வெள்ளி, 31 மார்ச், 2023
வியாழன், 30 மார்ச், 2023
புதன், 29 மார்ச், 2023
செவ்வாய், 28 மார்ச், 2023
திங்கள், 27 மார்ச், 2023
ஞாயிறு, 26 மார்ச், 2023
சனி, 25 மார்ச், 2023
வெள்ளி, 24 மார்ச், 2023
வியாழன், 23 மார்ச், 2023
புதன், 22 மார்ச், 2023
செவ்வாய், 21 மார்ச், 2023
திங்கள், 20 மார்ச், 2023
ஞாயிறு, 19 மார்ச், 2023
சனி, 18 மார்ச், 2023
வெள்ளி, 17 மார்ச், 2023
செவ்வாய், 14 மார்ச், 2023
திங்கள், 13 மார்ச், 2023
ஞாயிறு, 12 மார்ச், 2023
சனி, 11 மார்ச், 2023
வியாழன், 9 மார்ச், 2023
புதன், 8 மார்ச், 2023
செவ்வாய், 7 மார்ச், 2023
திங்கள், 6 மார்ச், 2023
அருணகிரி ராமாயணம் - 3 - சித்ரா மூர்த்தி
கிஷ்கிந்தா காண்டத்தின் மிக முக்கிய நிகழ்ச்சி வாலி வதம். 'வாலியை வென்று, சுக்ரீவன் தலைமையில் எழுபது வெள்ளம் சேனையைத் திரட்ட வேண்டும்; வரிசைக் கிரமமாக ஓரிடம் விட்டு ஓரிடம் தேடிச் செல்வது உசிதமல்ல. உலகிலுள்ள பல இடங்களுக்கும் ஒரே சமயத்தில் பலர் சென்று சீதாப்பிராட்டியைத் தேட வேண்டும்' - இவ்வாறு ராமனுக்கு யோசனை சொல்வது நமது பக்த அனுமன்தான். 'அனுமனொடே எழுபது வௌங்கவி சேனா சேவித நிருபன்' என்று திருவலஞ்சுழியில் பாடும் அருணகிரி நாதர், இஞ்சுகுடிப் பாடலில்,
'சங்க தசக்ரிவனொடு தூது சொல வள
மிண்டு செயப்போன வாயு சுதனொடு
சம்பவ சுக்ரிவனாதி எழுபது வௌமாகச்
சண்டகவிச் சேனையால் முன் அலைகடல்
குன்றிலடைத்தேறி மோச நிசிசரர்
தங்கிளை கெட்டோட ஏவ சரபதி'
('குங்கும கற்பூர' - திருப்புகழ்)
-என்று பாடுகிறார்.
வாலி-சுக்ரிவன் இடையே போர் துவங்குகிறது. எதிர் எதிரே இரு குன்றுகள் நின்று போரிடுவது போலத் தோன்றுகிறதாம் அக்காட்சி! ராமனால் சுக்ரிவன்-வாலி இருவரையும் பிரித்தறிய இயலவில்லை. 'அம்பு தொடுத்து அது சுக்ரிவன் மீது பாய்ந்து விட்டால் அடைக்கலம் அளித்துவிட்டு, பின் அவனையே வீழ்த்திய பாவத்துக்கு ஆளாவேன்' என்று எண்ணிய ராமன் சுக்ரிவனைக் காட்டுக் கொடியின் மலர் மாலையை அணிந்து செல்லுமாறு கூறுகிறான். கம்பன் இக்காட்சியை,
'உமை வேற்றுமை தெரிந்திலம் கொடிப்பூ மிலைந்து
செல்கென விடுத்தனன் எதிர்த்தனன் மீட்டும்'
-என்று பாடுகிறான். ஆனால் அருணகிரிநாதரோ இக்காட்சியைப் பாடும்பொழுது அக்கொடிப்பூவின் பெயரையும் நமக்குத் தெரிவிக்கிறார்.
'காந்தள் மலர்த்தொடை யிட்டெதிர் விட்டொரு
வேந்து குரக்கு ரணத்தொடு மட்டிடு
காண்டிப அச்சுதன் உத்தம சற்குணன்'
-என்கிறார். (குரக்கு வேந்து = குரங்கரசன் வாலி
காந்தள் மலர் = கார்த்திகைப் பூ)
('கூந்தல் அவிழ்த்து' திருப்புகழ்)
வாலிவதம் பற்றிப் பல இடங்களில் பாடுகிறார் அருணகிரியார். ஒரு சிலவற்றைப் பார்ப்போம்.
