புதன், 2 அக்டோபர், 2024

3. விசுவாமித்திரர்

வேள்வியில் அடைந்த பாயசத்தை அருந்தியதின் பயனாக மூன்று பத்தினிகளும் கர்ப்பம் தரித்தார்கள். காலக்கிரமத்தில் கௌசல்யா தேவி ராமனைப் பெற்றாள். அடுத்தபடி கைகேயி பரதனைப் பெற்றாள். சுமித்திரா தேவி இரு குமாரர்களைப் பெற்றாள். அவர்களே இரட்டையர்களான லக்ஷ்மணனும் சத்ருக்னனும் பாயசத்தில் அருந்திய பங்கின் விகிதாசாரப்படி இந்த நான்கு குமாரர்களுக்கும் விஷ்ணு அம்சம் சொல்லப் படுகிறது. முறையே ராமன் விஷ்ணுவில் பாதி என்றும், லக்ஷ்மணன் விஷ்ணுவில் கால் பங்கு என்றும், பரதனும் சத்ருக்னனும் ஒவ்வொருவர் அரைக்கால் பங்காகவும் சொல்லப்படுகிறது. சுமித்திரை முதலில் அருந்தியது கால் பாகம். கடைசியாக அருந்தியது கைகேயிக்குத் தந்தது போக மிஞ்சி நின்ற அரைக்கால் பாகம். முந்தி அருந்திய கால் பங்கு பாயசம் லக்ஷ்மண சொரூபமாயிற்று. பிந்திய அரைக்கால் பங்கு சத்ருக்ன சொரூபமாயிற்று. இந்த விஷயங்கள் அவ்வளவு முக்கியமல்ல. கடவுளைப் பங்கு பண்ணிக் கணக்கிட முடியாது. பரம்பொருளில் ஒரு சிறு பங்கும் பூரணமாகவே நிற்கும் என்பது சுருதி.

ஓம் பூர்ண மதஹ் பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ண முதச்யதே 

பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வசிஷ்யதே


“அங்கிருப்பது பூரணம், இங்கிருப்பதும் பூரணம். பூரணத்திலிருந்து பூரணம் உண்டாகியுள்ளது. பூரணத்தினின்று பூரணத்தை எடுத்த பிறகும் மிஞ்சி நிற்பது பூரணமே."


பரம்பொருள் பௌதிக கணித நூல் நியதிக்கு அடங்காது.

செவ்வாய், 1 அக்டோபர், 2024

2. குறை தீர்ந்தது!

ஆண்டுகள் பல நன்றாகக் கழிந்தன. ஆயினும் அரசனுக்கு ஒரு பெருங்குறை. புத்திர பாக்கியம் இல்லாத குறை. ஒருநாள் அப்போது வசந்தருது. அரசனுக்கு ஓர் எண்ணம் தோன்றிற்று. "அசுவமேத யாகமும் புத்திர காமேஷ்டியும் செய்வித்தேனானால் ஒரு வேளை மக்கட்பேறு பெறுவேனோ?" என்று எண்ணினான். குருக்களைக் கேட்டதில் அவர்களும் ரிஷ்யசிருங்க முனிவரைத் தருவித்து அவர் தலைமையில் வேள்வியை நடத்தத் தீர்மானித்தார்கள். தீர்மானித்தபடி சகல ஏற்பாடுகளும் செய்தார்கள். அரசர்களுக்கு அழைப்பு, யாகசாலை நிர்மாணத்துக்கு வேண்டிய காரியங்கள் எல்லாம் மிகத் தீவிரமாக நடைபெற்றன.