்தனம் (நடனம்) செய்கின்றன. நாரத முனிவர், அத்தகைய மாளிகையில் தன்னோடொத்த குணமும், உருவமும், வயதும், அழகிய வேஷமும் உடைய அனேகமாயிரம் தாஸிகளோடு கூடிப் பொற்பிடி இடப்பெற்ற சாமரத்தினால் ஸர்வ காலமும் விசிறிக் கொண்டிருக்கின்ற பார்யையாகிய ருக்மிணியோடு கூடிய ஸ்ரீக்ருஷ்ணனைக் கண்டார். 

புதன், 24 மார்ச், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 284

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – அறுபத்தெட்டாவது அத்தியாயம்

(குருக்கள் ஸாம்பனைக் கட்டிக் கொண்டு போகையில், பலராமன் அவனை விடுவித்துக்கொண்டு வருதல்.)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- சத்ருக்களை வெல்லும் திறமையுடையவனும், ஜாம்பவதியின் புதல்வனுமாகிய ஸாம்பன், துர்யோதனனுடைய பெண்ணாகிய லக்ஷ்மணை என்பவளை ஸ்வயம்வரத்தில் ஒருவனாகவே பறித்துக் கொண்டு போனான். கௌரவர்கள் கோபமுற்று, இந்தப் பையன் துஷ்டன் (கொடியவன்). கன்னிகை விருப்பமற்றிருக்கையில், நம்மைப் பொருள் செய்யாமல், பலாத்காரமாக அவளைப் பறித்துக்கொண்டு போனானல்லவா? 

துஷ்ட (கெட்ட) ஸ்வபாவமுடைய இந்தப் பயலைத் பிடித்துக் கட்டுங்கள். வ்ருஷ்ணிகள் என்ன செய்யப் போகிறார்கள்? அவர்கள் நம் ப்ரதாபத்தினால் (மேன்மையால்) வளர்க்கப்பட்டதும், நம்மால் தொடுக்கப்பட்டதுமாகிய பூமியைப் பெற்று, ஜீவித்துக் கொண்டிருப்பவர்களல்லவா? (ஆகையால், அவர்கள் நம்மை என்ன செய்யமுடியும்?) “ஒருகால் வ்ருஷ்ணிகள் தங்கள் குமாரன் கட்டுண்டிருப்பதைக் கேட்டு, நம் மேல் எதிர்த்து வருவார்களாயின், ப்ராணாயாமம் (மூச்சை அடக்குதல்) முதலியவைகளால் அடக்கப்பட்ட இந்திரியங்கள் போல, நம்மால் கொழுப்படங்கப் பெற்று, சாந்தியை அடைவார்கள். மற்றொன்றும் செய்ய வல்லவரல்லர்” என்று தங்களுக்குள் தாங்களே, நிச்சயித்துக்கொண்டார்கள். 

அப்பால், கர்ணன், சலன், பூரி, யஜ்ஞகேது, துர்யோதனன் ஆகிய இவர்கள், குரு வ்ருத்தர்களான (குரு வம்சத்துப் பெரியவர்களான) த்ருதராஷ்ட்ரன் முதலியவர்களால் அனுமோதனம் செய்யப்பெற்று (அனுமதிக்கப்பட்டு), ஸாம்பனைப் பிடித்துக் கட்டத் தொடங்கினார்கள். ஸாம்பன், மஹா ரதர்களான (10000 வில்லாலிகளுடன் தனித்துப் போர் செய்யும் திறமை உடையவர்களான) த்ருதராஷ்ட்ர குமாரர்கள் தன்னைத் தொடர்ந்து வரக்கண்டு, அழகிய தனுஸ்ஸை ஏந்திக் கொண்டு, தானொருவனே ஸிம்ஹம்போல் யுத்தத்திற்கு ஸித்தமாய் நின்றான். அக்கௌரவர்கள், அந்த ஸாம்பனைப் பிடிக்க விரும்பி, கர்ணனை முன்னிட்டு, “நில் நில்” என்று மொழிந்து கொண்டு, தனுஸ்ஸுக்களை நாணேற்றி, பாணங்களை விடுத்து, அவனை மறைத்தார்கள். 

கௌரவச்ரேஷ்டனே! அந்த யாதவ குமாரன், குருக்களால் அடியுண்டு, அளவற்ற மஹிமைகள் அமைந்த பரமபுருஷனாகிய ஸ்ரீக்ருஷ்ணனுடைய குமாரனாகையால், தடியால் அடியுண்ட ஸர்ப்பம் போல், அந்த அடியைப் பொறாமல் கோபம் கொண்டான். வீரனாகிய அந்த ஸாம்பன், மிகவும் பெரிதான தனுஸ்ஸை நாணேற்றி, ஒலிப்பித்து, ஆறு பேர்களான கர்ணன் முதலிய அந்த ரதிகர்கள் அனைவரையும் அத்தனை பாணங்களால் தனித் தனியே அடித்தான். அவன், நான்கு குதிரைகளை நான்கு பாணங்களாலும், ஸாரதிகளையும், ரதிகர்களையும் ஒவ்வொரு பாணங்களாலும் அடித்தான். வில்லாளிகளில் சிறந்த அவ்வீரர்கள், அவன் செய்த அச்செயலைப் புகழ்ந்தார்கள். அவ்வறுவர்களில் நால்வர் நான்கு குதிரைகளையும், ஒருவன் ஸாரதியையும் அடித்தார்கள். மற்றொருவன், தனுஸ்ஸை அறுத்தான். இவ்வாறு அவ்வறுவர்களும் சேர்ந்து அந்த ஸாம்பனை விரதனாக்கினார்கள் (தேர் அற்றவன் ஆக்கினார்கள்). 