ஞாயிறு, 5 மார்ச், 2023
அருணகிரி ராமாயணம் - 2 - சித்ரா மூர்த்தி
அசோகவனம் என்ற படைவீடு
முருகன் புகழ்பாடும் திருப்புகழில், ராமாயணச் சம்பவங்களை ஆங்காங்கே தெளித்து விட்டிருக்கிறார் அருணகிரியார். அந்தச் சம்பவப் பாடல்களை மட்டும் தொகுத்து அருணகிரி ராமாயணமாகக் காட்டும் முயற்சி இது. சென்ற இதழில் பாலகாண்டம், இந்த இதழ் முதல் ராமாயணத்தின் பிற காண்டங்கள் தொடர்கின்றன. அயோத்யா காண்டம் சீதையும் ராமனும் புதுமணத் தம்பதிகளாக அயோத்தியில் வாழத் தொடங்குகின்றனர். ஆண்டுகள் சில கழிந்த பின் தசரதர் ராமனுக்கு முடிசூட்ட விரும்புகிறார். ராமனுக்குப் பட்டாபிஷேகம் என்றதுமே அயோத்யா நகரம் விழாக்கோலம் பூணுகிறது, வரப்போகும் துயரத்தை அறியாமலே!
ராமனை அழைத்துச் சொல்வதை எல்லாம் சொல்லிவிட்டு கம்பனின் கைகேயி கூறுகிறாள், ''இயம்பினன் அரசன்'' என்று. ''தாயே இதற்கு அரசர் கட்டளையிட வேண்டும் என்பதில்லை. தாங்களே கூறினாலும் அதைச் செய்யக் காத்திருக்கிறேன்'' என்று பதிலளிக்கிறான் ராமன். பட்டாபிஷேகம் என்றபோதும் ராமன் ஆனந்தக் கூத்தாடவில்லை; இப்போது காட்டிற்குப் போகும்படிச் சிற்றன்னை கூறியபோதும் துக்கத்தில் ஆழவில்லை. 'அன்றலர்ந்த செந்தாமரையினை ஒத்திருந்தது ராமன் முகம்' என்கிறான் கம்பன்! அருணகிரிநாதர் காட்டும் கைகேயி, இப்படி எல்லாம் சுற்றி வளைக்காமல் நேரடியாகவே கூறிவிடுகிறாள்.
''எனது மொழி வழுவாமல் நீ ஏகு கான் மீதில் என விரகு குலையாத மாதாவும் நேரோத இசையுமொழி தவறாமலே ஏசி'' என்கிறார் அருணகிரிநாதர். 'மாதாவின் வசனமோ மறாகேசன்' என்கிறார் மற்றொரு பாடலில். ராமன், ‘தாயார் கூறியதை மறுத்துவிட்டான்’ என்று உலகம் கூறிவிடக்கூடாது என்பதால்! மாதாவின் வசனத்தை மறுத்துப்பேசாத ஹரி அல்லது அவளது உத்தரவை ஏற்று உடனே செயல்படுத்திய ஹரி என்று இருபொருள்பட வருகிறது இப்பாடல். இதே கருத்தை வேறொரு பாடலில், “ஒண் ஜானகி தனங் கலந்தபின் ஊரில் மகுடங் கடந்தொரு தாயார் வசனம் சிறந்தவன்”
- என்று கூறுகிறார்.
கைகேயியின் சொல்லை மறுக்காமல், சீதையுடன் அயோத்தியை விட்டு ராமன் வெளியேறும் காட்சியை மனம் உருகப் பாடுகிறார் அருணகிரியார்.
