ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – இருபத்தாறாவது அத்தியாயம்
(துஷ்ட (கெட்டவர்கள்) ஸஹவாஸத்தினால் (தொடர்பினால்) யோக நிஷ்டைக்கு விக்னம் (இடையூறு) வருமென்றும், சிஷ்ட (நல்லவர்கள்) ஸஹவாஸத்தினால் (தொடர்பினால்), அந்த யோக நிஷ்ட்டை வளர்ந்து வருமென்றும் நிரூபித்துக் கொண்டு, ஸங்கத்தினால் (தொடர்பினால்) யோக ப்ரஷ்டனாவான் (நழுவுவான்) என்பதற்கு உதாஹரணமாக ஐல வ்ருத்தாந்தத்தைக் (சரித்ரத்தைக்) கூறுதல்.)
ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- என்னைக் காண்பதற்குக் காரணமாகிய இம்மனுஷ்ய தேஹத்தைப் பெற்று, ப்ரவ்ருத்தி தர்மத்தை (உலக விஷயங்களில் ஈடுபடும் பாதையைத்) துறந்து, என்னுடைய ஆராதன ரூபமான நிவ்ருத்தி தர்மத்தை (உலக விஷயங்களிலிருந்து விலகும் பாதையை) அனுஷ்டித்துக் கொண்டு வருவானாயின், ஆநந்த மயனாகையால் நிரதிசய (சிறந்த) புருஷார்த்த ஸ்வரூபனும் (விரும்பி அடையப்பட வேண்டியவனும்), ஆத்மாவுக்கும் அந்தராத்மாவாகையால் பரமாத்மாவென்று ப்ரஸித்தி பெற்றவனுமாகிய என்னைப் பெறுவான்.
ஆத்ம, பரமாத்மாக்களின் உண்மையை ஆராய்ந்தறிகையாகிற ஜ்ஞான (அறிவு) நிஷ்ட்டையில் (ஊன்றி இருப்பதில்) இழிந்தவன், தேவாதி (தேவன், மனிதன், விலங்கு, தாவரம் என்கிற) தேஹங்களுக்கு (உடல்களுக்குக்) காரணமாயிருப்பதும், ஸத்வாதி குணங்களையே வடிவாக உடையதுமான ப்ரக்ருதியை (மூலப்ரக்ருதி மற்றும் அதன் மாறுபாடுகளை) விடுபட்டிருப்பானன்றி, அதற்கு உட்பட மாட்டான். (தேவ, மனுஷ்யாதி தேஹங்களிலிருப்பினும், அவற்றில் அஹங்கார ( நான்), மமகாரங்கள் (எனது) அற்றிருப்பான்) அத்தகையன், ப்ரக்ருதியின் கார்யமான சப்தாதி விஷயங்களை அனுபவிப்பினும், தேஹானுபந்தி (உடலோடு தொடர்புடைய) வஸ்துக்களில் என்னுடையவை என்னும் அபிமானம் (எண்ணம்) உண்டாகப் பெறினும், அவ்வஸ்துக்களாலாவது, அவ்விஷயங்களாலாவது, பந்தத்தை அடைய மாட்டான் (கட்டுப்பட மாட்டான்). (இத்தகையன் ஜீவதசையில் சப்தாதி விஷயங்களை அனுபவிப்பினும், அபிநிவேசம் (தீவிர ஈடுபாடு) உண்டாகப் பெறமாட்டானாகையால், அவை அவனுக்கு பந்தகங்களாக மாட்டாது.)
சிச்னம் (விந்து), உதரம் (வயிறு) இவற்றின் ஸுகங்களையே விரும்பும் தன்மையர்களான அஸத் (அறிவற்ற) புருஷர்களோடு ஒருகாலும் ஸஹவாஸம் (தொடர்பு) செய்யலாகாது. அத்தன்மையுள்ள ஒருவனோடு ஸஹவாஸம் (தொடர்பு) செய்யினும், குருடனைத் தொடர்ந்து செல்கிற குருடன் பள்ளத்தில் விழுவதுபோல், நரகத்தில் விழுவான். ஆகையால் அத்தகையர்களுடைய ஸஹவாஸத்தைத் துறந்து, பகவத் தர்மத்தில் இழிந்து, மோக்ஷத்தை அடைய வேண்டும்.
பெரும் புகழுடைய ஐலன் என்னும் புரூரவ மன்னவன் ஊர்வசியால் இழுக்கப்பட்ட மதியுடையவனாகி, அவளுடன் கலந்திருக்கையில், பல வர்ஷங்களின் ராத்ரிகள் கடந்ததையும், மேல் வரப்போகிற பல ராத்ரிகளையும் அறியாமல், அற்பமான (மட்டமான) விஷயங்களையே அனுபவித்தும், அவற்றில் திருப்தி உண்டாகப் பெறாமல், மேன்மேலும் அவ்விஷயங்களையே அனுபவித்துக் கொண்டிருந்தான். இப்படியிருந்த அந்த ஐல மன்னன், ஒருகால் அவ்வூர்வசி தன்னைத் துறந்து போகையில், அவளைப் பிரிந்திருக்க முடியாமையால், பித்தம் பிடித்தவன் போன்று அரையில் ஆடையுமின்றி, “அடி! என் இன்பநாயகி! நில் நில் போகாதே” என்று புலம்பிக் கொண்டு, தழதழத்து, அவளைப் பின் தொடர்ந்து சென்றான்.