குருக்கள் அவ்வாறு யுத்தத்தில் வருத்தி, அவனை விரதனாகச் செய்து (தேர் அற்றவனாகச் செய்து), ஜயம்பெற்று, அக்குமாரனையும் தங்கள் கன்னிகையையும் திருப்பிக் கொண்டு, ஹஸ்தினாபுரம் போய்ச் சோந்தார்கள். 

ராஜனே! வ்ருஷ்ணிகள் நாரதர் மூலமாய் அதைக் கேள்விப்பட்டுக் கோபமுற்று, உக்ரஸேனனால் தூண்டவும் பெற்று, குருக்களின் மேல் முயற்சி கொண்டார்கள். பலராமன், கலஹமாகிற (சண்டையாகிற) அழுக்கைப் போக்கும் தன்மையனாகையால், குருக்களுக்கும், வ்ருஷணிகளுக்கும் கலஹம் நேருவதை விரும்பாமல், கோபமுற்றிருக்கின்ற வ்ருஷ்ணிகளில் முக்யமானவர்களை அழைத்து, நல்வார்த்தைகளால் ஸமாதானப்படுத்தி அடக்கி, ப்ராஹ்மணர்களாலும், யாதவகுல வ்ருத்தர்களாலும் (பெரியவர்களாலும்) சூழப்பட்டு, நக்ஷத்ரங்களால் சூழப்பட்ட சந்திரன் போன்று ஸூர்யனோடொத்த ஒளியுடைய ரதத்தின்மேல் ஏறிக் கொண்டு, ஹஸ்தினாபுரம் சென்று, பட்டணத்திற்கு வெளியிலுள்ள உபவனத்தில் இறங்கி, அவர்களுடைய அபிப்ராயத்தை அறிய விரும்பி, உத்தவனை அனுப்பினான். 

அவன் பட்டணத்திற்குள் சென்று த்ருதராஷ்ட்ரனையும், பீஷ்மனையும், த்ரோணாசார்யரையும், பாஹ்லிகனையும், துர்யோதனனையும் விதிப்படி வணங்கி, பலராமன் வந்திருப்பதைச் சொன்னான். அவர்கள், மிகவும் நண்பனாகிய பலராமன் வந்திருப்பதைக் கேட்டு, மஹாநந்தம் அடைந்து, அவ்வுத்தவனைப் பூஜித்து, எல்லோரும் மங்கள வஸ்துக்களைக் கைகளில் ஏந்திக்கொண்டு, பலராமனை எதிர்கொண்டு சென்றார்கள். 

திங்கள், 15 மார்ச், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 283

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – அறுபத்தேழாவது அத்தியாயம்

(ரைவதக பர்வதத்தில் ஸ்த்ரீகளோடு விளையாடிக்கொண்டிருந்த பலராமன், அங்கு உபரோதம் (தடை) செய்த த்விவிதனென்னும் வானரனைக் கொல்லுதல்)

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- அற்புதச் செயல்களுடையவனும், ஆதிசேஷனுடைய அவதாரமும், அபார மஹிமைகளுடையவனும், ஸமர்த்தனுமாகிய பலராமன், இன்னும் ஏதேது செய்தானோ அதை நான் மீளவும் கேட்க விரும்புகிறேன்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- நரகாஸுரனுக்கு நண்பனாகிய த்விவிதனென்னும் ஒரு வானரன் இருந்தான். அவன், ஸுக்ரீவனுடைய மந்த்ரி; மைந்தனுடைய ப்ராதா (ஸஹோதரன்). மிகுந்த வீர்யமுடையவன். அந்த த்விவிதன், தன்னுடைய நண்பனாகிய நரகாஸுரனுக்கு ப்ரியம் செய்ய விரும்பி, தேசங்களெல்லாம் பாழாகும்படி பட்டணங்களையும், கிராமங்களையும், ஆகரங்களையும் (சேரிகள்), இடைச்சேரிகளையும் நெருப்பையிட்டுக் கொளுத்திக் கொண்டிருந்தான். மற்றும் அவன் ஒருகால், பர்வதங்களைப் (மலைகளைப்) பிடுங்கி, அவற்றால் தேசங்களைச் சூரணம் (பொடி) செய்து கொண்டிருந்தான். சத்ருக்களை அழிக்கும் தன்மையனான ஸ்ரீக்ருஷ்ணனுடைய வாஸஸ்தானமாகிய (இருப்பிடமான) ஆநர்த்த தேசங்களை இவ்வாறு பர்வதங்களையிட்டு, மிகவும் சூர்ணம் செய்து கொண்டிருந்தான். 