சனி, 4 மார்ச், 2023
அருணகிரி ராமாயணம் - 1 - சித்ரா மூர்த்தி
‘திருப்புகழ்’ என்றாலே, ‘முருகன் புகழ்’ என்றுதான் பொதுவாக அறியப்படுகிறது. ஆனால், முருகன் புகழிலும் ராமாயண கதாபாத்திரங்களை, சம்பவங்களை இணைத்திருக்கும், ஒப்பீடு செய்திருக்கும் அருணகிரிநாதரின் நயம் வியந்து போற்றத்தக்கது. ‘‘திருமுல்லைவாயிலாய்! திருப்புகழ் விருப்பால் பாடிய அடியேன் படுதுயர் களைவாய்’’ என்று சுந்தரரும், ‘‘தொண்டர் தங்கள் குழாம் குழுமித் திருப்புகழ்கள் பலவும் பாடி’’ என்று குலசேகராழ்வாரும் எண்ணற்ற ஆண்டுகளுக்கு முன்னரே பாடியுள்ளனர். அவர்கள், ‘திருப்புகழ்’ என்ற சொல்லுக்கு ‘இறைவனைப் புகழ்ந்து பாடுதல்’ என்ற பொருளையே அளித்தனர்.
ஆனால், திருவண்ணாமலைக் கோயில் கோபுரத்திலிருந்து கீழே விரக்தியுடன் குதிக்க முனைந்த அருணகிரிநாதரைத் தடுத்தாட்கொண்டு, ‘என் புகழ் பாடுக’ என்று ஆணையிட்டு, கூடவே ‘முத்து’ என்றும் முதல் பதத்தை முருகப்பெருமான் அடி எடுத்துக் கொடுத்தானே, அன்று முதல் அருணகிரியார் பாடிய முத்து முத்தான பாக்கள் மட்டுமே இன்று ‘திருப்புகழ்’ என்ற பெயரால் அறியப்படுகின்றன. எனவே, ‘திருப்புகழில் ராமாயணமா?’ என்ற வியப்பு எழுவது இயல்பே! ஆதிசங்கரரின், காணாபத்யம், கௌமாரம், சைவம், வைணவம், சாக்தம், சௌரம் எனும் அறுசமய வழிபாட்டு மார்க்கங்களையும் தேனூறும் திருப்புகழ்ப் பாக்கள் மூலம் நமக்கு விளக்கிக் காட்டியவர் அருணகிரிநாதர்.
இவற்றுள் சைவ-வைணவ ஒற்றுமையை நிலைநாட்ட அவர் எடுத்துக்கொண்டுள்ள மையக்கருத்து, திருமால் மகிமை. அவர் பாடிய ‘முத்தைத்தரு’ எனத் துவங்கும் முதல் பாடலில் விநாயகரைப் பற்றியோ, உமையைப் பற்றியோ குறிப்பு எதுவும் காணப்படவில்லை. ஆனால், ஐந்து வரிகளில் முருகனது மாமனும், மாமனாரும் ஆகிய திருமாலின் பெருமை பாடப்பட்டுள்ளது. அதிலும் முதல் வரியே ‘பத்துத்தலை தத்தக் கணைதொடு’ என்ற ராமாவதாரக் குறிப்புடன் திகழ்கிறது. நமக்குக் கிடைத்துள்ள 1340 திருப்புகழ்ப் பாக்களில் சுமார் 160 குறிப்புகளில் ராமாயணம் பேசப்படுகிறது என்றால், அருணகிரியார் பாடியதாகக் கருதப்படும் 16,000 பாடல்களும் நமக்குக் கிடைத்திருந்தால் எத்தனை எத்தனை குறிப்புகள் தெரிய வந்திருக்கும்!
