திருக்குடந்தையில் எழுந்தருளியிருக்கும் இறைவன் சார்ங்கபாணி என்ற ஆரா அமுதன். இவர் மூலமாக நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை நாட்டிற்களித்தவர் நாதமுனிகள். இவருடைய பேரன்தான் ஆளவந்தார். இருவரும் காட்டுமன்னார்குடியில் அவதரித்தவர்களே.
நாதமுனிகளின் விருப்பப்படியே இவருக்கு யமுனைத்துறைவன் என்ற திருப்பெயர் சூட்டப்பட்டது. தமது இளமைப் பருவத்திலேயே சகல கலைகளிலும் தேர்ந்து சகல சாஸ்திரங்களையும் கற்றறிந்தார். இவர் சோழராஜனின் புரோகிதரான ஆக்கியாழ்வானை வாதில் வென்றார். இவரின் வெற்றிக்கு பரிசாகக் கிடைத்த பாதி ராஜ்யத்தை திறம்பட நிர்வகித்தார். யமுனைத் துறைவனின் தேஜஸைக் கண்டு சோழ அரசி இவரை வாழ்த்தி வணங்கி, ‘‘எமை ஆளவந்தீரோ?’’ என்று கேட்டு வியந்தாள். அதனால் இவருக்கு ஆளவந்தார் என்ற பெயர் ஏற்பட்டு அதுவே நிலைத்து விட்டது.
தனக்குப் பரிசாகக் கிடைத்த நாட்டை ஆண்டபடி, மிகவும் ஆனந்தமாக நாட்களைக் கழித்த இவரை மணக்கால் நம்பி என்ற மகான் தடுத்தாட்கொண்டார். ‘‘உமது பரம்பரை சொத்து திருவரங்கத்தில் கோயில் கொண்டுள்ள திருவரங்கனே’’ என்று அறிவுறுத்தினார்.