பதினாயிரம் யானை பலமுடைய அவ்வானரன் ஒருகால், ஸமுத்ரத்தினிடையில் இருந்து கொண்டு, இரண்டு கைகளாலும் அந்த ஸமுத்ர ஜலத்தை வாரியிறைத்து, ஸமுத்ரக்கரையிலுள்ள தேசங்களையெல்லாம் வெள்ளத்தில் முழுகும்படி செய்தான். 

துஷ்ட (கொடிய) ஸ்வபாவமுடைய அவ்வானரன், ரிஷிகளில் தலைமையுள்ள மஹர்ஷிகளின் ஆச்ரமங்களிலுள்ள வ்ருக்ஷங்களை (மரங்களை) முறித்து, அவற்றைப் பாழ் செய்து, மல மூத்ரங்களை விட்டு, யாக அக்னிகளை அசுத்தம் செய்தான். குளவி, புழுக்களை ரந்தரங்களில் (பொந்துகளில்) வைத்து மூடுவது போல, துர்ப்புத்தியாகிய அந்த த்விவிதன், கொழுத்துப் புருஷர்களையும், ஸ்த்ரீகளையும், பர்வதங்களின் (மலைகளின்) செறிவுகளிலும் (தாழ்வரைகளிலும்), குஹைகளிலும் அடைத்து, பர்வத (மலைச்) சிகரங்களால் மூடினான். 

இவ்வாறு தேசங்களைப் பீடிப்பதும், குல ஸ்த்ரீகளைக் கெடுப்பதுமாயிருக்கின்ற அந்த த்விவிதன், மிகவும் அழகியதான பாட்டைக் கேட்டு, ரைவதக பர்வதத்திற்குச் (மலைக்குச்) சென்றான். 

அங்கு உபவனத்தில் தாமரை மலர் மாலை அணிந்து, பார்க்கப் பதினாயிரம் கண்கள் வேண்டும்படி மிகவும் அழகான ஸமஸ்த அங்கங்களுடையவனும், ஸ்த்ரீகளின் கூட்டத்தினிடையில் இருப்பவனும், யாதவ ச்ரேஷ்டனுமாகிய பலராமன் மத்யபானம் செய்து, மதத்தினால் கண்கள் தழதழத்துப் பாடிக் கொண்டு, மதித்த (மதம் கொண்ட) யானை போல் கம்பீரமான உருவத்துடன் திகழ்வுற்றிருக்க அவ்வானரன் கண்டான். 

ஞாயிறு, 14 மார்ச், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 282

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – அறுபத்து ஆறாவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ணன் பௌண்ட்ரகாதிகளை ஸம்ஹரித்தல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பலராமன் நந்தகோகுலம் போகையில், கரூஷ தேசாதிபதியாகிய பௌண்ட்ரக மன்னவன் அறிவு கேடனாகி (கெட்டு), தானே வாஸுதேவனென்று நினைத்து, ஸ்ரீக்ருஷ்ணனுக்குத் தூதனை அனுப்பினான். அவன், “நீ ஷாட்குண்யபூர்ணனாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) வாஸுதேவனே; உலகங்களைப் பாதுகாக்கும் பொருட்டு இவ்வாறு அவதரித்திருக்கின்றாய்” என்று அறியாத மூடர்களால் துதித்து, உத்ஸாஹ மூட்டப்பெற்று, தன்னையே பக்தர்களைக் கைவிடாத மஹானுபாவனான வாஸுதேவனாக நினைத்துக்கொண்டான்.

சிறுவர்களால் “நீ மன்னவன்” என்று மன்னவனாக ஏற்படுத்தப்பட்ட ஒரு சிறுவன் போல அறியாத மூடர்களால் நீயே வாஸுதேவனென்று மொழியப்பெற்று, தன்னை வாஸுதேவனென்று ப்ரமித்து, மதிகெட்டு, ஒருவர்க்கும் அறிய முடியாத உண்மையுடைய ஸ்ரீக்ருஷ்ணனுக்கு “நீ வாஸுதேவனல்லை. நானே வாஸுதேவன்” என்னும் இவ்விஷயத்தை அறிவிக்கும் பொருட்டு த்வாரகைக்குத் தூதனை அனுப்பினான். 

அத்தூதனும் த்வாரகைக்குச் சென்று, தாமரைக்கண்ணனும், ப்ரபுவுமாகிய ஸ்ரீக்ருஷ்ணன் ஸபையில் வீற்றிருக்கக் கண்டு, தங்கள் அரசன் சொல்லியனுப்பின செய்தியை மொழிந்தான். “ப்ராணிகளுக்கு அருள்புரியும் பொருட்டு இப்பூமியில் அவதரித்த வாஸுதேவன் நானொருவனே. மற்றொருவனுமல்லன். நீ பொய்யாகவே வாஸுதேவனென்று பெயரிட்டுக் கொண்டிருக்கின்றாய். ஆகையால் அந்தப் பெயரைத் துறந்து விடுவாயாக. ஸாத்வதனே! (யாதவனே!) நீ என்னுடைய அடையாளங்களை மூடத்தனத்தினால் தரித்துக் கொண்டிருக்கின்றாய். அவற்றைத் துறந்து என்னைச் சரணம் அடைவாயாக. இல்லையாயின், எனக்கு யுத்தம் கொடுப்பாயாக என்று அவன் சொல்லியனுப்பின வசனங்களை அத்தூதன் மொழிந்தான். 

