தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – எழுபத்தொன்றாவது அத்தியாயம்
(உத்தவன் யுதிஷ்டிர யாகத்திற்குப் போக வேண்டுமென்று நிரூபிக்கையில், ஸ்ரீக்ருஷ்ணன் அப்படியே அங்கீகரித்துப் போதல்)
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மிகுந்த மதியுடைய உத்தவன், தேவ ரிஷியாகிய நாரதர் மொழிந்ததைக் கேட்டு, ஜராஸந்தனை எதிர்க்கையே முக்யமென்கிற ஸபிகர்களின் (ஸபையோர்களின்) அபிப்ராயத்தையும், ராஜஸூயத்திற்குப் போக வேண்டுமென்கிற ஸ்ரீக்ருஷ்ணனுடைய அபிப்ராயத்தையும் அறிந்து, மேல்வருமாறு கூறினான்.
உத்தவன் சொல்லுகிறான்:- தேவனே! “அத்தையின் பிள்ளையாகிய யுதிஷ்டிரன் யாகம் செய்யப் போகிறான். அவனுக்கு நீ ஸஹாயம் (உதவி) செய்யவேண்டும்” என்று நாரத மஹரிஷி மொழிந்தாரல்லவா? அதை அவச்யம் செய்யவேண்டும். சரணம் விரும்புகிற ராஜர்களைக் காக்க வேண்டியதும் அவச்யமே. இரண்டும் முக்யமான கார்யங்களே.
ப்ரபூ! திக்விஜயம் செய்த பின்பு தான் ராஜஸூய யாகம் நடத்தவேண்டும். ஆகையால், முன்பு திக்விஜயம் செய்யவேண்டும். அதற்கு நீ உதவி செய்ய வேண்டியது அவச்யமாகையால், நாம் இங்கிருந்து முதலில் இந்த்ர ப்ரஸ்தத்திற்குப் போகவேண்டும். அங்கு, யுதிஷ்டிரனால் அனுமதி கொடுக்கப் பெற்று, அவனுடைய ப்ரயோஜனத்திற்காகவே, ஜராஸந்தனை வதிப்பாயாக. அவ்வாறு திக்விஜயத்திற்காக ஜராஸந்தனைக் கொல்வது, ராஜஸூயத்தை நடத்துவது, ராஜர்களை விடுவிப்பது ஆகிய இரண்டு ப்ரயோஜனங்களையும் (பலன்களையும்) நிறைவேற்றும் என்று எனக்குத் தோற்றுகிறது.
கோவிந்தனே! முதலில் ராஜஸூயத்திற்குப் போவோமாயின், இதனாலேயே நாம் விரும்புகிற பெரிய ப்ரயோஜனமும் கைகூடுகின்றது. ஜராஸந்தனைக் கொன்று ராஜர்களைச் சிறையினின்று விடுவிக்கிற உனக்கு புகழும் உண்டாகும். அந்த ஜராஸந்தன், பதினாயிரம் யானை பலமுடையவன். பிறர்க்குப் பொறுக்கமுடியாத கொடிய பலமுடைய பீமஸேனனைத் தவிர மற்ற பலிஷ்டர்கள் (பலசாலிகள்) அனைவர்க்கும் அவன் வருந்தியும் பொறுக்க முடியாதவன். பீமஸேனன் அவனோடொத்த பலமுடையவனாகையால், அவனை வெல்ல வல்லனே. ஆனால், அவனை த்வந்த்வ (ஒருவரோடு ஒருவர் செய்யும்) யுத்தத்தினால் வெல்ல வேண்டுமன்றி, நூறு அக்ஷௌஹிணி (தேர் 21870; குதிரை 65610; யானை 21870; காலாட் படை 109350 கொண்ட பெரும் படை அக்ஷௌஹிணி ஸைன்யம் எனப்படும்) ஸைன்யங்கள் (படைகள்) போர் செய்தாலும் வெல்ல முடியாது. அளவற்ற ஸைன்யங்களையுடைய அம்மகத ராஜனோடு பீமஸேனனுக்கு த்வந்த்வ (ஒருவரோடு ஒருவர் செய்யும்) யுத்தம் எப்படி நேருமென்றால், அவன் ப்ராஹ்மண விச்வாஸமுடையவன். அவர்கட்கு வேண்டினவற்றை எல்லாம் நிறைவேற்றிக் கொடுக்கும் தன்மையன். அவன், ப்ராஹ்மணர்கள் வேண்டினால், ஒருகாலும் மறுக்கமாட்டான். ஆகையால், பீமஸேனன் ப்ராஹ்மண வேஷம் பூண்டு, அவனிடம் சென்று, த்வந்த்வ (ஒருவரோடு ஒருவர் செய்யும்) யுத்தத்தை யாசிக்க வேண்டும். நீ ஸமீபத்தில் இருப்பாயாயின், த்வந்த்வ (ஒருவரோடு ஒருவர் செய்யும்) யுத்தம் செய்கின்ற அம்மகதராஜனைப் பீமஸேனன் வதித்து விடுவான்.
ப்ரபஞ்சத்தின் (உலகத்தின்) ஸ்ருஷ்டி (படைப்பு), ஸம்ஹாரங்களுக்கு (அழித்தல்) நீயே ஆதிகாரணன். காலத்தை சரீரமாக உடையவனும், ப்ராக்ருத (ஸத்வ, ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களுடன் கூடிய) உருவங்களற்றவனுமாகிய உனக்கு, ப்ரஹ்ம, ருத்ரர்களிருவரும் அம்சங்களே. அவ்விருவர் மூலமாய் நீயே ஸ்ருஷ்டி (படைப்பு), ஸம்ஹாரங்களை (அழித்தல்) நடத்துகின்றாய். இவ்வாறு நீ ஜராஸந்தனை வதிப்பாயாயின், அவனால் தகையுண்ட (சிறை வைக்கப்பட்ட) ராஜர்களின் பத்னிகள், தங்கள் சத்ருவாகிய ஜராஸந்தனைக் கொன்றதும், தங்களைச் சிறையினின்று விடுவித்ததுமாகிய நிர்மலமான (தூய்மையான) உன் சரித்ரத்தை, தத்தம் க்ருஹங்களில் குழந்தைகளைச் சீராட்டுவது முதலிய ஸமயங்களில் பாடுவார்கள். கோபிகைகளும், உன்னைச் சரணம் அடைந்த முனிவர்களும், நாங்களும், முதலையிடத்தினின்று யானையை விடுவித்தது, ராவணனிடத்தினின்று ஜனகராஜன் திருமகளான ஸீதையை விடுவித்தது, கம்ஸனிடத்தினின்று தாய், தந்தைகளான தேவகி, வஸுதேவர்களை விடுவித்தது, முதலிய உன் வ்ருத்தாந்தங்களைப் (கதைகளைப்) பாடுவது போல, அவர்களும் இந்த வ்ருத்தாந்தத்தைப் பாடுவார்கள்.