அருணகிரியார் காட்டும் பக்தி மார்க்கத்தில், அன்பு, அவிரோதம், ‘எவரும் யாதும் யானாகும்’ இதய உணர்வு, சரணாகதி போன்ற எண்ணற்ற உபதேசங்கள் விரவிக் கிடக்கின்றன. அவர் ராமாயணக் காவியத்தை எவ்வாறு ரசிக்கிறார், அவரது சந்தப் பாக்களின் சொல்லழகு எத்தகையது, அக்கதாபாத்திரங்களின் மூலம் அவர் நமக்கு அளிக்கும் உபதேசங்கள் என்னென்ன என்பனவற்றை உணர்ந்துதான் அனுபவிக்க வேண்டும். திருமால் வானோர்களைப் பார்த்துக் கூறுகிறார்: ‘‘எனது அடுத்த அவதாரத்தில் தசரதன் மகனாகப் பிறந்து, சங்கு-சக்கரம்-ஆதிசேஷன் இவர்களைத் தம்பியராகக் கொண்டு தசக்ரீவனை வதம் செய்ய உள்ளேன். நீங்கள் அனைவரும் பூமியில் வந்து பிறந்திருங்கள்.’’ யாரெல்லாம் வந்து பூமியில் பிறந்தார்கள் என்பதை அருணகிரியாரின் வாக்கிலேயே பார்க்கலாம்:
பாகவதம் காட்டும் நரசிம்மம் - கிருஷ்ணா
அந்த பால பாகவதனின் பெயர் பிரகலாதன். அவன் தந்தை ஹிரண்யகசிபு தன் பிறப்பின் ரகசியம் மறந்திருந்தான். வராஹமாக அவதரித்த பெருமாள் ஹிரன்யாட்சனை வதம் செய்தார். அப்போதே அவனின் அருமை சகோதரரான ஹிரண்யகசிபுவை பகவான் உனக்காக வரவேண்டியிருக்கும் என்பதாக ஒரு பார்வை பார்த்தார்.
ஆனால், அந்தப் பார்வையின் பொருளை இரண்யகசிபுவால் புரிந்து கொள்ள முடியவில்லை. தேவலோகத்தையே பொசுக்க வேண்டும் என தீவிர தவமியற்றினான். பிரம்மா அவனெதிரே தோன்றினார். வரங்களை கேள் என்பதற்கு முன்னரே கேட்டான். பிரம்மா அந்த விசித்திர வரங்களை ஒருமுறை தனக்குள் சொல்லிக் கொண்டார்.
‘இவ்வுலகிலுள்ள எந்த உயிரினாலும் எனக்கு மரணம் நேரக் கூடாது. அரண்மனைக்கு வெளியிலோ, உள்ளிலோ, இரவிலோ, பகலிலோ இறத்தல் கூடாது. ஆயுதத்தாலும் மரணம் வரக் கூடாது. மானிடரும், விலங்குகளும் என்னை கொல்லக் கூடாது. இறுதியாக சகல லோகங்களையும் நானே ஆள வேண்டும்’ என்ற வரங்களை கொடுத்து விட்டு பிரம்ம தேவர் நகர்ந்தார்.
‘‘நானே தேவன்... என்னையே எல்லோரும் தொழ வேண்டும்’’ என்று தொடை தட்டி அமர்ந்தான். ஆனால், அந்த ஹிரண்யகசிபுவின் அருமை மகனான பாகவதன் பிரகலாதன் தந்தைக்கு யார் தேவன், பரமன் என்று ஞாபகப்படுத்த முனைந்தான். முதலில் மனதுக்குள் நாராயண நாமம் உதித்தது. ஊர் முழுவதும் ஹிரண்யகசிபுவின் நாமத்தை உச்சரிக்கும் வேளையில், இவன் வாக்கிலிருந்து ‘நாராயணா... நாராயணா…’ என்று சொல்வதை அவனின் தாய் கேட்டு அதிர்ந்தாள். பிற்காலத்தில் சரியாகிப் போகுமென்று அமைதியானாள்.
‘’நானே உனக்குத் தலைவன்... நீ வழிபட வேண்டியவன் எங்கோ உறங்கிக் கொண்டிருப்பவனல்ல. உன் எதிரே இருக்கும் இந்த ஹிரண்யன்தான் உன் வழிபாட்டிற்குரியவன்’’ என்று பெரிய பல் காட்டி மக்கள் எதிரே கூவுவான். வழிபடாதவர்களை வகிர்ந்தான். வழிபட்டோர்களை தன் அரியணைக்கு எதிரே அமர்த்தினான். பிரம்மாவிற்கு சமமான பதவி கிடைத்தவுடன் யாக, யக்ஞத்தில் முழுப்பலனும் இவனுக்கே வந்தது. அது இன்னும் அவனை வலிமையாக்கியது. ஹோமம் நடத்தியதாலேயே பஞ்சம், பட்டினி எதுவுமில்லாமல் சுபிட்சமாக எல்லோரும் வாழ்ந்தனர். எல்லாரும் என் பெயர் சொல்வதால்தான் நன்றாக இருக்கிறார்கள் எனும் மாயையில் சுற்றித் திரிந்தான்.