அப்பொழுது ஸபையிலிருந்த உக்ரஸேனன் முதலியவர்கள் மந்த புத்தியனாகிய (புத்தி குறைவான) பௌண்ட்ரகனுடைய அப்பிதற்றலைக் கேட்டு, உரக்கச் சிரித்து, பரிஹாஸம் (கேலி) செய்தார்கள். அவர்களுடைய பரிஹாஸ (கேலி) கதையின் முடிவில் மஹானுபாவனாகிய ஸ்ரீக்ருஷ்ணன், “மூடனே! நீ எந்தெந்த அடையாளங்களை ஏற்றுக்கொண்டாயோ, எவற்றைக் கொண்டு நீ இவ்வாறு பிதற்றுகின்றாயோ, அவற்றையெல்லாம் விடும்படி செய்கிறேன்.

அறிவு கெட்ட மூடனே! எந்த வாயினால் நீ இவ்வாறு பிதற்றுகின்றாயோ, அத்தகைய வாயை மூடிக் கொண்டு, மாம்ஸத்தை விரும்புகிற கங்கம், க்ருத்ரம், வளம் முதலிய பஷிகளால் சூழப்பட்டுப் படுக்கப் போகின்றாய். அவ்விடத்தில் நீ, நாய், நரி, முதலிய ஜந்துக்களுக்குச் சரணமாவாய். (என்னால் அடியுண்டு பூமியில் விழுந்திருக்கின்ற உன்னைச் சீக்ரத்தில் நாய், நரி, கழுதை முதலிய ஜந்துக்கள் பிடுங்கித் திண்ணப் போகின்றன)” என்று அத்தூதனைக் குறித்து மொழிந்தான். 

தூதனும் இவ்வாறு ஸ்ரீக்ருஷ்ணன் மொழிந்த வெசவுகளை (திட்டிய வார்த்தைகளை) எல்லாம் அப்படியே தன் ப்ரபுவிடம் கொண்டு போய்ச் சேர்த்தான். ஸ்ரீக்ருஷ்ணனும் ரதத்தில் ஏறிக் கொண்டு, காசிக்கு அருகாமையில் வந்து சேர்ந்தான். மஹாரதனான (10000 வில்லாலிகளுடன் தனித்துப் போர் செய்யும் திறமை உடையவன்) பெளண்ட்ரகனும் ஸ்ரீக்ருஷ்ணனுடைய முயற்சியை அறிந்து, பல அக்ஷௌஹிணி (தேர் 21870; குதிரை 65610; யானை 21870; காலாட் படை 109350 கொண்ட பெரும் படை அக்ஷௌஹிணி ஸைன்யம் எனப்படும்) ஸைன்யங்களோடு கூடி, பட்டணத்தினின்று புறப்பட்டான். 

சனி, 13 மார்ச், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 281

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – அறுபத்து ஐந்தாவது அத்தியாயம்

(பலராமன் கோகுலம் போதலும், யமுனா நதியைக் கலப்பையினால் பிடித்திழுத்தலும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- குருவம்சத்து அரசர்களில் சிறந்தவனே! மஹானுபாவனாகிய பலராமன் பந்துக்களைப் பார்க்க விரும்பி, மிகுந்த ஆவலுடன் ரதத்தில் ஏறிக்கொண்டு, கோகுலம் போனான். அவன் அவ்விடம் சென்று நெடுநாளாய்ப் பார்க்க வேண்டுமென்னும் பேராவலுற்ற கோபர்களாலும், கோபிகைகளாலும் அணைக்கப்பட்டு, தாய், தந்தைகளை நமஸ்கரித்து, அவர்களால் ஆசீர்வாதங்கள் செய்து, அபிநந்தனம் செய்யப்பெற்றான். 

தாய், தந்தைகளாகிய அந்த யசோதை - நந்தகோபன் இவர்கள், “தாசார்ஹனே (தசார்ஹன் என்கிற யாதவ மன்னனின் வம்சத்தில் உதித்தவனே)! உலகங்களை ஆள்பவனே! உன் தம்பியும் நீயுமாய் எங்களை நெடுங்காலம் பாதுகாத்து வருவாயாக” என்று மொழிந்து, அவனை மடியில் ஏறிட்டு, ப்ரேமத்தினால் அணைத்து, ஸந்தோஷத்தினாலுண்டான கண்ணீர்களால் அவனை நனைத்தார்கள். அப்பால், அந்த ராமன் கோபவ்ருத்தர்களையும் (இடையர்களில் வயது சென்றவர்களை) விதிப்படி நமஸ்கரித்து, சிறியவர்களால் நமஸ்காரம் செய்யப் பெற்று, தன்னுடைய வயது, ஸ்னேஹம், ஸம்பந்தம் இவைகளுக்குத் தகுந்தபடி பரிஹாஸம் (கேலி) செய்வது, கையைப் பிடிப்பது, ஆலிங்கனம் செய்வது முதலியவைகளால் கோபர்களோடு கலந்து, உட்கார்ந்தான். 

அந்தக் கோபர்கள், இளைப்பாறி ஸுகமாக உட்கார்ந்திருக்கின்ற ராமனைச் சுற்றிலும் சூழ்ந்து கொண்டு, ப்ரீதியினால் தழதழத்த உரையுடன், பந்துக்களின் க்ஷேமம் விசாரித்து, தாமரைக்கண்ணனாகிய ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் படிந்த மதியுடையவர்களாகி, “ராமா! நம் பந்துக்கள் அனைவரும், பெண்டிர்களோடும், பிள்ளைகளோடும் க்ஷேமமாயிருக்கிறார்களா? நீங்கள் எங்களை நினைக்கிறீர்களா? பாபிஷ்டனாகிய கம்ஸன் தெய்வாதீனமாய் மாண்டான். இது நமக்குப் பெரிய ஆநந்தம். நம் பந்துக்கள் அனைவரும் பெரிய வருத்தத்தினின்று விடுபட்டார்கள். இதுவும் நமக்குப் பெரிய ஆநந்தம். சில சத்ருக்களைக் கொன்று, சில சத்ருக்களை வென்று, நம் பந்துக்கள் ஜலதுர்க்கமான (நீர் அரணான) த்வாரகையை அடைந்து ஸுகமாயிருக்கிறார்களல்லவா? இது நம் பாக்யமே” என்றார்கள். 

கோபிகைகள், பலராமனைக் கண்டு களித்து, ஆதரவுடன் புன்னகை செய்து கொண்டு, “ஸ்ரீக்ருஷ்ணன் பட்டணத்து மடந்தையர்களுக்கு அன்பனாகி ஸுகமாயிருக்கிறானா? அவன் பந்துக்களையாவது, தாய், தந்தைகளையாவது நினைக்கிறானா? திரண்டு உருண்டு நீண்ட புஜ தண்டங்களையுடைய (கைகளை உடைய) ஸ்ரீக்ருஷ்ணன், எங்கள் பணிவிடையை நினைக்கிறானா? தாசார்ஹனே! “ப்ரபூ! தாய், தந்தைகளையும், ப்ராதாக்கள், கணவர்கள், பிள்ளைகள், பகினிகள் (உடன் பிறந்தவள்) முதலிய துறக்க முடியாத பந்துக்களையெல்லாம் எவனுக்காக நாங்கள் துறந்தோமோ, அந்த ஸ்ரீக்ருஷ்ணன், அப்படிப்பட்ட எங்களை அந்த க்ஷணமே துறந்து புறப்பட்டுப்போனான். ஆகையால், அவன் ஸ்னேஹத்தை வேரோடு அறுத்து விட்டவன். ஆனால், “நீங்கள் அவனை ஏன் தடுத்திருக்கலாகாது” என்கிறாயோ? அப்படிப்பட்ட அவன் போகும்போது “ கோபியர்களே! நாங்கள் உங்களுக்குக் கடன் பட்டிருக்கிறோம். உங்கள் அன்புக்கு எங்களால் ஈடு செய்ய முடியாது” என்று இனிக்க இனிக்கப் பேசிய வார்த்தையை ஒன்றுமறியாத மடந்தையர்கள் எவ்வாறு நம்பாதிருக்க முடியும்? (நம்பும்படி நல்வார்த்தை சொல்லி வஞ்சித்துப் போனான்.)

வெள்ளி, 12 மார்ச், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 280

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – அறுபத்து நான்காவது அத்தியாயம்

(ந்ருக உபாக்யானம் – ந்ருக மன்னனின் கதை)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ராஜனே! ஒருகால், ஸாம்யன், ப்ரத்யும்னன், சாருபானு, கதன் முதலிய யதுகுமாரர்கள் விளையாடுவதற்காக உபவனத்திற்குச் சென்றார்கள். அவர்கள், அவ்விடத்தில் வெகுநேரம் விளையாடித் தண்ணீர் தாஹம் உண்டாகப் பெற்று, ஜலத்தைத் தேடிக்கொண்டு திரியும் பொழுது, ஓரிடத்தில் ஜலமில்லாத கிணற்றில் இருப்பதும், பெரியதும், அற்புதமுமாகிய ஓணானென்னும் ஒரு ஜந்துவைக் (உயிரினத்தைக்) கண்டார்கள். 

அந்த யாதவ குமாரர்கள், பர்வதம் போன்ற ஓணானைக் கண்டு மனத்தில் வியப்புற்று, மன இரக்கத்துடன் அதை எடுக்க ப்ரயத்னம் (முயற்சி) செய்தார்கள். கிணற்றில் விழுந்திருக்கின்ற அவ்வோணானை, அப்பாலகர்கள் தோல் கயிறுகளாலும், நூல் கயிறுகளாலும் கட்டி, மேலெடுக்க முயன்றும் வல்லமையற்று, ஆவலுடன் அந்த வ்ருத்தாந்தத்தை ஸ்ரீக்ருஷ்ணனுக்குச் சொன்னார்கள். 

தாமரைக் கண்ணனும், ஷாட்குண்யபூர்ணனும் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனும்), உலகங்களைப் பாதுகாப்பவனுமாகிய ஸ்ரீக்ருஷ்ணன், அவ்விடம் போய்ப் பார்த்து, அதை அவலீலையாகவே (விளையாட்டாகவே) இடக்கையினால் எடுத்தான். அவ்வாறு எடுக்கப்பட்ட அவ்வோணான், உத்தம ச்லோகனாகிய ஸ்ரீக்ருஷ்ணனுடைய கரம் (கை) பட்ட மாத்ரத்தில், தத்க்ஷணமே (அந்த நொடியே) அந்த ஓணான் உருவத்தைத் துறந்து, உருக்கி அழுக்கெடுத்த பொன் போன்ற அழகிய நிறத்துடன் அற்புதமான ஆபரணங்களும், ஆடைகளும், பூமாலையும் அணிந்து விளங்குகின்ற ஒரு தேவனாகத் தோற்றினான். ஸ்ரீக்ருஷ்ணன், அவனுக்கு ஒணான் ஜன்மம் வந்ததற்குக் காரணம் இன்னதென்பதை அறிந்தவனாயினும், அதை ஜனங்களுக்கு வெளியிட விரும்பி வினவினான்.

ஸ்ரீக்ருஷ்ணன் சொல்லுகிறான்:– மிகுந்த பாக்யமுடையவனே! சிறந்த உருவமுடைய நீ யாவன். நாங்கள் உன்னைத் தேவ ச்ரேஷ்டனென்று நிச்சமாய் நினைக்கின்றோம். நீ இத்தகைய நிஹீன ஜன்மம் (தாழ்ந்த பிறவி) பெறுதற்கு உரியவனல்லை. மிகுந்த மங்கள ஸ்வரூபனே! நீ எந்தக் கர்மத்தினால் இத்தசையை அடைந்தாய். எங்களுக்குச் சொல்லக்கூடுமென்று நீ நினைப்பாயாயின், உன்னைப்பற்றி அறிய விரும்புகிற எங்களுக்கு இதையெல்லாம் விசதமாகச் (விரிவாகச்) சொல்வாயாக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- காண்போர் மனம் களிக்கும்படி மிகவும் அழகான உருவமுடைய ஸ்ரீக்ருஷ்ணனால் இவ்வாறு வினவப்பெற்ற மானிட ஜாதியாகிய அம்மன்னவன், ஸூர்யனோடொத்த ஒளியுடைய கிரீடத்துடன் வணங்கி, இவ்வாறு மொழிந்தான்.

ந்ருகன் சொல்லுகிறான்:- நான்  ந்ருகனென்னும் பெயருடைய ராஜ ச்ரேஷ்டன், இக்ஷ்வாகுவின் புதல்வன். ப்ரபூ! கொடை வள்ளல்கள் குணத்தைப் புகழும் வரலாற்றில் என்னைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். நாதனே! நீ ஸமஸ்த ப்ராணிகளுடைய புத்தியையும் ஸாக்ஷாத்கரிப்பவன். உன்னறிவு, காலத்தினால் அழிகிறதில்லை. ஆகையால், உனக்கு எதுதான் தெரியாது? ஆயினும், உன்னுடைய ஆஜ்ஞையினால் (கட்டளையினால்) சொல்லுகிறேன். 

புதன், 10 மார்ச், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 279

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – அறுபத்து மூன்றாவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ணன் யாதவ ஸைன்யத்துடன் சென்று, பாணனோடு யுத்தம் செய்கையில், ருத்ரன் ஸஹாயமாக வந்து, தோல்வியடைந்து, ஜ்வரத்தை (ஒரு வகை அஸ்த்ரம்) ப்ரயோகிக்க, ஸ்ரீக்ருஷ்ணன் அதைத் தடுக்க, அந்த ஜ்வரமும், ருத்ரனும் ஸ்ரீக்ருஷ்ணனை ஸ்தோத்ரம் செய்தல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பாரதனே! அநிருத்தனுடைய பந்துக்கள், அவனைக் காணாமல் வருந்திக் கொண்டிருக்கையில், வர்ஷா (மழைக்) காலமாகிய நான்கு மாதங்கள் கடந்தன. அவனுடைய பந்துக்களாகிய அந்த வ்ருஷ்ணிகள், நாரதர் மூலமாய் அவன் காணாது போன வ்ருத்தாந்தத்தின் விவரத்தையும், அவன் சத்ருக்களை வதித்தது முதலிய வ்ருத்தாந்தத்தையும், பாணனால் கட்டுண்டிருப்பதையும் கேள்விப்பட்டு, ஸ்ரீக்ருஷ்ணனால் பாதுகாக்கப்பட்டு, சோணிதபுரத்திற்குப் போனார்கள். 

ப்ரத்யும்னன், யுயுதானன், கதன், ஸாம்பன், ஸாரணன், நந்தன், பநந்தன், பத்ரன் ஆகிய இவர்கள் ராம, க்ருஷ்ணர்களைத் தொடர்ந்து பன்னிரண்டு அக்ஷௌஹிணி (தேர் 21870; குதிரை 65610; யானை 21870; காலாட் படை 109350 கொண்ட பெரும் படை அக்ஷௌஹிணி ஸைன்யம் எனப்படும்) ஸைன்யத்துடன் சென்று, பாணனுடைய நகரமாகிய சோணிதபுரத்தைச் சுற்றிலும் சூழ்ந்து, எல்லா திசைகளிலும் தகைந்தார்கள். 

அவர்கள், பட்டணத்து உத்யானங்களையும் (தோட்டங்களையும்), கோட்டைகளையும், கோட்டை மேல் கட்டடங்களையும், கோபுரங்களையும் முறித்துப் பாழ் செய்வதைக் கண்டு, பாணன் கோபமுற்று,  தானும் அவர்களைப் போலவே பன்னிரண்டு அக்ஷௌஹிணி ஸைன்யத்துடன் கூடிப் புறப்பட்டான். அப்பொழுது ருத்ரன், பாணனுக்கு உதவி செய்யும் பொருட்டு, தன் புதல்வனாகிய ஸுப்ரஹ்மண்யனோடு கூடி, ப்ரமதகணங்களால் (சிவனின் சேவகர்கள்) சூழப்பட்டு, நந்தியென்னும் வ்ருஷபத்தின் மேல் ஏறிக்கொண்டு வந்து, ராம, க்ருஷ்ணர்களோடு யுத்தம் செய்தான். ஸ்ரீக்ருஷ்ணன், ருத்ரன் இவர்களுக்கும், ப்ரத்யும்னன் - ஸுப்ரஹ்மண்யன் இவர்களுக்கும், மிகவும் துமுலமான (ஆரவாரம், குழப்பத்துடன் கூடிய) யுத்தம் நடந்தது. 

பலராமன், கும்பாண்டன் கூபகர்ணன் இவ்விருவரோடும், ஸாம்பன் பாணபுத்ரனோடும், ஸாத்யகி பாணனோடும் யுத்தம் செய்தார்கள். அந்த யுத்தம், மிகவும் அற்புதமாகிக் காண்போர்களுக்கும், கேட்போர்களுக்கும், மயிர்க்கூச்சலை விளைக்கக் கூடியதாயிருந்தது. ப்ரஹ்மதேவன் முதலிய தேவச்ரேஷ்டர்களும், ஸித்தர், சாரணர், கந்தர்வர், அப்ஸர மடந்தையர், யக்ஷர் ஆகிய இவர்களும் விமானங்களில் ஏறிக்கொண்டு, யுத்தம் பார்க்க வந்தார்கள். 

ஸ்ரீக்ருஷ்ணன், ருத்ரனைத் தொடர்ந்து வந்த பூதர், ப்ரேதர், குஹ்யகர், டாகினிகள், யாதுதானர், யக்ஷர், ராக்ஷஸர், விநாயகர், பூதங்கள், மாத்ரு தேவதைகள், பிசாசர், கூச்மாண்ட கணங்கள், ப்ரஹ்ம ராக்ஷஸர் ஆகிய இக்கூட்டங்களையெல்லாம் தன்னுடைய சார்ங்கமென்னும் தனுஸ்ஸினின்று புறப்படுகின்ற கூரிய நுனியுள்ள பாணங்களால் பறந்தோடத் துரத்தினான். பினாகமென்னும் தனுஸ்ஸை (வில்லை) ஏந்தின ருத்ரன், ஸ்ரீக்ருஷ்ணன் மேல் பலவிதமான அஸ்த்ரங்களை ப்ரயோகித்தான். சார்ங்கம் என்கிற வில்லை ஏந்திய அப்பரமன், வியப்பின்றி அவற்றையெல்லாம் உரிய பதில் அஸ்த்ரங்களால் தடுத்து விட்டான். அம்மஹானுபாவன், ப்ரஹ்மாஸ்த்ரத்திற்கு ப்ரஹ்மாஸ்த்ரத்தையும், வாயவ்யாஸ்த்திரற்குப் பர்வதாஸ்த்ரத்தையும், ஆக்னேயாஸ்த்ரத்திற்குப் பர்ஜன்யாஸ்த்ரத்தையும், பாசுபதாஸ்த்ரத்திற்கு நாராயணாஸ்த்ரத்தையும், ப்ரயோகித்தான். மற்றும், அந்த ஸ்ரீக்ருஷ்ணன் ருத்ரனை ஜ்ரும்பண (கொட்டாவி) அஸ்த்ரத்தினால் கொட்டாவி விட்டு உறக்கம் தலையெடுத்து, மதி மயங்கும்படி செய்து, பாணனுடைய ஸைன்யத்தைக் (படையை) கத்தி, கதை, பாணம், இவைகளால் அடித்தான். 

ஸுப்ரஹ்மண்யன் ப்ரத்யும்னனுடைய பாண ஸமூஹங்களால் நாற்புறத்திலும் பீடிக்கப்பட்டு, அவயவங்களினின்று ரத்தத்தைப் பெருக்கிக் கொண்டு, மயில் வாஹனத்துடன் யுத்த பூமியினின்று புறப்பட்டுப் போனான். 

செவ்வாய், 9 மார்ச், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 278

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – அறுபத்து இரண்டாவது அத்தியாயம்

(பாணனுடைய புதல்வியாகிய உஷை, ஸ்வப்னத்தில் (கனவில்) அநிருத்தனைக் கண்டு, அவனிடம் மோஹம் கொண்டு (மயங்கி), தன் ஸகியாகிய சித்ரலேகையால் அவனை வரவழைத்து, அவனுடன் கலந்திருக்க, பாணன் அவனைக்கண்டு, சிறையில் அடைத்தல்)

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- யாதவ ஸ்ரேஷ்டனாகிய அநிருத்தன், பாணனுடைய புதல்வியாகிய உஷை என்பவளை மணம் புரிந்தானென்றும், அப்பொழுது ருத்ரனுக்கும் ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் கோரமான மஹாயுத்தம் நடந்ததென்றும், கேள்விப்பட்டிருக்கிறேன். அதையெல்லாம் எனக்கு நன்றாகச் சொல்வீராக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மஹானுபாவனாகிய பலி சக்ரவர்த்திக்கு நூறு பிள்ளைகள். அவர்களில் ஜ்யேஷ்டன், பாணனென்று ப்ரஸித்தனாயிருந்தான். பலி சக்ரவர்த்தி, வாமன ரூபியான ஸ்ரீமஹாவிஷ்ணுவுக்குப் பூமண்டலத்தை எல்லாம் தானம் செய்தானென்பது ப்ரஸித்தமே அல்லவா. அத்தகைய பலிசக்ரவர்த்தியின் ஒளரஸ (தன் மனைவியிடத்தில் பிறந்த) குமாரன், பாணனென்பவன். அவன், ஸர்வகாலமும் சிவனைப் பணிவதில் விருப்பமுடையவனாயிருந்தான். அவன், நல்லொழுக்கத்தினால் அனைவர்க்கும் புகழத் தகுந்தவனும், தானசீலனும், மிகுந்த மதியுடையவனும், ஸத்யம் தவறாது நடப்பவனும், ருத்ரனைப் பணிகையாகிற வ்ரதத்தைத் திடமாக நடத்தும் தன்மையனுமாய் இருந்தான். முன்பு, அவன் அழகியதான சோணிதபுரத்தில் ராஜ்யம் செய்துகொண்டிருந்தான். 

ருத்ரனுடைய அனுக்ரஹத்தினால் தேவதைகள் அவனுக்குப் பணியாளரைப் போன்றிருந்தார்கள். ஆயிரம் புஜங்களையுடைய (கைகளை உடைய) அப்பாணாஸுரன், ருத்ரன் தாண்டவம் (ஓர்வகை நர்த்தனம்) செய்யும் பொழுது, ஆயிரம் புஜங்களாலும் (கைகளாலும்) வாத்யம் வாசித்து அவனைக் களிப்புறச் செய்தான். மஹானுபாவனும், ஸமஸ்த பூதங்களுக்கும் ப்ரபுவும், சரணம் அடைந்தவர்களைக் காக்க வல்லவனும், பக்தர்களிடத்தில் வாத்ஸலயமுடையவனுமாகிய ருத்ரன், ஸந்தோஷம் அடைந்து, இஷ்டமான வரம் வேண்டும்படி அந்தப் பாணனைத் தூண்டினான். அவனும் “நீ என் பட்டணத்திற்குக் காவலனாயிருக்க வேண்டும்” என்று வரம் வேண்டினான். வீர்யத்தினால் கொடிய மதமுடைய அப்பாணாஸுரன், ஒருகால் பார்ச்வத்தில் (அருகில்) இருக்கின்ற ருத்ரனுடைய பாதார விந்தங்களை இரவியின் (ஸூர்யனின்) ஒளி போன்ற ஒளியுடைய கிரீடத்தினால் ஸ்பர்சித்துக் கொண்டு, அவனைக் குறித்து இவ்வாறு மொழிந்தான்.

பாணன் சொல்லுகிறான்:- மஹாதேவனே! நீ உலகங்களுக்கு எல்லாம் குருவும் ஈச்வரனுமாயிருப்பவன். உன்னையொழிய மற்ற புருஷர்கள் அனைவரும் விருப்பங்கள் நிறைவேறப் பெறாதவர்களே. உன் பாதார விந்தங்கள் அவர்களுடைய விருப்பங்களையெல்லாம் கல்ப வ்ருக்ஷம் போல் நிறைவேற்றுகின்றன. அத்தகைய மஹானுபாவனாகிய உன்னை நமஸ்கரிக்கின்றேன். தேவனே! நீ எனக்கு ஆயிரம் புஜங்களைக் (கைகளைக்) கொடுத்தாய். அவை எனக்குக் கேவலம் பாரத்தின் பொருட்டே இருக்கின்றன. மூன்று லோகங்களிலும் உன்னைத் தவிர என்னோடெதிர்த்து யுத்தம் செய்யத் தகுந்த இணையானவன் எவனும் அகப்படவில்லை. நான் நிரம்பவும் தினவு (அரிப்பு) எடுக்கப்பெற்ற புஜங்களால் (கைகளால்) யுத்தம் செய்ய விரும்பி, பர்வதங்களையெல்லாம் சூரணம் (பொடி) செய்து கொண்டு திக்கஜங்களை எதிர்த்துச் சென்றேன். அவையும் பயந்து ஓடிப்போயின.